Monday, March 30, 2009

ஜவ்வு மிட்டாய்





அம்பையின் "காட்டில் ஒரு மான்" சிறுகதைத் தொகுப்பு வாசித்துக் கொண்டிருந்தேன் நேற்று மதியம்,அப்போது தான் சட்டென்று "ஜவ்வு மிட்டாய்" ஞாபகம் வந்தது.ஜவ்வு மிட்டாய்க்கும் நான் வாசித்த சிறுகதைக்கும் சம்பந்தம் ஏதுமில்லை சிறுகதை எனது சிறு வயது நினைவுகளைத் தட்டி எழுப்பியதில் ஜவ்வு மிட்டாய் கலர்...கலராய் மின்னி மறைந்தது எண்ணங்களின் ஓடையில் .

உலக்கை அளவுக்குப் பருமன் இல்லை ...அதற்காக வாக்கிங் ஸ்டிக் மாதிரி ரொம்ப ஒல்லியாகவும் இல்லாமல் ஒரு அளவான நீண்ட கழியில் மேற்பாகத்தில் வெண்ணிற தகர மூடியால் மூடப்பட்டு மிட்டாய் உள்ளே இருக்கும் அதை மிட்டாய்க் காரர் தனது இடது தோளில் சாற்றி வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வார். கூடவே கெரசின் ஊற்றப் பயன்படுத்தும் பெரிய சைஸ் புனல் போல ஒரு ஊதுகுழல் வேறு வைத்துக் கொண்டு அடிக்கொரு தரம் அதை ஊத்தி சத்தமெழுப்பி மிட்டாய் வாங்க ஊர்ப் பிள்ளைகளுக்கெல்லாம் அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பார்.

அவரது குழல் சத்தம் கேட்டதோ இல்லையோ என்னையொத்த என்னை விடப் பெரிய ..சிறிய பிள்ளைகள் எல்லோரும் அவரைச் சுற்றி குழுமி விடுவார்கள்.இந்த ஜவ்வு மிட்டாயின் ஸ்பெசலே அந்த மிட்டாய்க் காரர் செய்து தரும் டிசைன்களில் தானே இருக்கிறது .

கைக்கடிகாரம்,ரயில்,கார்,பஸ்,மூக்குக்கண்ணாடி,பாம்பு,மயில்,நெக்லஸ்,ப்ரேஸ்லெட்,இப்படி விதம் விதமான டிசைன்களில் சில அடிக்கும்v நிறங்களில் மிட்டாய் செய்து தருவார். நிறங்கள் பெரும்பாலும் சிறுவர்...சிறுமிகளை ஈர்க்கும் படியாகவே இருக்கும்.ரோஸ்...மஞ்சள்...வெளிர் நீலம்,சிவப்பு,பச்சை ,வெள்ளை இந்த நிறங்களில் தான் .பெரும்பாலும் மனதில் நிர்ப்பது ரோஸ் நிறம் தான்.

ஜவ்வு மிட்டாயின் இனிப்பு அதை சாப்பிட்டு முடித்த பின் வெகுநேரம் வரையிலும் கூட நாக்கின் அடியில் தித்திக்கும் பல நேரங்களில் ,இப்போதெல்லாம் கிராமங்களிலும் கூட ஜவ்வு மிட்டாய்க்காரர்களைக் காணோம்,அந்த மிட்டாய் சுகாதாரமானதா இல்லையா என்பதை எல்லாம் தாண்டி மிட்டாயின் நிறமும் அடர் இனிப்புச் சுவையும் மட்டும் இன்ன்னும் நீங்காமல் நினைவுகளோடு .


இப்படி இன்னும் பல நிறம் மாறா நிஜமான சந்தோசங்களை அள்ளித் தந்த பருவம் அது. சிறுமியாகவே இருக்கத்தான் முடியாது ஆனால் அந்த நேரத்து வாழ்வின் வர்ண ஜாலங்களை வருடங்கள் சில..பல கடந்த பின்னும் நினைத்துப் பார்ப்பதென்னவோ நல்ல அருங்கோடையில் கிராமத்து வீட்டின் வேப்பமர முன் தாழ்வாரத்தில் சிலீரென்று காற்று தாழ்ந்து பரவ சுகமாய் ஒரு சிறு தூரலில் நனைவதைப் போன்ற சிலீரென்ற அனுபவம் அது.

நீங்கள் சாப்பிட்டு ரசித்ததுண்டா கலர்...கலர்..ஜவ்வு மிட்டாய்களை ,அப்படியென்றால் எழுதுங்கள் உங்கள் இனிமையான சிறு பிராயத்து மலரும் நினைவுகளை பின்னூட்டங்களாக .