Tuesday, April 7, 2009

பானாக்கரம்...(ஜக்கம்மா பிரசாதம்)

பானாக்கரம் ..இதையே பானகம் என்றும் சொல்வார்களாயிருக்கும் போல !? எங்கள் ஊரில் பானாக்கரம் என்று சொல்லத்தான் கேள்விப் பட்டிருக்கிறேன் . இதை வெயில் காலத்தில் குடித்துப் பாருங்கள் தேவாமிர்தம் தான் .ரசத்திற்கு அம்மா புளி ஊற வைத்து விட்டு அந்தண்டை போனால் போதும் ஊற வைத்த புளித் தண்ணீரை எடுத்து பானாக்கரம் ஈசியாகச் செய்து அம்மா இந்தண்டை வருவதற்குள் குடித்து முடித்து விட்டு பாத்திரத்தையும் துலக்கி வைத்து விடலாம் .அத்தனை எளிது பானாக்கரம் செய்வது .

நல்ல நீரில் ஊறவைத்த புளி, புளி நன்றாக ஊறியதும் நீரை வடிகட்டிப் பிரிக்க வேண்டும் ,அதனோடு சர்க்கரையோ ...வெல்லமோ சேர்த்தால் பானாக்கரம் ரெடி.
வெயிலுக்கு ஜில்லென்று இருக்கும் .இப்போது இப்படி யாரும் செய்து அருந்துவதாகாத் தெரியவில்லை.

நான் பிறந்த ஊரில் ...ஊருக்கு வெளியே ஜக்கம்மாவுக்கென்று ஒரு கோயில் உண்டு ...வருடத்திற்கு ஒருமுறை அவளுக்குத் திருவிழா வரும். ஜக்கம்மா துடியான தெய்வம் என்பார்கள் ...அவளுக்குத் துணை தெய்வம் கருப்பசாமி ...வெட்டரிவாள் ஏந்தி பக்கவாட்டில் அவரும் நிற்பார் ஜக்கம்மா சன்னதியில் .

கோயில் என்பது பெயரளவில் தான் ...அது ஒரு வெட்ட வெளி அங்கே ஒரு பீடத்தில் ஜக்கம்மா உக்கிரமாய் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். திருவிழா சமயங்களில் மேலே தென்னம் பந்தல் போட்டுக் கொள்வார்கள் ,மாற்ற நாட்களில் எல்லாம் ஜக்கம்மாவுக்கு சுற்றியுள்ள கொடிக்காய்புளி காய்ந்த முள்ளில் வேயப்பட்ட சுற்று வேலிப்படல் தான் சாஸ்வதம் .

உக்கிரத்தை தணிக்கவோ என்னவோ அவளது கோயில் பிரசாதமாக பானாக்கரமும் கூடவே வெல்லமிட்ட பச்சரிசியும் தான் தருவார்கள். பச்சரிசியுடன் பொடியாய் நறுக்கிய தேங்காய் துண்டுகளும் உண்டு. அது ஒரு வகை அலாதி சுவைதான் .

பானாக்கரம் பற்றி பகிர்ந்து கொள்ளத் தோன்றியது ...பதிவாக்கி விட்டேன் .