Thursday, March 12, 2009

கோபால் தாத்தாவும் ...மழைக் கஞ்சியும்

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா கட்டை விரலில் பல் துலக்குபர்களை ?!

நான் பார்த்திருக்கிறேன் என் பால்ய வயதில் கிட்டத் தட்ட தினமும் ,கோபால் தாத்தா அப்படித்தான் பல் துலக்குவார். என் தாத்தா வீடு அந்தத் தெருவில் இருபுறமும் நீளமான திண்ணைகளுடன் சற்றே உயரமான வாசல் படிகளுடன் இருந்ததில் எதிர் வீட்டு பாத்ரூமில் கட்டை விரலில் பல் தேய்த்துக் கொண்டிருக்கும் கோபால் தாத்தாவுடன் இங்கிருந்தே சர்வ சகஜமாக உரையாடலாம் .பெரும்பாலும் என் தாத்தா அவருடன் அப்படித் தான் பேசிக் கொண்டிருப்பார் எல்லா காலை நேரங்களிலும்.

பெயருக்குத் தான் அது பாத் ரூமே தவிர யதார்த்தத்தில் அது ஒரு திறந்த மேற்கூரைகளுடன் அரைகுறையாகக் கட்டப் பட்ட ஒரு வெளிப்புற அறை .அங்கே தண்ணீர் தொட்டி,கழுநீர்ப் பானை ,அடிப்பாகம் உடைக்கப் பட்டு கவிழ்க்கப் பட்டிருக்கும் ஒன்றிரண்டு மண்பானைகள் (முளைப்பாரி போடும் காலங்களில் இதற்க்கு டிமாண்ட் ஜாஸ்தி. ஊரெல்லாம் இந்த உடைந்த மண் பானையின் மேற்புரத்திற்காக அலைவார்கள். சரி கோபால் தாத்தாவைப் பற்றி சொல்கிறேன்.

அப்போதெல்லாம் ஊரில் ரொம்ப நாட்கள் மழை வரத்து இல்லை என்றால் உடனே இளசுகளும் பெருஷுகளும் ஒன்றாகச் சேர்ந்து "மழைக் கஞ்சி" எடுப்பார்கள் . இதை தெலுங்கில் "வான கெஞ்சி" என்பது வழக்கம்.

"வானா லேது...வர்ஷா லேது

வான கெஞ்சி பொய்யண்டி;

புழுவா லேது புல்லா லேது

புல்லா கெஞ்சி பொய்யண்டி "

இதற்கான தமிழ் வடிவம் ...

"மேகம் இல்லை மழை இல்லை

மழைக் கஞ்சி ஊற்றுங்கள்

புழுக்கள் இல்லை புல்லும் இல்லை

புளித்த கஞ்சியாவது ஊற்றுங்கள் "என்பதாகும் .இந்த வரிகளை

கேலியும் கிண்டலுமாகப் பாடிக் கொண்டே கிராமம் முழுக்க வலம் வந்து ஜாதி வித்யாசம் பாராமல் எல்லா வீடுகளிலும் இருக்கும் பதார்த்தங்களை (கம்பு சோறு,கேழ்வரகுக் கூழ் ,அரிசி சோறு ,புளித்த தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பழைய சாதம் முதற்க் கொண்டு உப்புக் கருவாடு ...கத்தரிக்காய் புளிக் கூட்டு ,பச்சை வெங்காயம் ...பருப்பு ,பாசிப் பருப்பு துவையல்,கானத் துவையல் (குதிரை சாப்பிடுமே கொல்லு அது தான் கானப் பயிர் ...கொல்லுத் துவையல் சாப்பிட்டால் எடை குறையும் என்று எதிலோ படித்தேன்).இப்படி சகல வீடுகளிலும் போடப் படும் எல்லா உணவுகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரம் பண்ணிக் கொண்டு ஊரின் எல்லாத் தெருக்களையும் பாட்டுப் பாடிக் கொண்டே கொண்டாட்டமாக சுற்றி வருவார்கள்.

கடைசியில் இந்தக் கூட்டம் ஒரு வழியாக கம்மாய்கரையை அடைந்ததும் சேகரித்த உணவுகளை எல்லாம் கைகளால் அள்ளி அள்ளி எல்லாரும் உண்பார்கள் ,சில ஊர்களில் தேங்காய் சிரட்டை ,அரச இலைகளில் கூட பங்கிட்டு உண்பார்கள் .சாப்பிட்டு முடித்ததும் இயற்கை குளியலை கம்மாய் நீரில் நன்றாய் துழாவிக் குளித்து விட்டு சரியாகக் காய்ந்தும் காயாத ஈர உடைகள் மற்றும் ஈரத் தலைமுடிகள் சிலும்பிக் கொண்டு காற்றில் ஆட சாயங்கால வேளைகளில் வீடு திரும்புவார்கள் .

இதற்கும் கோபால் தாத்தாவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? மழைக் கஞ்சி எடுக்கும் போதெல்லாம் எங்கள் ஊரில் கோபால் தாத்தா தான் தலைமை தாங்குவார். (ஹா..ஹா...ஹா ...இந்த மழைக் கஞ்சி கூட்டத்தில் தலைமை தாங்குவது என்பது கூட்டத்தில் பேசுவதைப் போல அல்ல ...வீடு வீடாகப் போய் ;

"வான கெஞ்சி பொய்யண்டி "என்று கெத்து பாராமல் கேட்க வேண்டும் .அது தான் இந்த விழாவின் தலைவர் ஏற்க்க வேண்டிய அதிமுக்கியமான பொறுப்பு .கோபால் தாத்தா அந்தப் பொறுப்பை செவ்வனே செய்வார் மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை.வானம் பார்த்த பூமி அந்தக் கிராமாம் .நல்ல வெயில் காலங்களில் பொழுது போகவில்லை என்றால் இப்படி குழு குழுவென மழைக் கஞ்சி எடுத்து விடுவார்கள் அப்போதெல்லாம்.

வருண பகவான் உடனே மனமிரங்கி மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் என்ற நம்பிக்கை ...இது ஊர் ஐதீகம் அந்நாட்களில் .அகஸ்மாத்தாக மழை கொட்டியும் இருக்கிறது சில மழைக் கஞ்சி கொண்டாட்டங்கள் முடிந்ததும் .

இன்றைக்கு "மழைக் கஞ்சி" என்ற சொல்லே பலருக்கு மறந்திருக்கலாம்.

சும்மா ஒரு பகிர்வு . வாசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள்.

22 comments:

ராமலக்ஷ்மி said...

//இன்றைக்கு "மழைக் கஞ்சி" என்ற சொல்லே பலருக்கு மறந்திருக்கலாம். //

தெரிந்திருந்தால்தானே மறக்கிறது:)? எனக்கு இந்த விவரங்கள் யாவும் புதிது!
மிக நல்ல பகிர்வு!

நட்புடன் ஜமால் said...

கோபால் பல்பொடி போட்டு துலக்குவாரா

நட்புடன் ஜமால் said...

கானா பயிர் சாப்பிட்டா குதிரை இலச்சிடுமே!

நட்புடன் ஜமால் said...

\\"வானா லேது...வர்ஷா லேது

வான கெஞ்சி பொய்யண்டி;

புழுவா லேது புல்லா லேது

புல்லா கெஞ்சி பொய்யண்டி "\\

லெஸ்ஸா உண்டாந்தி ...

சந்தனமுல்லை said...

நல்லா இருக்குப்பா பதிவு! இந்த விஷயம் இப்போதான் கேள்விபடறேன், உங்க மூலமா! ஹ்ம்ம்..கோபால் தாத்தா மாதிரியான் ஆட்களை பார்க்கிறது ரொம்ப கம்மி, இந்தக் காலத்தில்!

அபி அப்பா said...

அட சூப்பர் பதிவுப்பா இதுவும்!

குடுகுடுப்பை said...

குதிரை சாப்பிடுமே கொல்லு அது தான் கானப் பயிர் ...கொல்லுத் துவையல் சாப்பிட்டால் எடை குறையும் என்று எதிலோ படித்தேன்//

நானும் வாங்கி சாப்பிட்டேன், கொள்ளு அஞ்சு பவுண்லேந்து ஒரு பவுண்டா ஆயிருச்சு, நிஜமா வேகமா எடை குறையுது.

குடுகுடுப்பை said...

தமிழ்க்கவிதையே புரியாது, இதுல அரைத்தெலுங்குல கவுஜ, உங்க இம்சை தாங்கல.

KarthigaVasudevan said...

நன்றி ராமலக்ஷ்மி மேடம்...

"வானம் பார்த்த பூமி" என்று சொல்லப் படும் கந்தக பூமிப் பகுதிகளில் இந்த "மழைக் கஞ்சி" கொண்டாட்டம் வெகு பிரசித்தம் ...நான் என் பாப்புவின் வயதில் இந்த கொண்டாட்டங்களை பார்த்திருக்கிறேன்...அதற்குப் பின் எனக்கே இது காணக் கிடைக்கவில்லை.என் வயதுக் காரர்களிடம் கேட்டால் பெரும்பாலும் அவர்களுக்கு இதைப் பற்றி ஞாபகம் வருவதில்லை. அந்தப் பாடல் எனக்கு மறந்து விட்டது.பாடல் உபயம் என் கணவர் "தேவ்" .

KarthigaVasudevan said...

//நட்புடன் ஜமால் said...

கோபால் பல்பொடி போட்டு துலக்குவாரா
.
சரியாகத் தான் கேட்டிருக்கிறீர்கள்.அப்போதெல்லாம் கோபால் பல்பொடி ரொம்ப பேமஸ் .ரோஸ் நிறத்தில் பெயர் அச்சிடப் பட்ட காகித கவர்களில் கடைகளில் தொங்க விட்டிருப்பார்கள்.

நட்புடன் ஜமால் said...

கானா பயிர் சாப்பிட்டா குதிரை இலச்சிடுமே!//

வாஸ்தவம் தான்.

KarthigaVasudevan said...

// சந்தனமுல்லை said...
நல்லா இருக்குப்பா பதிவு! இந்த விஷயம் இப்போதான் கேள்விபடறேன், உங்க மூலமா! ஹ்ம்ம்..கோபால் தாத்தா மாதிரியான் ஆட்களை பார்க்கிறது ரொம்ப கம்மி, இந்தக் காலத்தில்!//

ஆமாம் ...இப்போது பழைய நாவல்களில் மட்டுமே இத்தகையோரைக் காண முடிகிறது. நன்றி முல்லை

வல்லிசிம்ஹன் said...

அம்மாடி!!!என்ன உற்சாகமான நாட்கள் அவை!!
உண்மையில் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள் மிஸஸ்.டவுட்.நினைவு இருப்பதும் அதை எங்களுக்குச் சொல்லணும்னு தோன்றியதும்தான் அருமை.
ரொம்ப நன்றிப்பா.

அது சரி(18185106603874041862) said...

//
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா கட்டை விரலில் பல் துலக்குபர்களை ?

நான் பார்த்திருக்கிறேன் என் பால்ய வயதில் கிட்டத் தட்ட தினமும் ,கோபால் தாத்தா அப்படித்தான் பல் துலக்குவார்.
//

கட்டை விரல்னா...கை கட்டை விரலா இல்ல கால் கட்டை விரலா...வலது கை கட்டை விரலா இல்ல இடது கை கட்டை விரலா? கால்னா...வலது கால் கட்டை விரலா இல்ல இடது கால் கட்டை விரலா...

ரொம்ப டவுட்டா இருக்கே :0))

அது சரி(18185106603874041862) said...

//
இன்றைக்கு "மழைக் கஞ்சி" என்ற சொல்லே பலருக்கு மறந்திருக்கலாம்.

சும்மா ஒரு பகிர்வு . வாசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள்.

//

காலைல எந்திரிச்சி ஒரு வீணாப் போன பிரட்டை சாப்டுக்கிட்டு இருக்கேன்...நீங்க வேற இப்படி வித விதமா சொல்லி பசியை கெளப்புறீங்களே!

சும்மா பகிர்வுனாலும் நல்லா இருக்கு..

அது சரி(18185106603874041862) said...

//
(குதிரை சாப்பிடுமே கொல்லு அது தான் கானப் பயிர் ...கொல்லுத் துவையல் சாப்பிட்டால் எடை குறையும் என்று எதிலோ படித்தேன்)
//

எங்க ஊர்ல நானும் கானத் துவையல் சாப்ட்ருக்கேன்.....கானத்தை கொஞ்சம் சிவக்க வறுத்துக்கணும்...அப்புறம் வர மிளகாய், பூண்டு, கொஞ்சமா புளி...துவையல் செஞ்சா ரொம்ப நல்லாருக்கும்...ஊர்ல கள்ளு, பட்ட சரக்கு அடிக்கும் போது கானத் துவையல் இருந்தா இன்னும் நாலு ரவுண்டு போகும்...பாட்டி திட்டிக்கிட்டே துவையல் அரைக்கும்...தாத்தா அடிச்சிக்கிட்டே இருப்பாரு...அப்படியே அவருக்கு தெரியாம நானும் :0))

Geekay said...

//இன்றைக்கு "மழைக் கஞ்சி" என்ற சொல்லே பலருக்கு மறந்திருக்கலாம். //

மறக்கவில்லை அக்கா,
அரசியல் கட்சிகள் கஞ்சித்தொட்டி வைத்தார்களே..
அதுபோல தானே இதுவும் ..மறக்க முடியுமா?.
உங்கள் பதிவு அருமை.

KarthigaVasudevan said...

//வல்லிசிம்ஹன் said...

அம்மாடி!!!என்ன உற்சாகமான நாட்கள் அவை!!
உண்மையில் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள் மிஸஸ்.டவுட்.நினைவு இருப்பதும் அதை எங்களுக்குச் சொல்லணும்னு தோன்றியதும்தான் அருமை.
ரொம்ப நன்றிப்பா.
//


என்ன வல்லிம்மா இப்படி சொல்லிட்டீங்க...நான் எழுதறதைப் படிக்க உங்கள மாதிரி பெரியவங்க இருக்கையில எழுதுவதும்..பகிர்வதும் ஒரு நல்ல சுவாரஸ்யமான அனுபவமாச்சே. எனக்குத் தெரிந்ததைப் பகின்ர்த்து கொள்கிறேன். இது ஒரு பயற்சி கூடவே மலரும் நினைவுகள் சரி தானே. எனக்கு மட்டும் அல்ல வாசிப்பவர்கள்ளுக்கும் தான்.

KarthigaVasudevan said...

// குடுகுடுப்பை said...

தமிழ்க்கவிதையே புரியாது, இதுல அரைத்தெலுங்குல கவுஜ, உங்க இம்சை தாங்கல.//


வேற வழியே இல்லை .எஸ்கேப் ஆகலாம் முடியாது குடுகுடுப்பை அண்ணா .இம்சைகள் தொடரும் .

KarthigaVasudevan said...

// குடுகுடுப்பை said...

குதிரை சாப்பிடுமே கொல்லு அது தான் கானப் பயிர் ...கொல்லுத் துவையல் சாப்பிட்டால் எடை குறையும் என்று எதிலோ படித்தேன்//

நானும் வாங்கி சாப்பிட்டேன், கொள்ளு அஞ்சு பவுண்லேந்து ஒரு பவுண்டா ஆயிருச்சு, நிஜமா வேகமா எடை குறையுது.
//

வீணா குதிரையோட கோபத்துக்கு ஆளாயிடுவீங்க போல இருக்கே. குதிரை கொள்ளுன்னு நினைச்சு உங்களைக் கடிக்காம இருந்தா சரி .

KarthigaVasudevan said...

//அது சரி said...
//
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா கட்டை விரலில் பல் துலக்குபர்களை ?

நான் பார்த்திருக்கிறேன் என் பால்ய வயதில் கிட்டத் தட்ட தினமும் ,கோபால் தாத்தா அப்படித்தான் பல் துலக்குவார்.
//

கட்டை விரல்னா...கை கட்டை விரலா இல்ல கால் கட்டை விரலா...வலது கை கட்டை விரலா இல்ல இடது கை கட்டை விரலா? கால்னா...வலது கால் கட்டை விரலா இல்ல இடது கால் கட்டை விரலா...

ரொம்ப டவுட்டா இருக்கே :0))//
அதுசரி நிதானத்துக்கு வரலையா இன்னும். இப்படிப் பட்ட டவுட் எல்லாம் வருதே?!

KarthigaVasudevan said...

//அது சரி said...
//
(குதிரை சாப்பிடுமே கொல்லு அது தான் கானப் பயிர் ...கொல்லுத் துவையல் சாப்பிட்டால் எடை குறையும் என்று எதிலோ படித்தேன்)
//

எங்க ஊர்ல நானும் கானத் துவையல் சாப்ட்ருக்கேன்.....கானத்தை கொஞ்சம் சிவக்க வறுத்துக்கணும்...அப்புறம் வர மிளகாய், பூண்டு, கொஞ்சமா புளி...துவையல் செஞ்சா ரொம்ப நல்லாருக்கும்...ஊர்ல கள்ளு, பட்ட சரக்கு அடிக்கும் போது கானத் துவையல் இருந்தா இன்னும் நாலு ரவுண்டு போகும்...பாட்டி திட்டிக்கிட்டே துவையல் அரைக்கும்...தாத்தா அடிச்சிக்கிட்டே இருப்பாரு...அப்படியே அவருக்கு தெரியாம நானும் :0))//

அந்த வயசிலா ? ரொம்ப நல்ல பிள்ளையாத்தான் இருந்திருப்பீங்க போல இருக்கே அதுசரி...அதுசரி!!!...

KarthigaVasudevan said...

Geekay said...

//இன்றைக்கு "மழைக் கஞ்சி" என்ற சொல்லே பலருக்கு மறந்திருக்கலாம். //

மறக்கவில்லை அக்கா,
அரசியல் கட்சிகள் கஞ்சித்தொட்டி வைத்தார்களே..
அதுபோல தானே இதுவும் ..மறக்க முடியுமா?.
உங்கள் பதிவு அருமை.//


அரசியல்வாதிகள் வைக்கும் கஞ்சித் தொட்டிக்கும்...மழைக் கஞ்சிக்கும் ஒரு வித்யாசம் இருக்கிறது Geekay ,
அது அவர்களே காய்ச்சி ஊற்றுவது. இது வீடு வீடாக போய் சேகரம் பண்ணுவது . எப்படியோ அரசியல் வாதிகள் மக்களை பிச்சை எடுக்க விடாமல் இருந்தால் சரி(அது தான் எப்பவோ விட்டு விட்டார்களே என்கிறீர்களா? அதுவும் சரி தான்! )