Thursday, April 2, 2009

ஏதாச்சும் செய்யணும் பாஸ் ...வெயில்ல இருந்து தப்பிக்க...

சுடச் சுட வெயில் காலம் கோலாகலமாய் ஆரம்பமாகி விட்டது ...மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் குளுகுளுப்பாய் ஜிலு..ஜிலுவென்று இருப்பார்கள்...மற்றவர்கள் என்ன செய்யலாம்? வீட்டில் A/C போட்டு குளுமை செய்யலாம் ...A/C முடியாதவர்கள் AIRCOOLER வைத்துக் கொண்டு ஐஸ் கட்டிகளைப் போட்டு வீட்டுக்குள் சுடும் காற்றை குளிர வைத்துக் கொள்ளலாம்.

இதில் ஒரு சிக்கல் என்னவெனில் மின்சாரத் தடை ...அடிக்கடி கரண்ட் காட்டாகும் போது நிறையப் பணமிருப்பவர்கள் பவர் ஜெனரேட்டர்கள் கொண்டு சமாளிப்பார்கள் ,அதை வாங்க வழியில்லாதவர்களும் இருப்பார்கள் அவர்களுக்கான எளிய தீர்வு வழிமுறைகள் இவை .


இன்னும் என்னென்ன செய்யலாம் ...?!


கீழே ஒரு பட்டியலிடலாம் ,வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம் ?முதல் வேலையாக வீட்டைப் பற்றி பார்ப்போம் ;

வீட்டைப் பேணுதல்

வீடுகள் என்று எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் இப்போது கான்கிரீட் வீடுகள் தான்...கிராமங்களில் ஓட்டு வீடுகளைக் காணலாம் ...குடிசைகளையும் காணலாம் .எந்த வகை வீடுகளாயினும் கடும் கோடையில் காற்று சூடாகி விடுவதால் மின்சாரம் தடைபடும் காலங்களில் பெருத்த அவஸ்தை தான் .மின்சாரம் இருந்தாலும் சரி ...இல்லாவிட்டாலும் சரி எந்த வகை வீடாயினும் அதைக் குளிர்வாக வைத்துக் கொள்ள சில உபாயங்களை செய்யலாம் ...புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது.எல்லோரும் வெயில் காலங்களில் பயன்படுத்தும் அதே முறை தான் ,

ஓட்டு வீடு

ஓட்டு வீடாக இருப்பின் தரை பெரும்பாலும் சிமென்ட் தளம் தான் ...சிமென்ட் தளத்தில் குளிர்ந்த தொட்டித் தண்ணீரையோ ...கிணற்று நீரையோ தாராளமாகக் கொட்டி மின்விசிறியை சுழல விட்டு ஒரு பத்து இருபது நிமிடங்கள் ஊற விட்டு அலசித் தள்ளி விட்டால் தரை ஜில்லென்று ஆகி விடும்.இதே போல கோடை காலம் முழுமைக்கும் தினம் ஒரு முறை செய்யலாம் .சூரியனின் உக்கிரக் பார்வை கொஞ்சம் மட்டுப் படும் இதனால் .

குடிசை வீடு

குடிசை வீடாக இருப்பின் பசுஞ்சாணம் கொண்டு தரை தினம் ஒருமுறை மெழுகினால் வெயிலின் காட்டம் குறைந்து தரை குழு..குழு..குளுவென்று இருக்கும் ...பொதுவில் தென்னை ஓலை ...பனை ஓலைக் குடிசைகள் வெயிலுக்கு இதமாகவே இருக்கக் கூடும் .

கான்கிரீட் வீடுகள்

இனி கான்கிரீட் வீடுகள் ...மற்ற இரு வித வீடுகளைக் காட்டிலும் கான்கிரீட் வீடுகள் வெயில் காலங்களில் தேவலாம் தான் ...ஆனால் இந்த நகர்ப் புறத்து நெரிசல் காட்டில் தீப்பெட்டி போல அடுக்கப் பட்டு காற்று வர ..வெளிச்சம் பரவ ஜன்னல்கள் இருந்தும் அந்த ஜன்னலையும் அடுத்த வீட்டின் சுவர் மறைக்கும் வண்ணம் இடைஞ்சலில் வீடுகள் கட்டப் பட்டிருப்பின் ஒரு பயனும் இல்லை இவ்வீடுகள் இந்த வெயில் காலங்களில் ஒரு வியாதி போல ஆகி விடக் கூடும் ,ஒண்டுக் குடித்தன வீடுகள் நிறைந்த சென்னையில் வெயில் படுத்தி எடுக்கும் அங்கே குடியிருப்பவர்களை.


என்ன செய்து வெயிலின் சூட்டிலிருந்து இவர்கள் தப்பிக்கலாம் ?!

குடி தண்ணீர் தான் விலைக்கு வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலை என்றோ வந்து விட்டதே ...குளிக்க ...துவைக்க..உப்புத் தண்ணீராவது தாராளமாகக் கிடைக்க வேண்டும் ...இல்லா விட்டால் நரகம் தான் வெயில் காலம் சென்னையில் .தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் பகுதிகளில் வசிப்போர் வீட்டின் தரைத் தளத்திலும் சரி ...மொட்டை மாடி செங்கல் தரையிலும் சரி காலை மாலை இருவேளை தளும்பத் தளும்ப நீரைக் கொட்டி தரையை ஊற விட்டு அலசித் தள்ள வேண்டும்.இதன் மூலம் தரை கொஞ்சம் இதம் தரலாம் .

சரி வீட்டை ஏனோ தானோவென்று கொஞ்சம் சரிப் படுத்தி விட்டோம் வெயிலை சமாளிக்கும் வண்ணம் ...அடுத்து இதோடு முற்றும் போட்டு விட முடியாது .

உடலைப் பேணுதல் :-
அடுத்து யாகாவராயினும் சரி வெயில் காலங்களில் நல்ல உடல்நிலையுடன் இருப்பவர்கள் தினம் காலை ..மாலை இருமுறை கண்டிப்பாக குளித்தே ஆக வேண்டும்.இதன் மூலம் உடல் சூடு மட்டுப்படும்.குளிக்கும் நீரில் ஆரஞ்சு பழத்தோல் ...துளசி இலைகள் அல்லது ஒரு சொட்டு டெட்டால் கலந்து குளிக்கலாம் துர்வாடை விலகி புத்துணர்ச்சியாக இருக்கும் .

இதெல்லாம் சரி தான் ...இனி வெயில் கால உணவுவகைகள் மற்றும் பானங்களைப் பற்றி பார்ப்போம் ;

வெயில் காலங்களில் உண்ணத் தக்க உணவுகள்,காய்கறிகள் ,பழங்கள்

உணவுகள் :

நீர்ச் சத்து நிறைந்த உணவுகள்..நார்ச் சத்து மிக்க உணவுகளை உண்பதே சாலச் சிறந்தது,தாத்தா ...பாட்டிகளின் அன்றைய நாட்களில் வெயில் காலத்தில் கம்பு,கேழ்வரகு, போன்ற உணவுகளை மோரில் கரைத்து உண்பதை நான் அறிவோம் தானே ...கூடவே நீராகாரம் எனும் வடிநீர் உணவும் அன்றைய ஸ்பெசல் தான்.மதிய நேரங்களில் இந்த நீராகாரத்துடன் புளித்த நீர் சேர்த்து அருந்த நீர்க்கடுப்பு கூட விலகும் என்பார்கள்.இன்று குக்கர் வைத்து சமைப்பதால் நீராகாரம் கிடைப்பதில்லை.நம்மால் முடிந்தவரை நூடுல்ஸ்...ஃபிரைடு ரைஸ்...நான் என்று உண்ணாமல் எந்த உணவோடும் சரி மோர் கலந்த உண்ணலாம்.தயிருக்கு மந்தத் தன்மை உண்டு .மோர் நல்லது.எண்ணெய் சார்ந்த உணவுகளை கண்டிப்பாக நீக்க வேண்டும் ,எண்ணெய் அதிகம் சேர்த்துக் கொண்டால் வெயில் காலங்களில் விரைவில் சோர்வு தட்டி தூக்கம் வரும் .

காய்கறிகள்
என்னென்ன காய்கறிகள் சேர்த்துக் கொண்டால் வெயிலுக்கு நல்லதென்று பார்ப்போம் இனி ;

நார்ச்சத்து மிக்க நீர்ச்சத்து மிக்க காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நலம் ,

முருங்கை காய்
சுரைக்காய்
புடலங்காய்
பூசணிக்காய்
பீன்ஸ்
தேங்காய்
பீர்க்கங்காய்
போன்ற நாட்டுக் காய்கறிகளையும்

கீரை வகைகளுடன்

முட்டைக் கோஷ்
கேரட்
முள்ளங்கி
பீட்ரூட் போன்ற இங்கிலீஸ் காய்கறிகளையும் நிச்சயம் வெயில் காலங்களில் தவிர்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் .

உருளைக் கிழங்கு...முட்டை போன்றவற்றை அளவாகப் பயன்படுத்துதல் நலம்.

பழங்கள்

இளநீர் தான் வெயில் நேரத்து தேவாமிர்தம் ;

இதற்கடுத்த இடம் தான் மற்ற எல்லா வித பழங்களுக்கும் ;இயற்கையாகக் கிடைக்கும் பழங்களில் இருந்து தயாரிக்கப் படும் எல்லா பழ ரசங்களும் அருந்தலாம்,
ஆப்பிள் ;
ஆரஞ்சு ,
கொய்யா,
கிர்ணிப்பழம் ,
தர்பூசணி,
எலுமிச்சை ,
மாதுளை ,
சப்போட்டா ,
திராட்சை,
ஸ்ட்ராபெர்ரி ,
கிரேன் பெர்ரி ...etc...etc

செயற்கை குளிர் பானங்கள் இன்றில்லா விட்டாலும் என்றேனும் ஒருநாள் அதற்கான பக்க விளைவுகளைத் தரலாம்.அதனால்
கோக் ...பெப்சி ...மிராண்டா,ஃபேண்டா போன்றவற்றை தவிர்ப்பதே நலம் (!!!)

நன்னாரி சர்பத் வீட்டிலேயே போட்டுக் குடிக்கலாம் ..நன்னாரிக்கு உடல் சூட்டைக் குறைக்கும் சக்தி உண்டென்று எங்கோ படித்த ஞாபகம் .

மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கலாம் .வெயில் காலம் ஆச்சுதா நம்ம பங்குக்கு நாமளும் ஏதாவது செய்யணுமேன்னு தான் ...

ஏதாச்சும் செய்யணும் பாஸ் வெயிலருந்து தப்பிக்க !!!

"கண்டேன் சீதையை "

"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணமென்று பேரிட்டு
சூரையாம் காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழித்தார்களே "

இந்தப் பாடலும் செய்யுள் தான் ,ஆனால் எங்கிருந்து வந்து மனதில் நீங்காமல் ஒட்டிக் கொண்டதென்று இன்று நினைவில் இல்லை .தேவாரப் பாடலா அல்லது சித்தர் பாடலா ?! யார் இயற்றிய பாடலாக இருந்தாலும் சரி இதில் ஒலிக்கும் நயத்தைப் பாருங்கள் .இன்றென்னவோ நாம் ரொம்பத்தான் அலுத்துக் கொள்கிறோம் ஒரு விஷயத்தை உள்ளது உள்ளபடி தெரிவிக்க .

"விடிய..விடிய ராமாயணம் கேட்டும் விடிந்த பின் கேட்டால் சீதைக்கு ராமன் சித்தப்பா " என்ற கோட்டித்தனத்தைப் போல இன்னாரிடம் இன்ன விஷயம் சொல் என்று சொல்லி அனுப்பினால் நாம் ஒன்று கூற அங்கே விஷயம் திரித்துக் கூறப் பட்டு விடுகிறது.வேண்டுமென்று செய்ததோ இல்லை தற்செயலோ விஷயம் திரிந்து போனால் நஷ்டம் இருபக்கமும் தான்.

ராமாயணத்தில் சீதையை தேடி கடல் தாண்டி சென்று "சூடாமணி " பெற்று வரும் ஹனுமான் லங்காவை விட்டு மீண்டும் ராமனைக் கண்ட முதல் நொடியில் சொன்ன வார்த்தைகள் என கம்பர் எழுதியது

"கண்டேன் சீதையை "
மனைவியைக் காணாமல் தவிக்கும் ஒரு கணவனின் காதுகளுக்கு இந்த வார்த்தைகள் தேன் அல்லவா?

அதனாலன்றோ கம்ப ராமாயணத்தில் ஹனுமான் "சொல்லின் செல்வர் " எனப் புகழப் படுகிறார்.

சரி மேலே உள்ள செய்யுளுக்கும் ஹனுமானுகும் என்ன சம்பந்தம் என்று குழம்ப வேண்டாம் .சொல்நயம் என்ற ஒரு விஷயம் இருக்கிறதே தங்கத் தமிழில் அதை விவரிக்க இவை இரண்டையும் கூறினேன்.

விஷயம் எவ்வளவு பெரிதெனினும் சுருங்கக் கூறி நயம் பட விளங்க வைத்தல் என்ற ஒரு வசதி உண்டு தமிழுக்கு .மரணத்தை நீட்டி முழக்காமல் நாளே நாலு வரிகளில் சொல்ல ஒரு செய்யுள் .
ராமனின் துயரை சட்டென குறையச் செய்ய ஒரு சிறு வாக்கியம் .
தமிழ் அமிழ்து என்பதில் சந்தேகமென்ன?

அம்பையின் காட்டில் ஒரு மான்("அடவி" - சும்மா ஒரு பார்வை )


விலை - ரூபாய் 80
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
ஏற்கனவே போன பதிவில் சொன்ன சேதி தான் ,அம்பையின் காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பை வாசித்தேன் என்றேனில்லையா? அதில் ஏழெட்டு சிறுகதைகள் இருந்தன அவற்றுள் "அடவி " என்றொரு சிறுகதை .நான் மிக ரசித்துப் படித்தது .
வனத்தின் மீது ஆசை கொண்ட பெண் செந்திரு அவளது கணவன் திருமலை ,தொழில் அதிபரான கணவன் ...புத்திசாலி மனைவி ,ஆசைக்கு ஒன்று ..ஆஸ்திக்கு ஒன்று என இரண்டு அருமையான குழந்தைகள் ,பணப் பற்றாக்குறை அற்ற நிலை இப்படியாக பொருளாதார கவலைகள் அற்ற நல்ல வாழ்க்கை என்று தானே தோன்றும் நமக்கு இவர்களைப் பற்றி வாசிக்கையில் .
ஆனால் இக்கதையில் செந்திரு கணவனிடம் கோபித்துக் கொண்டு அல்லது கருத்து வேறுபாடு கொண்டு தனியே வனத்தை நோக்கிச்செல்கிறாள் ,வனத்திற்குப் போகிறாள் என்றதும் தனியே கால் நடையாய் என்றெல்லாம் அதீத கற்பனைகள் தேவை இல்லை .கணவனின் இளைய சகோதரன் காரில் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறான் செந்திருவை காட்டில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகையில்.
அங்கே செந்திரு தனது கடந்த காலத்தை வனத்துடனும் ...ராமனின் இல்லை ...இல்லை சீதையின் கதையுடனும் கலந்து மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு தனக்கான சுய தேடலில் மூழ்குகிறாள். கொஞ்சம் செந்திருவின் கதை ...நடுநடுவே சீதையே நேரடியாகச் சொல்வதைப் போல அவளது வாழ்வியல் நிகழ்வுகள் இடையில் அந்தக் காட்டில் இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் சவிதா பாயி,துர்கா பாயி,சந்திரா பாயி போன்ற சாமானியப் பெண்களுடனான அர்த்தமுள்ள அரட்டை ,இப்படி சுமூகமாக சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறார் அம்பை.
சும்மா வீம்புக்கு அம்பையின் எழுத்துக்களில் பெண்ணிய வாடை தூக்கலாக இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது,அவர் முன் வைக்கும் கேள்விகள் எல்லாமே படு "நச் மற்றும் நறுக் "வகை .
குறிப்பாக ராமாயணக் கதை ...ராமனை நாம் இங்கு வெகு சிறப்பாகத் தான் கொண்டாடுகிறோம் ,சீதையையும் தான்...லட்சுமணன் ...ஹனுமான் ...ஜாம்பவான் எல்லோரையுமே கொண்டாடுகிறோம் தான் ...ராமனின் அளவுக்கு என்றில்லா விட்டாலும் கூட சீதை இந்த உலகத்தின் அன்னையாகத் தான் ஹிந்துக்களால் போற்றப் படுகிறாள் .
சிறுகதை வாசித்ததும் சட்டென்று மனதில் உதித்த மற்றும் ஒரு எண்ணம் "வால்மீகி ராமாயணம் வேறு தளம் ...கம்ப ராமாயணம் வேறு தளம் " என்ற மகாப் பெரிய உண்மை . சீதையை ராவணன் கடத்திச் செல்வதாக கம்பர் சொல்லும் இடங்கள் மிக மிக நாகரீகம் ...பண்பான வர்ணனை என்று நாம் கருதும் அந்த ஓரிடத்தை மட்டும் கருத்தில் கொண்டு நான் இதைச் சொல்லவில்லை .கம்ப ராமாயணத்தில் காணக் கிடைக்காத பல முரண்பாடுகள் ஒருவேளை வால்மீகி ராமாயணத்தில் காணக் கிடைக்கலாம் .
செந்திருவுக்கு கணவன் தன்னை தொழிலில் பாகஸ்தியாக சேர்த்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் ...மன உளைச்சல் வாழ்வின் மீதான வெறுப்பாக மாறி வனத்தின் நிசப்தத்தின் நடுவில் தன்னை தான் அறிய நடக்க ஆரம்பிக்கிறாள் . அவளது நடை அவளோடு கூடவே நம்மையும் அழைத்துச் செல்கிறது ,அவளோடு நாமும் வானம் முழுக்க அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நடக்கிறோம் காலின் அசதியே தோன்றாமல் .
செந்திருவின் பால்ய வயது ,அவள் மும்பையில் பெரியம்மா வீட்டில் திருமலையைக் கண்டு காதல் கொள்வது ,இந்தக் காதலை கண்டு கொள்ளாமல் இருக்கும் தன் தந்தையிடம் ஒன்றிற்கு இரு முறை சாதாரணமாகவே போகும் போக்கில் இது திருமணத்தில் முடிய வேண்டிய பந்தம் என உணர்த்தும் திண்மை ,கணவனிடம் காட்டை விட்டு வரமாட்டேன் என நடத்தும் வாக்கு வாதங்கள் ,கூடவே தன் பிள்ளைகள் மற்றும் உறவுகளைப் பற்றிய நினைவுகள் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் செந்திரு ஒரு தன்னிச்சையான மனுஷியாகத் தான் தெரிகிறாள் .
அவள் தனக்கான முடிவுகளை எப்போதும் தானே எடுத்துக் கொள்கிறாள்,மற்றவர்களை பொருட்படுத்துவதில்லை ,அது தந்தையோ அல்லது கணவனோ ஆனாலும் சரி .அவளது முடிவுகளை அவளே எடுக்கிறாள்.திருமலை மீதான காதல் ஆகட்டும்...மன பேதம் கொண்டு வனத்திற்கு போதல் ஆகட்டும் செந்திரு வியப்பளிக்கக் கூடும் பலருக்கு ;
இந்த சிறுகதையில் செந்திரு தன் நினைவுகளாக பகிந்து கொள்ளும் சில விசயங்களும் வியப்பளிக்கவே செய்கின்றன,
உதாரணமாக காட்டில் லட்சுமணன் மீது மோகம் கொண்ட சூர்ப்பனகை மூக்கறுத்து அவமானப் படுத்தப் பட்டது மட்டுமே நமக்கு கம்பராமாயணத்தில் படிக்கக் கிடைக்கிறது.
இந்திரகாமினி எனும் கந்தர்வப் பெண் லட்சுமணன் மீது மோகம் கொண்டு அவனை நெருங்குகையில் அவளை அவன் உதாசீனப் படுத்தவே ஆசை நிறைவேறா கோபத்தில் அவளொரு சூழ்ச்சி செய்தாளாம்,
லட்சுமனனி படுக்கையில் அன்றிரவு சில உடைந்த வளையல்கள் மலர்களைப் போட்டு வைத்து விட்டு மறைந்து விட்டாளாம். இதற்க்கு ராமன் என்ன செய்தான் தெரியுமா?லட்சுமனனின் அறையை கூட்டிப் பெருக்கி சுத்தமாக்க அங்கே சென்ற சீதை இதைக் கண்டு வந்து ராமனிடம் புறம் சொல்ல , ராமன் விடிந்ததும் அந்த வளையல்கள் யாருடையவை எனக் கண்டு பிடிக்க அந்தக் காட்டில் வசித்த எல்லாப் பெண்களின் வளையல் அளவுகளையும் வாங்கி சோதித்துப் பார்த்தானாம்!?
புறம் சொல்லுதல் பெண்களின் பொதுத் தவறு என்று சொல்ல வருகிறாரோ அம்பை?! ஆனாலும் சீதை புறம் சொன்னால் என்ற வரிகள் எனக்குப் புதியவை.கூடவே அந்த வளையல்கள் காட்டுவாசிப் பெண்கள் எவருக்கும் பொருந்தாமல் சீதியின் வளையல்குடன் பொருந்துகிறது என கண்டுபிடிக்கப் பட்டதாக கூறும் போது ராமனின் சஞ்சல சந்தேக புத்தி விளக்கப் படுகிறது எனலாம்.
லட்சுமணன் ஒன்றும் உத்தமன் இல்லை எனும் ராமனின் வாக்கு நிச்சயம் கம்ப ராமாயணத்தில் காண முடியாதென்று தான் நினைக்கிறேன்,,
ஒருவேளை வடமொழி ராமாயணத்தில் இருக்கக் கூடுமோ என்னவோ? ராமன் இங்கேசஞ்சல ராமன் இல்லை ..அவன் கோதண்டராமனாக..ஜானகி ராமனாக ..."ஒருவனுக்கு ஒருத்தி எனும் "கோட்ப்பாட்டை நிலை நிறுத்த வந்த அற்புத அவதார கடவுள் என்றல்லவா துதிக்கப் படுகிறான்.
ஏனிந்த முரண்பாடு? கம்பருக்கும்..வால்மீகிக்கும்?
செந்திரு எனும் பெண்ணின் மன ஓட்டத்தில் அவள் எண்ணிப் பார்ப்பதாக கதை அமைவதால் சும்மா கற்பனை என்று ஒதுக்கி விடக் கூடும் தான்!
"வித்யா சுப்ரமண்யத்தின் ஒரு நாவலில் கூட அம்பையின் இந்த அடவி சிறுகதையை ஒத்த வரிகளை வாசித்த ஞாபகம் நெருடியதால் இதைப் பதியத் தோன்றியது.
எது ராமாயணம்?புராணமே ஒரு கற்பனை என்றால் சேது பாலம் விசயத்தில் ஏன் இத்தனை ஆர்ப்பாட்ட எதிர்ப்புகள்?
ராமாயணம் உண்மை என்றால் எந்த ராமாயணம் உண்மை? வால்மீகியின் மூல நூலே உண்மை என்றால் கம்பர் கூறும் ராமாயணம் என்ன சொல்ல வருகிறது?
இப்படிச் சில குழப்பங்களை மேலெழுகின்றன .ஆக மொத்தத்தில் இது அம்பையின் எழுத்துக்கு கிடைத்த மகாப் பெரிய வெற்றியே.
வாசிப்பவர்களை யோசிக்க வைத்தல்...பின் தெளிய வைத்தல் எனும் நிலையே நல்ல எழுத்துக்கு அழகாக இருக்கக் கூடும்.
ராமாயணம் பற்றி இன்னும் நிறைய தேடி வாசித்த பின் இந்தப் பதிவை தொடர்வதே சரி எனப் படுகிறது...
ராமாயணம் தெரிந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை இங்கே பதியுங்கள்