
Tuesday, February 16, 2010
Drawings ... My Daughter

Wednesday, February 10, 2010
My Daughter...

நேற்று பாப்புவை cycling அழைத்துச் செல்லும் போது அவள் பாதையோரம் கண்ணில் பட்ட காகங்கள்...நாய் ...நாய் குட்டிகள் ...பசு மாடு ,எல்லாவற்றுடனும் பேசிக் கொண்டே வந்தாள்.பார்க்க வெகு அழகாய் இருந்தது,
காகங்கள் கூட்டமாய் குப்பையில் இருந்த ஏதோ ஒரு உணவுக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தன ,ஒரே ஒரு காகம் மட்டும் தனியே மற்ற காகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
பாப்பு இங்கிருந்து கொண்டே ...
"ஏய் செல்லக் குட்டி" நீ சாப்பிட்லையா? ஒனக்குப் பசிக்கலையா? போ...போ ..இப்பிடி...இப்பிடி பறந்து போயி அப்பிடி...அப்பிடி சாப்பிடுவியாம்." சொல்லி விட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு ,
அடுத்து ஒரு நோஞ்சான் பசுமாடு குப்பையில் பிளாஸ்டிக் பையைத் தின்ன முயன்று கொண்டிருந்தது.
"ஏய் கௌ (கௌ) ...பைய போய் திங்கற...வயித்துல சிக்கிக்கும்,ஒனக்கு வாந்தி வாந்தியா வரப் போகுது ச்சூ...ச்சூ ஓடிப் போ" என் சுடிதார் முனையை இறுக்கப் பற்றிக் கொண்டு அதை விரட்ட பார்த்து முடியாமல் போகவே ;
ச்சே..ச்சே ..பெட் கௌ "
சொல்லி விட்டு நான் அவள் சொன்னதை ஆமோதிக்கிறேனா என்றொரு பார்வை என்னை நோக்கி;
பார்க்கில் யாரோ இரண்டு நாய்க்குட்டிகளை கொண்டு வந்து பார்க் பெஞ்சில் கட்டிப் போட்டு விட்டு வாக்கிங் போயிருந்தார்கள் ,அந்நேரம் கூட்டமும் அதிகம் இல்லை.
ம்மா ...நம்மளும் ஒரு dog வளக்கலாமா?!
சூப்பரா இருக்கும்மா குட்டி டாக் "dog guards our home " pet animals ல வருதுல்ல .
ம்...டாடி வந்ததும் டாக் வாங்கிட்டு வரச்சொல்லி வளக்கலாம்டா."
எனக்கு நாய்...பூனை வளர்ப்பெல்லாம் பயங்கர அலர்ஜி,ஆனாலும் மறுத்தால் அவள் அழக்கூடாதே என்பதற்காய் சும்மா சொல்லி வைத்தேன்.
"நீ தான் நாய்னாலே கிட்டப் போக பயப்படுவியே...அப்புறம் எப்பிடி நாய் வளப்பியாம்?!
அதெல்லாம் நான் dog கிட்ட பேசிப் பேசி friend ஆயிடுவேன்"
இப்ப பார் இந்தக் காக்கா...இந்த கௌ இந்த டாக் எல்லாம் கூட நம்ம friends தான் ,டெய்லி இப்பிடி பேசிட்டே இருந்தா நம்ம எல்லாரும் best friends தான் மம்மி!!!"
எனக்கு ;
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்" பாரதியின் வரிகள் ஞாபகம் வந்தது,சிரித்துக்
கொண்(டேன்)டோம்.
குழந்தைகளின் அகஉலகம் எப்போதுமே இப்படித்தான் மிக மிக அழகானது மட்டுமல்ல பாரபட்சம் அற்றதும் கூட. :)))
டிஸ்கி:
Thursday, December 10, 2009
ஹரிணி(பாப்பு) கலெக்சன்ஸ் ...

கணேஷ ஸ்துதி இல்லாமலா ?! முதல் வணக்கம் அவருக்கு தானே...ஜூனியர் சந்தமாமா பாப்புவுக்கு மிகவும் பிடித்த புத்தகம்.நேற்று அதைப் பார்த்து இரண்டே நிமிடத்தில் இந்த பென்சில் டிராயிங் ...பிள்ளையார் கூட என் பொண்ணு கைபட்டு எப்படி ஜொலிக்கிறார் பாருங்க!(தற்பெருமை கொஞ்சம் ஓவராத் தான் போச்சு இல்ல!!!)

மேலே ஹெலி ஹாப்டர் பறக்கிறதாம்..கீழே சாலையில் ஸ்கூல் வேன்..ஆட்டோ ...பஸ் இப்படி சில ட்ரான்ஸ்போர்ட் வரைந்திருக்கிறாள். பாப்பு ட்ரான்ஸ்போர்ட் லெசன் படிப்பதால் விளைந்த படம் இது. நல்லா தான் இருக்கு இல்ல?!
Thursday, November 26, 2009
பாப்பு செய்த மணிமாலை

பாப்புவுக்கு பள்ளி நேரம் மாலை மூன்று மணியுடன் முடிந்து விடும் ,வீட்டிற்கு வந்த பின் உடனே யூனி பார்ம் கூட மாற்றிக் கொள்ளாமல் அவள் செய்யும் முதல் வேலை டி .வியை ஆன் செய்வது தான்...பிறகு அவள் இரவு தூங்கச் செல்லும் வரை அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் , அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறாளோ இல்லையோ டி.வி அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் ,இப்படி ஒரு கட்டாய மனநிலை,ஒற்றைக் குழந்தையாய் வளரும் பல குழந்தைகளுக்கும் இருக்கக் கூடும் என்றே தோன்றினாலும் ,இந்தப் பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும் என முயன்றதில் நல்ல பலன் .
நேற்று இந்த செயற்கை மாலையும் ,இயர் ஹேங்கிங்கும் பாப்புவே தன் கையால் செய்து காட்டினாள் எனக்கும் அவளது அப்பாவுக்கும்.இன்றைக்கு பள்ளிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறாள் அவளது அனிதா மிஸ்ஸிடம் காண்பிக்க வேண்டுமாம்.
தேவையான பொருட்கள்:
மீடியம் சைஸ் பீட்ஸ் - 40 (கலர் கலராக கலந்து வாங்கிக் கொள்ளவும் )
மாலை முகப்பு(டாலர் போல) செய்ய - 3 சிறு மணிகள் பிணைத்த தொங்கல்கள்
நரம்பு (கோர்க்க) - 3௦0 சென்டி மீட்டர் (அல்லது) தேவையான அளவு
திருகு அல்லது கூக் - 1 ஒன்று (ரெடிமேட் ஆகவே கடைகளில் கிடைக்கும்)
நரம்பில் விரும்பும் வண்ணங்களில் மணிகளைக் கோர்த்து இரண்டு முனைகளையும் பிணைக்கும் போது ஏற்க்கனவே வாங்கி வைத்த ரெடி மேட் ஹூக்கின் பின்புற முனைகளையும் மணிகளின் கடைசியில் உள்ளே கோர்த்து உட்புறமாக முடிச்சிடவும்
இயர் ஹேங்கிங் செய்யத் தேவையானவை :
மாலை முகப்பு செய்யப் பயன்படுத்திய சிறுமணிகள் பிணைத்த தொங்கல்கள் - 2
கேங்கிங் கூக் - 2
இது மாலை செய்வதைக் காட்டிலும் எளிதானது வாங்கி வைத்த ரெடிமேட் ஹேங்கிங் ஹூக்கில் சிறுமணிகள் பிணைத்த தொங்கல்களை பிணைத்தால் இயர் ஹேங்கிங் ரெடி .
இப்படியாக நேற்று பாப்பு அதிகம் டி.வி பார்க்கவில்லை ,மேஜிக் வொண்டர் லேன்ட் மட்டுமே பார்த்து விட்டு ஹோம் வொர்க் செய்தாள்,பிறகென்ன தூக்கம் வரவே சரியான நேரத்திற்கு தூங்கப் போய் இன்றைய பொழுது அவசரமின்றி அழகாக விடிந்தது.
எனக்கும் ஐயோ டி.வி எந்நேரமும் பார்க்கிறாளே என்ற பயம் குறைந்தது, ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை தான் ;அடுத்தென்ன செய்யலாம் அவளது கவனம் டி.விக்குச் செல்லாமல் தடுக்க என்று யோசிப்பதில் காலம் கரைகிறது எனக்கு .
Sunday, August 30, 2009
ரெட்டை வால் ரெங்குடு vs பாப்பு
(தட்டாமாலை என்பது "கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா "பூவரசம் பூ பூத்தாச்சு ...பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு " என்று பாடிக் கொண்டே "கிறு..கிறு..கிறு " என்று பாவாடை குடையாக விரிந்து பறக்க குதூகலாமாய் சுற்றிக் கொண்டே ஆடுவாரே அது தான்,)
சுற்றி முடித்ததும் காதுக்குள் கொய்ங் என்று ரீங்காரம் எழலாம்.அதிகப் படியான சந்தோஷ உணர்வை வெளிப்படுத்த இப்படி ஒரு அருமையான விளையாட்டை அல்லது கொண்டாட்டத்தை யார் கண்டுபிடித்தார்களோ தெரியாது...ஆனால் அவர்கள் புண்ணியவான்கள்!!!
இனி கார்டூன் விசயத்துக்கு வருகிறேன் ,
தன் அருமை பிள்ளைக்கு பள்ளி திறந்தால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விடுதலை கிடைத்தது போல இத்தனை சந்தோசமா ? இப்படியா சிறுபிள்ளைகளைப் போல தட்டாமாலை சுற்றிக் கொண்டு ஆடுவார்கள்?
அதற்க்கு ரெங்குடுவின் கமென்ட் " எனக்கு நாளைக்கு ஸ்கூல் திறக்கப் போறாங்கன்னு நீங்க இன்னைக்கு இவ்ளோ கொண்டாடறது அவ்ளோ ஒன்னும் நல்லா இல்லை!!!???
இந்த பதிவை நான் இப்போது இந்நேரம் நான் வெளியிடக் காரணம் சென்ற வாரம் முழுக்க லேசான காய்ச்சல் காரணமாக விடுமுறையில் ஓய்வெடுத்த (!!!??? )பாப்பு;
இருங்க ...
பாப்பு asked ரெஸ்ட்டா அப்படின்னா என்ன?!) நான் சொன்ன பதில் "நல்லா தூங்கி எழுந்தா அது தான் ரெஸ்ட் கண்ணம்மா.
பாப்பு replied "தூங்கறதா தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை தூக்கம்...தூக்கம் ...தூக்கம் தான்"
"நான் தூங்காமலேயே ரெஸ்ட் எடுத்துக்கறேன் , ம்மா நீ என்னை தூங்கச் சொல்லி disturb பண்ணாம இருந்தாலே போதும் " பிராமிஸ் பண்ணு .
அம்மே பகவதி துர்கே இந்த ஒரு வாரம் முழுக்க சோதனை தான்
வீட்டை பெருக்கித் தள்ள தள்ள சுத்தமாக்கின சுவடே தெரியாம மறுபடி இறைபடும் காகிதக் குப்பைகள் (பாப்பு சியாமா ஆன்ட்டி கிட்ட சின்ன சின்ன கிராப்ட் கத்துக்கராங்கலாமாம் !!!)
பாத்ரூமில் டேப் மூட மறந்து விட்டேனோ என்னவோ என்று ஓடிப் போய் பார்த்தாள் "ஒரு சாக்சுக்கு ஒரு சோப்பு போதும் இல்லையாம்மா ..பத்தலைன்னா சோப்பு எங்க இருக்குன்னு சொல்லிட்டு நீ போய் ரெஸ்ட் எடு இனிமே என் டிரஸ் நான் தான் வாஷ் பண்ணுவேன்.(சொல்லி விட்டு என்ன ஒரு சாத்வீகப் புன்னகை அந்த குட்டிப் பூ முகத்தில் !?)
திடீர்னு ஒரு மத்தியான நேரம் பறக்கும் குதிரை செய்யனும்னு ஆசை படு தீவிரமாக கொழுந்து விட்டு எரிய ...மறுபடி பாட்டியோட வாயில் புடவையால் நடு ஹாலில் தொட்டில் கட்டினோம்
குதிரை செய்ய தொட்டில் எதுக்கு??
பாப்பு said அதான குதிரையோட உடம்பு ..உனக்கு ஒன்னும் தெரியலை நீ கம்முனு இரு .குதிரை செஞ்சப்புறம் உன்னைக் கூப்பிடுவேன் ...சும்மா...சும்மா question கேட்டுகிட்டு தொல்லை பண்ணாதம்மா .
என் சுடிதார் துப்பட்டாக்கள் இரண்டு தொட்டிலின் இரு முனைகளில் கட்டப் பட்டன ,அவற்றை புடவைக் கடைகளில் விரித்து விடுவதைப் போல விசிறியாக விரித்து விட்டு அடுத்த முனைகள் இரு பக்கமும் எதிர் எதிர் சுவர்களில் இருந்த கம்பிகளில் குதிரையின் றெக்கைகள் போல தோன்றும் படி மாட்டப் பட்டன.
விளையாட வைத்திருந்த மேஜிக் மாஸ்க் குதிரையின் முகமானது . முனைகளில் குஞ்சலங்கள் நிறைந்த இன்னொரு துப்பட்டா குதிரைக்கு வாலானது .
பாப்பு முருகன் மயிலில் உட்காரும் பாவனையில் தொட்டிலில் இரு புறமும் கால்களைப் போட்டு அமர பறக்கும் குதிரை ரெடி .
இது என்னோட செல்லக் குதிரை நீ அப்பால்லாம் இதுல ride பண்ணக் கூடாது ...பாவம் அதுக்கு முதுகு வலிக்கும் ...குட்டிப் பாப்பா குதிரை ,இது பாப்பாவுக்கு மட்டும் தான்.(ரொம்பத்தான் ஜாக்கிரதை உணர்வு?!)
மம்மி எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரியே ட்ரெஸ் பண்ற நீ ...ஒரே போரிங் !!!
நான் உனக்கு disigner skirt பண்ணித் தரேன் .
அன்றைக்கு வந்த எக்ஸ்பிரஸ் நடுப்பக்கத்தை உருவி ஸிஸரால் மடமடவென்று skirt வடிவத்தில் கத்தரித்து முழுதும் கம் தடவி வெள்ளி நிற ஜிகினாத் தூளை அதில் குத்து மதிப்பாகக் கொட்டி தடவி விட மேலே அவளுக்குப் பிடித்த குந்தன் கற்களை ஒட்டி முடித்து அதைக் காய வைக்கும் பொறுமை எல்லாம் இல்லை .
எவ்ளோ அழகா இருக்கு பார், இப்படி veriety யா ட்ரெஸ் பண்ணிக்கணும் மம்மி. என்று ஒரு வெற்றிச் சிரிப்பு .
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...
என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் ...நான்?!
அதாகப்பட்டது என்னவெனில் ஒரு வாரம் லீவ் முடிந்து இன்றைக்கு தன் பாப்பு ஸ்கூல் போகிறாள்.
நாங்கள் ரெங்குடுவின் அப்பா அம்மாவைப் போல தட்டாமாலை எல்லாம் சுற்றவில்லை ...நம்புங்கள்.
Wednesday, April 8, 2009
பாப்பு...தொட்டில் பாட்டு...மற்றும் குத்துவிளக்கில் காய்ச்சிய பால் !!!
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாரடி
தையலே கேளடி ...உந்தன் பையனைப் போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை ....
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்தில் உதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாரடி ;
பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயினில் முத்தமிட்டான்டியசோதா ...
பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயினில் முத்தமிட்டான்டிபாலனல்லடி
உன் மகன் ஜாலமாகச் செய்வதெல்லாம் நாலு பேர்கள் கேட்க சொன்னால் நாணம் மிக ஆகுதடி ...
தாயே யசோதா...
காலிலே சிலம்பு கொஞ்சவே கைவளை குலுங்கிட
முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
வானவரெல்லாம் புகழ மானிடரெல்லாம் மகிழ
நீலவண்ணக் கண்ணனவன் நர்த்தனம் ஆடினான் .
தாயே யசோதா...
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்தில் உதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாரடி ;
தையலே கேளடி ...உந்தன் பையனைப் போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை ....
பாடலின் வரிகளை நான் சரியாக வரிசைப் படுத்தி இருக்கிறேனா என்ன என்று தெரியவில்லை,எனக்குத் தெரிந்த வரையில் எழுதியாகி விட்டது ..பலர் இந்தப் பாடலைக் கேட்டிருக்கக் கூடும் .அருமையான பாடல்.
இந்தப் பாடலை எஸ்.பி.பியின் தேன் குரலில் முதன் முதலில் கேட்கும் போதே பரம ஆனந்தமாக இருக்கும் ,பிடித்துப் போனதால் அடிக்கடி இதே பாடலை கேட்டதில் பாடல் மனதில் பதிய பாப்பு பிறந்ததும் அவளைத் தூங்க வைக்க தொட்டில் பாட்டாக இதையே பாடுவேன்.
வீட்டில் அப்பாவிலிருந்து ....தம்பி ...அப்போது அம்மா வீட்டில் இருந்ததால் வார இறுதி விடுமுறையில் எங்களைக் காண வரும் தேவ் ...என் அம்மா எல்லோருமே சிரிப்பார்கள்,ஏனென்றால் பாப்புவை தொட்டிலில் போட்டு எத்தனை தொட்டில் பாட்டுக்கள் (தாலாட்டு ) பாடினாலும் அவள் கண்களை மூடி தூங்குவதற்கான எந்த முகாந்திரமும் தெரியாது.
என் இரு பாட்டிகளும் பழைய தொட்டில் பாட்டுக்கள் நீள...நீளமாக நிறைய பாடுவார்கள் .கிட்டத் தட்ட அரைமணி முதல் ஒருமணி நேரம் வரை பெரிய பெரிய பாட்டுக்கள் எல்லாம் கூட அருமையாகப் பாடுவார்கள் ...பாப்பு அதை எல்லாம் கர்ம சிரத்தையாகக் கேட்டுக் கொண்டிருப்பாள் கால் கட்டை விரலை வாயிலிட்டுக் கொண்டோ அல்லது கை கட்டை விரலை சப்பிக் கொண்டோ ,
ஆனால் கண்களில் மட்டும் பல்ப் எரிவதைப் போல அந்தப் பாட்டுக்களைக் கேட்ட பின் தான் அதிக வெளிச்சம் தெரியும் .அவள் தூங்கப் போவதற்கான அறிகுறியே தெரியாது.;கடைசியில் அவளைத் தூங்க வைக்கப் பாடிப் பாடி களைத்துப் போய் பாட்டிகள் தாங்கள் பாடிய பாட்டுக்கு மயங்கி தாங்களே தூங்கி விடும் வழக்கமாகி விட !!!
இதேதடா துன்பம் என்று அதற்குப் பின் தான் இந்தப் பாடலை அந்தக் கண்ணனே காதில் விழவைத்தான் போல என்றெண்ணிக் கொண்டோம் , இப்போது பாட்டிகளுக்கு தாலாட்டுப் பாடும் தினப் படி ஹோம் வொர்க்கில் இருந்து சற்றே விடுதலை, இந்தப் பாடலை வேறு யார் பாடினாலும் பாப்பு தூங்க மாட்டாள் ...அவளுக்கு அவளது அம்மா தான் இந்தப் பாடலை பாட வேண்டும் !!!
கற்பனை செய்து பாருங்கள் தினமும் ஆறு மாதக் கைக்குழந்தை ஒன்று பகலெல்லாம் தூங்காமல் ...இரவுகளிலும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை விழித்துக் கொண்டு எந்நேரமும் விளையாடிக் கொண்டே இருந்தால் அந்த வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது ...கூடவே பெரியவர்கள் (ஐ மீன் தொட்டில் பாட்டுப் பாடி களைத்துப் போன பாட்டிகள் அன் கோ ?) எப்படித் தான் தூங்குவதாம் ?
வந்தது விடியல்!? பாப்பு இந்தப் பாடலைக் கேட்டதும் ஆழ்ந்து தூங்க ஆரம்பித்து விடுவாள் ...எல்லாம் ஒரு இரண்டு மணி நேரம் மட்டுமே...பிறகு மறுபடி ...ம்மா ... ங்கா...ஞ்சா...சத்தம் ஆரம்பிக்கும்...மறுபடி தொட்டில் பாட்டு தான் ...ஆக மொத்தம் எத்தனை பேர் பாடினாலும் கடைசியில் இந்தப் பாடல் பாடினால் மட்டுமே பாப்பு தூங்குவாள்.
இதில் ஒரு ட்ரிக் வேறு வைத்திருந்தாள் பாப்பு ...முதலிலேயே இந்தப் பாடலை பாடி விட்டால் பாப்பு உடனே தூங்கி விடுவாள் என்று முதலில் இந்தப் பாடலை பாடினோம் என்று வையுங்கள் ஒரு பிரயோஜனமும் இல்லை ,பாப்பு கிருஷ்ணா பரமாத்மா போல தொட்டில் நிறைக்க சிரித்துக் கொண்டே தான் இருப்பாள் யார் தொட்டிலை ஆட்டுகிறோமோ அவர்களது முகத்தைப் பார்த்துக் கொண்டு தெய்வீகச் சிரிப்பை சிந்திக் கொண்டு .
சும்மா இரண்டு பாடல்களை முதலில் பாடி முடித்து விட வேண்டும்...கடைசியில் மூன்றாவதாக இந்தக் கண்ணன் பாட்டு பாடினால் ஒரு இரண்டு மணி நேரத்திற்கு நாம் ஓய்வெடுத்துக் கொள்வதற்கு உத்தரவாதம் உண்டு ,பாப்பு இந்தப் பாடலில் தான் தூங்குவதென அப்போதே ஏதேனும் சத்யப் பிரமாணம் செய்து கொண்டிருப்பாளோ என்னவோ?
அதிலும் இந்தப் பாடலை அவளது அம்மாவின் இனிய குரலில் தான் (ஹா ...ஹா..ஹா...ஆறு மாதக் குழந்தைக்கு அம்மாவின் குரல் மட்டுமே இனிமையாக இருக்கக் கூடும் மற்றேல்லாருடைய குரலைக் காட்டிலும் !!!சரி தானே நான் சொல்வது?)கேட்கப் பிடிக்கும் .பாட்டு முடிவதற்குள் தூங்கி விடுவாள்.
இப்போது தெரிந்திருக்கக் கூடுமே ஏன் வீட்டில் அப்பா முதற்கொண்டு எல்லோரும் ஏன் சிரித்தார்கள் என்று ?!
கைக்குழைந்தைகளை தூங்கப் பண்ணுவது என்பதென்ன சாமான்ய காரியமா ? அந்தக் காலத்தில் எல்லாம் குறைந்த பட்சம் ஐந்து அல்லது ஆறு குழந்தைகள் தலா அது அம்மா ...அது அப்பாவிற்கு ! இப்போது இந்த ஒன்றை சமாளிக்கவே புதுசாகக் கற்க வேண்டி இருக்கிறது பல விசயங்களை.
என் அப்பாவின் அத்தைப் பாட்டி ஒருவர் அவருக்கு ஐந்து குழந்தைகள் எல்லாம் அடுத்தடுத்து பிறந்து விட்டதால் அந்த வீட்டில் நண்டும் சிண்டுமாக எப்போதும் பிள்ளைகளின் குரல் பசிகோ இல்லை தூக்கதிற்கோ அழுவது கேட்டுக் கொண்டே இருக்குமாம் . பாட்டிக்கு ஒத்தாசைக்கு ஆள் இருக்க மாட்டார்களாம் அப்போது அவர்களுக்கு நிலம் நீச்சு ஏகப்பட்டது உண்டு வீட்டு ஆட்களும் வயலுக்குப் போய்விடுவார்கள்.இவர் ஒருவரே கை குழைந்தை முதற்கொண்டு ஐந்து பிள்ளைகளையும் வீட்டில் சமாளிக்க வேண்டும் .
அந்தக் காலம் மட்டும் இல்லை இன்றும் கூட குழந்தைகள் வளர்ப்பில் அது நிலை என்னவென்றால் ...பசிக்கு அழும் குழந்தைகள் அவர்களுக்கென்று பால் கலந்து எடுத்து வருவதற்குள் குய்யோ முய்யோ என்று கத்தித் தீர்த்து விடுவார்கள்.கண்களில் ஜலம் கொட்டும் ,இது எல்லோருக்கும் கிடைத்திருக்கக் கூடிய அனுபவம் தான் .
எல்லா நேரமும் பல வேலைகளுக்கிடையில் சரியான நேரத்திற்கு பிள்ளை அழும் முன் அதன் பசியாற்றுவது என்பது சில சமயங்களில் இயலாது போகலாம்.வேறு வேலை ஏதும் செய்து கொண்டிருப்பின் மறந்தும் விடலாம்,அதற்குள் கத்தல்...கதறல் ஆரம்பித்து விடும்.
இந்தப் பாட்டி சொன்ன செய்தி என்னவென்றால் இப்போதைப் போல அப்போது கேஸ் ஸ்டவ் கிடையாதல்லவா ...ஐந்து பிள்ளைகளும் பசிக்கு அழுதால் விறகடுப்பில் பற்ற வைத்து பால் கலக்கும் வரை பொறுப்பார்களா என்ன? பெரிய குத்து விளக்கு இருக்குமாம் அவர்கள் வீட்டில் அதை ஏற்றி அதில் பாலை சூடு பண்ணி அப்போதைக்கப்போது குழந்தைகளுக்கு தருவாராம்.
இந்தச் செய்தி எனக்குப் புதிது ...ஆச்சர்யம் கூட !? பகிரத் தோன்றியது பதிந்து விட்டேன் . கருத்துக்களை எழுதுங்கள்.
Monday, February 23, 2009
அழகான நாட்களில் இன்றொரு நாள்/

Monday, January 19, 2009
மை டியர் பாப்பு

சில நாட்களுக்கு முன்பு பாப்பு வரைந்த ஓவியம் இது.
இந்த ஓவியத்தில் இருப்பவர்கள் ...
பாப்புவின் வலது புறம் தேவ் ,இடது புறம் நான்.நடுவில் பாப்புவாம்.
வரைந்து முடித்த பின் அவளே என்னிடம் சொன்னாள்.
எங்களுக்கு மேற்புறம் இருக்கும் படம் என் தம்பியாம்.அதாவது பாப்புவின் மாமா.அவனுடன் அவனது வலது புறம் கண்ணுக்கே தெரியாமல் குட்டியாய் துளியூண்டு ஓவியம் ஒன்று இருக்கிறது கண்களைச் சுருக்கிக் கொண்டு உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும்,
அது பாப்புவின் தம்பியாம்(என் தங்கையின் எட்டு மாத குழந்தை சக்தி தான் அது)அப்புறம் எனக்கும் பாப்புவுக்கும் நடுவில் எங்கள் மூன்று பேருக்கும் தலா மூன்று பூக்களும் வரைந்திருக்கிராளாம்.
தேவ் தலைக்கு மேல் நான்கு கற்களை இணைப்பது போல இருக்கும் படம் என் வளையலாம்!
பாப்பு சொன்னதின் பேரில் இந்த அருமையான ஓவியத்தை நான் வலையில் பதிந்திருக்கிறேன்.
"என் மகள் இவள்" நினைக்கும் போதே எப்போதும் போல் மனம் நிறைவடைகிறது இப்போதும்.
டிஸ்க்கி:- இந்த பெருமை வாய்ந்த ஓவியத்தின் ஒட்டு மொத்த உரிமையும் பாப்புவுக்கு மட்டுமே சொந்தமாம்.
Tuesday, January 13, 2009
நான்...பாப்பு...தேவ்...பிளஸ் புத்தகக் கண்காட்சியும் கிருஷ்ணா ஸ்வீட்சும்
நிறைய ஸ்டால்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன.சென்ற ஆண்டைப் போல இல்லை.முன்புறம் சாமியானவில் கூட அடர்த்தியின்றி அங்கொன்றும்...இங்கொன்றுமாகச் மக்கள் குழுக்களாகச் சிதறி இருந்தார்கள்(பார்க்க ஒரு ஒழுங்கின்றி காமா...சோமாவென்றிருந்தது அந்தக் காட்சி),இயற்கை விவசாயத்தையும்...சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுத்தலைப் பற்றியும் மேடையில் ஏதோ நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
உள்ளே ஒரு ரவுண்டு சுற்றி விட்டு வந்து பார்க்கலாம் என்றார் தேவ் ,
போனமுறை எனக்கு ஸ்டால்களைத் தேர்ந்தெடுப்பதில் பயங்கரக் குழப்பம் இருந்தது,எந்த பதிப்பகத்தில் நான் தேடும் புத்தகங்கள் கிடைக்கும் என்கிற தெளிவேதும் இல்லாமல் முழு கண்காட்சி அரங்கையும் சுற்றிச் சுற்றி வர வேண்டியதாகி விட்டது,இந்த முறை அப்படி எல்லாம் நான் தேவ் மற்றும் பாப்புவை சோதிக்கவில்லை.
முதலில் எனக்குப் பிடித்தமான பதிப்பகங்களின் ஸ்டால் எண்களை பார்த்து விட்டு பிறகு தான் உள்ளே சென்றோம்.சில குழந்தைகள் கையில் பலூன்களுடன் எதிர்ப்படவும் பாப்புவும் பலூன் வேண்டுமென்று ஆரம்பித்து விட்டாள்,சில ஸ்டால்களில் அலங்காரத்துக்கென பலூன்களைத் தொங்க விட்டிருந்தனர், அவர்களிடம் கேட்டால் தருவார்களா என்னவோ என்ற ஐயமிருந்ததால்...நாங்கள் பாப்புவிடம் உள்ளே வேறு ஒரு இடத்தில் பலூன் விற்கிறார்கள் வாங்கித் தருகிறோம் என்று சமாளித்து விட்டு
முதலில் நியூ செஞ்சுரி புக் ஹௌஸ் சில் நுழைந்தோம்.யாரோ சொன்னார்கள் இங்கே நல்ல நல்ல ரஷ்யன் நாவல்கள் எல்லாம் விலை மலிவாகக் கிடைக்கும் என்று. நான் தேடியது ஆன்டன் செகாவ்...கிடைத்ததோ அலேசாண்டர் குப்ரினின் "செம்மணி வளையல்" இந்த ஆசியரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது,தலைப்பை பார்த்தே புத்தகம் வாங்கினேன்.வாசித்த பிறகு தான் தெரியும்...லாடமா ...லட்டுவா என்று!!!
இன்னொரு சுவாரஸ்யமும் அங்கே நடந்தது ,பாப்பு எப்போதுமே நான் என்ன செய்கிறேனோ அதைக் கொஞ்சம் பின்பற்றும் பழக்கம் உண்டு என்பதால் அன்றைக்கும் நான் புத்தகங்களை எடுத்து...சிலவரிகள் வாசித்து விட்டு பிறகு அதை அதே இடத்தில் வைத்து விட்டு அடுத்த அடுத்த புத்தகங்களையும் இதே முறையில் கொஞ்சம் புரட்டிப் பார்த்து எனக்கானதைத் தேர்ந்தெடுப்பதை அவளும் கவனித்திருக்கக் கூடுமோ என்னவோ ,தேவ் தான் பாப்புவைப் பார்த்துக் கொள்கிறாரே என்று நான் புத்தகங்களில் கவனித்துக் கொண்டிருக்க பாப்பு நான் என்னவெல்லாம் செய்கிறேனோ அதையே அவளும் செய்து கொண்டு இருந்திருக்கிறாள்.
ஒரு நான்கு வயது குட்டிப் பெண் அதி தீவிரமாக புத்தக அடுக்குகளில் ஆர்வமாகப் புத்தகம் தேடுவது அங்கிருந்த போட்டோ கிராபர்களுக்கு அதிசயமாகப்ப் பாட்டதோ என்னவோ நான்கைந்து புகைப்படங்களாவது எடுத்திருப்பார்கள் பாப்புவை அவள் புத்தகம் தேடும் போஸில் .இது பத்திரிகையில் வருமா அல்லது சும்மா குழந்தை தானே என்று விளையாட்டுக்கு பொய்யாக எடுத்தார்களோ என்னவோ ? அது அந்த போட்டோ கிராபர்களுக்கே வெளிச்சம்.
பிறகு உயிர்மைக்குள் சென்று பார்த்தோம்...எஸ்ரா,ஜெயமோகன்,சாரு,தமிழச்சி தங்க பாண்டியன் இன்னும் சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் அழகாக அடுக்கியிருந்தனர், எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து விட்டு எஸ்ராவின் "யாமம் " மட்டும் வாங்கிக் கொண்டேன் .இது போன தடவையே வாங்க நினைத்தது ,இப்போது தான் வாங்கினேன்.சாருவின் "ஜீரோ டிகிரி " எடுத்துப் பார்த்து விட்டு இப்போதைக்கு அதை வாசிக்க போதிய மனப் பக்குவம் இல்லையோ என்று எண்ணி வைத்து விட்டேன்.
அடுத்து "காலச்சுவடில் " ..."ஒற்றன்" வாங்கினேன் ,பாராவின் பக்கங்களில் பரிந்துரைக்கப் பட்ட புத்தகங்களில் ஒன்றை வாங்கிய திருப்தி .அசோகமித்ரனை வாசிக்கும் ஆர்வம் முன்பும் உண்டு ஆனாலும் சிறுகதைகளோடு நிறுத்தி இருந்தேன் .பெரும்பாலும் ,பாலகுமாரனும் ,சுஜாதாவும்,சிவசங்கரியும்,அனுராதா ரமணனும்,லக்ஷ்மியுமே ஆக்கிரமித்திருந்தது சில காலம்,பிறகு அம்மாவின் பள்ளி நூலகத்தில் கிடைத்த பழைய "தேவன்...சாவி...மெரீனா எனக்குப் பிடித்துப் போனது எனது கல்லூரி விடுமுறைக்காலங்களில்..இதுவே முதல் முறை அசோகமித்ரனின் படைப்பை வாங்கினேன்.
எட்டாம் வகுப்பு என்று நினைக்கிறேன் அப்போது எங்கள் ஊரில் புதிதாக நூலகம் திறந்திருந்தார்கள்,முன்புற சுவரில் சிவப்பு மையால் பெரிய எழுத்துக்களில் "வெள்ளி விடுமுறை என்று "எழுதி இருப்பார்கள்.அது ஒரு சின்னஞ்சிறு நூலகம்.பெரும்பாலும் அங்கே ஊற்றில் உள்ள இளைஞர்கள் உட்கார்ந்து தினமலர் வாசிப்பார்கள் அல்லது தினத்தந்தி .
நான் என் அம்மாவுக்காக புத்தகம் எடுக்கப் போவேன் அப்போது தான் வாண்டு மாமா வின் பல மாயாஜாலக் கதைகளை வாசித்தேன்."அந்த காலகட்டத்தில் எங்கே "பூந்தளிர்,சிறுவர்மலர்...பாலமித்ரா...ரத்னமாலா,ராணி காமிக்ஸ் என்ற பெயரைப் பார்த்தாலும் உடனே வாங்கிப் படித்தே ஆகவேண்டும் என்றெல்லாம் தோன்றியதுண்டு.
கூடவே தமிழ்வாணன் அப்போது தான் எனக்கு அறிமுகமானார்,தமிழ்வாணன்
என்ற பெயரை விடவும் வெறுமே கருப்பு மையில் தீட்டப் படும் அவரது தொப்பியும் கண்ணாடியுமே பலரையும் போன்று என்னையும் கவர்ந்தவை.அந்தத் தொப்பிக்கும் கண்ணாடிக்கும் அப்படி ஒரு மவுசு உண்டு தான்.அந்தப் புத்தகங்களில் அப்படி ஒரு ஈடுபாடு .
கண்காட்சியைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டு எங்கெங்கேயோ சுற்றி வளைத்து எழுதுகிறேன் பாருங்கள் ,சரி விசயத்துக்கு வருகிறேன்.எப்போதுமே "சுஜாதாவை" மறப்பதில்லை நான் விடுவதும் இல்லை .கணையாழியின் கடைசிப் பக்கங்களில் இருந்து கொலையுதிர்காலம் தொட்டு...ஸ்ரீரங்கத்துக் கதைகள் கடந்து.ஒவ்வொன்றைப் பிரித்துப் பார்த்து விட்டு கடைசியில் "யவனிகாவைத்" தேர்ந்தெடுத்தேன்.
பாப்புவுக்கு அவள் கேட்ட பலூன் காலச்சுவடில்" கிடைத்தது.அங்கிருந்த ஒரு விற்ப்பனையாளர் ஸ்டாலில் நுழையும் எல்லாக் குழந்தைகளுக்கும் பாரபட்சமின்றி பலூன்களை பரிசு போலத் தந்து கொண்டிருந்தார்.பாப்புவுக்கு பச்சை நிற பலூன் கிடைத்தது,அவள் எப்போதும் போல எனக்குப் பிங்க் கலர் பலூன் தான் வேண்டும் என்று மாற்றி வாங்கிக் கொண்டாள் .
ராஜநாராயணனை வாங்க "அன்னம் பதிப்பகம்" சென்றோம்,ராஜநாராயணன் புத்தகங்கள் ஏற்கனவே கொஞ்சம் இருந்ததால் ...நான் வாங்க நினைத்த கி.ரா வுக்கு மற்ற எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள் புத்தகத்தின் விலை பட்ஜெட்டைத் தாண்டி விட்டதால் "இந்த வருட இந்த" இந்த எடுத்துக் கொண்டேன்.தவற விட்ட மற்றொன்று "கழனியூரானின்" குறுஞ்சாமிகளின் கதைகள்" எடுத்துப் பார்த்து விட்டு அடுத்த முறை வாங்கலாம் என்று வைத்து விட்டேன்.ஆலிஸை வாங்கியது பாப்புவுக்காக!
அம்பையைப் பற்றியும் எனக்கேதும் இதுவரை பெரிதாகத் தெரியாது .விருது பெற்ற பெண் எழுத்தாளர் என்ற ஆர்வத்தில்" காட்டில் ஒரு மான் " வாங்கினேன்.அங்கேயே நளினி ஜமீலாவின் "ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை" வாங்கினேன்.இதுவும் சென்ற முறை வாங்க நினைத்து மிஸ் பண்ணிய புத்தகமே.படிக்க வேண்டிய புத்தகம் தான் என்று தோன்றவே வாங்கி விட்டேன்.
இவ்வளவு தான் இந்த முறை வாங்க முடிந்தது நான் போட்ட பட்ஜெட்டுக்குள்.இது தவிர கேன்டீனில் வேறு கொஞ்சம் செலவானது .ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்காரர்கள் தான் இந்த முறை ஆக்கிரமித்திருந்தார்கள்.பலகாரம் நன்றாகவே இருந்தது.அவர்களைத் தவிர ஜமாய் ஐஸ் கிரீம் கடை ஒன்று மட்டுமே இருந்தது. நாங்கள் ஆளுக்கு ஒரு செட் பரோட்டாவும்,தயிர் சாதமும் வாங்கிக் கொண்டோம்.கேசரி அவர்கள் செய்வதைப் போன்ற பக்குவத்தில் நமக்கு அமைவதில்லை ஏனோ என்ற சந்தேகத்துடன் ஒரு பிளேட் வாங்கிக் கொண்டோம்.
paappu ஐஸ் கிரீம் கேட்டாள்,அவளுக்கு அது ஒத்துக் கொள்வதில்லை என்பதால் சின்னதாய் ஒரு வெனிலா வாங்கிக் கொடுத்து விட்டு பாதிக்கு மேல் நான் எடுத்துக் கொண்டேன்.பாப்பு அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.அவளுக்கு கேட்டவுடன் வாங்கிக் கொடுக்கிறார்களா இல்லையா என்ற டெஸ்டிங் அவ்வளவு தான் !
இப்படியாக இந்த வருடப் புத்தகக் கண்காட்சி விசிட் ஒரு வழியாக முடிந்தது.இதில் நான் வாங்க நினைத்து விடுபட்டது பல புத்தகங்கள்.அவற்றில் டால்ஸ்டாயின் "அண்ணா கரீனாவும்" அடங்கும். புத்தகம் கழிவு போக நானூற்று ஐம்பத்து ரூபாய் என்றார்கள் ,அடுத்த முறை வாங்கலாம் என்று வந்து விட்டேன்,தேவ் ஏன் ...பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளேன் என்றார்,விருப்பமிருந்தும் வாங்கத் தோன்றவில்லை.அடுத்த புத்தகத்து திருவிழா வராமலா போகும் என்று வெளியில் வந்தேன்!?
manimegaip பிரசுரம்...வானதி பிரசுரம் ...விகடன்...விகடனில் ஏதாவது புத்தகம் வாங்குவது வழக்கம் எப்போதுமே உண்டு.இந்தமுறை பாப்புவின் பொறுமை எல்லை மீறியதில் நிதானமாகப் புத்தகங்களைத் தேட அவகாசமில்லை அதனால் அதொன்றும் வாங்காமல் வந்து விட்டோம், .சத்யாவில் "வண்ணதாசன் சிறுகதைகள்" வாங்க நினைத்து கடைசியில் வாங்கவில்லை.இதற்கும் அடுத்த முறை பார்க்கலாம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
கதைப்புத்தகங்கள் தவிரவும் நான் வாங்க விரும்பியது "டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் "பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை " மேலும் எ.கே .டாங்கே எழுதிய "பண்டைக் கால இந்தியா புத்தகங்கள் வாங்க நினைத்திருந்தேன்.அவற்றைத் தேட முடியவில்லை.எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்றும் தெரியவில்லை.இதற்கும் அடுத்த முறை தான் என்று சொல்லிக் கொண்டு ஒரு வழியாய் வெளியில் வந்தோம்.
நாங்கள் வெளியில் வரும்போது மகாத்மா காந்தியும் ,அம்பேத்கரும் (கருப்பு நிற கோட்...சூட் அம்பெத்கராகத் தான் இருக்கும்!) அந்த வெயிலில் முகம் முழுக்க வெள்ளை மாவைப் பூசிக் கொண்டு சாமியானவுக்கு முன்பிருந்த மேடையிலிருந்து படிகளில் எதற்காகவோ இறங்கிக் கொண்டு இருந்தார்கள்.பார்க்கப் பாரிதாபமாக இருந்தது,தலையில் கொம்புகளை ஒட்டிக் கொண்டு அரக்கர்கள் போல சிலர் மேடையில் எதோ பாடி ஆடிக் கொண்டு இருந்தார்கள்.
அவ்வளவு தான் இந்த வருடம் புத்தகத் திருவிழா முடிந்தது எனக்கு. உங்களுக்கு எப்படி ?
எழுதுங்கள் மக்களே!!!
Thursday, December 25, 2008
டியர் தேவ் ...!
டியர் தேவ் ...
இன்றோடு நீங்கள் ஊருக்குக் கிளம்பிப் போய் ஐந்து முழு நாட்கள் முடிந்தே விட்டன,இது வழக்கம் தான் ! ஆனாலும்...என்ன எப்போதுமே மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் திரும்பி விடுவீர்கள்,இந்த முறை என்னவோ பத்து நாட்கள் என சற்று நீண்ட பிரயாணமாகி விட்டது?!
கம்பெனி செலவில் டூர் என்ற பெயரில் நீங்கள் "டர்"(காஸ் டிரபிள் தான் வேறென்ன??) ஆகி வருவதை இன்றைக்கு நேற்றா நான் பார்க்கிறேன்?எனக்கு அது ஐந்தரை வருடப் பழங்கதை ஆயிற்றே?!
ஆரம்பத்தில் செல்ல அழுகையில் பிரிவுத் துயரை கண்ணீரில் கரைத்து காணமல் போகவைக்க முயன்றேன் ,அதற்கடுத்த வருடம் பாப்பு பிறந்ததும் அழுகை நின்றது மாறாக நீங்கள் டூர் கிளம்பும் ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன ஊடல்கள் வந்து வந்து மறைந்தன.மூன்றாம் வருடம் பாப்பு பேச ஆரம்பித்ததும் யாராவது "உங்க அப்பா எங்க பாப்பு என்று கேட்டால் "ஊர் சுத்தப் போயிருக்கார்" என்று பதில் சொல்லத் தொடங்கினாள்.அவள் சொல்வதைக் கேட்டு விட்டு சிரித்தாலும் சின்னக் குரலில் நீங்கள் கிளம்புவதைப் பற்றி ஆட்சேபித்து முணுமுணுப்பதை அந்த வருடம் முழுக்க தொடர்ந்தேன் என்றே நினைக்கிறேன்.
இப்போது நினைத்தால் "சிறுபிள்ளைத்தனமாக" தோன்றினாலும் , அன்றைக்கு அதெல்லாம் தேவையாய் இருந்ததை நீங்களும் நானும் மட்டுமே உணர முடியும் தேவ்.இன்றைய நமது அந்நியோன்யத்தை நிர்ணயித்ததில் அன்றைய அந்தப்பொழுதுகளை நாம் மறந்ததில்லை என்றுமே !
இப்போது அந்த செல்ல அழுகைகளோ...நீளும் முனுமுணுப்புகளோ இல்லாமல் போய் நெடு நாட்களாகின்றன.நானே பெட்டி அடுக்கித் தரும் அளவுக்கு முன்னேறி விட்டேன்.வேறென்ன தான் செய்வதாம் ? "பழகிப் போச்சு " என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கத் தெரிந்து விட்டது மனதுக்கு.எல்லாம் நம் பாப்புவின் "எதிர்காலத்துக்காக " என்ற சமாதானங்கள் மட்டுமே வியாபித்து நிற்கின்றன இப்போதெல்லாம்;
நான் என்னவோ இயல்புக்கு வந்து விட்டேன் தான் ...;
ஆனால் பாப்பு ...
பாப்பு பற்றி நினைத்தால் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது . முன்பு மழலையில் சொல்ல முடிந்ததைப் போல இப்போது அவளால் "அப்பா ஊர் சுத்தப் போயிருக்கார்" என்று சொல்ல முடியவில்லை போல ?!வளர்ந்து கொண்டிருக்கிறாள் அல்லவா? முதல் நாளில் இருந்தே கடந்த நான்கு நாட்களாய் விடிந்ததும் படுக்கையில் நீங்கள் இல்லாத வெற்றிடத்தை பார்த்து...பார்த்து முகம் சுணங்குகிறாள்.
அப்பா வேண்டும் என எப்போதும் போல ஒரு பாட்டம் அழுது முடிப்பாள் என்று தான் எப்போதும் போல இன்றைக்கும் அதற்குத் தேவையான கொஞ்சல் கெஞ்சல் சமரசங்களுடன் காத்திருந்தேன் நான் ! என்ன நினைத்தாலோ பாப்பு ?!அப்பாவின் வாசம் (அப்பாவி வாசம் ...என்று வாசித்து விடாதீர்கள்!!!) இன்றி அம்மாவுக்கும் தான் கஷ்டம் என்று விட்டாளோ ? சென்ற நாட்களைப் போல "அப்பா எப்போவருவார்...இன்னைக்கு...இப்போவே...பின்ன எப்போ தான் ? " என்று நச்சரிக்காமல் ;இந்த முறை என் கழுத்தைக் கட்டிக் கொண்டு " சரி வா மம்மி ...ம்ம்...என் டாடி வரும்போது வரட்டும் ...ஒரு ஒன் வீக் நாம போய் உன் டாடியைப் பார்த்துட்டு வரலாம் " என்று குளுகுளு ஆச்சர்யம் தருகிறாள்.
அதெப்படி அத்தனை சீக்கிரத்தில் கண்டு பிடித்தாள் ? என் முகத்தில் இருந்து என் மனதை அறியும் பக்குவம் அதற்குள் அவளுக்கு வந்து விடுமா என்ன ?எப்படிக் கண்டுபிடித்தாள்?அவளைப் போலவே நானும் என் அப்பாவைப் பார்க்க வேண்டும் என நினைத்திருக்கக் கூடும் என்பதை எப்படித்தான் அவள் அறிந்து கொண்டாளோ?
நான்கு வயதுக் குழந்தை இப்படி எல்லாம் சிந்திக்குமா என்ன?(கொஞ்சம் ஓவர் தற்ப்புகழ்ச்சியா இருக்கு இல்ல!!! அது அப்படித்தான் போங்கப்பா ... ) அதென்னவோ அந்தக் கணத்தில் எனக்கு என்னென்னவோ ஞாபகங்கள் வர ஆரம்பித்து விட்டன,
அட நம் மகளா...நம் பாப்புவா...நம் சிட்டுக்குட்டியா...நம் செல்ல புஜ்ஜியா...பட்டுப்பூனைக்குட்டியா இது? இத்தனூண்டு குட்டிப் பஞ்சுப் பொதியலாய் அவளை முதல் முறை உங்களிடம் நான் நீட்டியபோது (அப்போதும் நீங்கள் ஒரு டூரில் இருந்து தான் திரும்பி வந்திருந்தீர்கள் ...ஞாபகமிருக்கிறது தானே...தேவ் ?) ஏதோ ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை வென்ற சக்ரவர்த்தியைப் போல எத்தனை பரவசமாய் அவளை பட்டுப் போல ஏந்திக் கொண்டு கொஞ்சினீர்கள்.
இடை இடையே நான் ஏதோ சாதனை மங்கை போல என்னைப் பார்த்தும் பெருமிதம் கலந்த புன்னகை வேறு .நான் உங்கள் சாயலை அவளிடத்தில் தேடித் தேடி சொல்ல நீங்களோ என் சாயலை தேடித் தேடி சொல்லிக் கொண்டிருந்தீர்கள் .அத்தனை சந்தோசங்களுக்கும் காரணமான அந்த குட்டிப் பாப்புவா இவள்...கொஞ்சம் வளர்ந்து விட்டாள் ...இன்னும் நிறைய வளருவாள் தான்.
எனக்கென்ன ஆச்சர்யம் என்றால் ? அப்படி அன்றைக்கு நம் கையில் சின்ன சத்தம் கேட்டால் கூட குட்டி வாயை அழகாய் கோணிக் கொண்டு சதா அழுது கொண்டிருந்த பாப்புவா இவள்?
"தாங்க்ஸ் பாப்பு ...ஐ லவ் யு டா குட்டிம்மா ..."அந்தப் பஞ்சு மிட்டாயை என்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டபோது என்னை அறியாமல் ஒரு அம்மாவாக ஆனந்தமாய் அழுகை வந்தது .என் கண்கள் பணிப்பதைக் கண்டதும் அவள் "சமாதானப் படுத்துபவல் போல...ஐ லவ் யு மம்மி...டோன்ட் க்ரை "என்றாள் .
பாப்பு இப்படிச் சொன்ன தருணத்தில் தான் நான் உங்கள் மேல் உள்ள அன்பும் காதலும் பல மடங்கு பெருக இப்படி முடிவெடுத்தேன் ....
அதாகப் பட்டது ...;
- காலையில் அரக்கப் பரக்க அலுவலகம் கிளம்பும் போது "ஜட்டி...பனியன் தேடி அது கிடைக்காமல் கண்ணாமூச்சு ஆடினாள்...சிவு சிவுக்கும் கோபத்தில் தினம் என்னைத் திட்டுவீர்களே "இதான் நீ வீட்டைப் பார்த்துக்கற லட்சணமா?" இதற்க்கெல்லாம் நான் பதிலுக்கு எகிறியதுண்டு இதுநாள் வரை!!! இனி அப்படி இல்லவே இல்லை தேவ். (கணவனே....கண் கண்ட தெய்வம்)
- வெறும் காது குடையும் பட்சுக்கும் ...டைரி மில்க்குக்கும் ...ஏன் அந்த நாசமாய்ப் போன கிங் ஃபிஷருக்காகவும் கூட கூசாமல் ஐந்நூறு ரூபாய் நோட்டை மாற்றுவீர்களே !!!அந்தக் கண்ராவிக்கெல்லாம் முன்பு போல கத்திப் பேசி குத்திக் காட்டாமல் போனால் போகட்டும்(போடா...!!!) என்று தெனாவட்டாக விட்டு விடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.(அதற்காக இனி உங்கள் பர்சில் தினம் வெறும் ஐம்பத்து ரூபாய் மட்டுமே வைத்து அனுப்பப் போவது தனிக்கதை)
- மன்த் எண்டு டார்கெட் பிரசரில் நீங்கள் குழம்பிப் போய் ஒரு டவலுக்கு மேல் ஒரு டவலாக நான்கைந்து டவல்களை கட்டிக் கொண்டு வாசிங் மிசினில் குவித்தால் கூட (நோ விவாதம்) இனி நான் ஒன்றும் சொல்லப் போவதே இல்லை. இப்படிப் பல முடிவுகளை எடுத்திருக்கிறேன்.
முக்கிய குறிப்பு:- இந்த முடிவுகளுக்கு ஆயூள் இன்னும் நிர்ணயிக்கவில்லை என்பதையும் தெரிவித்தே ஆக வேண்டும் தேவ் .குறைந்த பட்சம் உங்கள் திருமுகம் காணும் வரை இப்போதைக்கு கட்டாயம் நீடிக்கும் ...அதனால் சீக்கிரம் வாருங்கள்....வந்து விடுங்கள் என்னருமை தேவ்)
Saturday, December 20, 2008
பாப்பு vs பிங்க் கலர் பூதம்
சரி ..சரி இரு நீ கிட்ட வராத நானே இறங்கிடறேன் ...குழந்தை அவளே இறங்கி வந்து படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டாள்,
பாப்பா பப்பு மம்முடா சூப்பர் டேஸ்ட்...ஒரு வாய் சாப்டுப் பார் அப்புறம் நீயா வேணும் ...வேணும்ப, வா வந்து வாங்கிக்கோ என் செல்லக்குட்டி இல்ல !
அஷ்விதா படுக்கை அறைக்கு வந்ததும் குழந்தை அவள் எட்டிப் பிடிக்க முடியாதபடி வழுக்கிக் கொண்டு பின்வாசலுக்கு ஓடினாள்.
ஹை..உங்கைல தான் மம்மு பிளேட் இருக்கே ..என்ன எப்படி நீ பிடிப்ப ? தள்ளி நின்று கொண்டு எக்காளமாய் சிரித்தது.சரி..சரி விளையாண்டது போதும் வா ..வந்து "ஆ " வாங்கிக்கோ அப்போ தான் ஈவினிங் பார்க் கூட்டிட்டுப் போவேனாம் ; உள்ளே வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்துக் கொண்டு சமாளிப்பாய் கெஞ்சினாள்,
பார்க் எல்லாம் வேண்டாம் "அபிராமிக்குப் போலாம் இன்னைக்கு " அப்போ தான் நான் "ஆ " வாங்கிக்குவேன் ,
அபிராமிக்கா ..!!! OK ..OK பாப்பு என்ன சொல்றாளோ அங்கேயே போலாம் ,நீ பஸ்ட் சாப்பிட்டு முடி அப்புறம் டைம் ஆயிடும்ல மூடிடுவாங்க இல்ல ?
இரு மம்மி வரேன் ..குழந்தை இப்போது பாத்ரூம் பக்கம் போய் விட்டாள் .
பாப்பு பாத்ரூம்குள்ள சும்மா ..சும்மா போக கூடாது நு எவ்ளோ வாட்டி சொல்லிருக்கேன் ,
பேட் ஹாபிட் கால் வாஷ் பண்ணிட்டு வெளிய வா ,கையில் சாதம் ஏந்தியவாறு அஷ்விதா குரலில் லேசாக கடுமை ஏற்றிக் கூறினாள்.அதிகம் கத்தக் கூடாதே ..உள்ளதும் போன கதையாகி விடுமே ,
எப்படியாவது பாப்புவை சாப்பிட வைக்கவேண்டும் , காரியம் ஆக வேண்டுமே .
ஆம் !!!அஷ்விதா குழந்தைக்கு சாதம் பிசைந்து ஊட்டிக்கொண்டிருந்தாள் , சும்மா பத்து நிமிஷ வேலை என்று நினைத்து விடாதீர்கள் ...ஒரு மணி நேரமாக ஊ ...ட்..டிக் கொண் ..டே ..இருக்கிறாள் ,
அவளும் என்னென்னவோ சொல்லி குழந்தையை ஏமாற்றி சேர்ந்தாற்போல ஒரு ரெண்டு பிடி சாதத்தையாவது வாய்க்குள் தள்ளி விடலாமென்று தான் பிரம்மப் பிரயத்தனம் செய்து பார்க்கிறாள் .
பாத்ரூமில் இருந்து வெளியே வந்த குழந்தை இவளது நல்ல நேரமோ என்னவோ அவள் மடியில் வந்து பாசமாய் உட்கார்ந்து கொண்டது ,உச்சி குளிர்ந்து போனவளாய்,
என் தங்கமாச்சே ...என் அம்முக்குட்டியில்ல என் செல்ல புஜ்ஜியில்ல..தங்கக் கட்டியில்ல "ஆ " காட்டும்மா ...ஒரே ஒரு வாய் தான் அப்புறம் மம்மி (சாரி பாஸ் எகிப்த் மம்மி இல்ல இது தமிழ் மம்மி ) உன்ன சாப்பிடச் சொல்லி தொந்திரவே பண்ண மாட்டேனாம் ;
அதுவரை மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை மெல்ல நழுவி சோபாவுக்குச் சென்றது ; இரு மம்மி சாப்பிடறேன் ...வெயிட் ...வெயிட் கையால் சைகை காட்டிவிட்டு ,ரைஸ் எதுக்கு சாப்பிடனும் ?
நூடுல்ஸ் தா அதான் வேணும் ,
அஷ்விதா முறைத்தாள்;முன்னாடியே சொல்றதுக்கென்ன ஒரு மணி நேரமா உன் பின்னாடி தான அலையறேன் ?
கோச்சுக்காத மம்மி நூடுல்ஸ் தா சாப்பிடறேன் ...என் செல்ல மம்மி இல்ல !!!உள்ளெழுந்த அத்தனைக் கோபத்தையும் காட்டினால் காரியம் சுத்தமாய்க் கேட்டு விடுமே ,ஐந்தே நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரித்துக் கொண்டு குழந்தையை தேடினால் காணோம் .
பாப்பு வேர் ஆர் யு ? டெல் மீ ...அஷ்விதா வீடு முழுதும் தேடி கடைசியில் பூஜை ரூம் கதவு மூலையில் பாப்புவைக் கண்டுபிடித்து இழுத்து வந்து மறுபடி டைணிங் ஹால் மேஜையில் அமர வைப்பதற்குள் போதும் ..போதும் என்று வந்தது அவளுக்கு ,
நூடுல்ஸ் ரெடி போர்க் வச்சு நீயா சாப்பிடுவயாம் ,மம்மி சும்மா உட்கார்ந்து பாப்பு சாப்பிடறத பார்த்துட்டே இருந்து பினிஷ் பண்ணதும் வெரி குட் சொல்வேனாம் ..ஒ.கே வா ?
என்ன நினைத்தாலோ என்னவோ ஒரே ஒரு வாய் நூடுல்ஸ் எடுத்து போர்க்கால் வாயிலிட்ட பாப்பு "ஓ என்று தனக்குத் தானே உமட்டிக் கொண்டு மறுபடி போர்க்கை கீழே போட்டு விட்டாள் .
மம்மி வாமிட் வருது மம்மி நூடுல்ஸ் இப்போ வேணாம்..அப்புறமா சாப்டுக்கறேன் .என்றாள் . ஏய் என்னடி இது சாதம் தான் வேண்டாம்ன சரி நூடுல்ஸ் கேட்டஎனு செஞ்சு எடுத்துட்டு வந்த இதுவும் வேணாம்கற ...எத தான் சாப்டப் போற நீ ?இப்ப ஏதாவது ஒன்னு சாப்பிடப் போறிய.. இல்ல பூதத்தைக் கூப்பிடவா ?
கேட்ட மாத்திரத்தில் பாப்பு அஷ்விதாவின் சேலை நுனியை இறுகப் பற்றிக் கொண்டு தனது அச்சத்தை காட்ட ;குழந்தை கொஞ்சம் பயந்தமாதிரி இருக்கிறதே ..அது தான் சாக்கென்று ;நிஜமாதான் சொல்றேன் இப்போ நீ மட்டும் சாப்பிடலை , கலர் ..கலர் பூதம் (ஹி...ஹி ஏதாவது ஒரு பேர் வேண்டுமே பூதத்துக்கு ) வந்து உன்னைத் தூக்கி பைல போட்டிக்கிட்டு ஓடியே போய்டும் ,
பாப்பு கொஞ்ச நேரம் அமைதி காத்தாள். ஒரே ஒரு நிமிஷம் தான் . அப்புறம் கேட்டாள். எங்கம்மா போகும் பைல போட்டுத் தூக்கிட்டு ?
ஹ்ம்ம் ...அபிராமிக்கு ..எங்க போகும் எங்கயாச்சும் காட்டுல கொண்டு போய் போட்டுட்டுப் போய்டும் .ஆமாம் ...பேசாம சாப்டுறு ,
அஷ்விதா மேலும் கொஞ்சம் பயம் ஏற்றிப் பார்த்தாள்...எல்லாம் அவளை சாப்பிட வைக்கத் தான் ;
பாப்புவா கொக்கா ?!!!
ம்ம்ம் ...மம்மி கலர் கலர் பூதம் தான சொன்ன ?
ஆமாம் பார்க்க ரொம்ப பயங்கரமா இருக்கும் ...வந்திரப் போகுது சீக்கிரம் சாப்டுறு பாப்பு ;
அதில்லம்மா அந்த பூதம் வரும்போது எந்த கலர் ல வரும் ?
நீ இப்படியே கேட்டுக்கிட்டே இரு பூதம் வந்து சாப்பிடாத பிள்ளை எங்க.. எங்க நு தேடி உன்னைப் பிடிச்சி பைல போட்டுக் கட்டித் தூக்கிட்டுப் போயடட்டும் ;இன்னும் இறுக்கமாக அஷ்விதாவின் சேலையைப் பற்றிக் கொண்டு ஒடுங்கி மடியில் அமர்ந்து கொண்டு சேலை தலைப்பால் தன்னை மூடிக் கொண்ட பாப்பு ;
மம்மி பிங்க் கலர் ... ப்ளூ கலர் கூட அந்த பூதம் வருமா மம்மி ? என்றாள்வரும்..வரும் ;இப்ப வரத்தான் போகுது நீ சாபிடாமலே இருக்க இல்ல இதோ வந்திரும் பாரு .
கேட்டுக்கொண்டிருந்த பாப்புவின் கண்களில் இப்போது பயம் போய் மெல்லக் கண்கள் பளிச்சிட ,
மம்மி ..மம்மி ப்ளீஸ் மம்மி அந்த பூதத்தை பிங்க் கலர்ல வரச் சொல்லு மம்மி;வேற கலர் வேணாம் .பிங்க் இல்லன ப்ளூ ஓ.கே ,வரச் சொல்லு மம்மி .
என்னது ?
ங்ஹே வென்று ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் வெறித்து விட்டு பாப்புவுக்குப் பிசைந்த சாதத்தை அஷ்விதாவே சாப்பிட்டு முடித்தாள் .
வேறு என்ன தான் செய்வதாம் ? !!! ."
"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுகுற்றம் குறை காணாத இனத்தால் "ஒன்று ".கே.டிவி யில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது .


