Friday, February 25, 2011

ஜெலூசில் மனிதர்கள்





கானக நடுவில் கனி பறிக்கா தருவொன்று
கிளிகளுக்கும் , காட்டுக் குருவிகளுக்குமாய் ...
பிரப்பங் கொடிகளும் பின்னிலாக் காலங்களும்
விரி மரம் தாவும் உரமுள்ள பட்சிகளுக்கும் குரங்குகளுக்குமாய்
என்றிருந்த நாட்கள் மாண்டன ;
யத்தனங்களின் பிரயத்தனத்தில் ஜனித்த
ஜெலூசில் மனிதர்களைப் பீடித்த
அஜீரணச் சீரகமிட்டாய் குழந்தைகள்
வனமழித்து திரும்புகையில் புறத்துக் கவிந்தன
குறுந்தொகை மேகங்கள் ;
தவழ்ந்து இறங்கின நைலான் மழைத் தூறல்கள்
வகைக்கொரு நிறம் பூண்டு
சிவந்த மூக்கு கிளிகளுக்கோ தவிட்டு நிறக் குருவிகளுக்கோ
என்றைக்கு புத்தியில் உரைக்குமோ ?
பின்னோடிகள் பின்னோடிப் போதல் விதியென்று
இந்த பூமி மனிதர்களுக்கானதாம்
மனிதர்கள் என்றால் மனிதர்கள் மட்டும் தானாம்
வனம் என்றால் அடர் வனம் !
இருட்டு அதன் நிறம் .

நோட் :


இந்தக் கவிதை ஆதியில் இருந்தே அபார்ட்மெண்டுகள் கட்டுவதெற்கென ஆக்கிரமிக்கப் பட்ட காடுகள் மற்றும் ஏரிகளுக்கு சமர்ப்பணம் .