Monday, January 31, 2011

‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை' -என் பார்வையில்..' - கார்த்திகாவாசுதேவன்.






‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை' -என் பார்வையில்'


‘‘சன்டேன்னா ரெண்டு“ இந்த விளம்பரத்துக்கு சற்றும் சளைக்காத ஆர்வம் தரவல்ல "ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை " எனும் தலைப்பை தனது கவிதைத் தொகுப்பிற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார் நண்பர் கவிஞர் பொன்.வாசுதேவன். கவிதைகளின்பால் ஈர்ப்போ, கவிதைப் புத்தகம் வாசிக்கும் முனைப்போ இல்லாதிருப்போரையும் கூட அப்படி என்னதான் இருக்கிறது புத்தகத்துக்குள் என ரகசியமாய் எட்டிப் பார்க்கச் செய்யும் தலைப்பு.


தன்னைத்தானே பின் தொடரும் நிழலசைவாய் பின்புற அட்டை வாசகங்களுக்கொப்ப ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி..


"வாதையே உணராமல்தன்னுடலில் விசையூட்டிமெத்தென்றுமதில் சுவருக்கும் தரைக்குமிடையேபறந்தது போல் வந்தமரும் வித்தை கற்றுக்கொண்ட பூனைகளாய்"


சப்தங்கள் அடங்கியதும் சலனங்கள் மட்டுப்பட்டு உறங்கும் நதியைப் போல, அசைந்தும் அசையா அசைவில் தன்னகத்தே கேள்விகளைக் கேட்டும் கேளாமல் பதில் தெரிந்த மெத்தனத்தில் அலட்சியமாய் மிதந்து நழுவும் கவிதைகள்.


தொகுப்பின் ஈற்றுக் கவிதையாய் அவரே பகர்ந்தபடி,


குரல்களற்ற மனவெளியில்மீண்டும் மீண்டும் வாசித்துஉறுதிப்படுத்திக் கொள்ளத்தக்க விசேஷங்கள் அற்ற விசேசமான கவிதைகள்.


வாழ்வின் பிரத்யேக தருணங்கள் அத்தனையையும் கனவுகள், ப்ரியங்கள், ஆசைகள், நிராசைகள், வாதைகள் எனும் வகைப்பாட்டில் அடக்க முயன்று தனித்தொரு வெளியில் மிதந்து கொண்டே நகரும் கவிதைகள். மொத்தம் 87 கவிதைகளில், முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்தவற்றை மட்டும் இந்தக் கட்டுரையின் ஊடே தந்து செல்கிறேன்.


இருப்பு :


"உண்மை தான்வேறு வழியில்லை

என்று தான்விட்டு விடவும்வெட்டித் தள்ளவும்

வேண்டியிருக்கிறதுநகங்களை"


தமதிருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியாமல் வெட்டுப் பட்டும், கடித்து துப்பப்பட்டும் அப்புறப்படுத்தப்படும் நகங்களுக்கும், தானே உதிரும் கூந்தல் இழைகளுக்கும் கூட இருப்பென்ற ஒரு ஸ்தானம் சில காலம் உண்டுதான். நானுமிருக்கிறேன் என்பதைக் காட்டுவதான ஞாபகப்படுத்தலுக்கு ஒப்பாக கூராகவும், வளைந்தும் வளர்ந்து காட்டி வெட்டுப்படும் நகங்கள், உதிர்ந்து காட்டும் மயிர்கற்றைகள் போல மனிதர்களிலும் பலர் இருப்பைக் காட்டிக் கொள்ள ஏதாவதொன்றை செய்துதான் தீர வேண்டியிருக்கிறது.


பிரயாணம் எனும் தலைப்பில்,


"கவிழ்த்துக் கொட்டிய தவளை

மூட்டையெனரயிலை விட்டு

அவசரமாய்வெளியேறியும்

உள்நுழைந்த படியும்இருக்கின்றனர்

மனிதர்கள்"


மக்கள் நெரிசல் நேரக்காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரயில்களில் பயணிக்கும் பெரும்பேறு பெற்ற ஆத்மாக்களின் அள்ளித் தெளித்த அவசர அவஸ்தை நகர்வுகளை வீடியோவில் ஃபாஸ்ட் பார்வர்ட் செய்தால், அவிழ்த்து விட்ட தவளை மூட்டைகள் தான், இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே தொடராதா? என்றெல்லாம் பாட்டுக் கேட்டுக் கொண்டு பயணிக்கும் ஆசைகளை பழித்துச் சுளுக்கி நசுக்கிப் பிழியும் நகரத்து இடப்பெயர்ச்சிகள் நெரிசல் நேரத்து ரயில் பயணங்கள். அந்த நிமிடங்களை கற்பனை செய்ய இந்த வரிகள் வெகு பொருத்தம்.


மனமொளிர் தருணங்கள் எனும் தலைப்பில் ஒரு கவிதை.


"தளர்ந்து இறுகும்சிறகுகள்

அசைத்துக்கால் புதைய காற்றில்நடக்கிறது

ஒரு பறவைஎன்னை

நானேஅருந்தி ரசிக்கும் தருணம் அது
காற்று உதிர்த்தபறவைச் சிறகின் கதகதப்பைக்கைப்பற்றிகன்னம் வைத்து அகமகிழ்கிறேன்
தூரத்தில் சென்று கொண்டிருக்கிறதுபறவைஉதிர்ந்த சிறகு குறித்தகவலையேதுமற்று"


மொத்தமுள்ள அத்தனைக் கவிதைகளிலும் மிகப் பிடித்து போன கவிதை இது. நீளும் பாலைவனத்தில் துடுப்பாய் சிறகசைத்துத் தடுமாறிக் கால் பதித்து எதிர் காற்றில் தத்தி நடக்கும் சிறு பறவையின் காட்சி வெகு உற்சாகம் அளிக்க வல்லது, கிட்டத் தட்ட வாழ்வில் எதிர் நீச்சலிட சலிக்காத மனித எத்தனங்களும் பிரயத்தனங்களும் பறவையின் ஒற்றை அசைவில் உணர்ந்து கொள்ளப்படுதல் இதில் சாத்தியமே. வெகு அழகான அர்த்தம் தரும் கவிதை இது.


சொல்ல இருக்கிறது காதல் எனும் தலைப்பில் :


நூற்கண்டின் முனை எனப் பற்றிசூரியக்

கதிர்களைஇழுத்தோடும் ரயிலொன்றின்ஜன்னலோர

இருக்கையில்என்னோடு

பயணப் படுகிறதுஉன்

நினைவுகள்

இருட்டத் தொடங்கியதன்

அவதானிப்பில்வேகமாய் கூடடையும்பறவையின்

அவசரத்துடன்எனக்கு

நானேசொல்லிக் கொள்கிறேன்
எனக்கும் காதல்இருந்ததுஇருக்கிறதுஇருக்கும்இவ்வாறெல்லாம் "


இந்தக் கவிதையில் தொனிப்பது யதார்த்த குப்பையில் காதலித்து மறந்தவன் அல்லது மறக்கடிக்கப்பட்டவனின் மீள் நினைவுகள், வீட்டுக்குள் அல்லது கூட்டுக்குள் நுழையும் முன் அவசர அவசரமாய் தனக்கே தனக்கென மட்டுமாய் ஆழ் குளத்தில் உறங்கிக் கிடக்கும் பிரதிக்காதல் ஒவ்வொன்றையும் ஒருமுறையேனும் சன்னமான குற்ற உணர்வோடு மீளப் பார்த்து நானும்தான் காதலித்திருக்கிறேன், காதலிக்கிறேன், என்னுள்ளும் காதலுண்டே எனக் காட்டிக் கொள்ளும், சமரசம் செய்து கொள்ளும் முயற்சி.


‘இறைமையின் மொழி‘ எனும் தலைப்பில்:


“இதழ்களின் இறுக்கம் தளர்த்தியதடங்களேதுமின்றிவனப்பாய்பூத்துக் கொண்டிருக்கிறதுஒரு மலர்
உள் மூழ்கி லயித்துவான் நோக்கிப் பார்க்கையில்முகத்தில் தெறிக்கிறதோர்ஒற்றை மழைத்துளி"


என்ன ஒரு அழகான வார்த்தைப் பிரயோகம். இறைவன் என ஒருவன் இருந்தான் எனில், அவன் கருணையை இதழ்களின் இறுக்கம் தளர்த்திய தடங்களேதுமின்றி பூத்துக் கொண்டிருக்கும் இந்த மலரோடு ஒப்பிடலாம். அவன் கருணையில் வழிந்து கசியும் ஏகாந்தத்தை இந்த மலரின் வனப்போடு ஒப்பிடலாம். பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கும் உலர் மண்ணில் ஒற்றை மழைத்துளி பதங்கமாவதைப் போல விளம்பரப்படுத்திக் கொள்ள அவகாசமில்லாமலோ அல்லது அவசியமில்லாமலோ கொட்டிக் கிடக்கும் பிரபஞ்சப் பேரழகுகள் எல்லாவற்றையும் ரசிக்கத் தான் தெரிந்திருக்க வேண்டும்.


‘என்னிடம் வந்த இந்த நாள்‘ எனும் தலைப்பில் ஒரு கவிதை ;


“தாழப் பறந்தும் கையில்

சிக்காதவிருப்பப் பறவையாய்கொஞ்சமும்

இரக்கமில்லாதுகடந்து செல்கிறது இந்த நாள்
பிரிவுத் துயரின் நீர்த்தாரை வழியஇன்றிருந்த

நாளேதொடர வேண்டுமென இறைஞ்சுமென்னிடம்"


அனுமதிக்கப்பட்ட அளவுகளையும் கடந்து எல்லையில்லா உவகையையும், உல்லாசத்தையும் ஒருங்கே ஊட்டிய கணங்களைக் கொண்ட ப்ரியத்துக்குகந்த ஒருநாளின் அந்தி நேரம் மிகுந்த ஏக்கம் தரவல்லது, பிரியப் போகும் நண்பனுக்காய், விடை பெற்றுக் கொள்ளப் போகும் காதலிக்காய், கூடிப் பேசி சிரித்துக் கலையும் தோழமைகளின் பிரிய விரும்பாத கையசைப்பிற்காய் அந்த நாள் முடியாமல் நீளக் கூடாதோ! பிரியப்பட்ட ஜனங்களின் ப்ரியம் சுமந்த மனதின் ஏக்கம் வரிகளில் தெறிக்கும் பரல்கள் நீக்கப்பட்ட ஊமைச் சலங்கையின் தனித்த கீதங்கள்.



‘பிரியத்தில் விளைந்த கனி‘ எனும் கவிதை :


"பிரியத்தின் பொருட்டேஉனக்குள்

என் வாழ்வுபூரணமடைந்திருக்கிறது "


தாமாக வலிந்து செய்து கொண்ட சமாதானங்களின் பின்னே உறைந்து போன மனைவி எனும் முகமூடிகளுக்குள் சுயம் மறக்கடித்துக்கொண்டு சிரித்தால், சிரித்து அழுதால், அழுது கட்டுப்பாட்டில் இயங்கக் கற்றுக் கொண்ட மனைவிக்கு அவளை உணர்ந்தாலும் ஏதும் செய்யவியலாத அல்லது செய்ய விரும்பாத கணவனின் வெற்றுச் சமாளிப்பாகத்தான் வார்த்தைகளாக இந்த வரிகளை எடுத்துக் கொள்ளலாம், ப்ரியம் எனும் புழுவில் மாட்டிக்கொண்ட மீன்கள் தான் மனைவிகளும் கணவர்களும்.


வாதையின் கணங்கள் :


"நீர்களற்ற கிணற்றின்உள்சுவற்றில்

படர்ந்து கிளைத்திருக்கும்சிறு மரத்தில்

தனித்துக் கூடு கட்டிஆனந்தமாய்

அங்கு மின்குமாய்குறு குறுவென

சுற்றித் திரிகிறதுகுருவி


திசை தொலைத்தது போல்சுற்றித்

திரிகிறது வண்ணத்துப் பூச்சிபூத்துதிராமல்

தேன் சுமக்கின்ற மலர்அடையாளம் தனித்துக்

கண்டுமென்மையாய் அமர்ந்து

முன்காம்பு நீலச் செய்துஉறுஞ்சுகிறது

மலருக்கு வலிக்காமல்


வாதையின் கணங்களில்

எழும் வார்த்தைகள்விழிகளில்

திரண்டுஉருக்கொண்டு வழிகிறதுஎழுத்துத் திரவமாய் "


இந்தக் கவிதை வெறும் வார்த்தை எல்லைகளைக் கடந்து இதமான குறும்படத்தை பார்த்துக் களித்த திருத்தி அளிக்கவல்லது. கற்பனையில் ஓட்டிப் பார்த்தால் விரியும் நிழற் படங்களில் அத்தனை மென்மை. அவஸ்தை என்ற சொல்லுக்கினையான வாதை மிக்க கணங்களை இதை விட அருமையாக சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.


அடை எனும் தலைப்பில் ஒரு கவிதை :


அருகில் திரும்பிப் படுத்தணைத்துஉன் இறால் குஞ்சு விரல்களைக்கைகளுக்குள்

அணிந்துபதுங்கிப் பதுங்கிஅழைத்துச் செல்கிறேன்
புட்டம் உயர்த்தி கால்கள்

மடிந்துகுப்புறப் படுத்துநீதூங்கும்

திசையெலாம்பரவியபடி கசிகிறதென் அன்புவெளிதனிமை உமிழ்ந்தயோசனையின் எச்சமாய்இன்னும் வெகு தூரம்செல்ல வேண்டியிருக்கிறதுஉன்னைப் பாதுகாக்க "


வாசு எதைக் குறிப்பிட்டு இந்தக் கவிதையை எழுதினாரோ இதை வாசித்ததும் நான் உணர்ந்தது இதைத்தான். யாருமற்ற வீட்டில் தனித்திருக்கும் தாயும் அவளது பால்மணம் மாறாக் குழந்தையும். அடைகாக்கும் பொறுப்பு தந்தைக்கும் உண்டெனினும் அடைகாக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுக்க மனமுவந்து ஏற்றுக் கொண்டவளாகிறாள் அம்மா. பிறந்த குழந்தைக்கு அருகில் படுத்துக்கொண்டு மெல்ல அதன் கை தடவி கால் தடவி மாம் பிஞ்சு விரல் நீவி பூனைக் கதகதப்பாய் வலிக்குமோ வலிக்காதோ என்றேந்திக் கொண்டிருக்கையில் உள்ளூர எப்போதுமிருக்கும் இந்த அடை காக்கும் தவிப்பு. பிறந்து மண்ணில் விழுந்த கணம் தொட்டே பெற்றவள் முன்வந்து வாங்கிய தீட்சை போல் அன்பு வெளியெங்கும் கசியும் யோசனைகளில் நீள்வதென்னவோ யுகம் தோறும் பெற்றுக் கொண்டதை பாதுகாக்கும் பயணங்கள்தாம்..


‘தொடங்கி இருக்கிறோம்‘ எனும் கவிதை:


"எனக்குள் பூத்த ஆண்டாளைபறித்தெடுத்து சூடிக் கொண்டிருக்கிறேன்எதற்கெனத் தெரியாமல் "


எதற்கென்றே தெரியாமல் சில வரிகள் பிடித்துப்போகலாம் அப்படி ஒரு வரி இது..போலவே மறக்கயியலாத ஒரு வாழ்வனுபவத்தை இந்தத் தொகுப்பெங்கும் வரைந்திருக்கும் பொன்.வாசுதேவனுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.


ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை (கவிதைகள்) - பொன்.வாசுதேவன்

112 பக்கங்கள்

விலை : ரூ.70/-

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.


இணையத்தில் வாங்கிட ;






Sunday, January 30, 2011

உப்புக் குடித்தவர்களை ஒப்புக்கொடுக்கும் லாப விளையாட்டு (கவிதை)






உப்புக் குடித்தவர்களை ஒப்புக் கொடுத்து

ஆடும் பகடையாட்டம் ...

இப்போதைக்கு அலைக்கற்றை அலை ஓய,

எப்போதைக்கும் இரவலர் பட்டம் பூண்டு

அனுதாபிப் போர்வை மூட

கொட்ட வரும்
தேனீக்களை போக்குக் காட்டி

மீனவர் வோட்டுகள் எனும்

அடைத்தேன் பிய்த்துக் கொள்ள

எல்லாமொரு லாப விளையாட்டே ...

கடலோடும் அலையோடும் கரிப்பு மணிகளே

கேட்டுக் கொள்ளுங்கள்

உங்கள் உயிர்கள் மதிப்பு மிக்கவை

தக்கை வீசியவன் எக்கணமும்

அதை உணர்ந்தே இருத்தலில்

எப்போதும் செத்துக் கொண்டிருக்கிறீர்கள்

சிங்களவன் கை தும்பிகளாய்!

உங்கள் கதை உலர்ந்திடும் உப்பாக

கரைந்திடும் கடல் மணலாக

ஒப்புக் கொடுக்கப் பட்டவர்களின் ஒப்பாரி ஓசை

ஒப்புக் கொடுத்தொருக்கோ கேளாத தூரத்தே

அலையோசை தேய்த்துக் கரைக்கும் புறத்தே

மீண்டும் மீனவச் சாவுகள் ...

எப்போதும் மீனவர் பாடு மீன்பாடு.



Saturday, January 29, 2011

நாஞ்சில் நாடனின் 'தன்ராம் சிங்'



நாஞ்சில் நாடனின் " சூடிய பூ சூடற்க " தொகுப்பிலிருந்து "தன்ராம் சிங் " (2007 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனில் வெளியிடப் பட்ட கதை"

தனது அலுவலகத்தில் பணி புரிந்த ஒரு கூர்க்காவைப் பற்றி நினைவு கூர்தலாய் புரளும் பக்கங்கள் ; யதார்த்தத்தில் ஒரு கூர்க்கா வேறு திபெத்தியர்கள் வேறு வேறா! நேபாளிகள் மட்டும் தான் கூர்க்காக்கள் என வழங்கப் படுவார்களா? அப்படிப் பார்க்கின் தன்ராம் கூர்க்கா அல்லாத ஒரு கூர்க்கா .தன்ராம் சிங்கில் வாசிக்கும் போது கண் கலங்க வைத்த சில இடங்களை மட்டும் இங்கே தருகிறேன்.

//தன்ராம் சிங் மாத்திரமல்ல ,எந்த கூர்க்காவையும் கடுகடுத்த முகத்துடன் நான் கண்டதில்லை ,முகம் ஏறிட்டுப் பார்த்த உடன் மலரும் சிரிப்பு . ' உன் ஆதரவில் என் வாழ்க்கை என்பது போல்'//

//அவனது ஊருக்குப் பக்கத்தில் பாயும் ஆறொன்று உண்டென்றும் அதன் பெயர் இன்னதென்றும் பலமுறை சொல்லி இருக்கிறான்,எத்தனை யோடஇத்தும் எனக்கதன் பெயர் நினைவுக்கு வரவில்லை,ஆறும் குளங்களும் ,நெல்-கோதுமை வயல்களும் அவன் கனவுகளில் வந்து போகுமாக இருக்கும் .பெடையின் நினைவில் இந்திரியம் சேறாகச் சிந்துமாக இருக்கும்.//

ஒருவேளை தன்ராம் சிங் தென்னாட்டுத் தெருக்களில் இரவுகளில் கோல் தட்டி ,விசில் ஊதித் திரிந்து கொண்டிருக்கக் கூடும்.மாதத்தின் முதல் வாரத்தில் உங்கள் வீட்டின் முன் வந்து சிரித்தபடி நின்றால் அருள் கூர்ந்து அவனுக்கு ஐந்து ரூபாய் தாருங்கள் கனவான்களே!

இப்போது முதல் மாடிக்கு இடம் பெயர்ந்து விட்டாலும் முதலில் கீழ் தளத்தின் முதல் வீட்டில் குடி இருக்கையில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் "ஷாப் " என்று கதவைத் தட்டும் கூர்க்காவுக்கு தவறாது ஐந்து ரூபாய் அளித்து புண்யம் கட்டிக் கொண்டமை மட்டுமே என்னாலான சிறு நற்பணி .

வெறும் ஐந்து ருபாய் நாணயம் அதை கையில் வாங்கிக் கொண்ட ஒவ்வொரு முறையும் கை உயர்த்தி சலாமிட்டு முகம் பார்த்து வெள்ளந்தியாய் சிரிக்கும் கூர்க்காவின் முகம் இன்னும் அப்படியே ஞாபகத்தில்.எந்த ஊர் கூர்க்காவும் ஒருவரே போலிருக்கக் கடவது அவர் தம் முகம் நோக்கிய வெள்ளைச் சிரிப்பாலாமோ! ம்ம்... வெள்ளந்தியான அந்தப் புன்னகையை எதிர்கொள்ள நேர்ந்த ஒவ்வொரு முறையும் நினைத்திருக்கிறேன் பதிலுக்கு ஒரு முறை ஒரே ஒரு முறை நாமும் தான் புன்னகைத்தால் என்னவென்று? சாத்தியப் படவே இல்லை கடைசி வரை .சும்மாவேனும் புன்னகைத்த சுவடாய் கன்னத்து தசைகளை விரித்துச் சுருக்குதல் அத்தனை கடிதோ?!

பல்லாயிரம் மைல்கல் தாண்டி வந்து சொற்ப சம்பளத்திற்கு இந்த ஊர் தெருக்களில் இரவுகளில் அலையும் தோழமை தேடும் கூர்க்காக்களுக்கென்று நலன் நாடும் சங்கங்கள் உண்டோ! அவர்களும் மனிதர்களன்றோ!
குங்குமம் இதழில் எஸ்ரா முன்பொரு முறை கூர்க்காக்களைப் பற்றி அவரது அனுபவங்களை சுவை படப் பகிர்ந்திருந்தார்.

இன்னும் யாரெல்லாம் கூர்க்காக்களைப் பற்றி எழுதினாலும் குறிப்பிட மறவாத ஒற்றை வரியை இதைக் கொள்ளலாம் .

"உன் ஆதரவில் என் வாழ்க்கை என்பது போல்"

புளியமரத்து பேய்கள் (சிறுகதை )

அதீதம் மின்னிதழில் வெளி வந்த எனது சிறுகதை .

அது ஒரு பட்டரைப் பழைய புளிய மரம் தான். பெருத்த விசேஷம் ஒன்றும் இல்லைஅதில்...இத்துப் போன அந்தப் புளிய மரத்தின் நடுத் தண்டில் எக்கச் சக்கமானஆணிகள் திசைக் கணக்கின்றி அடித்து இறக்கப் பட்டிருந்தன.பாரதி அக்கா...சியாமளா சௌம்யா,ஹேமா சகிதம் ஜானா பள்ளிக்கு நடந்து போகையில் பாரதிஅக்காவிடம் பலமுறை இந்தப் புளிய மரத்தை பற்றி வித விதமான கதைகளை காதுகுளிர கேட்டிருக்கிறாள் ,பகலில் காது குளிரும் இரவில் மனம் குளிரும்,இறுக்க போர்வையை தலை முதல் கால் வரை இழுத்து மூடி போதாக் குறைக்குபாட்டியின் இடுப்பைக் கட்டிக் கொண்டு தூங்கினாலுமே பெரும்பாலும்பயத்தில் உடம்பும் மனமும் உதறிக் கொண்டே தான் இருக்கும்.அந்த மரத்தின்ஐவேஜு அப்படி!

இப்படிப் பட்ட புளிய மரத்தை நண்பர்கள் புடை சூழ கடப்பதில் ஜானாவுக்குபிரச்சினை எதுவுமஇருந்ததில்லை ,இன்றைக்குப் பார்த்தா இவளுக்கேஇவளுக்கென்று இந்த மெட்ராஸ் ஐ வந்து தொலைக்கும் ?

பள்ளியில் இருந்து இன்று காலை காட்சியாக "திக்குத் தெரியாத காட்டில்"படத்திற்கு கூட்டிப் போயிருந்தார்கள் ...படம் பார்க்கப் போகாமல் லீவுலெட்டர் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டில் இருந்திருக்கலாம் , படம்பார்த்து விட்டு வந்தது தான் தாமதம் இந்தக் கூட்டாளி கழுதைகள் "டீச்சர்டீச்சர் ஜானகிக்கு கண் வலி டீச்சர்" என்று போட்டுக் கொடுத்துஎட்டப்பியானார்கள்.அந்தக் கழுதைகளை விடுங்கள் இந்த டீச்சரை படத்தில்பார்த்த முதுமலை காட்டுக்குள் தனியே அனுப்பி தொலைந்து போக வைக்க வேண்டும் .

அந்தக் கடவுள்.கண் வலி எல்லோருக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று இந்த மிளகாமூக்கு பியூலா டீச்சர் கிளாசுக்குள் கால் வைக்கும் முன்னே"அடி லீவுலெட்டர்லாம் கண் வலி சரியானப்புறம் தந்தா போதும்டி,கெளம்பு ...கெளம்புஎடத்தக் காலி பண்ணு என்று துரத்தாத குறையாக வெளியில் அனுப்பி விட்டாள்.

அந்த டீச்சருக்கு என்ன தெரியும் இந்தப் பாடாவதி புளிய மரத்தின் கதையைப்பற்றி!? ஒற்றையாய் அதைக் கடப்பதை நினைத்தாலே ஜூரம் வரும் போலிருந்ததுஜானாவுக்கு.ஜானாவின் வீட்டுக்கு வலப்பக்கம் சின்னதாய் ஒரு கிளப்புக் கடைஇருக்கிறது.முன்பக்கம் கிளப்புக் கடை (கிளப்புக் கடை என்பது ஊர்ப்பக்கம்அதொரு ரெண்டும் கெட்டான் ஹோட்டல் என்று வைத்துக்கொள்ளலாம் )பின்பக்கம்வீடு என்று வைத்துக் கொண்டிருந்தார்கள் அந்த கடைக் காரர்கள்.

கடைக்காரப் பெண் நல்ல சிவப்பி ,புருஷனோ நல்ல கருப்பன் . ஆம்பிளைகளாகப்பிறந்த ரெண்டும் ரெண்டு விதமான ஜாடையில் அம்மையையும் அப்பனையும்உரித்துக் கொண்டிருந்தன. ஜாடை ஒழிகிறது குணத்தில் அப்பனின் அச்சுக்கள்.லேசு பாசாக அந்த வீட்டு ஆண்களின் குரல் காதில் விழும் போதேல்லாமும் ஒரேஅதட்டல் மயமாகத் தான் இருக்கும்.ஒத்தை ஆளாய் அந்தப் பெண் புருஷ அதிகாரம்பிள்ளைகள் அதிகாரம் ரெண்டுக்கும் எப்படியோ ஈடு கொடுத்துக் கொண்டு வாய்மூடி ஊமைச்சி போல இருந்து வந்தாள்.

கேளுங்கள் அந்தச் சிவப்பியம்மாள் ஒவ்வொரு அமாவாசைக்கும் கழுத்துச்சுளுக்குமட்டும் கனத்த கல்லைச் சுமந்து கொண்டு இந்தப் புளிய மரத்துக்கு கொண்டு வரபடுவாள். கூட கோடாங்கி மாத்திரம் உடுக்கை அடித்துக் கொண்டுஅந்தம்மாவைச் செலுத்திக் கொண்டு போய் உச்சந்தலை முடியில் சிலதைபுளியமரத்து நடுத் திண்டில் ஆணி அடித்து அறைந்து விட்டு வருவான்.அதற்கப்புறம் ஓரிரு நாள் அந்தம்மாள் தன் கிளப்புக் கடைக்கு பக்கவாட்டில்ஒதுக்கமாய் இருக்கும் சிமென்ட் திண்ணையில் அயர்வாய் நாளின் முக்காலமும்படுத்தே கிடப்பாள்.

பள்ளிக்கு போகையில் ஒருநாள் பாரதி அக்கா தான் சொன்னாள் ,இந்தம்மாளுக்குப்பேய் பிடித்திருக்கிறதென்று ,தொத்திக் கொண்ட நாட்களில் இருந்தே பிடித்தபிடியில் போவேனா என்கிறதாம் அந்த ரயில் தண்டவாளத்துப் பேய் . ஒவ்வொருஅமாவாசைக்கும் ஆணி அடித்து மாளவில்லையாம். பேய் பிடித்து ஆட்டும்நாட்களில் புருஷனைக் கிட்டக் கண்டால் சங்கைப் பிடித்து கடித்து ரத்தம்உறிஞ்ஜாக் குறையாக ஆத்திரப் படுவாலாம் அந்த சிவத்தம்மாள்.

பாரதி அக்காவுக்கு மட்டும் எப்படியோ எல்லாமும் தெரிந்து விடுகிறது.அவளுடன் பள்ளிக்கு மட்டுமல்ல சாயந்திர தெரு முக்கு விளையாட்டுகளிலும்கூட்டு சேர பிள்ளைகளிடையே போட்டா போட்டி நடக்கும்.அத்தனை பிரபலஸ்திஜானாவின் பாரதி அக்கா.

பியூலா டீச்சர் வீட்டுக்குப் போடி என்றதும் ஜானா ஒன்பதாம் வகுப்பு பிசெக்சனில் இருக்கும் பாரதி அக்காவை தான் துணைக்கு தேடிப்போனாள்,கூப்பிட்டால் பாரதி அக்கா மறுக்கமாட்டாள் தான் ...ஆனால்அன்றைக்கென்று அவளுக்கு மத்தியானப் பீரியடில் கிராப் பரீட்சை வந்துதொலைக்க கணக்கு டீச்சர் எசக்கி கூப்பிடப் போன ஜானாவை வயிற்றைப்பிடித்துக் கிள்ளி;

"ஏண்டி இந்தப் பட்டப் பகல்ல மெயின் ரோட்டோரமா நடந்து போக உனக்கு துணைக்குஆளு வேணுமாக்கும் ,தோலை உருச்சுப் போடுவேன் ,உன்னோட சேர்த்து அவளும்மட்டம் போடணுமோ...தனியாவே போய்க்கோ உன்ன ஒன்னும் பிசாசு பிடிக்காது...போ..போ "

என்று துரத்தி விட்டாள் கிளாசில் இருந்து .

சியாமளா சௌம்யாவைக் கூப்பிடலாம் யாராவது ஒருத்தர் கூட வந்திருப்பார்கள்.ஜானாவுக்கு நாக்கில் சனி ...சியாமளா சௌம்யா ,ஹேமா ,ஜானா எல்லோருமே ஒரேசெக்சனில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில்.முழுப் பரீட்சைவந்தது ,வழக்கப் படி கடைசிப் பரீட்சை முடிந்து அடுத்து ரெண்டு மாசம்லீடுலே ...என்று சந்தோசம் பீரிட்டு பாய வீட்டுக்கு நடக்கையில் கேலி போலஎதோ பேச்சு வாக்கில் சியாமளாவைப் பார்த்து சியாமி நீ அடுத்த வருசமும்கோடடடிச்சு எழாப்புல தான் உட்காரப் போற என்று சொல்லி விட்டு நாக்கைக்கடித்து அழகு காட்டினாள்.

இது சியாமிக்கு பிடிக்கவில்லை.போதாக் குறைக்கு அவள் ஏற்கனவே ஒரு வருஷம்கோட் அடித்து தான் உட்கார்ந்திருந்தால் அதே வகுப்பில் ,அவளுக்கஅடுத்தவகுப்பிலிருந்த தங்கை சௌமி; அக்காவுடன் ஒரே வகுப்பில் வந்து சேர அதுவேஅவளுக்கு இழிமானமாய் இருந்து வந்தது. ஜானா வேறு இப்படிச் சொல்லி விட்டாளாரொம்பக் கொதித்துப் போனாள் சியாமி.
சொல்லி வைத்தார் போல அவள் அந்த வருசமும் எழாப்பில் கோட் அடித்து அங்கேயேஇருக்க வேண்டியதானது.சௌமியும் ஜானாவும் எட்டாப்பு போனார்கள் .கருநாக்குஜானா நீ சொல்லித் தாண்டி எங்கக்கா பெயிலாப் போனா என்று சௌமியும்ஜானாவுடன் கா விட்டு இந்த வருடம் முழுக்க பேசாமலே இருந்து வந்தாள் .

ஆகக் கூடி இப்போது ஜானா கூப்பிட்டால் ரெண்டு கழுதைகலுமே மூஞ்சியைக் கூடதிருப்பப் போவதில்லை. கேளாமல் இருப்பதே நல்லது என்றெண்ணிய மாத்திரத்தில்ஜானாவுக்கு மறுபடியும் புளிய மரத்துப் பேய்களின் ஞாபகம் வந்துமருட்டியது. கூடவே அங்கே நித்ய கடமையை ஆணி அடித்துக் கொண்டிருக்கும்சிவத்தம்மாள் ஞாபகமும் வந்து தொண்டை வறண்டது .எண்ணெய் கேனில் கொண்டுபோயிருந்த தண்ணீரைக் கொஞ்சம் குடித்து விட்டு மூடி கூடையில் வைத்துக்கொண்டாள் .

இதொண்ணும் உச்சிக் காலமில்லை அதனால் பேய்கள் உக்கிரமாய் ஒன்றும் இருக்கப்போவதில்லை ..அதனால் தனியே போனாலும் பரவாயில்லை என்று தனக்குத் தானேசமாதானம் சொல்லிக் கொள்ளப் பார்த்தாள் .
அதற்குள் ரெண்டாம் மணி அடித்து கிளாசுக்குள் வந்த பியூலா டீச்சர் ...
முகத்தை சுளுக்கிக் கொண்டு
"ஏண்டி இன்னுமா நீ போகல?கிளாஸ்ல எல்லாத்துக்கும் கண்ணு வலிய ஓட்டவச்சுப்பிடுவ போல இருக்கே. என்னடி அக்கப்போரு உன்கூட ...இப்போ நீ போகப்போறியா இல்லா பெரம்புல ரெண்டு சாத்து சாத்தனுமா ?"

என்று கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் சொல்லவே ஜானாவுக்கு அவமானத்தில்லேசாகக் கண் கலங்கியது .இந்த டீச்சர் எப்பவுமே இப்படித் தான் .பிள்ளைகள்மாட்டிக்கொண்டால் கிண்டிக் கிழங்கேடுக்காமல் விடவே மாட்டாள் ...என்றுமனசுக்குள் வைது கொண்டே தன் புத்தகப் பை மதியச் சாப்பாட்டுக் கூடைசகிதம் பள்ளியில் இருந்து வெளியில் வந்து வீட்டை நோக்கிப் போகும் மெயின்ரோடில் நடக்க ஆரம்பித்தாள்.

ஈசன் நோட்ஸ் கடை கடந்து போனது ...அம்பாள் மெடிகல்ஸ் ,அய்யனார் லாரி செட்குருவி குளம் ஸ்பீக்கர் செட் கடை.ரோகினி பாத்திரக் கடை எல்லாம்ஒவ்வொன்றாய் தாண்டிப் போய்க் கொண்டிருந்தன. மெயின் ரோட்டில் வாகனங்கள்விரைந்த படி இருந்தன.

அப்பா இந்நேரம் இந்தப் பக்கம் டி. வி.எஸ் பிப்டியில் வந்தால்தப்பித்தோம் பிழைத்தோம் என்று எத்தனை சந்தோசமாய் இருக்கும் ,ஒரு நிமிஷம்இப்படி நினைத்து விட்டு பிறகு அவர் எப்படி இந்நேரம் இந்தப் பக்கம் வரமுடியும் ?என்ற ஏமாற்றத்தில் முகம் கசங்கினால் ஜானா.
பக்கத்து வீட்டு செக்யூரிட்டி அங்கிள் கூட சாயந்திரமாகத் தான் இந்தப்பக்கமாக வண்டியில் போவார். இப்போது தெரிந்தவர்கள் யாரும் போக வாய்ப்பேஇல்லையே ஜானா யோசித்தவாறு போய்க் கொண்டிருந்தாள் .

ஜெருசலேம் சபை ..என்று போர்டு போட்ட சின்னக் குடில் ஒன்றுவந்தது.அங்கிருக்கும் ஒரு ஊழியக்காரப் பெண்ணை ஜானாவுக்கு தெரியும்என்பதால் பயத்தில் இருந்து தப்பிக்க கொஞ்ச நேரம் அங்கே நுழையலாமா என்றுயோசனை வந்தது .

குடிலுக்கு நேராகப் போய் எட்டிப் பார்த்தால் அங்கே சின்னப் பூட்டு ஒன்றுதொங்கிக் கொண்டிருந்தது.கண்களில் ஏமாற்றத்துடன் ஜானா மேலே நடந்தாள்.

அடுத்து பத்தேட்டில் முத்து மாரியம்மன் கோயில் வரும்.இந்நேரம் கோயில்பூட்டி இருக்கும்.

அடுத்து சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளிக்கூடம ஒன்று வரும் அதைத் தாண்டினால்வெறும் பொட்டல் தான் கொஞ்ச தூரத்துக்கு வீடுகளே இருக்காது ...
அதைக் கடந்தால் போதும் பதினைந்து நிமிசத்தில் வீட்டுக்குப் போய் விடலாம்.

சி.எஸ்.ஐ பள்ளிக்கு நேராக வருகையில் ஒரு ஈக் குஞ்சைக் காணோம் பள்ளிமைதானத்தில், மட்ட மத்த்யானத்தில் பிள்ளைகள் பாடம் கவனிப்பது போலபுத்தக மறைப்பில் கண்ணைத் திறந்த வாக்கில் தூங்குகிறார்கலாக்கும் தன்னைப்போலவே என்று நினைத்துக் கொண்டே அடுத்த எட்டை எடுத்து வைக்க பலக்கயோசித்துக் கொண்டு அவள் சாலையின் வளமும் இடமுமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் .

அப்புறம் புளிய மரம் தான் .

அதைக் கடந்தால் போதும் பதினைந்து நிமிசத்தில் வீட்டுக்குப் போய் விடலாம்.

சி.எஸ்.ஐ பள்ளிக்கு நேராக வருகையில் ஒரு ஈக் குஞ்சைக் காணோம் பள்ளிமைதானத்தில், மட்ட மத்த்யானத்தில் பிள்ளைகள் பாடம் கவனிப்பது போலபுத்தக மறைப்பில் கண்ணைத் திறந்த வாக்கில் தூங்குகிறார்கலாக்கும் தன்னைப்போலவே என்று நினைத்துக் கொண்டே அடுத்த எட்டை எடுத்து வைக்க பலக்கயோசித்துக் கொண்டு அவள் சாலையின் வளமும் இடமுமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் .

தூரத்தே ஒரு லாரி தவிர்த்து வேறு எந்த அரவத்தையும் காணோம் சாலை நெடுக ...

கூப்பிடு தூரத்தில் புளியமரம் ,சுற்றுப் புறம் பெருத்த அமைதியில் உறைந்துவெயிலில் உறங்கும் பாவனையில் மரங்களின் இலைகள் கூட அசையக் காணோம்.

புளிய மரம் நெருங்க நெருங்க கிளைகளில் காய்ந்து சருகாகிப் போன செவ்வந்திமாலைகள் கண்ணுக்குப் புலனாகின. இசக்கிக்கு படைத்திருக்க கூடும் யாரோ!உடைந்த பாட்டில்கள் ஒரு பக்கம் ஓரமாகக் கிடந்தன. இன்னும் கொஞ்சம் நெருங்கதண்டில் அடிக்கப் பட்டிருந்த ஆணிகள் கண்ணில் அறைந்தன .ஆணிகளைக் கண்டால்உள்ளபடிக்கு பயம் இருக்குமிடத்தை விட்டு பெருங்கொண்டதாய் எழுந்து ஆடஆரம்பித்து விடுகிறது.என்னவோ ஆணி தன் உச்சந்தலையிலேயே அடித்தார் போல.

.சாலை விதிக்கொப்ப இடப்பக்கமாகவே சென்று கொண்டிருந்த ஜானா என்னவோபுளிய மரத்தின் கண்ணில் மண்ணைத்தூவிய பாவனையில் வலப்புறத்திற்கு மாறிக் கொண்டால் பதுங்கிப் பதுங்கி.எல்லாமொரு ஜாலக் தான் .பேய் தொற்றிக் கொள்ள நினைத்தால் எப்படிவேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் தொற்றிக்கொள்ளும் என்று சித்திசொல்லி இருக்கிறாள் முன்பே.

வலப்புறத்து ரோட்டோரோம் ஒரு வற்றிப் போன ஓடை உண்டு ,இப்போது வெறும்வெள்ளை மணல் பரப்பு தான் கண்ணைக் கூச வைக்கும்,மழைக்காலங்களி மட்டும் எதோகொஞ்சம் நீரோடும். பாதாளச் சாக்கடைக்கு என குழி தோண்டுகையில் பதிக்காமல்மீந்த பெரிய பெரிய குழாய்கள் நாலைந்து அந்த ஓடையில் தான் நிறுத்தப்பட்டிருந்தன. ,வெயிலுக்கு அணைவாக சில நேரங்களில் ஆடு மாடுகள் நாய்கள்அங்கு ஒதுங்கும் .

பேய் பயத்திலும் பெரிய பயமாக இப்போது நாய் பயம் வேறு. தெரு நாய்கள்பெருத்துப் போன நாட்கள் அவை.

ஜானா அந்த ஓடை விளிம்பு வரை போகாமல் அதை ஓட்டிக்கொண்டே தன வீட்டைப்பார்த்து சலனத்தோடு நடக்கையில் சலனமே இல்லாமல் தான் ஓடும் வெயிலும்காய்ந்து கொண்டிருந்தன.

வியர்த்து வழிந்த முகத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டு எட்டு குயர்பத்து குயர் நோட்டுகளும் புத்தகங்களும் திமிறிய தன் பையை திணறலுடன் தோல்மாற்றிப் போட ஒரு நிமிடம் நின்றவள் தனக்குப் பின்புறமிருந்து முன்னோக்கிநீண்ட பெரிய நிழலைக் கண்டு சன்ன விதிர்ப்புடன் திடுக்கிட்டுப் போனாள்.

ஐயோ பேய் தான் வந்துடுச்சா !!! கழுத்தின் ஓம் சக்தி டாலரை கை இருக்கப்பற்றிக் கொள்ள கண்களை இருக்க மூடிக் கொண்டு
"ஓம் சக்தி ...பரா சக்திஓம் சக்தி பரா சக்தி "

என்று முனு முணுத்துக் கொண்டே அழாக்குறையாக ஆணி அடித்தார் போல அசையாது நின்றவள்இமைகளின் மேல் நிழல்நீங்கி வெள்ளை வெயில் சுடவும் மீண்டும் கண்ணைத் திறந்தாள்
பேயும் முனியும் தான் உள்ளே சதா எட்டி எட்டிப் பார்த்து அரட்டிக்கொண்டிருக்கின்றனவே.

ஆனால் அந்த நிழல் பேயுமில்லை ...முனியுமில்லை
பக்கத்து கிளப்கடையின் சொந்தக்காரி அந்த சிவத்தம்மாவின் கருத்த புருஷன்தான் ஜானாவை தாண்டிக் கொண்டு ரோட்டில் போய்க் கொண்டிருந்தான் .

போன மூச்சு திரும்பி வந்தது.

வீட்டுக்குத்தான் போகிறான் போலும் .இந்த ஆளைத் தொடர்ந்து போனால் போதும் வீடு வரை.

அப்பாடா என நிம்மதி பெருமூச்சுடன் அவன் பின்னே நடையை எட்டிப் போடப்போகையில் பின்னால் மறுபடி கொலுசுச் சத்தம் .
ஏதடா துன்பம் என்றெண்ணும் முன் ஓடைப்புறத்து குழாய் ஒன்றில் இருந்துநைலக்ஸ் சேலை இழுத்து விட்டுக் கொண்டவளாய் பெட்டிக் கடை மீனாட்சிஜானாவுக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள் .அப்பாடி இனி பயமே இல்லை .ஒற்றைக்கு ரெண்டு பேர் துணை கிடைத்த பின் என்ன பயம்?

முன்னால் போய்க்கொண்டிருந்த கருப்பன் ஒரு நிமிஷம் திரும்பி ஜானாவைப்பார்த்து சிரித்தான்.

பதிலுக்கு ஜானாவும் சிரித்து வைத்தாள்.

ஒரு வழியாய் வீடு வந்தது .

புத்தகப் பையை மூலையில் கடாசி விட்டு ஓட்டமாய் போய் அம்மாவிடம் தான்புளிய மரத்தைக் கடக்கப் பட்ட கஷ்டத்தை எல்லாம் சொன்னால் தான் மனசாறும்போலிருந்தது அவளுக்கு.

துவைக்கும் கல் மேடையில் சாய்ந்து கொண்டு அம்மா சோப்பு போட போடப்நுரைக்குமிழிகளை கிள்ளிக் கிள்ளி உடைத்துக் இவள் சொல்லச் சொல்ல சன்னப்புன்னகையோடு கேட்டுக் கொண்டே வந்த அம்மா கடைசியில் கருப்பனையும்மீனாட்சியையும் பற்றிச் சொல்லும் போதுமட்டும் களுக்கென சிரித்து ;."ம்ம்...அப்போ நிஜப்பேய்க கூட பயமில்லாம நடந்து வந்தன்னு சொல்லு "என்றவாறு பிழிந்த துணிகளை உலர்த்த கொடிப் பக்கமாக நகர்ந்தாள் .

"நிஜப் பேய்களா" ஏம்மா ? ஜானாவின் முதிராத குழந்தை முகம் கேள்வியில்விரியக் கண்டு அம்மா யோசனையுடன் அதொண்ணுமில்லை பாட்டி கேப்பமாவுச்சீடை பண்ணிருக்கா போய்த் தின்னுட்டு கண்ணுக்கு மருந்து வாங்கிட்டு வரச்சொல்லி அப்பாக்கு போனப் போடு போ .என்று பிளாஸ்டிக் வாளியுடன் கிணற்றுப்பக்கம் குளிக்க தண்ணீர் இறைக்கப் போய் விட்டாள் .

பாட்டி தந்த கேப்பச் சீடையை மென்று விழுங்கும் போது ஜானாவுக்குகுழப்பமாக இருந்தது ;

அந்த கிளப்புக் கடை சிவத்தம்மா புருஷன் தன்னைப் பார்த்து சிரித்தானாஇல்லை பெட்டிக் கடை மீனாட்சியைப் பார்த்து சிரித்தானா? அம்மாவைப் போலவேகளுக்கென்று சிரித்துக் கொண்டு "நிஜப் பேய்கள் " என்று ஒருமுறை மெல்லச்சொல்லிப் பார்க்கையில் திடீரென்று தான் பெரிய மனுஷியானார் போல் ஒருபிரமை வந்தது ஜானாவுக்கு.


அன்றைக்கு அமாவாசை சிவத்தம்மாள் வழக்கம் போல் புளிய மரத்தில் ஆணிஅடிக்கக் கிளம்பிக் கொண்டிருகிராளென உடுக்கை சத்தம் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தது ஊருக்கும் ஜனாவுக்கும்.

Wednesday, January 12, 2011

சர்மிஷ்டா (மிஸஸ்.யயாதி )

சர்மிஷ்டா (மிஸஸ் .யயாதி )

'சர்மிஷ்டா ' சிலருக்கு சில பெயர்களின் மீது காரணமற்ற பிரேமை ஏற்படக்கூடும்.அப்படி எனக்கிந்தப் பெயரின் மீது ரொம்ப இஷ்டம்.சிறுகதை எழுதத் தோன்றிய ஒவ்வொரு முறையும் இந்தப் பெயரை கதைக்குள் நுழைக்க முடியவில்லையே என யோசித்துக்கை விட்டிருக்கிறேன்.

முதல் முறை இந்தப் பெயரை நான் அறிந்து கொண்டது ஒரு டி.வி தொடரில் தான் . ராமாயணம் மகாபாரதம் தொடர்களை அடுத்து ஞாயிறு காலை பத்து மணிக்கு மகாபாரதத்தில் கிருஷ்ணராக நடித்து பிரபலமான நடிகரின் தயாரிப்பில் மீண்டுமொரு சரித்திரத் தொடர் ஒளி பரப்பாக ஆரம்பித்தது .தொடரின் பெயர் என்னவென்று ஞாபகமில்லை .
ஆனால் ;

அந்த தொடரில் மன்னன் "யயாதி" யாக நடித்த ராஜ் பப்பரையும் அவரது இரு மனைவிகளான தேவயானி மற்றும் சர்மிஷ்டா வையும் இன்னமும் மிகத் தெளிவாகவே ஞாபகமிருக்கிறது . சர்மிஷ்டா ... அன்றிலிருந்து இந்தப் பெயர் எனக்கு மிகப் பிடித்தமாகிப் போனது. பெரிய காரணங்கள் ஏதுமில்லை உச்சரிப்பின் உல்லாசம் எனக் கொள்ளலாம் ;தமிழில் சர்மிஷ்டா ஹிந்தியில் ஜர்மிஷ்டா என்று அந்தத் தொடரில் அவள் அழைக்கப் பட்டதாக நினைவு.

தொடரில் கதைப்படி இளவரசியான சர்மிஷ்டா தன தந்தை அவரது குருவான சுக்ராச்சாரியாருக்கு கொடுத்த வாக்கின் படி சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானிக்கு தாதியாக அனுப்பப் படுகிறாள். ஒரு ராஜகுமாரி தாதியாகிறாள் .அப்படியேனும் சர்மிஷ்டாவை இளப்பமாக்க நினைத்த அவளது பிராயத்து தோழி தேவயானியின் முயற்சி தோற்கிறது ...

காட்டுக்கு வந்த யயாதி மன்னன் தேவயானியை மணப்பதொடு சர்மிஷ்டாவையும் காந்தர்வ மணம் புரிந்து அவளோடும் வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறான்.

தேவயானிக்கு யது ,துர்வாசா எனும் இரண்டு குழந்தைகளும் ,சர்மிஷ்டாவுக்கு புரூ உள்ளிட்ட மூன்று குழந்தைகளும் பிறக்கின்றன. தேவயானிக்கு எப்போதுமிருந்த வருத்தம் தன்னைக் காட்டிலும் யயாதிக்கு சர்மிஷ்டாவே மனதிற்குகந்தவள் எனும் பொறாமை .

இந்த 'புரூ ' தான் தன் தாயின் ஆணைப்படி தன் தந்தை யயாதிக்கு தன் இளமை அனைத்தையும் தத்தம் செய்து விட்டு வயோதிகத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறான். (மிக சர்ச்சைகளைக் கிளப்பிய கதை இது)

இதெல்லாம் புராணக் கதைகள் ,இதல்ல சொல்ல விரும்பிய விஷயம்.

சர்மிஷ்டா இந்தப் பெயர் தமிழில் காணக் கிடைக்கவில்லை. என்.எஸ் மாதவன் எனும் மலையாள எழுத்தாளரின் சிறுகதை தொகுப்புக்கு சர்மிஷ்டா என்று பெயர் வைத்துள்ளதைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது .இதையும் சிதம்பர நினைவுகள்,சூர்ப்பனகை உள்ளிட்ட புத்தகங்களை மொழிபெயர்த்த ப்ரியத்துக்குகந்த கே.வி சைலஜா தான் மொழி பெயர்த்திருக்கிறார். இன்னும் தொகுப்பை வாங்கி வாசிக்கவில்லை நான் அதற்குள் சர்மிஷ்டாவைப் பற்றி பேச வேண்டும் போலிருந்ததால் இந்தப் பகிர்வு.

தெரிந்து கொள்ள விரும்பியது இந்த சர்மிஷ்டா இலக்கிய உலகில் எதனால் முக்கியத்துவம் பெறுகிறாள்?

பெருமைக்குரிய ராஜகுமாரியாக இருந்தும் தந்தை சொல் ஏற்று குருவின் புதல்விக்கு தாதியானதாலா?

அல்லது

தன் கணவனுக்காக மகனின் இளமையை தத்தம் செய்து தரப் பணித்ததாலா?

எதனால் இவள் முக்கியத்துவம் பெறுகிறாள் ? இரண்டுமே ஏற்புடைய செயல்கள் அல்லவென்றே நினைக்கத் தோன்றுகிறது.

Monday, January 10, 2011

ஜிப்ஸிகளும் நரிக்குறவர்களும் காணாமல் போன இந்திய வரலாற்றுப் பக்கங்களும் :


மேட்டிமை மிக்க தேவடியா மகனே :

( கவிதை -இயான் ஹான்குக் -ஜிப்ஸி வரலாற்று ஆய்வாளர் (இங்கிலாந்து)

சீருடையுடனும் உறைந்த புன்னையுடனுமிருக்கும்
மேட்டிமை மிக்க தேவடியா மகனே,
உனது அன்னை எப்படி இருக்கிறாள் ?
எனது அன்னையை
நான் நீண்ட நாட்களாகப் பார்க்கவில்லை

இரண்டாவது அபிப்ராயத்துக்கு இடமில்லையா?
இன்னொருமுறை சொல்
உனது பெருமைக்குரிய கனடாவுக்கு
நான்
பொருத்தமில்லை எனச் சொல்கிறாயா ?

எம்மைப் போன்ற குடிஎற்றதாரர்கள்
பொருத்தமில்லை என்கிறாயா?
சட்டத்திற்கு ஒப்ப அழுத்தமான வார்த்தைகளில்
நான்
குடியேற்றத்திற்கு பொருத்தமில்லை என்கிறாயா?
பரவாயில்லை .

இந்த நரகலை நாங்கள்
உம்மைப் போன்றவர்களிடமிருந்து
எமது வாழ்வு முழுக்க கேட்டு வருகிறோம் .

சிறை அதிகாரிகள்குடியேற்ற அதிகாரிகள்போலீஸ்காரர்கள்.
முகங்கலில்லை எமக்கு சப்தமற்ற ஒன்றரைக்கோடி தொண்டைக்குழிகள் உங்களது தகப்பன் களாலும் உங்களது குழந்தைகளாலும்
பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள்
விரட்டப்பட்டு வருகிறோம்

நீ உருவாக்கி வைத்திருக்கிற எமது உணர்வுகளை
கற்பனையிலேனும் நீ நினைத்துப் பார்த்ததுண்டா ?

என்னை மன்னித்து விடு

உன்னைப் போலவே நடந்து கொள்வதற்கு
என்னை முயற்சி செய்ய விடு
என்னை உள்ளே விடு
என் தந்தையை நான் தழுவிக் கொள்கிறேன் .


அப்புறம் நான் இப்படி மோசமாக நடந்து கொள்ள மாட்டேன்.
//அப்புறம் நான் இப்படி மோசமாக நடந்து கொள்ள மாட்டேன்//
உலகெங்கும் நாடற்றவர்களாக அலைந்து திரியும் ஜிப்ஸிகளின் துயரம் சொல்ல இந்தக் கவிதை ஒன்று போதாதோ?

இந்த அப்புறம் என்ற சொல் இங்கே மிக வலிக்கச் செய்கிறது. யமுனா ராஜேந்திரனின் "ஜிப்சியின் துயர நடனம் " புத்தகத்தில் இருந்த ஒரு கவிதை இது .அவர் ஜிப்ஸிகள் இந்திய பூர்வ குடிகள் என ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார்.

ஈழத் தமிழர்களும் இந்திய பூர்வ குடிகள் தான்.நாம் இந்தியர்கள் என்று ஒருமித்த நோக்கில் கண்டால் மட்டுமே. அவர்கள் தமிழகப் பூர்விக மக்கள் என சுருக்கப் பட்டு விட்டார்கள்,அதனால் ஈழத் தமிழனுக்கு என்ன ஆனாலும் வடக்கில் கவனம் பெறத் தக்க வகையில் எந்த எதிர்ப்பும் எழ வகையற்றுப் போனது,போலவே வட கிழக்கில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு என்ன ஆனாலும் தெற்கே நமக்கும் போதிய அக்கறையின்றிப் போயிற்று.

ஜிப்ஸிகளின் துயரக்கதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது ,பக்கத்து மாநிலத்தில் நடப்பதைக் கூட வேடிக்கை பார்க்கும் பாவனை மட்டுமே காட்டக் கூடும் அண்டை மனித சமுதாயம் நாம் எங்கிருந்து பூர்வ குடிகளைத் தேடி கண்டெடுத்து போஜித்து காபந்து செய்யப் போகிறோம்!!! ஆனால் இங்கே ஜிப்ஸிகளின் துயரக் கதைகளை வாசிக்க நேர்கையில் பதிந்து வைக்க இயலாமல் போன பழங்குடி வம்சங்கள் குறித்த கையாலாகக் கோபங்கள் எழுகின்றன.

இந்தியாவில் ஆரிய ஊடுருவலை அறிந்து கொள்ள ரிக்.யஜூர்,சாம,அதர்வணம் எனும் நான்கு வேதங்கள் இருக்கின்றன. இராமாயண மகாபாரதக் கதைகள் இருக்கின்றன. திராவிட நாகரிகம் பற்றி அறிய சிந்து வெளி,ஹரப்பா மொகஞ்சதாரோ அகழ்வாராய்வுகள் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா எனும் நிலப் பரப்பில் ஆரியர்களுக்கு முன்பிருந்தவர்கள் யார்? அவர்கள் என்ன ஆனார்கள்?

பாண்டவர்கள் சரஸ்வதி நதிப் படுகைகளில் அலைந்து திரிந்த காலங்களில் அவர்களுக்கு மிக வலப்பமானதொரு நாகரிகம் இருந்திருந்தது நிஜமென்றால் அவர்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்தவர்கள் யார்?

பாண்டவர்கள் என்றதும் மகாபாரதக் கதைக்குத் தாவாமல் பாண்டவர்களை ஒரு பழங்குடி இனத் தலைவர்கள் அல்லது வாரிசுகள் என மட்டுமே கொண்டு அவர்கள் தங்களுக்குள் இட்டுக் கொண்ட உட்போரைப் புறம் தள்ளி அவர்கள் யாரிடம் வென்று பெற்ற பகுதி ஹஸ்தினாபுரம் என்று எந்த வரலாறும் எழுதி வைக்கப் படவில்லையா?

சாந்தனு மச்ச கன்னியான மீனவப் பெண்ணை மணந்து அதில் விரிந்த குலம் தானே திருதராஷ்ட்டிரன் பாண்டு உள்ளிட்ட குரு குலம்.சாந்தனுவுக்கு முந்தைய மகாபாரதக் கதை என்ன?!

காண்டவாக் காடுகளை அழித்து பழைய டெல்லியை (இந்திர பிரஸ்தம்) உருவாக்கினார்கள் பாண்டவர்கள் எனில் இந்தியா முழுக்க காடுகளே நிறைந்திருந்தனவா ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பொழுதில்?! காடு திருத்தி நாடாக்கியதில் பூர்வ பழங்குடிகளுக்கு பங்கேதும் இல்லையா? மிகப் பெரும் புதிர்கள் இவை .இந்தப் புதிர்களை அவிழ்க்கத்தான் புத்தகங்கள் தேட வேண்டும்.யாருக்கேனும் தெரிந்தால் அவசியம் இங்கே இந்தப் பதிவை வாசிக்க நேர்ந்தால் தெரிவியுங்கள் .

நிற்க

ஜிப்சிகளுக்கு வருவோம் ,பதினோராம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படையெடுப்பை முறியடிக்க நினைத்த ஆரியர்கள் தங்கள் ஆரிய வீரர்களுடன் இந்திய பூர்வ பழங்குடிகளான லோகர்கள்,குஜ்ஜர்கள்,தண்டாக்கள் உள்ளிட்ட ராஜபுத்திரர்களை தம் சத்ரிய படை வீரர்களுடன் கலந்து போர் முனைக்கு அனுப்பினர். இந்த வகையில் இந்த பழங்குடிகள் பல ஒன்றிணைந்து தான் ஜிப்சிக்கள் எனும் தனியானதொரு பிரிவு தோன்றி இருக்கிறது என்கிறார் இந்நூலாசிரியர்.

ஜிப்சி என்ற சொல்லுக்கு (சிறிய எகிப்தியர்கள்) என்று பொருளாம். உண்மையில் ஜிப்ஸிகள் இந்தியாவின் பஞ்சாப் மாகாணப் பிரதேசங்களில் இருந்து இஸ்லாமியர்களுடன் ஆனா போர் காரணமாக உலகின் பல பாகங்களிலும் சிதறிய ஒரு கூட்டமாக இருந்த போதிலும் ஐரோப்பியர்கள் அவர்களை எகிப்தில் இருந்து வந்த கறுப்பின மக்கள் என்று கருதியதால் வந்த பெயர் தான் "ஜிப்ஸி(சிறிய எகிப்தியர்கள்) .

ஜிப்சிகளுக்கு நிகராக தமிழ் நாட்டில் நரிக்குறவர்களைக் கூறுகிறார்கள் .அவர்களது அடர்த்தியான நிறங்களால் ஆன உடைகள்,நாடோடி வாழ்க்கை முறை,குல கட்டுப்பாடுகள் போன்ற காரணிகள் அதை உறுதி செய்கிறது .

நரிகுறவர்கள் தேர்தல் காலம் தவிர்த்து தேடப் படக் காணோம்,அவர்கள் வழக்கப் படி ஊசி பாசி மணிகளை விற்றுக் கொண்டும் கொக்கு குருவி சுட்டுக் கொண்டும் திரிவதை கிராமங்களில் இப்போதும் பார்க்கலாம். அவர்களுக்கென தொகுப்பு வீடுகள் கட்டப் பட்டுள்ளன என்கிறார்கள் ,அந்த வீடுகள் மருவி சமூக விரோதக் கும்பல்களின் சரனாலயங்கலாகித் தான் போகின்றன ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் .

செங்கல்கள் தூர்ந்த சிமென்ட் பூச்சற்ற சில டப்பா கட்டிடத் தொகுப்புகளை ஊர்களின் ஒதுக்குப் புறங்களில் பேருந்துகளில் கடக்கும் போதெலாம் இந்த வீடுகள் யார்க்காக கட்டப் பட்டவை என்ற குழப்பமே ே மிஞ்சுகிறது,யாருடைய மேம்பாட்டுக்காகவோ என்று!!!

பி.சி,எம்.பி.சி ,எஸ்.சி ,எஸ்.டி , என்று எந்தப் பிரிவிலும் சேர்க்க முடியாதா நரிக்குறவர்களை?

நிஜத்தில் அவர்களுக்கென விண்ணப்ப படிவங்களை நிரப்ப என்ன செய்வார்கள் நரிக்குறவர்கள்?

ரேசன் கார்டுகள்ஒட்டுரிமைக்கான அடையாள அட்டைகள்

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அனுபவிக்க ,

108 அவசர சேவையை அனுபவிக்க

மேற்சொன்ன அட்டைகளை சமர்பிக்கச் சொல்கிறார்களே எந்த அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தாலும் இவைகளை நரிக்குறவர்களுக்கு வழங்கி முடித்து விட்டார்களா?ஒட்டு மொத்த தமிழக மக்கள் thogaiyil நரிக்குறவர்கள் எத்தனை சதவிகிதம் பேர்?

ஜிப்சிகளைப் பற்றிப் படிக்கப் படிக்க இந்த மாதிரி அனாவசியக் கேள்விகள் எல்லாம் எழுவதை தவிர்க்க முடியாது யாரானாலும்.

எந்த மாதிரியான ஒரு எருமை மாட்டு நிம்மதியில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம்?!

தலை வழியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது வாஸ்தவமே . நரிக்குறவர்களுக்காக ,ஜிப்சிக்களுக்காகப் போராட வேண்டாம் .
ஈழத் தமிழனுக்காக உண்ணா விரதம் இருந்து நமது எதிர்ப்பை பிரகடனம் செய்ய வேண்டாம்.

அவர்களை சக மனிதர்களாக உணர்வதில் என்ன அசூயை ?

முன்னேறிய சமுதாயத்திடம் தாக்குப்ப் இடிக்க இயலாமல் பின் தங்கிப் போனாலும் பரவாயில்லை என காடுகளில் தங்கி விட்ட பழங்குடிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடித் தேடித் போய் விடாது தொல்லை கொடுத்தால் தீவிரவாதிகள் உருவாகாமல் என்ன செய்வார்கள்?!
அடக்கப் பட்ட மக்களே தீவிரவாதிகள் ஆக்கப் படுகிறார்கள்.

வரலாற்றை எடுத்துக் கொண்டால் உலோகம்,மின்சாரம் இதைத் தேடித் புறப்படுகையில் தான் பெரும் பெரும் போர்கள் வெடிப்பதாகக் காண முடிகிறது

இதற்கு யுகக் கணக்குகள் அனாவசியம் .

இப்போதும் தண்டகாரண்யத்தில் கொட்டிக் கிடக்கும் பாக்சைடுக்காக அங்கிருக்கும் பூர்விக பழங்குடி மக்கள் இந்திய அரசால் வேறிடம் செல்லுமாறு அச்சுறுத்தப் படுகிறார்கள்.

வலிந்தவர்களின் தேவைகள் எப்போதும் எளியவர்களை விரட்டி அடித்து அபகரிக்கும் குணத்தை வளர்க்கிறது.அன்றைக்கு அரசர்கள் செய்தார்கள் ,இன்றைக்கு ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். வித்யாசம் எதுவுமில்லை.

நாம் நமது காட்டுமிராண்டித் தனத்தை நவீன ஆடைகள்,அலங்காரங்களால் புது மோஸ்தரில் காட்டப் பழகி விட்டோம்.
இந்த நாட்டில் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு இன்னொரு நீதி உண்டு ஒரே நீதி.

வாழத் தெரிந்தவன் -வாழத் தெரியாதவன் .

இதற்குள் சுருங்கிப் போகிறது எல்லாமும். மனசாட்சிகள்,ராஜ தந்திரங்கள், நடுவர்கள் , தரகர்கள், நண்பர்கள் ,எதிரிகள் ,எல்லோரும் இதற்குள் அடங்கி விடுகிறார்கள்.

இது கட்டுரை அல்ல . மேய்ந்த புத்தகங்களின் செரிமானம் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

Friday, January 7, 2011

கண்டமனூர் ஜமீனும் வேலப்பர் கோயிலும் (விசிட்)



நேற்று இரவு மக்கள் தொலைக்காட்சியில் பட்டுப் போன வருஷ நாட்டு ஜாமீன் அரண்மையை காட்டிக் கொண்டிருந்தார்கள். கண்டமனூர் ஜாமீன் தான் வருசநாட்டு ஜாமீன் என்று துலங்கியவர். ஜாமீன் ஆண்டி வேலப்பா நாயக்கர் தன ஆப்த நண்பன் பளியன் சித்தனை கொன்றதால் அவர் குடும்பத்தில் ஆண் வாரிசு பிறந்தால் தகப்பன் ஸ்தானம் அற்றுப் போகட்டும் என சாகும் போது சாபமிட்டு செத்துப் போகிறான் பளியன்.

பளியனின் சாபமோ ஜமீன்தாரின் தன பயமோ எப்படியோ அவருக்கு ஒரு மகன் அவரது மனைவியின் வயிற்றில் சூழ் கொண்ட போதே ஜமீந்தார் இறந்து போகிறார். இந்த ஜாமீன் வம்சத்து சாமித்துரை எனும் ஜாமீன்தார் என் அப்பாவின் தாத்தா காலத்தவர் என்று நினைக்கிறேன். எங்கள் ஊருக்கும் கண்டமனூருக்கும் நடுவில் வைகை ஆற்றுப் பாலம் உண்டு .இந்தப் பாலத்தை திறந்து வைக்க எம்.ஜி.ஆர் வந்திருந்தார் அப்போது. நிற்க .

இந்தப் பாலத்தின் அடியில் கடைசி ஜமீன்தாரின் கல்லறை ஒன்று உண்டு இப்போதும் கூட. சின்ன வயதில் நாங்கள் விளையாட்டாய் அங்கே நுழைந்து பார்த்திருக்கிறோம் ,அதென்னவோ கோயில் என்று நினைத்திருந்தோம் அப்போது.

எங்கள் ஊரின் வைகையாற்றின் கரையோரமாகவே நீள நடந்தால் அரண்மனைப் புத்தூருக்கும் வைகைக்கும் இடையே ஒரு இடிந்து போன மாளிகை எச்சங்களையும் மிச்சங்களையும் பார்க்கலாம் இப்போதும் .அது ஆண்டி வேலப்ப நாயக்கர் மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது பழக்கப் பட்டுப் போன அவரது தாசி ஜனகதிற்கென ஜமீன் கட்டிக் கொடுத்த மாளிகையாம் .ஜனகமும் ஜாமீனும் இந்த மாளிகையில் வாழ்ந்திருந்தார்கலாம்.இங்கே வைத்து தான் ஜனகம் சுட்டுக் கொல்லப் பட்டாளாம். சுட்டது ஜமீனின் முதல் மனைவி எரசக்க நாயக்கனூர் ஜமீனின் இளவரசியின் சகோதர முறை உறவினர் என்றும் சொல்வார்கள்,அதைக் குறித்து விரிவாகத் தெரியவில்லை.

ஜமீன் ஆண்டி வேலைப்ப நாயக்கர் காலத்தில் தான் மாவூத்து வேலப்பர் கோயில் புனரமைக்கப் பட்டதாம். இதற்கு மிகப் பெரும் காரணமாக இருந்தவன் பளியன்.அதெல்லாம் பளியன் சித்தன் ஆண்டி வேலப்ப நாயக்கரின் ஆப்த நண்பனாக இருந்த காலம்.அதற்கு பின் காலங்கள் மாறின சித்தன் எதிரியானான். கொலையும் செய்யப் பட்டான். என்பது ஜாமீன் கதை.


மாவூத்து வேலப்பர் கோயிலைப் பற்றிச் சொல்ல வேண்டும் இங்கே .கோயிலுக்கு அடியில் உள்ள மலைபாறையின் ஊடே பல குகைகள் குடையப் பட்டுள்ளன,இங்கு தான் பளியர்கள் வாழ்ந்து வந்தார்களாம்.

மேலும் நேற்று டி.வி நிகழ்ச்சியில் கூட சொன்னார்கள் இந்த மலைக் குகைகளில் கற்காலத்தில் கூட மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளனவாம். சுற்றிலும் அடர்ந்த மரங்கள் சூழ மெல்லிய சுனை நீர சப்தத்துடன் வேலப்பர்(முருகர்) கோயில் கொண்டுள்ளார் மலை மீது. கிழக்குச் சீமையிலே ,கும்மி பாட்டு போன்ற படங்களில் எல்லாம் இந்த வேலப்பர் கோயிலை காட்டுவார்கள். மிக அருமையான டூரிஸ்ட் ஸ்பாட். சுனையில் இருந்து கசியும் நீர் மலையிலிருந்து கீழாக வழிந்து ஓடையாக விரிந்து கீழே பரவுகின்றது. இந்த சிற்றாறு எங்கே போகிறதோ தெரியவில்லை.

விடுமுறை நாட்களில் சாப்பாடு கட்டிக் கொண்டு உறவினர்கள் அல்லது நண்பர்களை அழைத்துக் கொண்டு போய் கொண்டாடிக் கழிக்க உகந்த இடம் இந்த மலைக் கோயில்.ஆண்டிபட்டியில் இருந்து ஒரு மணி நேரப் பயணம் என்று நினைக்கிறேன்.

சுனைத் தண்ணீர் கிறிஸ்டல் கிளியர் தூய்மையில் தலை வழியே வழிந்தோட சுனை மடுவில் இறங்கி நின்று குளிப்பது சொர்கானுபவம்.தனியே நின்று குளிக்க இயலாது பாசி பிடித்துப் போன மடு காலை வாரி விடலாம். கூட்டமாக ஒருவரோடு ஒருவர் கைகளைப் பிணைத்துக் கொண்டு மடுவில் இறங்கி குளிக்கலாம்.

குளித்து மேலேறினால் பளீர் வெளியில் முகமும் உடலும் பிரகாசிக்கும் மலை வெயிலுக்கு தங்க நிறம் கொள்ளும் உடல்கள். பசி வயிற்றைக் கிள்ளும் .

ஹாட் பாகில் சூடான பதார்த்தங்கள் கொண்டு போய் விடுவது உத்தமம். குளித்து முடித்ததும் பசி அத்தியைப் பிடிக்க சாப்பாடு கொண்டா கொண்டா என உள்ளே போகும்.

மாலை மங்கும் முன்பு சாவதானமாக வீடு திரும்பலாம் .

மலையும்,மடுவும்,சுனைக் குளியலுமாக ,மறக்க முடியாத பயணமாக இருக்கும்.

சொல்ல மறந்தது ...

நேற்று மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அண்ணாமலை சீரியல் புகழ் சூதாடிச் சித்தன் கார்த்திகேயன் தான்.

அவரே ஒரு சித்தர் களையில் தான் இருந்தார் .மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி