Showing posts with label தேவ். Show all posts
Showing posts with label தேவ். Show all posts

Tuesday, January 13, 2009

நான்...பாப்பு...தேவ்...பிளஸ் புத்தகக் கண்காட்சியும் கிருஷ்ணா ஸ்வீட்சும்

இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு போக முடியுமா? இல்லையா என்ற சந்தேகம் நேற்று ஒரு வழியாகத் தீர்ந்தது,ஞாயிறு விடுமுறை என்பதால் நான்,பாப்பு,தேவ் , மூன்று பேரும் முற்பகல் பத்து மணி அளவில் புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தோம்.நேற்று விடுமுறை நாளென்பதால் கூட்டம் அதிகமிருக்கக் கூடும் என்ற எங்களது எண்ணம் பொய்த்தது.

நிறைய ஸ்டால்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன.சென்ற ஆண்டைப் போல இல்லை.முன்புறம் சாமியானவில் கூட அடர்த்தியின்றி அங்கொன்றும்...இங்கொன்றுமாகச் மக்கள் குழுக்களாகச் சிதறி இருந்தார்கள்(பார்க்க ஒரு ஒழுங்கின்றி காமா...சோமாவென்றிருந்தது அந்தக் காட்சி),இயற்கை விவசாயத்தையும்...சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுத்தலைப் பற்றியும் மேடையில் ஏதோ நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
உள்ளே ஒரு ரவுண்டு சுற்றி விட்டு வந்து பார்க்கலாம் என்றார் தேவ் ,

போனமுறை எனக்கு ஸ்டால்களைத் தேர்ந்தெடுப்பதில் பயங்கரக் குழப்பம் இருந்தது,எந்த பதிப்பகத்தில் நான் தேடும் புத்தகங்கள் கிடைக்கும் என்கிற தெளிவேதும் இல்லாமல் முழு கண்காட்சி அரங்கையும் சுற்றிச் சுற்றி வர வேண்டியதாகி விட்டது,இந்த முறை அப்படி எல்லாம் நான் தேவ் மற்றும் பாப்புவை சோதிக்கவில்லை.

முதலில் எனக்குப் பிடித்தமான பதிப்பகங்களின் ஸ்டால் எண்களை பார்த்து விட்டு பிறகு தான் உள்ளே சென்றோம்.சில குழந்தைகள் கையில் பலூன்களுடன் எதிர்ப்படவும் பாப்புவும் பலூன் வேண்டுமென்று ஆரம்பித்து விட்டாள்,சில ஸ்டால்களில் அலங்காரத்துக்கென பலூன்களைத் தொங்க விட்டிருந்தனர், அவர்களிடம் கேட்டால் தருவார்களா என்னவோ என்ற ஐயமிருந்ததால்...நாங்கள் பாப்புவிடம் உள்ளே வேறு ஒரு இடத்தில் பலூன் விற்கிறார்கள் வாங்கித் தருகிறோம் என்று சமாளித்து விட்டு

முதலில் நியூ செஞ்சுரி புக் ஹௌஸ் சில் நுழைந்தோம்.யாரோ சொன்னார்கள் இங்கே நல்ல நல்ல ரஷ்யன் நாவல்கள் எல்லாம் விலை மலிவாகக் கிடைக்கும் என்று. நான் தேடியது ஆன்டன் செகாவ்...கிடைத்ததோ அலேசாண்டர் குப்ரினின் "செம்மணி வளையல்" இந்த ஆசியரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது,தலைப்பை பார்த்தே புத்தகம் வாங்கினேன்.வாசித்த பிறகு தான் தெரியும்...லாடமா ...லட்டுவா என்று!!!

இன்னொரு சுவாரஸ்யமும் அங்கே நடந்தது ,பாப்பு எப்போதுமே நான் என்ன செய்கிறேனோ அதைக் கொஞ்சம் பின்பற்றும் பழக்கம் உண்டு என்பதால் அன்றைக்கும் நான் புத்தகங்களை எடுத்து...சிலவரிகள் வாசித்து விட்டு பிறகு அதை அதே இடத்தில் வைத்து விட்டு அடுத்த அடுத்த புத்தகங்களையும் இதே முறையில் கொஞ்சம் புரட்டிப் பார்த்து எனக்கானதைத் தேர்ந்தெடுப்பதை அவளும் கவனித்திருக்கக் கூடுமோ என்னவோ ,தேவ் தான் பாப்புவைப் பார்த்துக் கொள்கிறாரே என்று நான் புத்தகங்களில் கவனித்துக் கொண்டிருக்க பாப்பு நான் என்னவெல்லாம் செய்கிறேனோ அதையே அவளும் செய்து கொண்டு இருந்திருக்கிறாள்.

ஒரு நான்கு வயது குட்டிப் பெண் அதி தீவிரமாக புத்தக அடுக்குகளில் ஆர்வமாகப் புத்தகம் தேடுவது அங்கிருந்த போட்டோ கிராபர்களுக்கு அதிசயமாகப்ப் பாட்டதோ என்னவோ நான்கைந்து புகைப்படங்களாவது எடுத்திருப்பார்கள் பாப்புவை அவள் புத்தகம் தேடும் போஸில் .இது பத்திரிகையில் வருமா அல்லது சும்மா குழந்தை தானே என்று விளையாட்டுக்கு பொய்யாக எடுத்தார்களோ என்னவோ ? அது அந்த போட்டோ கிராபர்களுக்கே வெளிச்சம்.

பிறகு உயிர்மைக்குள் சென்று பார்த்தோம்...எஸ்ரா,ஜெயமோகன்,சாரு,தமிழச்சி தங்க பாண்டியன் இன்னும் சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் அழகாக அடுக்கியிருந்தனர், எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து விட்டு எஸ்ராவின் "யாமம் " மட்டும் வாங்கிக் கொண்டேன் .இது போன தடவையே வாங்க நினைத்தது ,இப்போது தான் வாங்கினேன்.சாருவின் "ஜீரோ டிகிரி " எடுத்துப் பார்த்து விட்டு இப்போதைக்கு அதை வாசிக்க போதிய மனப் பக்குவம் இல்லையோ என்று எண்ணி வைத்து விட்டேன்.

அடுத்து "காலச்சுவடில் " ..."ஒற்றன்" வாங்கினேன் ,பாராவின் பக்கங்களில் பரிந்துரைக்கப் பட்ட புத்தகங்களில் ஒன்றை வாங்கிய திருப்தி .அசோகமித்ரனை வாசிக்கும் ஆர்வம் முன்பும் உண்டு ஆனாலும் சிறுகதைகளோடு நிறுத்தி இருந்தேன் .பெரும்பாலும் ,பாலகுமாரனும் ,சுஜாதாவும்,சிவசங்கரியும்,அனுராதா ரமணனும்,லக்ஷ்மியுமே ஆக்கிரமித்திருந்தது சில காலம்,பிறகு அம்மாவின் பள்ளி நூலகத்தில் கிடைத்த பழைய "தேவன்...சாவி...மெரீனா எனக்குப் பிடித்துப் போனது எனது கல்லூரி விடுமுறைக்காலங்களில்..இதுவே முதல் முறை அசோகமித்ரனின் படைப்பை வாங்கினேன்.

எட்டாம் வகுப்பு என்று நினைக்கிறேன் அப்போது எங்கள் ஊரில் புதிதாக நூலகம் திறந்திருந்தார்கள்,முன்புற சுவரில் சிவப்பு மையால் பெரிய எழுத்துக்களில் "வெள்ளி விடுமுறை என்று "எழுதி இருப்பார்கள்.அது ஒரு சின்னஞ்சிறு நூலகம்.பெரும்பாலும் அங்கே ஊற்றில் உள்ள இளைஞர்கள் உட்கார்ந்து தினமலர் வாசிப்பார்கள் அல்லது தினத்தந்தி .

நான் என் அம்மாவுக்காக புத்தகம் எடுக்கப் போவேன் அப்போது தான் வாண்டு மாமா வின் பல மாயாஜாலக் கதைகளை வாசித்தேன்."அந்த காலகட்டத்தில் எங்கே "பூந்தளிர்,சிறுவர்மலர்...பாலமித்ரா...ரத்னமாலா,ராணி காமிக்ஸ் என்ற பெயரைப் பார்த்தாலும் உடனே வாங்கிப் படித்தே ஆகவேண்டும் என்றெல்லாம் தோன்றியதுண்டு.

கூடவே தமிழ்வாணன் அப்போது தான் எனக்கு அறிமுகமானார்,தமிழ்வாணன்
என்ற பெயரை விடவும் வெறுமே கருப்பு மையில் தீட்டப் படும் அவரது தொப்பியும் கண்ணாடியுமே பலரையும் போன்று என்னையும் கவர்ந்தவை.அந்தத் தொப்பிக்கும் கண்ணாடிக்கும் அப்படி ஒரு மவுசு உண்டு தான்.அந்தப் புத்தகங்களில் அப்படி ஒரு ஈடுபாடு .

கண்காட்சியைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டு எங்கெங்கேயோ சுற்றி வளைத்து எழுதுகிறேன் பாருங்கள் ,சரி விசயத்துக்கு வருகிறேன்.எப்போதுமே "சுஜாதாவை" மறப்பதில்லை நான் விடுவதும் இல்லை .கணையாழியின் கடைசிப் பக்கங்களில் இருந்து கொலையுதிர்காலம் தொட்டு...ஸ்ரீரங்கத்துக் கதைகள் கடந்து.ஒவ்வொன்றைப் பிரித்துப் பார்த்து விட்டு கடைசியில் "யவனிகாவைத்" தேர்ந்தெடுத்தேன்.

பாப்புவுக்கு அவள் கேட்ட பலூன் காலச்சுவடில்" கிடைத்தது.அங்கிருந்த ஒரு விற்ப்பனையாளர் ஸ்டாலில் நுழையும் எல்லாக் குழந்தைகளுக்கும் பாரபட்சமின்றி பலூன்களை பரிசு போலத் தந்து கொண்டிருந்தார்.பாப்புவுக்கு பச்சை நிற பலூன் கிடைத்தது,அவள் எப்போதும் போல எனக்குப் பிங்க் கலர் பலூன் தான் வேண்டும் என்று மாற்றி வாங்கிக் கொண்டாள் .

ராஜநாராயணனை வாங்க "அன்னம் பதிப்பகம்" சென்றோம்,ராஜநாராயணன் புத்தகங்கள் ஏற்கனவே கொஞ்சம் இருந்ததால் ...நான் வாங்க நினைத்த கி.ரா வுக்கு மற்ற எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள் புத்தகத்தின் விலை பட்ஜெட்டைத் தாண்டி விட்டதால் "இந்த வருட இந்த" இந்த எடுத்துக் கொண்டேன்.தவற விட்ட மற்றொன்று "கழனியூரானின்" குறுஞ்சாமிகளின் கதைகள்" எடுத்துப் பார்த்து விட்டு அடுத்த முறை வாங்கலாம் என்று வைத்து விட்டேன்.ஆலிஸை வாங்கியது பாப்புவுக்காக!

அம்பையைப் பற்றியும் எனக்கேதும் இதுவரை பெரிதாகத் தெரியாது .விருது பெற்ற பெண் எழுத்தாளர் என்ற ஆர்வத்தில்" காட்டில் ஒரு மான் " வாங்கினேன்.அங்கேயே நளினி ஜமீலாவின் "ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை" வாங்கினேன்.இதுவும் சென்ற முறை வாங்க நினைத்து மிஸ் பண்ணிய புத்தகமே.படிக்க வேண்டிய புத்தகம் தான் என்று தோன்றவே வாங்கி விட்டேன்.

இவ்வளவு தான் இந்த முறை வாங்க முடிந்தது நான் போட்ட பட்ஜெட்டுக்குள்.இது தவிர கேன்டீனில் வேறு கொஞ்சம் செலவானது .ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்காரர்கள் தான் இந்த முறை ஆக்கிரமித்திருந்தார்கள்.பலகாரம் நன்றாகவே இருந்தது.அவர்களைத் தவிர ஜமாய் ஐஸ் கிரீம் கடை ஒன்று மட்டுமே இருந்தது. நாங்கள் ஆளுக்கு ஒரு செட் பரோட்டாவும்,தயிர் சாதமும் வாங்கிக் கொண்டோம்.கேசரி அவர்கள் செய்வதைப் போன்ற பக்குவத்தில் நமக்கு அமைவதில்லை ஏனோ என்ற சந்தேகத்துடன் ஒரு பிளேட் வாங்கிக் கொண்டோம்.

paappu ஐஸ் கிரீம் கேட்டாள்,அவளுக்கு அது ஒத்துக் கொள்வதில்லை என்பதால் சின்னதாய் ஒரு வெனிலா வாங்கிக் கொடுத்து விட்டு பாதிக்கு மேல் நான் எடுத்துக் கொண்டேன்.பாப்பு அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.அவளுக்கு கேட்டவுடன் வாங்கிக் கொடுக்கிறார்களா இல்லையா என்ற டெஸ்டிங் அவ்வளவு தான் !

இப்படியாக இந்த வருடப் புத்தகக் கண்காட்சி விசிட் ஒரு வழியாக முடிந்தது.இதில் நான் வாங்க நினைத்து விடுபட்டது பல புத்தகங்கள்.அவற்றில் டால்ஸ்டாயின் "அண்ணா கரீனாவும்" அடங்கும். புத்தகம் கழிவு போக நானூற்று ஐம்பத்து ரூபாய் என்றார்கள் ,அடுத்த முறை வாங்கலாம் என்று வந்து விட்டேன்,தேவ் ஏன் ...பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளேன் என்றார்,விருப்பமிருந்தும் வாங்கத் தோன்றவில்லை.அடுத்த புத்தகத்து திருவிழா வராமலா போகும் என்று வெளியில் வந்தேன்!?

manimegaip பிரசுரம்...வானதி பிரசுரம் ...விகடன்...விகடனில் ஏதாவது புத்தகம் வாங்குவது வழக்கம் எப்போதுமே உண்டு.இந்தமுறை பாப்புவின் பொறுமை எல்லை மீறியதில் நிதானமாகப் புத்தகங்களைத் தேட அவகாசமில்லை அதனால் அதொன்றும் வாங்காமல் வந்து விட்டோம், .சத்யாவில் "வண்ணதாசன் சிறுகதைகள்" வாங்க நினைத்து கடைசியில் வாங்கவில்லை.இதற்கும் அடுத்த முறை பார்க்கலாம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

கதைப்புத்தகங்கள் தவிரவும் நான் வாங்க விரும்பியது "டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் "பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை " மேலும் எ.கே .டாங்கே எழுதிய "பண்டைக் கால இந்தியா புத்தகங்கள் வாங்க நினைத்திருந்தேன்.அவற்றைத் தேட முடியவில்லை.எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்றும் தெரியவில்லை.இதற்கும் அடுத்த முறை தான் என்று சொல்லிக் கொண்டு ஒரு வழியாய் வெளியில் வந்தோம்.

நாங்கள் வெளியில் வரும்போது மகாத்மா காந்தியும் ,அம்பேத்கரும் (கருப்பு நிற கோட்...சூட் அம்பெத்கராகத் தான் இருக்கும்!) அந்த வெயிலில் முகம் முழுக்க வெள்ளை மாவைப் பூசிக் கொண்டு சாமியானவுக்கு முன்பிருந்த மேடையிலிருந்து படிகளில் எதற்காகவோ இறங்கிக் கொண்டு இருந்தார்கள்.பார்க்கப் பாரிதாபமாக இருந்தது,தலையில் கொம்புகளை ஒட்டிக் கொண்டு அரக்கர்கள் போல சிலர் மேடையில் எதோ பாடி ஆடிக் கொண்டு இருந்தார்கள்.

அவ்வளவு தான் இந்த வருடம் புத்தகத் திருவிழா முடிந்தது எனக்கு. உங்களுக்கு எப்படி ?

எழுதுங்கள் மக்களே!!!

Thursday, December 25, 2008

டியர் தேவ் ...!

டியர் தேவ் ...

இன்றோடு நீங்கள் ஊருக்குக் கிளம்பிப் போய் ஐந்து முழு நாட்கள் முடிந்தே விட்டன,இது வழக்கம் தான் ! ஆனாலும்...என்ன எப்போதுமே மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் திரும்பி விடுவீர்கள்,இந்த முறை என்னவோ பத்து நாட்கள் என சற்று நீண்ட பிரயாணமாகி விட்டது?!

கம்பெனி செலவில் டூர் என்ற பெயரில் நீங்கள் "டர்"(காஸ் டிரபிள் தான் வேறென்ன??) ஆகி வருவதை இன்றைக்கு நேற்றா நான் பார்க்கிறேன்?எனக்கு அது ஐந்தரை வருடப் பழங்கதை ஆயிற்றே?!

ஆரம்பத்தில் செல்ல அழுகையில் பிரிவுத் துயரை கண்ணீரில் கரைத்து காணமல் போகவைக்க முயன்றேன் ,அதற்கடுத்த வருடம் பாப்பு பிறந்ததும் அழுகை நின்றது மாறாக நீங்கள் டூர் கிளம்பும் ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன ஊடல்கள் வந்து வந்து மறைந்தன.மூன்றாம் வருடம் பாப்பு பேச ஆரம்பித்ததும் யாராவது "உங்க அப்பா எங்க பாப்பு என்று கேட்டால் "ஊர் சுத்தப் போயிருக்கார்" என்று பதில் சொல்லத் தொடங்கினாள்.அவள் சொல்வதைக் கேட்டு விட்டு சிரித்தாலும் சின்னக் குரலில் நீங்கள் கிளம்புவதைப் பற்றி ஆட்சேபித்து முணுமுணுப்பதை அந்த வருடம் முழுக்க தொடர்ந்தேன் என்றே நினைக்கிறேன்.

இப்போது நினைத்தால் "சிறுபிள்ளைத்தனமாக" தோன்றினாலும் , அன்றைக்கு அதெல்லாம் தேவையாய் இருந்ததை நீங்களும் நானும் மட்டுமே உணர முடியும் தேவ்.இன்றைய நமது அந்நியோன்யத்தை நிர்ணயித்ததில் அன்றைய அந்தப்பொழுதுகளை நாம் மறந்ததில்லை என்றுமே !

இப்போது அந்த செல்ல அழுகைகளோ...நீளும் முனுமுணுப்புகளோ இல்லாமல் போய் நெடு நாட்களாகின்றன.நானே பெட்டி அடுக்கித் தரும் அளவுக்கு முன்னேறி விட்டேன்.வேறென்ன தான் செய்வதாம் ? "பழகிப் போச்சு " என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கத் தெரிந்து விட்டது மனதுக்கு.எல்லாம் நம் பாப்புவின் "எதிர்காலத்துக்காக " என்ற சமாதானங்கள் மட்டுமே வியாபித்து நிற்கின்றன இப்போதெல்லாம்;

நான் என்னவோ இயல்புக்கு வந்து விட்டேன் தான் ...;

ஆனால் பாப்பு ...

பாப்பு பற்றி நினைத்தால் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது . முன்பு மழலையில் சொல்ல முடிந்ததைப் போல இப்போது அவளால் "அப்பா ஊர் சுத்தப் போயிருக்கார்" என்று சொல்ல முடியவில்லை போல ?!வளர்ந்து கொண்டிருக்கிறாள் அல்லவா? முதல் நாளில் இருந்தே கடந்த நான்கு நாட்களாய் விடிந்ததும் படுக்கையில் நீங்கள் இல்லாத வெற்றிடத்தை பார்த்து...பார்த்து முகம் சுணங்குகிறாள்.

அப்பா வேண்டும் என எப்போதும் போல ஒரு பாட்டம் அழுது முடிப்பாள் என்று தான் எப்போதும் போல இன்றைக்கும் அதற்குத் தேவையான கொஞ்சல் கெஞ்சல் சமரசங்களுடன் காத்திருந்தேன் நான் ! என்ன நினைத்தாலோ பாப்பு ?!அப்பாவின் வாசம் (அப்பாவி வாசம் ...என்று வாசித்து விடாதீர்கள்!!!) இன்றி அம்மாவுக்கும் தான் கஷ்டம் என்று விட்டாளோ ? சென்ற நாட்களைப் போல "அப்பா எப்போவருவார்...இன்னைக்கு...இப்போவே...பின்ன எப்போ தான் ? " என்று நச்சரிக்காமல் ;இந்த முறை என் கழுத்தைக் கட்டிக் கொண்டு " சரி வா மம்மி ...ம்ம்...என் டாடி வரும்போது வரட்டும் ...ஒரு ஒன் வீக் நாம போய் உன் டாடியைப் பார்த்துட்டு வரலாம் " என்று குளுகுளு ஆச்சர்யம் தருகிறாள்.

அதெப்படி அத்தனை சீக்கிரத்தில் கண்டு பிடித்தாள் ? என் முகத்தில் இருந்து என் மனதை அறியும் பக்குவம் அதற்குள் அவளுக்கு வந்து விடுமா என்ன ?எப்படிக் கண்டுபிடித்தாள்?அவளைப் போலவே நானும் என் அப்பாவைப் பார்க்க வேண்டும் என நினைத்திருக்கக் கூடும் என்பதை எப்படித்தான் அவள் அறிந்து கொண்டாளோ?

நான்கு வயதுக் குழந்தை இப்படி எல்லாம் சிந்திக்குமா என்ன?(கொஞ்சம் ஓவர் தற்ப்புகழ்ச்சியா இருக்கு இல்ல!!! அது அப்படித்தான் போங்கப்பா ... ) அதென்னவோ அந்தக் கணத்தில் எனக்கு என்னென்னவோ ஞாபகங்கள் வர ஆரம்பித்து விட்டன,

அட நம் மகளா...நம் பாப்புவா...நம் சிட்டுக்குட்டியா...நம் செல்ல புஜ்ஜியா...பட்டுப்பூனைக்குட்டியா இது? இத்தனூண்டு குட்டிப் பஞ்சுப் பொதியலாய் அவளை முதல் முறை உங்களிடம் நான் நீட்டியபோது (அப்போதும் நீங்கள் ஒரு டூரில் இருந்து தான் திரும்பி வந்திருந்தீர்கள் ...ஞாபகமிருக்கிறது தானே...தேவ் ?) ஏதோ ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை வென்ற சக்ரவர்த்தியைப் போல எத்தனை பரவசமாய் அவளை பட்டுப் போல ஏந்திக் கொண்டு கொஞ்சினீர்கள்.

இடை இடையே நான் ஏதோ சாதனை மங்கை போல என்னைப் பார்த்தும் பெருமிதம் கலந்த புன்னகை வேறு .நான் உங்கள் சாயலை அவளிடத்தில் தேடித் தேடி சொல்ல நீங்களோ என் சாயலை தேடித் தேடி சொல்லிக் கொண்டிருந்தீர்கள் .அத்தனை சந்தோசங்களுக்கும் காரணமான அந்த குட்டிப் பாப்புவா இவள்...கொஞ்சம் வளர்ந்து விட்டாள் ...இன்னும் நிறைய வளருவாள் தான்.

எனக்கென்ன ஆச்சர்யம் என்றால் ? அப்படி அன்றைக்கு நம் கையில் சின்ன சத்தம் கேட்டால் கூட குட்டி வாயை அழகாய் கோணிக் கொண்டு சதா அழுது கொண்டிருந்த பாப்புவா இவள்?

"தாங்க்ஸ் பாப்பு ...ஐ லவ் யு டா குட்டிம்மா ..."அந்தப் பஞ்சு மிட்டாயை என்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டபோது என்னை அறியாமல் ஒரு அம்மாவாக ஆனந்தமாய் அழுகை வந்தது .என் கண்கள் பணிப்பதைக் கண்டதும் அவள் "சமாதானப் படுத்துபவல் போல...ஐ லவ் யு மம்மி...டோன்ட் க்ரை "என்றாள் .

பாப்பு இப்படிச் சொன்ன தருணத்தில் தான் நான் உங்கள் மேல் உள்ள அன்பும் காதலும் பல மடங்கு பெருக இப்படி முடிவெடுத்தேன் ....

அதாகப் பட்டது ...;

  1. காலையில் அரக்கப் பரக்க அலுவலகம் கிளம்பும் போது "ஜட்டி...பனியன் தேடி அது கிடைக்காமல் கண்ணாமூச்சு ஆடினாள்...சிவு சிவுக்கும் கோபத்தில் தினம் என்னைத் திட்டுவீர்களே "இதான் நீ வீட்டைப் பார்த்துக்கற லட்சணமா?" இதற்க்கெல்லாம் நான் பதிலுக்கு எகிறியதுண்டு இதுநாள் வரை!!! இனி அப்படி இல்லவே இல்லை தேவ். (கணவனே....கண் கண்ட தெய்வம்)
  2. வெறும் காது குடையும் பட்சுக்கும் ...டைரி மில்க்குக்கும் ...ஏன் அந்த நாசமாய்ப் போன கிங் ஃபிஷருக்காகவும் கூட கூசாமல் ஐந்நூறு ரூபாய் நோட்டை மாற்றுவீர்களே !!!அந்தக் கண்ராவிக்கெல்லாம் முன்பு போல கத்திப் பேசி குத்திக் காட்டாமல் போனால் போகட்டும்(போடா...!!!) என்று தெனாவட்டாக விட்டு விடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.(அதற்காக இனி உங்கள் பர்சில் தினம் வெறும் ஐம்பத்து ரூபாய் மட்டுமே வைத்து அனுப்பப் போவது தனிக்கதை)
  3. மன்த் எண்டு டார்கெட் பிரசரில் நீங்கள் குழம்பிப் போய் ஒரு டவலுக்கு மேல் ஒரு டவலாக நான்கைந்து டவல்களை கட்டிக் கொண்டு வாசிங் மிசினில் குவித்தால் கூட (நோ விவாதம்) இனி நான் ஒன்றும் சொல்லப் போவதே இல்லை. இப்படிப் பல முடிவுகளை எடுத்திருக்கிறேன்.

முக்கிய குறிப்பு:- இந்த முடிவுகளுக்கு ஆயூள் இன்னும் நிர்ணயிக்கவில்லை என்பதையும் தெரிவித்தே ஆக வேண்டும் தேவ் .குறைந்த பட்சம் உங்கள் திருமுகம் காணும் வரை இப்போதைக்கு கட்டாயம் நீடிக்கும் ...அதனால் சீக்கிரம் வாருங்கள்....வந்து விடுங்கள் என்னருமை தேவ்)