Monday, January 4, 2010

ஓடிப்போனவளின் மலரும் நினைவுகள்




வெட்டி எறியப்பட்ட நகத்துணுக்காய்

வீம்பு விளிம்புகளற்று

எனக்கு நானே சமாதானம் கொண்டவள் போல்

சாவதானமாகவே இருந்தேன்

ஓடிப் போனவள் எனும்

குசுகுசுப்புகளைப் புறம் தள்ளி

கொக்குக்கு இரையே மதி

கொண்டவனுக்கு நானே கதி

என்றொரு காலம்

இருந்தவரை எல்லாமே சரியெனும்

பாவனையில் மூழ்கிப்போய்

சங்கடங்கள் தவிர்க்கப்பழகி

அயர்ந்து உறங்கிப்பின்

விழித்தெழுகையில்

என் மகள் எனைப் போலானாள்...;

மெல்லாது முழுங்காது
தொண்டைக்குள் உருளும் பம்பரமாய்
நான் என் அன்னைக்குச் செய்தது
இன்றெனக்கு !?
உரத்துச் சொல்ல வெட்கி

மச்சு வீட்டில் மூச்சு விடாமல் தேம்பியழுவது

நானாய் இருக்கக்கூடுமோ !!!