Thursday, April 2, 2009

ஏதாச்சும் செய்யணும் பாஸ் ...வெயில்ல இருந்து தப்பிக்க...

சுடச் சுட வெயில் காலம் கோலாகலமாய் ஆரம்பமாகி விட்டது ...மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் குளுகுளுப்பாய் ஜிலு..ஜிலுவென்று இருப்பார்கள்...மற்றவர்கள் என்ன செய்யலாம்? வீட்டில் A/C போட்டு குளுமை செய்யலாம் ...A/C முடியாதவர்கள் AIRCOOLER வைத்துக் கொண்டு ஐஸ் கட்டிகளைப் போட்டு வீட்டுக்குள் சுடும் காற்றை குளிர வைத்துக் கொள்ளலாம்.

இதில் ஒரு சிக்கல் என்னவெனில் மின்சாரத் தடை ...அடிக்கடி கரண்ட் காட்டாகும் போது நிறையப் பணமிருப்பவர்கள் பவர் ஜெனரேட்டர்கள் கொண்டு சமாளிப்பார்கள் ,அதை வாங்க வழியில்லாதவர்களும் இருப்பார்கள் அவர்களுக்கான எளிய தீர்வு வழிமுறைகள் இவை .


இன்னும் என்னென்ன செய்யலாம் ...?!


கீழே ஒரு பட்டியலிடலாம் ,வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம் ?முதல் வேலையாக வீட்டைப் பற்றி பார்ப்போம் ;

வீட்டைப் பேணுதல்

வீடுகள் என்று எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் இப்போது கான்கிரீட் வீடுகள் தான்...கிராமங்களில் ஓட்டு வீடுகளைக் காணலாம் ...குடிசைகளையும் காணலாம் .எந்த வகை வீடுகளாயினும் கடும் கோடையில் காற்று சூடாகி விடுவதால் மின்சாரம் தடைபடும் காலங்களில் பெருத்த அவஸ்தை தான் .மின்சாரம் இருந்தாலும் சரி ...இல்லாவிட்டாலும் சரி எந்த வகை வீடாயினும் அதைக் குளிர்வாக வைத்துக் கொள்ள சில உபாயங்களை செய்யலாம் ...புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது.எல்லோரும் வெயில் காலங்களில் பயன்படுத்தும் அதே முறை தான் ,

ஓட்டு வீடு

ஓட்டு வீடாக இருப்பின் தரை பெரும்பாலும் சிமென்ட் தளம் தான் ...சிமென்ட் தளத்தில் குளிர்ந்த தொட்டித் தண்ணீரையோ ...கிணற்று நீரையோ தாராளமாகக் கொட்டி மின்விசிறியை சுழல விட்டு ஒரு பத்து இருபது நிமிடங்கள் ஊற விட்டு அலசித் தள்ளி விட்டால் தரை ஜில்லென்று ஆகி விடும்.இதே போல கோடை காலம் முழுமைக்கும் தினம் ஒரு முறை செய்யலாம் .சூரியனின் உக்கிரக் பார்வை கொஞ்சம் மட்டுப் படும் இதனால் .

குடிசை வீடு

குடிசை வீடாக இருப்பின் பசுஞ்சாணம் கொண்டு தரை தினம் ஒருமுறை மெழுகினால் வெயிலின் காட்டம் குறைந்து தரை குழு..குழு..குளுவென்று இருக்கும் ...பொதுவில் தென்னை ஓலை ...பனை ஓலைக் குடிசைகள் வெயிலுக்கு இதமாகவே இருக்கக் கூடும் .

கான்கிரீட் வீடுகள்

இனி கான்கிரீட் வீடுகள் ...மற்ற இரு வித வீடுகளைக் காட்டிலும் கான்கிரீட் வீடுகள் வெயில் காலங்களில் தேவலாம் தான் ...ஆனால் இந்த நகர்ப் புறத்து நெரிசல் காட்டில் தீப்பெட்டி போல அடுக்கப் பட்டு காற்று வர ..வெளிச்சம் பரவ ஜன்னல்கள் இருந்தும் அந்த ஜன்னலையும் அடுத்த வீட்டின் சுவர் மறைக்கும் வண்ணம் இடைஞ்சலில் வீடுகள் கட்டப் பட்டிருப்பின் ஒரு பயனும் இல்லை இவ்வீடுகள் இந்த வெயில் காலங்களில் ஒரு வியாதி போல ஆகி விடக் கூடும் ,ஒண்டுக் குடித்தன வீடுகள் நிறைந்த சென்னையில் வெயில் படுத்தி எடுக்கும் அங்கே குடியிருப்பவர்களை.


என்ன செய்து வெயிலின் சூட்டிலிருந்து இவர்கள் தப்பிக்கலாம் ?!

குடி தண்ணீர் தான் விலைக்கு வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலை என்றோ வந்து விட்டதே ...குளிக்க ...துவைக்க..உப்புத் தண்ணீராவது தாராளமாகக் கிடைக்க வேண்டும் ...இல்லா விட்டால் நரகம் தான் வெயில் காலம் சென்னையில் .தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் பகுதிகளில் வசிப்போர் வீட்டின் தரைத் தளத்திலும் சரி ...மொட்டை மாடி செங்கல் தரையிலும் சரி காலை மாலை இருவேளை தளும்பத் தளும்ப நீரைக் கொட்டி தரையை ஊற விட்டு அலசித் தள்ள வேண்டும்.இதன் மூலம் தரை கொஞ்சம் இதம் தரலாம் .

சரி வீட்டை ஏனோ தானோவென்று கொஞ்சம் சரிப் படுத்தி விட்டோம் வெயிலை சமாளிக்கும் வண்ணம் ...அடுத்து இதோடு முற்றும் போட்டு விட முடியாது .

உடலைப் பேணுதல் :-
அடுத்து யாகாவராயினும் சரி வெயில் காலங்களில் நல்ல உடல்நிலையுடன் இருப்பவர்கள் தினம் காலை ..மாலை இருமுறை கண்டிப்பாக குளித்தே ஆக வேண்டும்.இதன் மூலம் உடல் சூடு மட்டுப்படும்.குளிக்கும் நீரில் ஆரஞ்சு பழத்தோல் ...துளசி இலைகள் அல்லது ஒரு சொட்டு டெட்டால் கலந்து குளிக்கலாம் துர்வாடை விலகி புத்துணர்ச்சியாக இருக்கும் .

இதெல்லாம் சரி தான் ...இனி வெயில் கால உணவுவகைகள் மற்றும் பானங்களைப் பற்றி பார்ப்போம் ;

வெயில் காலங்களில் உண்ணத் தக்க உணவுகள்,காய்கறிகள் ,பழங்கள்

உணவுகள் :

நீர்ச் சத்து நிறைந்த உணவுகள்..நார்ச் சத்து மிக்க உணவுகளை உண்பதே சாலச் சிறந்தது,தாத்தா ...பாட்டிகளின் அன்றைய நாட்களில் வெயில் காலத்தில் கம்பு,கேழ்வரகு, போன்ற உணவுகளை மோரில் கரைத்து உண்பதை நான் அறிவோம் தானே ...கூடவே நீராகாரம் எனும் வடிநீர் உணவும் அன்றைய ஸ்பெசல் தான்.மதிய நேரங்களில் இந்த நீராகாரத்துடன் புளித்த நீர் சேர்த்து அருந்த நீர்க்கடுப்பு கூட விலகும் என்பார்கள்.இன்று குக்கர் வைத்து சமைப்பதால் நீராகாரம் கிடைப்பதில்லை.நம்மால் முடிந்தவரை நூடுல்ஸ்...ஃபிரைடு ரைஸ்...நான் என்று உண்ணாமல் எந்த உணவோடும் சரி மோர் கலந்த உண்ணலாம்.தயிருக்கு மந்தத் தன்மை உண்டு .மோர் நல்லது.எண்ணெய் சார்ந்த உணவுகளை கண்டிப்பாக நீக்க வேண்டும் ,எண்ணெய் அதிகம் சேர்த்துக் கொண்டால் வெயில் காலங்களில் விரைவில் சோர்வு தட்டி தூக்கம் வரும் .

காய்கறிகள்
என்னென்ன காய்கறிகள் சேர்த்துக் கொண்டால் வெயிலுக்கு நல்லதென்று பார்ப்போம் இனி ;

நார்ச்சத்து மிக்க நீர்ச்சத்து மிக்க காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நலம் ,

முருங்கை காய்
சுரைக்காய்
புடலங்காய்
பூசணிக்காய்
பீன்ஸ்
தேங்காய்
பீர்க்கங்காய்
போன்ற நாட்டுக் காய்கறிகளையும்

கீரை வகைகளுடன்

முட்டைக் கோஷ்
கேரட்
முள்ளங்கி
பீட்ரூட் போன்ற இங்கிலீஸ் காய்கறிகளையும் நிச்சயம் வெயில் காலங்களில் தவிர்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் .

உருளைக் கிழங்கு...முட்டை போன்றவற்றை அளவாகப் பயன்படுத்துதல் நலம்.

பழங்கள்

இளநீர் தான் வெயில் நேரத்து தேவாமிர்தம் ;

இதற்கடுத்த இடம் தான் மற்ற எல்லா வித பழங்களுக்கும் ;இயற்கையாகக் கிடைக்கும் பழங்களில் இருந்து தயாரிக்கப் படும் எல்லா பழ ரசங்களும் அருந்தலாம்,
ஆப்பிள் ;
ஆரஞ்சு ,
கொய்யா,
கிர்ணிப்பழம் ,
தர்பூசணி,
எலுமிச்சை ,
மாதுளை ,
சப்போட்டா ,
திராட்சை,
ஸ்ட்ராபெர்ரி ,
கிரேன் பெர்ரி ...etc...etc

செயற்கை குளிர் பானங்கள் இன்றில்லா விட்டாலும் என்றேனும் ஒருநாள் அதற்கான பக்க விளைவுகளைத் தரலாம்.அதனால்
கோக் ...பெப்சி ...மிராண்டா,ஃபேண்டா போன்றவற்றை தவிர்ப்பதே நலம் (!!!)

நன்னாரி சர்பத் வீட்டிலேயே போட்டுக் குடிக்கலாம் ..நன்னாரிக்கு உடல் சூட்டைக் குறைக்கும் சக்தி உண்டென்று எங்கோ படித்த ஞாபகம் .

மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கலாம் .வெயில் காலம் ஆச்சுதா நம்ம பங்குக்கு நாமளும் ஏதாவது செய்யணுமேன்னு தான் ...

ஏதாச்சும் செய்யணும் பாஸ் வெயிலருந்து தப்பிக்க !!!

3 comments:

நட்புடன் ஜமால் said...

\\அடுத்து யாகாவராயினும் சரி வெயில் காலங்களில் நல்ல உடல்நிலையுடன் இருப்பவர்கள் தினம் காலை ..மாலை இருமுறை கண்டிப்பாக குளித்தே ஆக வேண்டும்.இதன் மூலம் உடல் சூடு மட்டுப்படும்.குளிக்கும் நீரில் ஆரஞ்சு பழத்தோல் ...துளசி இலைகள் அல்லது ஒரு சொட்டு டெட்டால் கலந்து குளிக்கலாம் துர்வாடை விலகி புத்துணர்ச்சியாக இருக்கும் .
\\

இது நல்ல மேட்டராக்கீதே!

ராமலக்ஷ்மி said...

பயனுள்ள பதிவு. நன்றி.

பழமைபேசி said...

பெரிய பதிவா இருந்தாலும் பயனுள்ள பதிவு!!