Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, January 10, 2011

ஜிப்ஸிகளும் நரிக்குறவர்களும் காணாமல் போன இந்திய வரலாற்றுப் பக்கங்களும் :


மேட்டிமை மிக்க தேவடியா மகனே :

( கவிதை -இயான் ஹான்குக் -ஜிப்ஸி வரலாற்று ஆய்வாளர் (இங்கிலாந்து)

சீருடையுடனும் உறைந்த புன்னையுடனுமிருக்கும்
மேட்டிமை மிக்க தேவடியா மகனே,
உனது அன்னை எப்படி இருக்கிறாள் ?
எனது அன்னையை
நான் நீண்ட நாட்களாகப் பார்க்கவில்லை

இரண்டாவது அபிப்ராயத்துக்கு இடமில்லையா?
இன்னொருமுறை சொல்
உனது பெருமைக்குரிய கனடாவுக்கு
நான்
பொருத்தமில்லை எனச் சொல்கிறாயா ?

எம்மைப் போன்ற குடிஎற்றதாரர்கள்
பொருத்தமில்லை என்கிறாயா?
சட்டத்திற்கு ஒப்ப அழுத்தமான வார்த்தைகளில்
நான்
குடியேற்றத்திற்கு பொருத்தமில்லை என்கிறாயா?
பரவாயில்லை .

இந்த நரகலை நாங்கள்
உம்மைப் போன்றவர்களிடமிருந்து
எமது வாழ்வு முழுக்க கேட்டு வருகிறோம் .

சிறை அதிகாரிகள்குடியேற்ற அதிகாரிகள்போலீஸ்காரர்கள்.
முகங்கலில்லை எமக்கு சப்தமற்ற ஒன்றரைக்கோடி தொண்டைக்குழிகள் உங்களது தகப்பன் களாலும் உங்களது குழந்தைகளாலும்
பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள்
விரட்டப்பட்டு வருகிறோம்

நீ உருவாக்கி வைத்திருக்கிற எமது உணர்வுகளை
கற்பனையிலேனும் நீ நினைத்துப் பார்த்ததுண்டா ?

என்னை மன்னித்து விடு

உன்னைப் போலவே நடந்து கொள்வதற்கு
என்னை முயற்சி செய்ய விடு
என்னை உள்ளே விடு
என் தந்தையை நான் தழுவிக் கொள்கிறேன் .


அப்புறம் நான் இப்படி மோசமாக நடந்து கொள்ள மாட்டேன்.
//அப்புறம் நான் இப்படி மோசமாக நடந்து கொள்ள மாட்டேன்//
உலகெங்கும் நாடற்றவர்களாக அலைந்து திரியும் ஜிப்ஸிகளின் துயரம் சொல்ல இந்தக் கவிதை ஒன்று போதாதோ?

இந்த அப்புறம் என்ற சொல் இங்கே மிக வலிக்கச் செய்கிறது. யமுனா ராஜேந்திரனின் "ஜிப்சியின் துயர நடனம் " புத்தகத்தில் இருந்த ஒரு கவிதை இது .அவர் ஜிப்ஸிகள் இந்திய பூர்வ குடிகள் என ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார்.

ஈழத் தமிழர்களும் இந்திய பூர்வ குடிகள் தான்.நாம் இந்தியர்கள் என்று ஒருமித்த நோக்கில் கண்டால் மட்டுமே. அவர்கள் தமிழகப் பூர்விக மக்கள் என சுருக்கப் பட்டு விட்டார்கள்,அதனால் ஈழத் தமிழனுக்கு என்ன ஆனாலும் வடக்கில் கவனம் பெறத் தக்க வகையில் எந்த எதிர்ப்பும் எழ வகையற்றுப் போனது,போலவே வட கிழக்கில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு என்ன ஆனாலும் தெற்கே நமக்கும் போதிய அக்கறையின்றிப் போயிற்று.

ஜிப்ஸிகளின் துயரக்கதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது ,பக்கத்து மாநிலத்தில் நடப்பதைக் கூட வேடிக்கை பார்க்கும் பாவனை மட்டுமே காட்டக் கூடும் அண்டை மனித சமுதாயம் நாம் எங்கிருந்து பூர்வ குடிகளைத் தேடி கண்டெடுத்து போஜித்து காபந்து செய்யப் போகிறோம்!!! ஆனால் இங்கே ஜிப்ஸிகளின் துயரக் கதைகளை வாசிக்க நேர்கையில் பதிந்து வைக்க இயலாமல் போன பழங்குடி வம்சங்கள் குறித்த கையாலாகக் கோபங்கள் எழுகின்றன.

இந்தியாவில் ஆரிய ஊடுருவலை அறிந்து கொள்ள ரிக்.யஜூர்,சாம,அதர்வணம் எனும் நான்கு வேதங்கள் இருக்கின்றன. இராமாயண மகாபாரதக் கதைகள் இருக்கின்றன. திராவிட நாகரிகம் பற்றி அறிய சிந்து வெளி,ஹரப்பா மொகஞ்சதாரோ அகழ்வாராய்வுகள் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா எனும் நிலப் பரப்பில் ஆரியர்களுக்கு முன்பிருந்தவர்கள் யார்? அவர்கள் என்ன ஆனார்கள்?

பாண்டவர்கள் சரஸ்வதி நதிப் படுகைகளில் அலைந்து திரிந்த காலங்களில் அவர்களுக்கு மிக வலப்பமானதொரு நாகரிகம் இருந்திருந்தது நிஜமென்றால் அவர்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்தவர்கள் யார்?

பாண்டவர்கள் என்றதும் மகாபாரதக் கதைக்குத் தாவாமல் பாண்டவர்களை ஒரு பழங்குடி இனத் தலைவர்கள் அல்லது வாரிசுகள் என மட்டுமே கொண்டு அவர்கள் தங்களுக்குள் இட்டுக் கொண்ட உட்போரைப் புறம் தள்ளி அவர்கள் யாரிடம் வென்று பெற்ற பகுதி ஹஸ்தினாபுரம் என்று எந்த வரலாறும் எழுதி வைக்கப் படவில்லையா?

சாந்தனு மச்ச கன்னியான மீனவப் பெண்ணை மணந்து அதில் விரிந்த குலம் தானே திருதராஷ்ட்டிரன் பாண்டு உள்ளிட்ட குரு குலம்.சாந்தனுவுக்கு முந்தைய மகாபாரதக் கதை என்ன?!

காண்டவாக் காடுகளை அழித்து பழைய டெல்லியை (இந்திர பிரஸ்தம்) உருவாக்கினார்கள் பாண்டவர்கள் எனில் இந்தியா முழுக்க காடுகளே நிறைந்திருந்தனவா ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பொழுதில்?! காடு திருத்தி நாடாக்கியதில் பூர்வ பழங்குடிகளுக்கு பங்கேதும் இல்லையா? மிகப் பெரும் புதிர்கள் இவை .இந்தப் புதிர்களை அவிழ்க்கத்தான் புத்தகங்கள் தேட வேண்டும்.யாருக்கேனும் தெரிந்தால் அவசியம் இங்கே இந்தப் பதிவை வாசிக்க நேர்ந்தால் தெரிவியுங்கள் .

நிற்க

ஜிப்சிகளுக்கு வருவோம் ,பதினோராம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படையெடுப்பை முறியடிக்க நினைத்த ஆரியர்கள் தங்கள் ஆரிய வீரர்களுடன் இந்திய பூர்வ பழங்குடிகளான லோகர்கள்,குஜ்ஜர்கள்,தண்டாக்கள் உள்ளிட்ட ராஜபுத்திரர்களை தம் சத்ரிய படை வீரர்களுடன் கலந்து போர் முனைக்கு அனுப்பினர். இந்த வகையில் இந்த பழங்குடிகள் பல ஒன்றிணைந்து தான் ஜிப்சிக்கள் எனும் தனியானதொரு பிரிவு தோன்றி இருக்கிறது என்கிறார் இந்நூலாசிரியர்.

ஜிப்சி என்ற சொல்லுக்கு (சிறிய எகிப்தியர்கள்) என்று பொருளாம். உண்மையில் ஜிப்ஸிகள் இந்தியாவின் பஞ்சாப் மாகாணப் பிரதேசங்களில் இருந்து இஸ்லாமியர்களுடன் ஆனா போர் காரணமாக உலகின் பல பாகங்களிலும் சிதறிய ஒரு கூட்டமாக இருந்த போதிலும் ஐரோப்பியர்கள் அவர்களை எகிப்தில் இருந்து வந்த கறுப்பின மக்கள் என்று கருதியதால் வந்த பெயர் தான் "ஜிப்ஸி(சிறிய எகிப்தியர்கள்) .

ஜிப்சிகளுக்கு நிகராக தமிழ் நாட்டில் நரிக்குறவர்களைக் கூறுகிறார்கள் .அவர்களது அடர்த்தியான நிறங்களால் ஆன உடைகள்,நாடோடி வாழ்க்கை முறை,குல கட்டுப்பாடுகள் போன்ற காரணிகள் அதை உறுதி செய்கிறது .

நரிகுறவர்கள் தேர்தல் காலம் தவிர்த்து தேடப் படக் காணோம்,அவர்கள் வழக்கப் படி ஊசி பாசி மணிகளை விற்றுக் கொண்டும் கொக்கு குருவி சுட்டுக் கொண்டும் திரிவதை கிராமங்களில் இப்போதும் பார்க்கலாம். அவர்களுக்கென தொகுப்பு வீடுகள் கட்டப் பட்டுள்ளன என்கிறார்கள் ,அந்த வீடுகள் மருவி சமூக விரோதக் கும்பல்களின் சரனாலயங்கலாகித் தான் போகின்றன ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் .

செங்கல்கள் தூர்ந்த சிமென்ட் பூச்சற்ற சில டப்பா கட்டிடத் தொகுப்புகளை ஊர்களின் ஒதுக்குப் புறங்களில் பேருந்துகளில் கடக்கும் போதெலாம் இந்த வீடுகள் யார்க்காக கட்டப் பட்டவை என்ற குழப்பமே ே மிஞ்சுகிறது,யாருடைய மேம்பாட்டுக்காகவோ என்று!!!

பி.சி,எம்.பி.சி ,எஸ்.சி ,எஸ்.டி , என்று எந்தப் பிரிவிலும் சேர்க்க முடியாதா நரிக்குறவர்களை?

நிஜத்தில் அவர்களுக்கென விண்ணப்ப படிவங்களை நிரப்ப என்ன செய்வார்கள் நரிக்குறவர்கள்?

ரேசன் கார்டுகள்ஒட்டுரிமைக்கான அடையாள அட்டைகள்

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அனுபவிக்க ,

108 அவசர சேவையை அனுபவிக்க

மேற்சொன்ன அட்டைகளை சமர்பிக்கச் சொல்கிறார்களே எந்த அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தாலும் இவைகளை நரிக்குறவர்களுக்கு வழங்கி முடித்து விட்டார்களா?ஒட்டு மொத்த தமிழக மக்கள் thogaiyil நரிக்குறவர்கள் எத்தனை சதவிகிதம் பேர்?

ஜிப்சிகளைப் பற்றிப் படிக்கப் படிக்க இந்த மாதிரி அனாவசியக் கேள்விகள் எல்லாம் எழுவதை தவிர்க்க முடியாது யாரானாலும்.

எந்த மாதிரியான ஒரு எருமை மாட்டு நிம்மதியில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம்?!

தலை வழியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது வாஸ்தவமே . நரிக்குறவர்களுக்காக ,ஜிப்சிக்களுக்காகப் போராட வேண்டாம் .
ஈழத் தமிழனுக்காக உண்ணா விரதம் இருந்து நமது எதிர்ப்பை பிரகடனம் செய்ய வேண்டாம்.

அவர்களை சக மனிதர்களாக உணர்வதில் என்ன அசூயை ?

முன்னேறிய சமுதாயத்திடம் தாக்குப்ப் இடிக்க இயலாமல் பின் தங்கிப் போனாலும் பரவாயில்லை என காடுகளில் தங்கி விட்ட பழங்குடிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடித் தேடித் போய் விடாது தொல்லை கொடுத்தால் தீவிரவாதிகள் உருவாகாமல் என்ன செய்வார்கள்?!
அடக்கப் பட்ட மக்களே தீவிரவாதிகள் ஆக்கப் படுகிறார்கள்.

வரலாற்றை எடுத்துக் கொண்டால் உலோகம்,மின்சாரம் இதைத் தேடித் புறப்படுகையில் தான் பெரும் பெரும் போர்கள் வெடிப்பதாகக் காண முடிகிறது

இதற்கு யுகக் கணக்குகள் அனாவசியம் .

இப்போதும் தண்டகாரண்யத்தில் கொட்டிக் கிடக்கும் பாக்சைடுக்காக அங்கிருக்கும் பூர்விக பழங்குடி மக்கள் இந்திய அரசால் வேறிடம் செல்லுமாறு அச்சுறுத்தப் படுகிறார்கள்.

வலிந்தவர்களின் தேவைகள் எப்போதும் எளியவர்களை விரட்டி அடித்து அபகரிக்கும் குணத்தை வளர்க்கிறது.அன்றைக்கு அரசர்கள் செய்தார்கள் ,இன்றைக்கு ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். வித்யாசம் எதுவுமில்லை.

நாம் நமது காட்டுமிராண்டித் தனத்தை நவீன ஆடைகள்,அலங்காரங்களால் புது மோஸ்தரில் காட்டப் பழகி விட்டோம்.
இந்த நாட்டில் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு இன்னொரு நீதி உண்டு ஒரே நீதி.

வாழத் தெரிந்தவன் -வாழத் தெரியாதவன் .

இதற்குள் சுருங்கிப் போகிறது எல்லாமும். மனசாட்சிகள்,ராஜ தந்திரங்கள், நடுவர்கள் , தரகர்கள், நண்பர்கள் ,எதிரிகள் ,எல்லோரும் இதற்குள் அடங்கி விடுகிறார்கள்.

இது கட்டுரை அல்ல . மேய்ந்த புத்தகங்களின் செரிமானம் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

Friday, June 18, 2010

தண்டகாரண்யமும் ராவண நீதிகளும் :



ராவணன் பட விமர்சனம் படிக்க கிடைத்தது.அதை ராமாயணக் கதை என்கிறார்கள்.

சென்ற வார விகடனில் அருந்ததி ராயின் பேட்டி , தண்டகாரண்யம் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் அவரை இந்திய அரசு மாவோயிஸ்ட் என முத்திரை குத்தும் அபாயம் இருக்கிறதாம்!வாசித்தவுடன் மிக்க வருத்தமாக இருந்தது.

தண்டகாரண்யம் வனப் பகுதி ராமாயணத்தோடு தொடர்புடையது ,இந்த வனத்தில் வைத்து தான் மாயமானுக்கு மயங்கிய சீதையை ராவணன் லங்கைக்கு கடத்திக் கொண்டு போகிறான் என்பது ராமாயணக் கதை.இதிகாசம் உண்மையோ கற்பனையோ! ஆனால் 10 சதவீத உண்மையில் 90 சதவீத கற்பனை கலக்கப் பட்டிருக்க கூடுமே தவிர முற்றிலும் கற்பனை என்று சொல்ல வாய்ப்பில்லை .ஆரிய திராவிட ஆதிக்க சண்டையின் வரலாற்று தடயங்கள் தான் ராமாயணமும் மகாபாரதமும் என்பதாக நேரு தமது "டிஸ்கவரி ஆப் இந்தியாவில்" இந்திராவுக்கு கூறுகிறார்.

இப்போது அருந்ததி ராய்க்கு வருவோம்,

ஆந்திரா,ஒரிஸ்ஸா எல்லைப்பகுதியில் உள்ள மிகப் பரந்த வனப்பகுதி இந்த தண்டகாரண்யம்,இங்கிருக்கும் பழங்குடிகள் இந்தியா தனி நாடாக உருவாகும் முன்பே இங்கே வாழ்ந்தவர்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ள நிலையில் அந்த பூமி அவர்களுக்கு உரிமையானது ; அந்த மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக போராடுகிறார்கள்.அவர்களது போராட்டத்தை மாவோயிஸ்டுகள் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள்,ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்திட்ட சிங்கள அரசாங்கம் போலத் தான் இப்போது இந்திய அரசு தன் சொந்த நாட்டு பழங்குடி இன மக்களை அந்த வனங்களில் இருந்து அப்புறப் படுத்த "சலுவா ஜூடும்" என்ற பெயரில் கூலிப் படைகளை அமர்த்தி உள்ளதாம் .

அத்தனைக்கும் காரணம் பணம். அந்தப் பணத்தை கொள்ளை கொள்ளையாய் கொட்டித் தர தண்டகாரண்யம் காடுகளில் கொட்டிக் கிடக்கும் பாக்சைட் தாதுக்கள் ,அலுமினியத்தில் இருந்து பிரித்தெடுக்கப் படும் இந்த பாக்சைட் தாதுக்கள் விமான தயாரிப்பில் முக்கிய மூலப் பொருட்கள்.இந்த பாக்சைட் தாதுக்களை தண்டகாரண்யத்தில் இருந்து வெட்டி எடுக்க உலக பணக்கார நிறுவனங்கள் அனைத்தும் இந்திய அரசிடம் ஒப்பந்தம் போட்டிருக்கின்றதாம்.அப்படி ஒப்பந்தம் போட்டிருப்பதால் அந்த வனப் பகுதியில் காலம் காலமாய் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை இருந்த சுவடே தெரியாமல் அங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டும்,இல்லையேல் உரிமை பிரச்சினை கோரிக் கொண்டு காலத்துக்கும் அங்கே தமது தொழிற்சாலைகளை நிறுவப் போகும் அந்நிய மற்றும் உள்நாட்டு பணக்கார நிறுவனங்களுக்கு அந்த மக்கள் தொடர்ந்து பிரச்சினை தரும் அபாயம் இருக்கிறது என அரசு நினைக்கிறது.

அதிகார வர்கத்தின் ஆணவ ஆட்டத்தில் உலகெங்கும் இப்படி எளிய மக்கள் பலியாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள் இதைப் பற்றி மேலும் பேசத் தேவை இல்லை.பேசி ஒன்றும் ஆகப் போவதும் இல்லை. நான் சொல்ல வந்தது வேறு .

ராமாயணக் கதைக்கு வருவோம் இப்போது;

ராவணனை ஏன் நல்லவன் என்று ஒப்புக் கொள்ளக் கூடாது நாம் ?! அவனது ஆளுகையின் கீழ் வரும் தண்டகாரண்யம் வனத்தில் அன்னியனான ராமனின் நுழைவு அவனை அச்சம் கொள்ள வைத்திருக்கலாம்,அதன் அடிப்படையில் அவன் ராமனை அச்சுறுத்த சீதையை கவர்ந்து சென்றிருக்கலாம்.இதை வால்மீகி தன் அரசனை உத்தமனாகக் காட்ட வேண்டி சூர்பனகை மாயமான் எனும் பின் இணைப்புகளால் சுவாரஸ்யமான கதையாக்கி ராவணன் தான் கெட்டவன் என்பதாய் சித்தரித்திருக்கவும் கூடும். இப்படி ஒரு கோணமும் உண்டெனக் கொள்ளலாம்.

"ராவணன் " படம் மூலம் மணிரத்னம் அப்படி ஒரு கோணத்தில் சிந்திக்க வைத்திருப்பது நிஜம் .இந்தப் படம் மட்டுமல்ல " கோஷம்பியின் "பண்டைய இந்தியா" புத்தகம் இதற்கு மிகச் சிறப்பான வரலாற்று ஆதாரம்.

அப்படி ராவணன் தனது எல்லையில் அந்நிய ஊடுருவலை எதிர்த்தது அதற்காகப் போராடியது நியாயம் எனில் ராம ராவண யுத்தத்தில் எவர் பக்கம் நியாயம்? பெண்ணைக் கவர்ந்ததால் ராவணன் கெட்டவன் என்றால் இன்றைக்கு லட்சக் கணக்கில் எங்கெல்லாம் அரசின் நியாயமற்ற அதிகாரத்துக்கு எல்லைப்புற மக்கள் பணிய மறுக்கிறார்களோ அங்கெல்லாம் ராணுவமும் ,காவல்துறையும் விசாரணை என்ற பெயரில் பெண்களை மானபங்கம் செய்து வல்லுறவில் சிதைக்கிறதே இதெல்லாம் நியாயம் ஆகுமா?சீதை என்ற புனித பிம்பத்தை கவர்ந்து சென்றதால் மட்டுமே ராவணன் கெட்டவனாக்கப் பட்டான் என்றால் ;

வீரப்பவதத்தில் சத்யமங்கல வனப் பகுதிகளில் பழங்குடிப் பெண்களுக்கு நிகழ்த்தப் பட்ட சொல்லக் கூசும் பல கொடுமைகளைச் செய்தவர்களான கர்நாடக வனத்துறை போலீசாரும் தமிழக வனத்துறை போலீசாரும் நல்லவர்களா? வீரப்பன் கொள்ளப் பட்டதால் அவர்கள் செய்தது எல்லாமே நியாயம் என்றாகுமா? அந்தப் பழங்குடிப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கும் அநியாயங்களுக்கும் விசாரணை இல்லை.விசாரணை இல்லாததை விட அவர்களுக்கெல்லாம் அரசு செலவில் பதக்கம் என்ன,பட்டயங்கள் என்ன ,வீட்டு மனைகள் என்ன!?அப்படியானால் எது நியாயம்! அந்தப் பெண்கள் சீதைகளாய் பிறவாமல் போனது தான் அவர்களது குற்றமா? ஒரு பெண்ணுக்கு இழைக்கப் படும் அநீதி அவள் சீதை எனும் பட்சத்தில் தான் உலகின் கண்களில் நியாயப் படுத்தப் படுமா?

ஈழத்தில் நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்கு சற்றும் சளைத்தவை அல்ல சத்யமங்கல வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் ,இப்போது தண்டகாரண்யம் வனங்களில் தமது உணவுக்கும் உறைவிடத்துக்கும் போராடும் பழங்குடி இன மக்களுக்கும் நிகழ்த்தப் பட்டிருக்கும் கொடுமைகள்.இந்த மக்கள் தமது உரிமைக்காக போராடுவது எப்படி தீவிரவாதமாகும் ?! அதெப்படி அரசு விரோத செயலாகும்!

உலகின் பணக்கார நிறுவனங்கள் பாக்சைடுக்காக இந்திய அரசிடம் இருந்து தண்டகாரன்யத்தை விலை பேசி கூறு போட்டுக் கொள்ளப் போகின்றன.அந்நிய முதலீடுகள் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தலாம்,மக்களாட்சியில் பொருளாதாரம் யாருக்காக வலுப்படுத்தப் பட வேண்டும் மக்களுக்காகத் தானே ? அந்தப் பழங்குடி மக்களும் இந்தியர்கள் தானே,இந்தியாவுக்குள் தானே இருக்கிறார்கள் ?அதிகமாய் எதிர்ப்பு காட்டினால் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தப் படும் அபாயம் இருக்கையில் அவர்கள் எந்த வழியில் தான் தமது எதிர்ப்பை காண்பிக்க முடியும்? தனது செயல்களே சரியானவை மக்கள் அதை மீறினால் அடக்கி ஒடுக்கப் பட வேண்டியவர்கள் எனும் ரீதியில் நடத்தப் படும் ஆட்சி எப்படி மக்களாட்சியாகும்?

அப்படியானால் இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா ?

தொழிலதிபர்களுக்கும் ,அந்நிய நாட்டு அதிபர்களுக்கும் தான் இந்த அரசு செவி சாய்க்கும் என்றால் அப்படி ஒரு அரசு தன்னை சர்வாதிகார அரசு என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டால் என்ன?

உண்மையில் மக்களுக்காக என்ற பெயரில் இங்கே அரசியல் செல்வாக்குள்ள தொழிலதிபர்கள் தான் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு சிலர் தான் இந்தியாவை கட்டி ஆள்கிறார்கள் என்றால்,இங்கே இருப்பது மக்களாட்சி அல்ல.

மன்னராட்சியின் நவீன வடிவமே இது.

Wednesday, May 19, 2010

பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அலட்சியப் படுத்துவது தான் மத நம்பிக்கையா?

இந்து மத நம்பிக்கைகளுக்கும் அறிவியலுக்கும் இருக்கும் தொடர்பு அல்லது தொடர்பற்ற நிலை குறித்து சென்னை பிர்லா பிளானெட்டோரியத்தில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறதாம்.இந்த பயிற்சி முகாமை உடனடியாக நிறுத்தக் கூறி பி.ஜே.பி தமிழக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணனும் இந்து முன்னணி ராமகோபாலனும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

இந்த பயிற்சி முகாம் இந்து மதத்தின் பாரம்பர்ய நம்பிக்கைகள் மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்சி எனவும் இப்படி ஒரு பயிற்சி முகாமை நடத்துவதில் அரசியல் ரீதியான காரணங்கள் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர்கள் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

கீழே உள்ள அறிவிப்பைப் பாருங்கள் ;

சென்னை, மே 7_ சென்னை பிர்லா கோள-ரங்கத்தில் உள்ள அறி-வியல் தொழில்நுட்ப மய்யத்தில் பல்வேறு பயிற்சிகளும், தொழில்-நுட்ப நிகழ்ச்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மே 15ஆ-ம் தேதி நடைபெற உள்ள ஒரு நாள் பயிற்சியில் நவீன தொலைநோக்கிகளைக் கொண்டு, விண்வெ-ளியைக் கண்காணித்தல், 3டி அறிவியல் காட்சிகள், சூரிய ஒளிக்கதிர்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடத்-தப்பட உள்ளன. இதில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் பங்கேற்-கலாம். முதலில் வருபவர்-களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், 50 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்படுவர். மே 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை மூன்று நாள் கோடைகால முகாம் நடத்தப்படுகிறது. சூரிய ஒளிக்கதிர் முறை, சந்திரன் குறித்த ஆய்வு-கள், நட்சத்திரங்களின் பிறப்பு, அண்டைவெளி, தொலைநோக்கு கருவிகள் ஆகியவை குறித்த விவ-ரங்கள் கற்றுத் தரப்படும். இதில் 7, 8 மற்றும் 9ஆ-ம் வகுப்பு மாணவ, மாண-விகள் பங்கேற்கலாம்.மே 20ஆ-ம் தேதி முதல் 28ஆ-ம் தேதி வரை ஓவியம் மற்றும் களிமண் சிற்பங்-கள் செய்வது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் 8-ஆம் வகுப்பு முதல் 11ஆ-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி-களில் பங்கேற்க விரும்பு-பவர்கள் 044_24410025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு-கொண்டு, பதிவு செய்து-கொள்ள வேண்டும்.

பயிற்சி முகாம் பற்றிய இந்த அறிவிப்பில் எங்கேயாவது இந்து மதத்தின் நம்பிக்கைகள் குறித்தான அவதூறுகளைக் காண முடிகின்றதா? நட்சத்திரங்களை ,வான மண்டலத்தைப் பற்றிப் படிப்பதோ தெரிந்து கொள்வதோ எப்படி இந்து மத நம்பிக்கைகளில் சேற்றை வாரி இறைப்பதாக இருக்க முடியும்?! இந்து மதத்தைப் பற்றியோ அதன் கடவுள்களைப் பற்றியோ இந்த அறிவிப்பில் எதுவும் தவறாக இல்லை. பிறகெதற்கு இந்தப் பயிற்சி முகாமை உடனடியாக நிறுத்தச் சொல்லி இவர்கள் இருவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்?

தமிழக அரசியல் வாதிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் எங்கு?...எதற்கு ?... எப்படி? எதிர்ப்பு தெரிவிப்பது என்பதில் பயங்கரக் குழப்பம் நிலவி வருவது புரிந்திருக்க வேண்டுமே!!!

மாணவர்கள் அறிவியல் அறிவைப் பெறுவதால் அவர்கள் சார்ந்துள்ள இந்து மதத்தின் மீதான நம்பிக்கை குலையும் என எப்படி இவர்கள் இருவராக முடிவு செய்து கொண்டார்கள்.இப்படியே போனால் வானியல் என்றொரு பாடமே இருக்கக் கூடாது என்று கூட சொல்லக் கூடும் நாளடைவில்.வான மண்டலம்..நட்சத்திரம் ....அண்ட வெளியில் சிதறிப் பரவியுள்ள எண்ணற்ற கோள்களைப் பற்றிய விரிவான விளக்கங்கள் இவைகளை எல்லாம் பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாக இதைக் கருதுவதால் இவர்களுக்கு என்ன நஷ்டம்?

சூரியனை பாம்பு விழுங்குவது சூரிய கிரகணம் என்றும்,சந்திரனை பாம்பு விழுங்கினால் அது சந்திர கிரகணம் என்றும் இனி வரும் தலைமுறைகளும் நம்ப வேண்டுமா? சந்திரன் (நிலா) இந்த நட்சத்திரத்தின் மனைவி ரோஹிணி எனும் நட்சத்திரமாம் சந்திரன் ரோஹிணியோடு இருக்கும் காலங்கள் வளர்பிறை என்றும் ரோகினியை விடுத்து இன்னொரு மனைவி(பெயர் தெரியவில்லை) யோடு இருக்கும் காலங்கள் தேய்பிறை என்றும் தான் எப்போதும் நம்பிக் கொண்டிருக்க வேண்டுமா?

மத நம்பிக்கைகள் என்ற பெயரில் எதையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளும் மடத்தனம் இன்னும் எத்தனை காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள்,இதெல்லாம் மதத்தின் பெயரால் ஏமாற்று வேலைகள் ஆகாதா?

முதலில் திரைப்படங்களுக்கு இப்படித்தான் பெயர் வைக்க வேண்டும் ...இப்படி எல்லாம் பெயர் வைக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்,அப்புறம் இரவு எட்டு மணிக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட வேண்டும் என்று ஒரு கட்சி கண்டித்தது...இப்போது மாணவர்களுக்கு நடத்தப் படும் பயிற்சி வகுப்புகளில் கை வைத்திருக்கிறார்கள்.

யார் எதைப் படித்தால் இவர்களுக்கென்ன ? பள்ளி மாணவர்கள் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும் எதை கற்றுக் கொள்ளக் கூடாது என்பதை அவரவர் பெற்றோர்களும் அந்தந்த மாணவர்களும் அல்லவா முடிவு செய்து கொள்ள வேண்டும்.இவர்கள் யார் நடுவில் கருத்துச் சொல்ல!குட்டையைக் குழப்புவதில் மீன் கிடைக்குமா ?

கட்சிகளும் மதங்களும் அவரவர்களுக்குரிய இடங்களை விட்டு விட்டு சுய சார்புடைய சுயமாய் சிந்திக்க கற்றுத் தரப் படும் சில விசயங்களில் மூக்கை நுழைப்பானேன்.

Tuesday, February 10, 2009

ஒற்றை நிலா யாருக்குச் சொந்தம்?

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் "உலகம்" இன்று ஒரு "குளோபல் வில்லேஜ் "உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏதோ நடக்கிறது ...நாம் இங்கே பாதுகாப்பாகத் தான் இருக்கிறோம் ,என்ற உணர்வு சாகடிக்கப் பட்டு நெடு நாட்கள் ஆகின்றன.எங்கே எது நடந்தாலும் அது மற்றவர்களை பாதிக்கவே செய்கிறது .வாழ்வின் மேடு பள்ளங்களை...அபாயக் குழிகளை ...தடுக்கி விழச் செய்யும் சமத்கார சூழ்ச்சிகளை ...ஸ்திரத் தன்மை நீடிக்காத மிக மிக லேசான "ம்" என்றால் உடைபடும் உறவுக்கோளங்களை முன்னெப்போதையும் விட இந்த நூற்றாண்டில் மனித இனம் மிக அருகாமையில் பல முறை தரிசிக்க வேண்டிய ஒரு சூழல் இன்று நிலவுவதென்னவோ வாஸ்தவமே!

அங்கே அமெரிக்காவில் என்ன நடந்தாலும் இங்கே இந்தியப் பொருளாதாரம் பாதிக்கிறது ,இலங்கையில் தமிழன் சித்திரவதை செய்யப் பட்டால் இங்கே"முத்துக் குமரன்கள் " தீக்குளிக்கிறார்கள். அதனால் தமிழர்கள் இலங்கையில் சுகப்பட்டார்களா ? என்றால் அது தான் இல்லை?! என்றும் போல் சுடப்பட்டுக் கொண்டே தான் சிதறிக் கொண்டிருக்கிறார்கள்.

சர்வ தேச அளவில் கவனம் கலைக்கவே தனது மரணம் என்று முத்துக் குமரன் எண்ணியிருந்தால் அவருக்காக வருந்துவதில் தவறே இல்லை.நிச்சயமாக உன் மரணத்திற்கு வேறு முலாம் பூசிப் பார்க்க இங்கே மட்டும் அல்ல எங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள் .உன் வீரமரணம் சீக்கிரமே வலுவிழந்து புறக்கணிக்கப் படலாம், எதுவும் இங்கே நிலைத்த ஆதரவைப் பெறுவதில்லை.காந்தியைக் கொன்ற கோட்சேவின் செயலுக்கும் நீதி தேடிய உலகம் இது!

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவனது செயல்பாட்டில் அது சரியோ தவறோ நிச்சயம் ஒரு நியாயம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் .கோணங்கள் இங்கே பல் கோணங்களாகி பல்கிப் பெருகி மூச்சு திணறச் செய்கின்றன பல வேளைகளில் !ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம் கடைசியில் வெற்று கூச்சல்கள் ...கலவரங்கள்...போராட்டங்கள்...போர்.இன்று இந்தியா ஒரு வன்முறை பூமியாக மற்றப் பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் வேர் விடத் துவங்கி விட்டது.

இலங்கையைப் போல இந்தியா "யுத்த பூமி ஆக வேண்டாம் .அமெரிக்காவைப் போல அல்ட்ரா மாடர்ன் ஆக வேண்டாம் .வளைகுடாக்களைப் போல தீப்பிடித்து எரிய வேண்டாம் ..சீனாவைப் போல மலிவு விலை சாம்ராஜ்ய ஏகபோகத்தில் திளைக்க வேண்டாம் .உலகில் எந்த நாட்டைப் போலவும் இந்தியா ஆக வேண்டிய அவஷியமும் இல்லை. இந்தியா இந்தியாவாகவே இருக்கட்டும்.

வல்ல பாய் படேல் பாடு பட்டு இரும்பு மனம் கொண்டு ஒன்றிணைத்த இந்தியா அப்படியே இருப்பதில் எந்த வித கெடுதலும் இருப்பதாகத் தெரியவில்லை.திபெத்தை தனதாக்கிக் கொண்ட சீனா இன்று அஸ்ஸாமை திபெத்தின் ஒரு பகுதி என்று கூறி இந்தியப் எல்லையை சுருக்க தன் மூளையில் குறுக்கு வழி தேடிக் கொண்டிருக்கிறதாம்.

பாகிஸ்தானுக்கோ "காஷ்மீரின் " மீது தீராத முரட்டுக் காதல்.ஆந்திராவில் தனித் தெலுங்கான கேட்டு போராட்டம்,இங்கே நினைவு கூறப் பட வேண்டிய விசயங்களில் மற்றுமொன்று உண்டு. திராவிட நாடு கோரிக்கையை " முன் வைத்துப் பிரபலமான திராவிடக் கட்சிகளின் கட்டுப் பாட்டில் தான் தமிழக அரசியல் இன்றும் சிக்கி நிற்கிறது.

அணைந்த கொள்ளி என்று ஆசுவாசம் தேவை இல்லை.கொள்ளிகள் கொழுத்தப் படலாம் ஆட்சி மாறி அதிகாரம் மாறும் ஒரே நாளில் ! கர்நாடகாவில் எதற்கெடுத்தாலும் தமிழர்களே பலியாடுகள்! எதற்காகவும் அவர்கள் தமிழர்களை துன்புறுத்த தயங்கியதே இல்லை...தண்ணீரிலிருந்து தரமான நடிகனின் தள்ளாத வயது சாவு வரை அவன் தட்டி...முட்டி அடக்குவது தங்கத் தமிழனையே.கர்நாடகாவில் வேறு மாநிலத்தவர் எவருமே இல்லையா?

இங்கே கேரளம் மட்டும் சும்மா இருந்து விட்டால் சுவாரஷ்யத்திற்கு பஞ்சமாகி விடாதோ?! அவர்கள் பங்கிற்கு "பெரியார் டேம் ...தமிழக ஆறுகளின் மணல் திருட்டுக்கு உடந்தை...இப்படி எதையோ அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.மகாராஷ்ட்ரா (மும்பை) பத்திரிகைகள் சித்தரிக்கும் மும்பை என் போன்ற நடுநிலை வாசிப்பாளர்களுக்கு "தாதாக்களின் உலகம் " என்ற பயங்கரக் கற்பனையையும் அதீதமான அச்சதையுமே உருவாக்கி இருக்கிறது இந்நாள் வரையிலும். அங்கே திரைத்துறையில் இருந்து ...வியாபர காந்தங்கள் வரையில் தாதாக்களுடன் சம்பந்தப் படுத்தியே பார்க்கப் படுகிறார்கள்.

அங்கே நிலைமை இப்படி என்றால் "காந்தி பிறந்த மண்ணிலோ " இந்துத்வா வெறி தலை வெறித்து ஆடுகிறது .யார் எதைப் பின்பற்றினால் யாருக்கென்ன ?

இந்து ...முஸ்லீம்...கிறிஸ்த்தவர்கள் ...ஜெயின்கள்...பார்சிகள்...பௌத்தர்கள் மாதங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே "எல்லோரும் மனிதர்கள் தானே" மதங்கள் வெறும் சட்டைகள் என்று படித்த ஞாபகம் வருகிறது.சட்டைகளை மாற்றிக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை ஒன்றும் கெட்டு விடப் போவதில்லை. இங்கே சட்டைகளுக்காக தோலை அல்லவா உரித்துக் கொண்டு உயிரோடு சாகத் துணிந்து விட்டார்கள்.

இருத்தலுக்காக இல்லாது போகத் துணியும் அசகாய சூரத் தனம் எங்கே கற்றார்களோ?! "எல்லாம் மூளைச் சலவை " "வேற்றுமையில் ஒற்றுமை " சொல்லக் கூசுகிறது தான். நாம் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோமா? ஏதோ இருக்கிறோம் என்று விட்டேற்றியாக சொல்லிக் கொண்டால் நலம்."நான்கு பசுக்களும் ஒரு சிங்கமும் "கதையைப் போல ""இந்தியாவை யாரும் துண்டாடி விடாமல் பாதுகாக்க என்ன செய்கிறது நடுவண் அரசு மற்றும் உள்ள 27 மாநில அரசுகள்?

மாநில அரசுகள் தங்களுக்குள் உள்ள வேலிச்சண்டைகளை தீர்க்க முன் வராவிட்டால் நடுவண் அரசு வெளிச்சண்டைகளில் எப்படி கவனம் செலுத்த முடியும்? இங்கே நாம் காவிரிக்காக சண்டை போட்டுக் கொள்ளும் போது அங்கே சீனாக் காரன் அஸ்ஸாமை லவட்டிக் கொண்டு போய் விட்டால் பிறகு அதற்க்கு இன்னொரு பொது சண்டை போட்டுக் கொள்வோம் இராணுவம், எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில் .

சுதந்திரம் என்ற பெயரில் "எல்லைக்கோடுகளில் அடைபட்டுக் கொண்டதென்னவோ" அதிகபட்ச புத்திசாலித் தனம் தான். "இது தான் சுதந்திரமா ?கேள்வி எழுப்புபவர் யாராயினும் "ஆமாம் ...இதுவே கட்டுப் பாட்டில் சுதந்திரம்...பாதுகாப்புக்கு முழு உத்திரவாதம் " என்று பட்டென்று பதில் சொல்லி வாயடைக்கலாம்.இப்படி கோடுகளில் அடைபட்டேனும் நிம்மதியாக வாழ விதித்திருக்கிறதே சில காலம் ! அதையும் கெடுத்துக் கொள்வதைப் போல அல்லவா இப்போது காரியங்கள் நிகழ்கின்றன...நிகழ்த்தப் பட்டுக் கொண்டு இருக்கின்றன.

"உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா" ரேஞ்சுக்கு தரம் தாழ்ந்து விடத்தான் போகிறோமா ஒருநாள்? இல்லாவிட்டால் அமெரிக்க அண்ணனைப் போல "வல்லரசாகி" தம்மினும் எளியாரை வாட்டி வதைக்கப் போகிறோமா?

மலேசியா மற்றும் தாய்லாந்தின் குப்பைக் கிடங்காக இருந்த சிங்கப்பூர் இன்று உலகின் மிகச் சுத்தமான நாடு .

மண் வளமே சிறிதும் அற்ற இஸ்ரேல் விவசாயத்தில் பல படி முறைகளை முயற்சித்து தனக்கான தன்னிறைவைப் பெற்று விட்டதென பத்திரிகைகள் பறை சாற்றுகின்றன.

நிலாவில் வீடு கட்ட மனை வாங்கி போட்டுக்கிறேன் என்று ஒரு ஆந்திர தொழிலதிபர் பெருமை அடித்துக் கொள்கிறார்.

நிலா (சந்திரன்) யாருக்குச் சொந்தம் என்ற சண்டையும் விரைவில் வரக் கூடும்! ஏனெனில் பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் தான் . வியாழனைப் போல 12 நிலாக்கள் இருப்பினும் சர்ச்சை எழும்பத்தான் செய்யும்.இந்த உலகத்தில் தான் ஆசியா...ஆப்பிரிக்கா,ஐரோப்பா,அமேரிக்கா,அட்லாண்டிக் என்று ஐந்து கண்டங்களும்.கண்டங்களில் பலபல தேசங்களும் விரவிச் சிதறி நிற்கின்றனவே!

ஒற்றை நிலா யாருக்குச் சொந்தம்? அடடா...இந்த மானிட சமுதாயம் சர்ச்சைகளில் இருந்தும் சண்டைகளில் இருந்தும் ...விடுபட்டு கடைத்தேற நிஜத்தில் ஒரு வழியும் இல்லை போலத் தான் தெரிகிறது .

தொடரும்... (நிச்சயம் தொடரும்..)