Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, April 2, 2009

"கண்டேன் சீதையை "

"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணமென்று பேரிட்டு
சூரையாம் காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழித்தார்களே "

இந்தப் பாடலும் செய்யுள் தான் ,ஆனால் எங்கிருந்து வந்து மனதில் நீங்காமல் ஒட்டிக் கொண்டதென்று இன்று நினைவில் இல்லை .தேவாரப் பாடலா அல்லது சித்தர் பாடலா ?! யார் இயற்றிய பாடலாக இருந்தாலும் சரி இதில் ஒலிக்கும் நயத்தைப் பாருங்கள் .இன்றென்னவோ நாம் ரொம்பத்தான் அலுத்துக் கொள்கிறோம் ஒரு விஷயத்தை உள்ளது உள்ளபடி தெரிவிக்க .

"விடிய..விடிய ராமாயணம் கேட்டும் விடிந்த பின் கேட்டால் சீதைக்கு ராமன் சித்தப்பா " என்ற கோட்டித்தனத்தைப் போல இன்னாரிடம் இன்ன விஷயம் சொல் என்று சொல்லி அனுப்பினால் நாம் ஒன்று கூற அங்கே விஷயம் திரித்துக் கூறப் பட்டு விடுகிறது.வேண்டுமென்று செய்ததோ இல்லை தற்செயலோ விஷயம் திரிந்து போனால் நஷ்டம் இருபக்கமும் தான்.

ராமாயணத்தில் சீதையை தேடி கடல் தாண்டி சென்று "சூடாமணி " பெற்று வரும் ஹனுமான் லங்காவை விட்டு மீண்டும் ராமனைக் கண்ட முதல் நொடியில் சொன்ன வார்த்தைகள் என கம்பர் எழுதியது

"கண்டேன் சீதையை "
மனைவியைக் காணாமல் தவிக்கும் ஒரு கணவனின் காதுகளுக்கு இந்த வார்த்தைகள் தேன் அல்லவா?

அதனாலன்றோ கம்ப ராமாயணத்தில் ஹனுமான் "சொல்லின் செல்வர் " எனப் புகழப் படுகிறார்.

சரி மேலே உள்ள செய்யுளுக்கும் ஹனுமானுகும் என்ன சம்பந்தம் என்று குழம்ப வேண்டாம் .சொல்நயம் என்ற ஒரு விஷயம் இருக்கிறதே தங்கத் தமிழில் அதை விவரிக்க இவை இரண்டையும் கூறினேன்.

விஷயம் எவ்வளவு பெரிதெனினும் சுருங்கக் கூறி நயம் பட விளங்க வைத்தல் என்ற ஒரு வசதி உண்டு தமிழுக்கு .மரணத்தை நீட்டி முழக்காமல் நாளே நாலு வரிகளில் சொல்ல ஒரு செய்யுள் .
ராமனின் துயரை சட்டென குறையச் செய்ய ஒரு சிறு வாக்கியம் .
தமிழ் அமிழ்து என்பதில் சந்தேகமென்ன?