Tuesday, September 8, 2009

விஷாகாவின் டயரி...( 2 )

விஷாகாவுக்கு ஸ்கூலுக்கு நேரமாகியிருந்தது ...


மாமா காலையில் எப்போதுமே எல்லோருக்கும் முன்னதாக சீக்கிரமே கிளம்பி விடுவார் ...மிச்சமிருப்பவர்களும் சென்றாயிற்று ...இனி அவள் கிளம்ப வேண்டியது தான் பாக்கி .கிச்சனுக்குள் நுழைந்து சாப்பிட என்ன இருக்கிறது என்று ஒவ்வொரு பாத்திரமாகத் திறந்து பார்த்தாள்...பெரிதாக அவளுக்கென்று பிரியாணியும் ...கோழி வறுவலுமா இருந்து விடப் போகிறது ?! சோறும் தயிரும் அங்கே எப்போதும் இருக்கும் விஷாகாவுக்கென்றே...போனால் போகிறதென்று மற்றவர்கள் சாப்பிட்டு விட்டு ...மதியம் டப்பாவில் கட்டிக் கொண்டதற்கும் போக மிஞ்சினால் எதோ கொஞ்சம் காயோ ..கூட்டோ இருக்கும்...இன்றைக்கு வாணலியில் ஓரமாக ஒட்டிக் கொண்டு கொஞ்சமே கொஞ்சம் கத்தரிக்காய் பொரியல் இருந்தது.


என்ன தான் அத்தையையும் அத்தை மகள்களையும் பற்றி தெரிந்திருந்தாலும் கூட விஷாகாவும் சின்னப் பெண் தானே! பாவம் அந்தக் கத்தரிக்காய் பொரியலைக் கண்டதும் அவளுக்கும் மனம் சிறிதே சமாதானமானது. எப்போதும் தயிருக்கு ஊறுகாயே சாஸ்வதம் என்று மனதை பழக்கி வைத்திருந்தாலும் நாக்கு நல்ல ருசிக்காக ஏங்குவதை யாரால் தடுக்க முடியும்?! அவளும் மனுசி தானே ?!


இப்படியெல்லாம் நீள நீளமாக யோசிக்கவே விஷாகாவுக்கு நேரமில்லை பாருங்கள் .மட மடவென்று குளித்தாள் ...நீல நிற யூனிபார்ம் சுரிதாரை எடுத்து மாட்டினாள்...பர பரவென்று சீவி ரெண்டு புறம் தலையை பின்னலிட்டு கருப்பு ரிப்பனால் தூக்கிக் கட்டினாள் ...நின்று நிதானமாகப் பார்த்து சிங்காரிக்கவெல்லாம் நேரமே இல்லை ...பாண்ட்ஸ் பவுடரை உள்ளங்கையில் தட்டி முகத்தில் பூசினதாய் பேர் செய்து குளியலறைக் கதவின் மறுபுறம் ஏற்கனவே ஒட்டி வைத்திருந்த ப்ழைய வட்ட வடிவ கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை எடுத்து குத்து மதிப்பாக புருவ மத்தியில் ஒட்டிக் கொண்டு ...நிமிர்ந்து மணி பார்த்தால் முட்கள் 8.25 காட்டின. 8.45 க்கு வகுப்பறையில் இருந்தே ஆக வேண்டும்.

இருபதே நிமிடங்கள் தான் இருந்தன ...பள்ளி வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும் ..எவ்வளவு வேகு வேகென்று நடந்தாலும் கூட எப்படியும் தாமதமாகி விடும் அபாயம் வேறு! அறை கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளியை வைத்துக் கொண்டு ராதா சைக்கிள் லில் தான் பள்ளிக்குப் போகிறாள் தினமும் ...இவளையும் உடன் அழைத்துச் செல்லலாம் தான்...சென்றும் இருக்கிறாள் முன்பெல்லாம். அந்த முன்பு முடிந்து போய் முழுதாய் இரண்டு வருடங்கள் ஆகின்றன .

விஷாகாவுக்கு அழுகை வரவில்லை.

கவனத்தை கலைத்துக் கொண்டு பாட்டி ஊருக்கு வந்த சமயம் வாங்கிக் கொடுத்திருந்த சாண்டக்ஸ் செருப்பில் கால்களை நுழைத்துக் கொண்டு விருட்டென்று வெளியேறி கதவை இழுத்துப் பூட்டினாள்...நல்ல வேலை தேர்வு நேரங்களில் ஷூ அணிவதில் இருந்து விலக்கு இருந்தது அவளது பள்ளியில் .சாவியை மீட்டர் பாக்ஸில் வைத்து மூடி விட்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

பத்து மணிக்கு மேல் மாமா வீட்டுக்கு வருவார்...அவருக்காகத் தான் சாவி மீட்டர் பாக்ஸில்.

முகமெல்லாம் நச நசவென்று ஈரமாகி காதோரம் வியர்வை கோடாக கழுத்தில் இறங்கி வழிய விஷி பள்ளி கேட்டுக்குள் நுழையும் போது... முதல் மணி அடித்துக் கொண்டிருந்தது ...இரண்டாம் மணி அடிப்பதற்குள் மாடியில் நான்காவதாக இருந்த தனது வகுப்பறைக்குள் தப தப வென்று ஓடிப் போய் தன்னிடத்தில் அவள் உட்காரவும் இரண்டாம் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

முதல் வகுப்பு இன்று கணக்கு தான். கீதா மிஸ் மணி அடித்த உடனே கதவுக்கு வெளியே வே இத்தனை நேரம் காத்திருந்ததைப் போலத்தான் விசுக்கென்று உள்ளே வருவார். நல்ல மிஸ் ?!!??விஷி கணக்குப் போட்டு முடிக்கும் வேகத்தைப் பார்த்து அவளை அநேக நேரம் மெச்சிக் கொண்டதுண்டு .

தொடரும்...

5 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

அது சரி(18185106603874041862) said...

டயரி நல்லாத் தான் இருக்கு...தொடரட்டும்...

ஜாஹிர் ஹுஸைன் said...

எனக்கு தெரிந்த ஒருவன் இதே போல சொந்த காரர் வீட்டில் தங்கி படிக்க வந்து அவன் பட்ட சிரமங்கள் நினைவுக்கு வருகிறது.நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ம், அப்புறம் ..............

கண்மணி/kanmani said...

மிஸஸ்.தேவ் நீங்க சந்தேகமில்லாம முதல் ரகம்.1.அ 1.ஆ.1.இ இதுல நீங்க எதோ ஒன்னுதான்.:))