Sunday, January 30, 2011

உப்புக் குடித்தவர்களை ஒப்புக்கொடுக்கும் லாப விளையாட்டு (கவிதை)






உப்புக் குடித்தவர்களை ஒப்புக் கொடுத்து

ஆடும் பகடையாட்டம் ...

இப்போதைக்கு அலைக்கற்றை அலை ஓய,

எப்போதைக்கும் இரவலர் பட்டம் பூண்டு

அனுதாபிப் போர்வை மூட

கொட்ட வரும்
தேனீக்களை போக்குக் காட்டி

மீனவர் வோட்டுகள் எனும்

அடைத்தேன் பிய்த்துக் கொள்ள

எல்லாமொரு லாப விளையாட்டே ...

கடலோடும் அலையோடும் கரிப்பு மணிகளே

கேட்டுக் கொள்ளுங்கள்

உங்கள் உயிர்கள் மதிப்பு மிக்கவை

தக்கை வீசியவன் எக்கணமும்

அதை உணர்ந்தே இருத்தலில்

எப்போதும் செத்துக் கொண்டிருக்கிறீர்கள்

சிங்களவன் கை தும்பிகளாய்!

உங்கள் கதை உலர்ந்திடும் உப்பாக

கரைந்திடும் கடல் மணலாக

ஒப்புக் கொடுக்கப் பட்டவர்களின் ஒப்பாரி ஓசை

ஒப்புக் கொடுத்தொருக்கோ கேளாத தூரத்தே

அலையோசை தேய்த்துக் கரைக்கும் புறத்தே

மீண்டும் மீனவச் சாவுகள் ...

எப்போதும் மீனவர் பாடு மீன்பாடு.



5 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதை லாப நோக்கோடுதான் பார்க்கிறார்கள் போல..அதான் உண்மையான தீர்வு எங்க இருந்து வருமென்றே தெரியல..

ராமலக்ஷ்மி said...

//எப்போதும் மீனவர் பாடு மீன்பாடு.//

உண்மைதான் கார்த்திகா:(!

KarthigaVasudevan said...

@ முத்துலெட்சுமி/muthuletchumi


தீர்வு எங்கிருந்தும் வரப் போவதில்லை . உள் நோக்கங்கள் பல கொண்டு பாரா முகம் கட்டப் படும் விசயங்களுக்கு தீர்வென்ற ஒன்று கிடைத்து விட்டால் பயனாளிகள் பரிதவித்துப் போவார்கள். அவ்வளவு சீக்கிரத்தில் தீர்வு வர விட்டு விடமாட்டார்கள் .இன்று நேற்றா நடக்கிறது! தீர்வைப் பற்றி யோசிக்க? நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ள எதையோ செய்து கொண்டிருக்கிறோம். செய்யத்தான் வேண்டும். இல்லா விட்டால் முத்துக் குமரனைப் போல எரித்துக் கொள்ளும் ஆவேசம் வரலாம். கண்ணீர் குவளைகள் உலர்ந்திடும் திசை திருப்பல்களில் .

@ ராமலக்ஷ்மி

மீன்படும் பாடுகள் எல்லாம் மீனவர் பட்டுத் துடிக்கின்றனர் சுட்டெரிக்கும் சூரியனில் .
:(

arasan said...

கவிதையில் அனல் தெறிக்கிறது ...
வாழ்த்துக்கள் ...
இந்நிலை நிச்சயம் மாறும் .. அதற்க்கு
எல்லோரும் ஒன்று கூடனும்

Anonymous said...

//உப்புக் குடித்தவர்களை ஒப்புக் கொடுத்து //

உப்பில் ஊறுவதாலோ ஏனோ இங்கு பிறந்த பாவத்துக்கோ விஸ்வாசத்துக்கோ உயிரை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்...