Friday, October 23, 2009

மௌனமே சௌக்கியமா ?!

நம் படுக்கை அறை தலையணைகளின்

உறைகளை மீறி

வெடித்து விடுவன போல

திமிறிக் கொண்டிருந்த

மௌனக் கரைசல்கள்

சிந்தாமல் சிதறாமல்

மெல்லக் கசிந்து மெத்தை நனைத்தன

அதை நாம்

அறிந்தும் அறியுமுன்னே

மெத்தையும் திணறித் திமிறவே

பிறிதொரு நாளில்

சமையல் உள்ளுக்குள் கசிந்தோடிப் பரவிய

மௌனச் சாம்பார்

அக்கணமே எங்கும் நீக்கமற நிறைந்து

தளும்பிச் சிலும்ப ;

எப்போது கதவிடுக்கில்

கசியத் தொடங்குமோவென

சொல்லொணாத் தயக்கத்தில்

நானும் நீயும்

முகம் பார்த்துக் கொண்ட தருணத்திலா

அன்றியும்

என் அம்மா முதல் முறை

கதவைத் தட்டிய தருணத்திலா

எத்தருணத்தில்

கரைந்து காணாமல் போனதந்த

பெரு மௌனம் !!!

எப்படியோ ...

கசிவு நின்றதில்

இருவருக்கும் சௌக்கியமே ...!?