Tuesday, November 3, 2009

இலந்தைப் பழமும் இன்ன பிறவும்...

ஜல்லிக் கட்டு,ஒற்றை மாட்டு ரேக்ளா வண்டி,ரெட்டை மாடு பூட்டிய வில் வண்டி,வாய்க்கூடு கட்டிய குதிரை வண்டிகள்,சிவகாசி..சாத்தூர்ப் பக்கம் பனை ஓலைப் பெட்டியில் வைத்துக் கட்டித் தரப் படும் காராச் சேவு... வெல்ல முட்டாசு வகையறா (இதை மிட்டாய் என்றும் சொல்கிறார்கள் ) ,இதை எல்லாம் ரொம்பத் தான் மிஸ் பண்ணுகிறோம் என்ற உணர்வு வந்ததும் சுதாரிக்க வேண்டியிருக்கிறது .

ஆமாம் வயதாகிறது தானே...நமக்கு முன்னே சில பழகிய பொருட்கள் காட்சியில் இருந்து மறைகின்றன என்றால் காலம் நம் கண்முன்னே மருட்டிக் கொண்டு நகர்கிறது என்று தானே அர்த்தம்!!!அப்போதிருந்த சில பல ...இப்போதில்லை ...காலம் மாறிப் போச்சு ...வசதிகளும் கூடிப் போச்சு ஆனாலும் அந்தக் காலம் அது ஒரு சுகம் தான்.இப்படி பழசில் உருகுதல் சரியோ தவறோ மலரும் நினைவுகள் ருசிக்கவே செய்கின்றன.

முன்பெல்லாம் வெள்ளியில்,எவர்சில்வரில், ஈயத்தில் அழகழகான பால் ஊட்டும் சங்குகள் வீட்டுக்கு வீடு இருக்கும். இப்போதெல்லாம் பாட்டில்கள் மட்டுமே,பயணத்திற்கு பாட்டில்கள் வசதி என்றாலும் கூட சங்குக் கின்ணிகள் அழகானவை. அவற்றை எல்லாம் சேகரித்து வைத்தால் இன்னும் முப்பது வருடங்கள் கழித்து பழம் பொருட்கள் என்று கண்காட்சியில் வைக்கலாம்.

முன்பெல்லாம் வீட்டு நிலைப்படிக்கு அருகில் தரையில் கோலிக்குண்டோ ,கிளிஞ்சலோ,அல்லது வெண் சங்கோ எதோ ஒன்றை மேலோட்டமாக புதைத்து அதன் மீது அழுத்தமாக சிமென்ட் பூசி இருப்பார்கள் ,வீட்டுக்குள் நுழைந்தவுடன் குழந்தைகள் அதைக் கவனிக்கத் தவற மாட்டார்கள் .அதற்கான காரணம் புரியாவிட்டாலும் பார்த்ததில் மனதில் பதிந்ததில் இதுவும் ஒன்று ,இப்போதெல்லாம் இப்படி யார் வீட்டிலும் நிலை படிக்கு அருகில் புதைப்பதில்லை போலும்.

அடர் நீல நிறப் பூக்கள் அச்சிடப் பட்ட ஹார்லிக்ஸ் பாட்டில்கள் ...என் தம்பி குழந்தையாய் இருக்கையில் வாங்கியது இப்போது அப்படிப் பட்ட வடிவங்களில் வண்ணத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் கிடைப்பதில்லை ,இன்னும் கூட ஞாபகத்திற்காக பரணில் கிடக்கிறது ஒன்றிரண்டு .

இலந்தைப் பழம் ...இப்போது எந்தக் குழந்தைக்காவது இப்படி ஒரு பழம் இருப்பது தெரியுமோ என்னவோ?கொடிக்காய் இதெல்லாம் வெறும் தின்பண்டங்கள் மட்டும் தானா என்ன? பால்யத்தில் தின்பண்டங்களோடு சட்டென நினைவில் நெருடக் கூடியவர்கள் அப்போதைய நண்பர்களும் அல்லவோ?!

கொய்யாப் பழமும் ,மாங்காய்ப் பத்தையும் இப்போதும் இருக்கின்றன ஆனாலும் இப்போதைய குழந்தைகள் குர் குரேவுக்கும் ...லேய்சுக்கும்...மில்க்கி பார்களுக்கும்,கிட் கேட்டுக்கும் தானே ஏங்குகின்றன.

பாண்டி ஆட்டம் எல்லாம் பரணுக்குப் போய் விட்டது ,பல்லாங்குழிகள் புதைந்து போய் விட்டன,தாயக் கட்டைகள் திசை மாறி விழுந்ததில் வீடியோ கேம்கள் இடத்தை நிரப்பிக் கொண்டு எழ மாட்டாமல் அடம் பிடிக்கின்றன. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...ஆனால் எனக்கே சோர்வாகத் தான் இருக்கிறது இப்படி அடுக்கிக் கொண்டே போக.

எல்லாம் மாறினாலும் இது ஒன்று மட்டும் மாறப் போவதில்லை.இன்னும் முப்பது வருடங்களுக்குப் பின் என் மகளோ மகனோ என்னைப் போலவே இப்படி சலித்துக் கொள்ளலாம் அப்போதைய புதிய மாற்றங்களைக் கண்டு .அது மட்டும் மாறப் போவதில்லை.

9 comments:

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு மிஸஸ்.தேவ்...கொடிக்காய் என்பது கொடுக்காய்ப்புளி என்பதா?! பல்லாங்குழிகளும், தாயமும் இன்றும் கிடைக்கின்றன - விளையாடுவதற்குத்தான் ஆள் இருப்பதில்லை...நீங்கள் சொன்னதுபோல! அப்புறம் கோலி குண்டு பதித்த வீடுகள் - மொசைக் வீடுகள் - எனது நினைவுகளை கிளறி விட்டீர்கள்!! :-)

நேசமித்ரன் said...

நல்லாருக்கு

நினைவுகளை உயிர்பித்து......

மாதேவி said...

"இதை எல்லாம் ரொம்பத் தான் மிஸ் பண்ணுகிறோம்"

நிறைய ஞாபகப்படுத்தி விட்டீர்கள். "நினைவுகள் ருசிக்கவே செய்கின்றன".

செக்க சிவந்தபழம் தேனாட்டம் இனிக்கும்பழம் பற்றி முந்திய பதிவொன்றில் நானும் எழுதியிருந்தேன்.

ரவி said...

தலைப்பு பட்டையை கிளப்பிபையிங். தேர்ந்த எழுத்தாளரின் எழுத்தை படிப்பது போலுள்ளது.

இந்த வலைப்பதிவு கம்பெனி வீட்டில் யாரும் எழுதிக்கொடுப்பதை எடுத்து பதிவிடுகிறதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.. :)))))))

வல்லிசிம்ஹன் said...

மிஸஸ்.தேவ், இலந்தப் பழ வடையை விட்டு விட்டீங்க.:)ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!.

ஷண்முகப்ரியன் said...

எல்லாம் மாறினாலும் இது ஒன்று மட்டும் மாறப் போவதில்லை.இன்னும் முப்பது வருடங்களுக்குப் பின் என் மகளோ மகனோ என்னைப் போலவே இப்படி சலித்துக் கொள்ளலாம் அப்போதைய புதிய மாற்றங்களைக் கண்டு .அது மட்டும் மாறப் போவதில்லை. //

நிகழ்காலம் ஒன்று மட்டுமே உண்மை என்று ஞானிகள் பல்லாயிரம் வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் சிம்பிளாகச் சொல்லி இருக்கிறீர்கள்,மேடம்!

Sanjai Gandhi said...

மிகச் சிறந்த பதிவு.. ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே....

அமிர்தவர்ஷினி அம்மா said...

கொய்யாப் பழமும் ,மாங்காய்ப் பத்தையும் இப்போதும் இருக்கின்றன ஆனாலும் இப்போதைய குழந்தைகள் குர் குரேவுக்கும் ...லேய்சுக்கும்...மில்க்கி பார்களுக்கும்,கிட் கேட்டுக்கும் தானே ஏங்குகின்றன. //

வாஸ்தவம் தான்ப்பா.

நல்லா எழுதியிருக்கீங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

//இலந்தைப் பழம் ...இப்போது எந்தக் குழந்தைக்காவது இப்படி ஒரு பழம் இருப்பது தெரியுமோ என்னவோ?கொடிக்காய் இதெல்லாம் வெறும் தின்பண்டங்கள் மட்டும் தானா என்ன? பால்யத்தில் தின்பண்டங்களோடு சட்டென நினைவில் நெருடக் கூடியவர்கள் அப்போதைய நண்பர்களும் அல்லவோ?!//

நாவு சொட்டான் போடுகிறது படித்ததும்..