Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, February 24, 2011

விகடன் இந்த வாரம் -வாசகர் வாய்ஸ்



வெள்ளிக் கிழமை காலை வரும்போது என் டேபிளில் விகடன் இல்லைன்னா ...பயங்கரமாக் கோபம் வரும்.அது ...எங்கயாவது கூட்டிட்டுப் போறதா சொல்லிட்டு லவ்வர் வராம வெயிட் பண்றப்போ வர கோபம் ." கீழ படிச்சிட்டு இருக்காங்க சார்'ங்கரதைக் கேட்டா ,ஏதோ நம்ம ஆளை இன்னொருத்தன் தள்ளிட்டுப் போயிட்ட மாதிரி டென்சன் ஆகும் .ஏன்னா இத்தனை வருசங்களில் எனக்கும் விகடனுக்குமான தொடர்பு அவ்வளவு லவ்வபிள்! (இதை சொன்னது யார் தெரியுமோ?! )


அறிவுமதியின் மழைப்பேச்சில் இந்த முறை மணியம் செல்வத்தின் ஓவியம் கியூட் (அடடா...இது இன்பத் தமிழ் :)


"எல்லோரும் ஏன் எழுத்தாளர் ஆக வேண்டும் ? வேறு ஏதாவது ஆகலாமே!" ;))) இதை சொன்னது யார் தெரியுமோ?! விடைகள் கடைசியில் .


இணையத்தில் எழுதுவதை நான் அதிகம் வாசிப்பதில்லை,ஆனால் எல்லோருக்குமே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசை இருப்பது மட்டும் தெரிகிறது .

ஞானபீட விருது கொடுப்பதில் எல்லாம் ஏகப் பட்ட லாபி இருக்கிறது ,குறிப்பாக கன்னட எழுத்தாளர்களுக்கும் மலையாள எழுத்தாளர்களுக்கும் அதிகம் விருதுகள் கொடுப்பதில் லாபி இருக்கிறது என்று நினைக்கிறேன்,சிலர் "எனக்கு தாமதமாக கிடைத்த விருது " என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் .அது தேவை இல்லை என்று நினைக்கிறேன்.


ஒரு தெருக்கூத்துக் கலைஞருடன் தங்கர் பச்சானின் உரையாடல் நிறைவாய் இருந்தது வாசிக்க.


( "மாற்றம் வந்தாதானேமக்களுக்கு பெனிஃபிட்டு !" )
தெருக்கூத்து நாடகங்கள் எதையும் நான் முழுதாகப் பார்த்ததில்லை இதுவரை. முன்னிரவு முதல் விடிகாலை வரை நடத்தப் படும் என்றால் இப்போது அதை யார் அத்தனை நேரம் செலவழித்து உட்கார்ந்து பார்க்க முடியும்! ? இந்த உரையாடலில் அந்தக் கலைஞர் சொன்னதைப் போல தெருக்கூத்து நாடகங்களைப் பார்க்க கிராமத்து ஜனங்களை விட நகர மக்களுக்கு ஆர்வம் அதிகம் தான் ஆனால் நேரம் விழுங்குவது மிகப் பெரிய மைனஸ் அந்தக் கலைக்கு. தெருக்கூத்தை நவீன மயமாக்கி முன்பு டி.டி யில் ஒரு மணி நேர நாடகங்களாக வருமே ராஜராஜ சோழன் குந்தவை நாடகங்கள் அப்படி குட்டிக் குட்டி நாடகங்களாகப் பகுத்துப் போடடால் ஒரு வேலை சோர்வின்றி பார்க்க கூட்டம் கூடலாம்.


வீட்டுக்கு வீடு தொலைக் காட்சிப் பேட்டிகள் அற்றுப் போய் பொழுது போக்கிற்கு பஞ்சாயத்து டி.வி க்களை நம்பி இருந்த காலத்தில் ஜனங்கள் பாவைக்கூத்தையும் ,தெருக்கூத்தையும் ...உள்ளூர் சர்கஸ் கம்பெனியின் வீர தீர விளையாட்டுகளையும் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இப்போதெல்லாம் ஒரு முறைக்கு மேல் எதிலும் ஆர்வமின்றி சலிப்படைந்து விடுகிறார்கள்.

"கூத்துக் கலையை வளர்க்க ஏதாவது யோசிக்கணும் -"


யோசிச்சிங்க ..யோசிங்க - கடந்த ஆண்டு சென்னை சங்கமம் திருவிழா வேலம்மாள் மெட்ரிக் பள்ளி முகப்பேரில் நடத்தப் பட்ட போது சரியான கூட்டம் .தொடக்கத்தில் திரண்ட கூட்டம் களையவே இல்லை கடைசி வரை ,விழா முடிந்த இரவிலும் கூட மக்கள் பள்ளி இருந்த தெருவெங்கும் நின்று கொண்டு அவர்களுக்கு மிகப் பிடித்துப் போன கலைஞர்களை ஒன்ஸ்மோர் கேட்டு ஆட வைத்துக் கொண்டும் பாட வைத்துக் கொண்டும் இருந்தார்கள். பாரம்பர்ய கலை வடிவங்களை மக்கள் ரொம்பவே ரசித்தார்கள். ஓவர் டோஸ் ஆகாமல் கொடுத்தால் எப்போதும் ரசிப்பார்கள் என்று நம்பலாம்.


சொல்வனத்தில் பா.ரா மற்றும் நாவிஷ் செந்தில் குமார் கவிதைகள் வழக்கம் போல அருமை .


ஷாஜியின் மலேசியா வாசுதேவன் பற்றிய நினைவுக் கட்டுரை வாசிக்கையில் தேவ் க்கு மிகப் பிடித்த ஆல் டைம் பேவரிட் பாடல் "ஆகாய கங்கை பூந்தேன் மழை தூவும் " ...." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது நினைவடுக்குகளில் . ம்ம்...சில வாரங்களுக்கு முன்பு இதே விகடனில் மலேசியா வாசுதேவன் தனது இருப்பைப் பற்றி சலனப் படாத தன்னை மறந்து போன தனது திரையுலக நட்புகளை பற்றி ரொம்ப வருத்தமாய் ஒரு பேட்டி கொடுத்திருந்தார் இன்றவர் இல்லை . நிச்சயம் அந்த நட்புகள் பலவும் இரங்கல் தெரிவிக்க அவரில்லாத வீட்டில் அவரைச் சுற்றி குழுமி இருப்பார்கள்! எங்கிருந்தாவது பார்த்துக் கொண்டு வாசு அரூபமாய் சிரித்திருப்பார் என்று நம்புவோமாக!


நா.முத்துக் குமாரின் "அணிலாடும் முன்றில் "

அ .முத்துலிங்கத்தின் "ஜகதலப்பிரதாபன் "

கவின் மலரின் "தொடர்பு எல்லைக்கு வெளியே "
வேணுவனம் சுகா வின் "மூங்கில் மூச்சு "


இவை அனைத்தும் வாசிக்கப் பிடித்திருந்தன.


எட்டெட்டு இந்த தரம் கொஞ்சம் போர் .


வாசகர் கேள்விகளுக்கு சூர்யா பதில் சொல்லி இருக்கிறார் இந்த வாரம் . பாலா பதில்கள் அளவுக்கு பர பரன்னு எதிர்பார்ப்பை கிளப்பி விடலை .ஆனா நல்லா இருக்கு வாசிக்க. :))


ஒரு கேள்வி பதில் சாம்பிள்க்கு பாருங்க :


ஜோதிகாவை சந்திக்காமல் இருந்திருந்தால் ?


"வாழ்க்கை இவ்ளோ அழகா" ன்னு தெரியாமலே போயிருக்கும்!.


"உலகக் கணவர்களே தாங்கள் யாவரும் இப்படியே பதில் சொல்லக் கடவீர்களாக ,உலக மனைவிகளின் உலகம் உய்யும் . " :))


"ங்கே!" என்று வாசித்துக் கடந்த சில ஸ்டேட்மெண்டுகள் : :


திருமா வளவனுக்கு முதுகெலும்பு முறிந்து விடவில்லை.எனவே,நான் எந்தப் பக்கமும் சாய மாட்டேன் எதுவாக இருந்தாலும் தி.மு.க கூட்டணியில் தான் தொடர்வேன் !" - திருமாவளவன்


"காங்கிரஸ் கூட்டணிக்கு தி.மு.தி.க வந்தால் ,சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பேன் " - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


"தமிழக மீனவர்களுக்கு ஈழத்து மீனவர்களுக்கும் பகையைத் தூண்டுகிற வேலையை இலங்கை நேரடியாகவும் ,இந்தியா மறைமுகமாகவும் செய்து வருகின்றன !" - சீமான்


விடைகள் :


முதல் விடை லிங்குசாமி - நானும் விகடனும் தலைப்பில் இப்படிப் பேசி இருந்தார் இந்த வாரம்

அடுத்த விடை -அசோக மித்திரன் :))


காசு கொடுத்து விகடன் வாங்கிப் படித்ததில் பெரிதாய் பழுதொன்றுமில்லை இந்த வாரமும்.


"நன்று"


Wednesday, February 23, 2011

ஷாம்பூ (சுமங்கலி முதல் பேன்டீன் வரை)









இது ஒரு ஷாம்பூ விவகாரப் பதிவு .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிராண்ட் பிடிக்கும் என்றால் அத்தனை பாட்டில்களா வாங்கி ஸ்டாக் வைக்க முடியும் மாதந்திர பட்ஜெட்டில். ம்ஹூம் ...எனக்கு பயங்கர அலுப்பு இது விசயத்தில் . எனக்கு எப்போதும் சன்சில்க் ப்ளாக் வேண்டும் என நினைப்பேன் . சும்மா நினைப்பேன் அவ்வளவு தான் :))) . என் மகளுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ஷாம்பூ (நீ ஏன் எப்போ பார் இதையே வாங்கற எனக்கு,பார் டி .வி ல வர குழந்தைங்க எல்லாம் கிளினிக் ப்ளஸ் தான் போட்டுக்கறாங்க அதான் முடி நீளமா இருக்கு ...நீ குட்டை குட்டையா முடி வெட்டறதுக்காக முடி வளரவே கூடாதுன்னு தான் இப்டி ஷாம்பூவா வாங்கற எனக்கு ...துரோகி அம்மா நீ ! துரோகியா ?! இந்த என்ற வார்த்தை என்னை அதிர்சியாக்கி ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது.





"ஏண்டா குட்டி இந்த வோர்ட்ஸ் எல்லாம் எங்க கேட்ட நீ? "





"நாங்க ஸ்கூல்ல கா விட்டுக்கும்போதேல்லாம் ரிஷிதா சொல்லுவா "





"ஒ ...ரிஷிதா இனிமே அப்படிச் சொன்ன சொல்லக் கூடாதுன்னு சொல்லுடா குட்டி"





"முடியாது ம்மா ...அவ உன்ன ஒரு தடவ ஸ்கூல்ல பார்த்தப்போ - உங்க மம்மி சூப்பரா இருக்காங்கன்னு சொன்னா " இப்படி சொன்னா உங்க மம்மி நல்லாவே இல்லைன்னுடுவா ...நான் அவ கிட்ட சொல்ல மாட்டேன்.





"நல்லா இல்லைன்னு சொன்னா சொல்லட்டும் ...நீ போய் சொல்லு "








"கம்பெல் பண்ணாத மம்மி ...போ எனக்கு கிளினிக் ப்ளஸ் வாங்கி வை இனிமே. "





இந்த சம்பாஷனை இப்படி முடிய.




தம்பிக்கு ஹெட் அண்ட் சோல்டர் தான் வேண்டுமாம் (பெட்ரோமாக்ஸ் விளக்கே தான் வேணுமாம் ...வேறு ஷாம்பூ இருந்தால் குளிக்கவே மாட்டாராம் ...ஆபீசுக்கு லேட்டானாலும் பரவாயில்லை சாப்பிடாமல் போனாலும் பரவாயில்லை அவசர அவசரமாய் கடைக்கு ஓடி ஹெட் அண்ட் சோல்டரை வாங்கி வந்து குளித்தால் தான் அவனுக்கு ஜென்ம சாபல்யமாம் :))) )
அத்தைக்கு திரவ ஷாம்பூ ஆகவே ஆகாது . மீரா சிகைக்காய் தூள் பாக்கெட் பாக்கெட்டாய் ஸ்டாக் செய்து வைத்துக் கொண்டுள்ளார். என்ன இருந்தாலும் சிகைக்காய்னு போட்டுருக்கான்ல நயம் சிகைக் காய் வாங்கி காய வச்சு அரைக்கத் தான் முடியல அதுக்கு இது தேவலாம் என்பார் .
அப்பா என் அன்பான அப்பா எப்போதும் ஷாம்பூ தேடியதோ ... தேடுவதோ இல்லை .,எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாய் ஹமாம் சோப்பையே தான் தலைக்கும் போட்டுக் கொள்வார் . அப்பாவால் ஷாம்பூ பிரச்சினையே எழுந்ததில்லை வீட்டில் .என்னே யாம் செய்த புண்ணியம்!
என்னருமைக் கணவர் அடடா...இப்படி ஒரு மனிதரை கணவராக அடைய ஏழேழு ஜென்மம் தவம் பண்ணி இருக்க வேண்டும் நான் .நான் ஷாம்பூ என்ற பெயரில் எதை வாங்கி வைத்தாலும் ஒரு கேள்வி இல்லை அவரிடத்தில் .நீ என்ன செய்தாலும் அது என் நன்மைக்கே என்ற விதத்தில் அத்தனை சாத்வீகமிருக்கும் இந்த ஷாம்பூ விஷயத்தில் மாத்திரம்.
தங்கைக்கு பெர்பெக்ட் தங்கை இருக்கிறாள். எங்கே போனாலும் அவளுக்கே அவளுக்கென்று ஒரு பேக் தனியே பயணிக்கும்.அவளும் யாருடைய ஷாம்பூ ,சோப்பு,சீப்பு ,எண்ணெய் இத்த்யாதி இத்யாதிகளை உபயோகிக்க மாட்டாள் ...பிறரையும் (சில நேரங்களில் சொந்த அக்காவாகவே இருந்தாலும் தான் ) உபயோகிக்க அனுமதிக்க மாட்டாள். தான் ..தன்னுடைய சுகாதாரம் என்று அத்தனை பெர்பெக்ட்.
அடேங்கப்பா ! பெரும்பாலும் ஷாம்பூவில் இருந்து க்ரீம் வரை ஹிமாலயாஸ் ப்ராடக்டுகள் தான் உபயோகிப்பாள். வேறு என்ன இருந்தாலும் ரிஜக்ட் தான் .
அம்மாவும் நானும் ஏகதேசிகள் ...எது இருக்கிறதோ அது ...எது கிடைக்கிறதோ அது ! இந்த ரீதியில் ஷாம்பூ முதல் சோப்பு வரை எந்த கண்டீசன்களும் இல்லை எங்களிடத்தில்.





இந்த இடத்தில் தான் எனக்கு பழைய "சுமங்கலி ஷாம்பூ "ஞாபகம் வந்து தொலைத்திருக்க வேண்டும்.





அது இன்றைய ஷாம்பூக்களுக்கு எல்லாம் அம்மா ஷாம்பூ .





மஞ்சள் நிறத்தில் ட்ரான்ஸ்பரன்ட் பிளாஸ்டிக் உறைக்குள் நீர்க் கரைசலாய் நெளிந்து கொண்டிருக்கும் .அம்மா ஞாயிற்றுக் கிழமை ஆனால் எனக்கொன்று தங்கைக்கு ஒன்று என்று வாங்கி வந்து கொல்லைப்புறத்து துணி துவைக்கும் கல்லில் உட்கார்த்தி வைத்து தலைக்கு தேய்த்து ஊற்றி விடுவார் . அந்த ஷாம்பூவில் இன்றைய ஷாம்பூக்களைப் போல நுரை ததும்பிப் பொங்கியதில்லை.என்னவோ ஷாம்பூ என்ற பெயருக்கு ஒரு ஷாம்பூ அது.





அதை அடுத்து கிராமப் புறங்களில் சிக் ஷாம்பூ சக்கைப் போடு போட்டது .சிக்கைத் தொடர்ந்து கடல் ஷாம்பூ அது மட்டுமா அப்புறம் வெல்வெட் ஷாம்பூ வாங்க ஆரம்பித்தார்கள் அனேக வீடுகளில் .








இந்த மூன்று ஷாம்பூகளில் சிக் தவிர கடல்,வெல்வெட் எல்லாம் இன்றைக்கு நகரங்களில் பெரும்பாலும் காணக் கிடைக்கவில்லை . ஊருக்குப் போனால் கடைகளில் தொங்க விட்டிருப்பார்களோ என்னவோ தெரியவில்லை .





அப்புறமாய் பொடுகுக்கு என்று கிளினிக் ப்ளஸ் விளம்பரங்கள் பிரசித்தி அடைய ஆரம்பித்தன எல்லா இடங்களிலும் .கொஞ்ச நாட்கள் நுனி கேள்விக் குறி போல வளைந்த நீல நிற கிளினிக் ஷாம்பூ பாட்டில்கள் எங்கள் வீட்டில் இடம் பிடித்துக் கொண்டிருந்தது.





இப்போது தம்பி "ஆல் கிளியர் ஷாம்பூ " மட்டும் தான் தலைக்குப் போடுவானாம் .





தங்கை "பேன்டீன் ஷாம்பூ " இல்லா விட்டால் தலைக்கு குளிப்பதையே ஒத்திப் போட்டுக் கொள்வேன் என்கிறாள் .





என் மகள் "விளம்பரத்துல வர பொண்ணு போல நீளமா தலை முடி வேணும் எனக்கு அந்த ஷாம்பூ தான் வேணும் இல்லனா தலைக்கு குளிக்க வைக்க விட மாட்டேன் போ " என்று விட்டாள்.





அப்பாவைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது.ஷாம்பூ விஷயத்தைப் பொறுத்தமட்டில் பிரச்சினையே கிளப்பாத அவரொரு கண்கண்ட தெய்வம். :)))





தேவ் ..அடடா அடுத்த ஜென்மத்துக்கும் இவரே என் கணவர் ...நானே இவர் மனையாட்டி ( யாரா இருந்தாலும் சரி பேக்கிரவுண்ட்ல "நீயே தான் எனக்கு மணவாட்டி பாட்டு "ஓட வச்சுக்கிட்டு தான் இந்த வரிகளை வாசிக்கணும் ஆமாம் சொல்லிப் போட்டேன் தெரிஞ்சுதா?





அப்புறம் என்னைப் பற்றிச் சொல்லி முடிக்க வேண்டும் இல்லையா? ஷாம்பூ விஷயத்தில் அம்மாவும் நானும் இன்றும் அப்படியே தான் தொடர்கிறோம் எங்கள் நிலைகளில் எந்த மாற்றங்களும் இன்றி. :)








Wednesday, January 12, 2011

சர்மிஷ்டா (மிஸஸ்.யயாதி )

சர்மிஷ்டா (மிஸஸ் .யயாதி )

'சர்மிஷ்டா ' சிலருக்கு சில பெயர்களின் மீது காரணமற்ற பிரேமை ஏற்படக்கூடும்.அப்படி எனக்கிந்தப் பெயரின் மீது ரொம்ப இஷ்டம்.சிறுகதை எழுதத் தோன்றிய ஒவ்வொரு முறையும் இந்தப் பெயரை கதைக்குள் நுழைக்க முடியவில்லையே என யோசித்துக்கை விட்டிருக்கிறேன்.

முதல் முறை இந்தப் பெயரை நான் அறிந்து கொண்டது ஒரு டி.வி தொடரில் தான் . ராமாயணம் மகாபாரதம் தொடர்களை அடுத்து ஞாயிறு காலை பத்து மணிக்கு மகாபாரதத்தில் கிருஷ்ணராக நடித்து பிரபலமான நடிகரின் தயாரிப்பில் மீண்டுமொரு சரித்திரத் தொடர் ஒளி பரப்பாக ஆரம்பித்தது .தொடரின் பெயர் என்னவென்று ஞாபகமில்லை .
ஆனால் ;

அந்த தொடரில் மன்னன் "யயாதி" யாக நடித்த ராஜ் பப்பரையும் அவரது இரு மனைவிகளான தேவயானி மற்றும் சர்மிஷ்டா வையும் இன்னமும் மிகத் தெளிவாகவே ஞாபகமிருக்கிறது . சர்மிஷ்டா ... அன்றிலிருந்து இந்தப் பெயர் எனக்கு மிகப் பிடித்தமாகிப் போனது. பெரிய காரணங்கள் ஏதுமில்லை உச்சரிப்பின் உல்லாசம் எனக் கொள்ளலாம் ;தமிழில் சர்மிஷ்டா ஹிந்தியில் ஜர்மிஷ்டா என்று அந்தத் தொடரில் அவள் அழைக்கப் பட்டதாக நினைவு.

தொடரில் கதைப்படி இளவரசியான சர்மிஷ்டா தன தந்தை அவரது குருவான சுக்ராச்சாரியாருக்கு கொடுத்த வாக்கின் படி சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானிக்கு தாதியாக அனுப்பப் படுகிறாள். ஒரு ராஜகுமாரி தாதியாகிறாள் .அப்படியேனும் சர்மிஷ்டாவை இளப்பமாக்க நினைத்த அவளது பிராயத்து தோழி தேவயானியின் முயற்சி தோற்கிறது ...

காட்டுக்கு வந்த யயாதி மன்னன் தேவயானியை மணப்பதொடு சர்மிஷ்டாவையும் காந்தர்வ மணம் புரிந்து அவளோடும் வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறான்.

தேவயானிக்கு யது ,துர்வாசா எனும் இரண்டு குழந்தைகளும் ,சர்மிஷ்டாவுக்கு புரூ உள்ளிட்ட மூன்று குழந்தைகளும் பிறக்கின்றன. தேவயானிக்கு எப்போதுமிருந்த வருத்தம் தன்னைக் காட்டிலும் யயாதிக்கு சர்மிஷ்டாவே மனதிற்குகந்தவள் எனும் பொறாமை .

இந்த 'புரூ ' தான் தன் தாயின் ஆணைப்படி தன் தந்தை யயாதிக்கு தன் இளமை அனைத்தையும் தத்தம் செய்து விட்டு வயோதிகத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறான். (மிக சர்ச்சைகளைக் கிளப்பிய கதை இது)

இதெல்லாம் புராணக் கதைகள் ,இதல்ல சொல்ல விரும்பிய விஷயம்.

சர்மிஷ்டா இந்தப் பெயர் தமிழில் காணக் கிடைக்கவில்லை. என்.எஸ் மாதவன் எனும் மலையாள எழுத்தாளரின் சிறுகதை தொகுப்புக்கு சர்மிஷ்டா என்று பெயர் வைத்துள்ளதைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது .இதையும் சிதம்பர நினைவுகள்,சூர்ப்பனகை உள்ளிட்ட புத்தகங்களை மொழிபெயர்த்த ப்ரியத்துக்குகந்த கே.வி சைலஜா தான் மொழி பெயர்த்திருக்கிறார். இன்னும் தொகுப்பை வாங்கி வாசிக்கவில்லை நான் அதற்குள் சர்மிஷ்டாவைப் பற்றி பேச வேண்டும் போலிருந்ததால் இந்தப் பகிர்வு.

தெரிந்து கொள்ள விரும்பியது இந்த சர்மிஷ்டா இலக்கிய உலகில் எதனால் முக்கியத்துவம் பெறுகிறாள்?

பெருமைக்குரிய ராஜகுமாரியாக இருந்தும் தந்தை சொல் ஏற்று குருவின் புதல்விக்கு தாதியானதாலா?

அல்லது

தன் கணவனுக்காக மகனின் இளமையை தத்தம் செய்து தரப் பணித்ததாலா?

எதனால் இவள் முக்கியத்துவம் பெறுகிறாள் ? இரண்டுமே ஏற்புடைய செயல்கள் அல்லவென்றே நினைக்கத் தோன்றுகிறது.

Monday, January 10, 2011

ஜிப்ஸிகளும் நரிக்குறவர்களும் காணாமல் போன இந்திய வரலாற்றுப் பக்கங்களும் :


மேட்டிமை மிக்க தேவடியா மகனே :

( கவிதை -இயான் ஹான்குக் -ஜிப்ஸி வரலாற்று ஆய்வாளர் (இங்கிலாந்து)

சீருடையுடனும் உறைந்த புன்னையுடனுமிருக்கும்
மேட்டிமை மிக்க தேவடியா மகனே,
உனது அன்னை எப்படி இருக்கிறாள் ?
எனது அன்னையை
நான் நீண்ட நாட்களாகப் பார்க்கவில்லை

இரண்டாவது அபிப்ராயத்துக்கு இடமில்லையா?
இன்னொருமுறை சொல்
உனது பெருமைக்குரிய கனடாவுக்கு
நான்
பொருத்தமில்லை எனச் சொல்கிறாயா ?

எம்மைப் போன்ற குடிஎற்றதாரர்கள்
பொருத்தமில்லை என்கிறாயா?
சட்டத்திற்கு ஒப்ப அழுத்தமான வார்த்தைகளில்
நான்
குடியேற்றத்திற்கு பொருத்தமில்லை என்கிறாயா?
பரவாயில்லை .

இந்த நரகலை நாங்கள்
உம்மைப் போன்றவர்களிடமிருந்து
எமது வாழ்வு முழுக்க கேட்டு வருகிறோம் .

சிறை அதிகாரிகள்குடியேற்ற அதிகாரிகள்போலீஸ்காரர்கள்.
முகங்கலில்லை எமக்கு சப்தமற்ற ஒன்றரைக்கோடி தொண்டைக்குழிகள் உங்களது தகப்பன் களாலும் உங்களது குழந்தைகளாலும்
பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள்
விரட்டப்பட்டு வருகிறோம்

நீ உருவாக்கி வைத்திருக்கிற எமது உணர்வுகளை
கற்பனையிலேனும் நீ நினைத்துப் பார்த்ததுண்டா ?

என்னை மன்னித்து விடு

உன்னைப் போலவே நடந்து கொள்வதற்கு
என்னை முயற்சி செய்ய விடு
என்னை உள்ளே விடு
என் தந்தையை நான் தழுவிக் கொள்கிறேன் .


அப்புறம் நான் இப்படி மோசமாக நடந்து கொள்ள மாட்டேன்.
//அப்புறம் நான் இப்படி மோசமாக நடந்து கொள்ள மாட்டேன்//
உலகெங்கும் நாடற்றவர்களாக அலைந்து திரியும் ஜிப்ஸிகளின் துயரம் சொல்ல இந்தக் கவிதை ஒன்று போதாதோ?

இந்த அப்புறம் என்ற சொல் இங்கே மிக வலிக்கச் செய்கிறது. யமுனா ராஜேந்திரனின் "ஜிப்சியின் துயர நடனம் " புத்தகத்தில் இருந்த ஒரு கவிதை இது .அவர் ஜிப்ஸிகள் இந்திய பூர்வ குடிகள் என ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார்.

ஈழத் தமிழர்களும் இந்திய பூர்வ குடிகள் தான்.நாம் இந்தியர்கள் என்று ஒருமித்த நோக்கில் கண்டால் மட்டுமே. அவர்கள் தமிழகப் பூர்விக மக்கள் என சுருக்கப் பட்டு விட்டார்கள்,அதனால் ஈழத் தமிழனுக்கு என்ன ஆனாலும் வடக்கில் கவனம் பெறத் தக்க வகையில் எந்த எதிர்ப்பும் எழ வகையற்றுப் போனது,போலவே வட கிழக்கில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு என்ன ஆனாலும் தெற்கே நமக்கும் போதிய அக்கறையின்றிப் போயிற்று.

ஜிப்ஸிகளின் துயரக்கதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது ,பக்கத்து மாநிலத்தில் நடப்பதைக் கூட வேடிக்கை பார்க்கும் பாவனை மட்டுமே காட்டக் கூடும் அண்டை மனித சமுதாயம் நாம் எங்கிருந்து பூர்வ குடிகளைத் தேடி கண்டெடுத்து போஜித்து காபந்து செய்யப் போகிறோம்!!! ஆனால் இங்கே ஜிப்ஸிகளின் துயரக் கதைகளை வாசிக்க நேர்கையில் பதிந்து வைக்க இயலாமல் போன பழங்குடி வம்சங்கள் குறித்த கையாலாகக் கோபங்கள் எழுகின்றன.

இந்தியாவில் ஆரிய ஊடுருவலை அறிந்து கொள்ள ரிக்.யஜூர்,சாம,அதர்வணம் எனும் நான்கு வேதங்கள் இருக்கின்றன. இராமாயண மகாபாரதக் கதைகள் இருக்கின்றன. திராவிட நாகரிகம் பற்றி அறிய சிந்து வெளி,ஹரப்பா மொகஞ்சதாரோ அகழ்வாராய்வுகள் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா எனும் நிலப் பரப்பில் ஆரியர்களுக்கு முன்பிருந்தவர்கள் யார்? அவர்கள் என்ன ஆனார்கள்?

பாண்டவர்கள் சரஸ்வதி நதிப் படுகைகளில் அலைந்து திரிந்த காலங்களில் அவர்களுக்கு மிக வலப்பமானதொரு நாகரிகம் இருந்திருந்தது நிஜமென்றால் அவர்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்தவர்கள் யார்?

பாண்டவர்கள் என்றதும் மகாபாரதக் கதைக்குத் தாவாமல் பாண்டவர்களை ஒரு பழங்குடி இனத் தலைவர்கள் அல்லது வாரிசுகள் என மட்டுமே கொண்டு அவர்கள் தங்களுக்குள் இட்டுக் கொண்ட உட்போரைப் புறம் தள்ளி அவர்கள் யாரிடம் வென்று பெற்ற பகுதி ஹஸ்தினாபுரம் என்று எந்த வரலாறும் எழுதி வைக்கப் படவில்லையா?

சாந்தனு மச்ச கன்னியான மீனவப் பெண்ணை மணந்து அதில் விரிந்த குலம் தானே திருதராஷ்ட்டிரன் பாண்டு உள்ளிட்ட குரு குலம்.சாந்தனுவுக்கு முந்தைய மகாபாரதக் கதை என்ன?!

காண்டவாக் காடுகளை அழித்து பழைய டெல்லியை (இந்திர பிரஸ்தம்) உருவாக்கினார்கள் பாண்டவர்கள் எனில் இந்தியா முழுக்க காடுகளே நிறைந்திருந்தனவா ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பொழுதில்?! காடு திருத்தி நாடாக்கியதில் பூர்வ பழங்குடிகளுக்கு பங்கேதும் இல்லையா? மிகப் பெரும் புதிர்கள் இவை .இந்தப் புதிர்களை அவிழ்க்கத்தான் புத்தகங்கள் தேட வேண்டும்.யாருக்கேனும் தெரிந்தால் அவசியம் இங்கே இந்தப் பதிவை வாசிக்க நேர்ந்தால் தெரிவியுங்கள் .

நிற்க

ஜிப்சிகளுக்கு வருவோம் ,பதினோராம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படையெடுப்பை முறியடிக்க நினைத்த ஆரியர்கள் தங்கள் ஆரிய வீரர்களுடன் இந்திய பூர்வ பழங்குடிகளான லோகர்கள்,குஜ்ஜர்கள்,தண்டாக்கள் உள்ளிட்ட ராஜபுத்திரர்களை தம் சத்ரிய படை வீரர்களுடன் கலந்து போர் முனைக்கு அனுப்பினர். இந்த வகையில் இந்த பழங்குடிகள் பல ஒன்றிணைந்து தான் ஜிப்சிக்கள் எனும் தனியானதொரு பிரிவு தோன்றி இருக்கிறது என்கிறார் இந்நூலாசிரியர்.

ஜிப்சி என்ற சொல்லுக்கு (சிறிய எகிப்தியர்கள்) என்று பொருளாம். உண்மையில் ஜிப்ஸிகள் இந்தியாவின் பஞ்சாப் மாகாணப் பிரதேசங்களில் இருந்து இஸ்லாமியர்களுடன் ஆனா போர் காரணமாக உலகின் பல பாகங்களிலும் சிதறிய ஒரு கூட்டமாக இருந்த போதிலும் ஐரோப்பியர்கள் அவர்களை எகிப்தில் இருந்து வந்த கறுப்பின மக்கள் என்று கருதியதால் வந்த பெயர் தான் "ஜிப்ஸி(சிறிய எகிப்தியர்கள்) .

ஜிப்சிகளுக்கு நிகராக தமிழ் நாட்டில் நரிக்குறவர்களைக் கூறுகிறார்கள் .அவர்களது அடர்த்தியான நிறங்களால் ஆன உடைகள்,நாடோடி வாழ்க்கை முறை,குல கட்டுப்பாடுகள் போன்ற காரணிகள் அதை உறுதி செய்கிறது .

நரிகுறவர்கள் தேர்தல் காலம் தவிர்த்து தேடப் படக் காணோம்,அவர்கள் வழக்கப் படி ஊசி பாசி மணிகளை விற்றுக் கொண்டும் கொக்கு குருவி சுட்டுக் கொண்டும் திரிவதை கிராமங்களில் இப்போதும் பார்க்கலாம். அவர்களுக்கென தொகுப்பு வீடுகள் கட்டப் பட்டுள்ளன என்கிறார்கள் ,அந்த வீடுகள் மருவி சமூக விரோதக் கும்பல்களின் சரனாலயங்கலாகித் தான் போகின்றன ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் .

செங்கல்கள் தூர்ந்த சிமென்ட் பூச்சற்ற சில டப்பா கட்டிடத் தொகுப்புகளை ஊர்களின் ஒதுக்குப் புறங்களில் பேருந்துகளில் கடக்கும் போதெலாம் இந்த வீடுகள் யார்க்காக கட்டப் பட்டவை என்ற குழப்பமே ே மிஞ்சுகிறது,யாருடைய மேம்பாட்டுக்காகவோ என்று!!!

பி.சி,எம்.பி.சி ,எஸ்.சி ,எஸ்.டி , என்று எந்தப் பிரிவிலும் சேர்க்க முடியாதா நரிக்குறவர்களை?

நிஜத்தில் அவர்களுக்கென விண்ணப்ப படிவங்களை நிரப்ப என்ன செய்வார்கள் நரிக்குறவர்கள்?

ரேசன் கார்டுகள்ஒட்டுரிமைக்கான அடையாள அட்டைகள்

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அனுபவிக்க ,

108 அவசர சேவையை அனுபவிக்க

மேற்சொன்ன அட்டைகளை சமர்பிக்கச் சொல்கிறார்களே எந்த அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தாலும் இவைகளை நரிக்குறவர்களுக்கு வழங்கி முடித்து விட்டார்களா?ஒட்டு மொத்த தமிழக மக்கள் thogaiyil நரிக்குறவர்கள் எத்தனை சதவிகிதம் பேர்?

ஜிப்சிகளைப் பற்றிப் படிக்கப் படிக்க இந்த மாதிரி அனாவசியக் கேள்விகள் எல்லாம் எழுவதை தவிர்க்க முடியாது யாரானாலும்.

எந்த மாதிரியான ஒரு எருமை மாட்டு நிம்மதியில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம்?!

தலை வழியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது வாஸ்தவமே . நரிக்குறவர்களுக்காக ,ஜிப்சிக்களுக்காகப் போராட வேண்டாம் .
ஈழத் தமிழனுக்காக உண்ணா விரதம் இருந்து நமது எதிர்ப்பை பிரகடனம் செய்ய வேண்டாம்.

அவர்களை சக மனிதர்களாக உணர்வதில் என்ன அசூயை ?

முன்னேறிய சமுதாயத்திடம் தாக்குப்ப் இடிக்க இயலாமல் பின் தங்கிப் போனாலும் பரவாயில்லை என காடுகளில் தங்கி விட்ட பழங்குடிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடித் தேடித் போய் விடாது தொல்லை கொடுத்தால் தீவிரவாதிகள் உருவாகாமல் என்ன செய்வார்கள்?!
அடக்கப் பட்ட மக்களே தீவிரவாதிகள் ஆக்கப் படுகிறார்கள்.

வரலாற்றை எடுத்துக் கொண்டால் உலோகம்,மின்சாரம் இதைத் தேடித் புறப்படுகையில் தான் பெரும் பெரும் போர்கள் வெடிப்பதாகக் காண முடிகிறது

இதற்கு யுகக் கணக்குகள் அனாவசியம் .

இப்போதும் தண்டகாரண்யத்தில் கொட்டிக் கிடக்கும் பாக்சைடுக்காக அங்கிருக்கும் பூர்விக பழங்குடி மக்கள் இந்திய அரசால் வேறிடம் செல்லுமாறு அச்சுறுத்தப் படுகிறார்கள்.

வலிந்தவர்களின் தேவைகள் எப்போதும் எளியவர்களை விரட்டி அடித்து அபகரிக்கும் குணத்தை வளர்க்கிறது.அன்றைக்கு அரசர்கள் செய்தார்கள் ,இன்றைக்கு ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். வித்யாசம் எதுவுமில்லை.

நாம் நமது காட்டுமிராண்டித் தனத்தை நவீன ஆடைகள்,அலங்காரங்களால் புது மோஸ்தரில் காட்டப் பழகி விட்டோம்.
இந்த நாட்டில் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு இன்னொரு நீதி உண்டு ஒரே நீதி.

வாழத் தெரிந்தவன் -வாழத் தெரியாதவன் .

இதற்குள் சுருங்கிப் போகிறது எல்லாமும். மனசாட்சிகள்,ராஜ தந்திரங்கள், நடுவர்கள் , தரகர்கள், நண்பர்கள் ,எதிரிகள் ,எல்லோரும் இதற்குள் அடங்கி விடுகிறார்கள்.

இது கட்டுரை அல்ல . மேய்ந்த புத்தகங்களின் செரிமானம் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

Friday, December 10, 2010

ஜெயமோகனின் கன்யாகுமரி ( புத்தக விமர்சனம் )



ஒரு வேலை அதீதமாய் தன்னில் மூழ்கிப் போனவர்களுக்கு மட்டுமேனும் இந்தநாவலை வாசித்து முடித்ததும் காதோரமாய் கடலின் இரைச்சலைக் காட்டிலும்அதிகமாய் மனதின் இரைச்சல் கேட்கத் துவங்கலாம். இந்த நாவலுக்குரியவெற்றியென கூறலாம் அதை.

சதா தன்னியல்பற்று தனக்குள் பேசிக் கொண்டே இருக்கும் ஒரு மனிதன் (ரவி)கதையை நகர்த்திக் கொண்டு போகிறான். இங்கு கதை என்பதை விட அவன் தனக்குள்பேசிக் கொண்டே கடக்க முடியாமல் கனத்துச் சுமக்கும் சம்பவங்களின் கோர்வைஎன்பது பொருந்திப் போகலாம்.

விமலாவை,பிரவீனாவை,ரமணியை,ஷை லஜாவைப் புரிந்து கொள்ள முடிவதை வாசிப்பின்ஆழம் என்று சப்பைக் கட்டு கட்டினாலும் இந்தப் பெண்கள் புனிதம்,தெய்வீகம், செண்டிமெண்ட் etc ..etc கான்செப்டில் சிக்கிக் கொள்ளாமல்நழுவிச் செல்வதை எந்த ஆட்சேபமுமின்றி நீடித்த புன்னகையுடன் கடக்கமுடிகிறது.

இவர்களில் கன்யாகுமாரி யார்?

கன்யாகுமரியின் ஐதீகக் கதையை பின்புலமாக வைத்துக் கொண்டு இந்தக் கதையைஎழுதியதாக ஜெயமோகன் தன் குறிப்பில் கூறி இருந்தாலும் கூட இது ஒட்டுமொத்தமாய் பெண்களின் அக மனதை எப்படியேனும் வென்று விட எத்தனிக்கும் ஒருமனிதனின் தனிப்பட்ட துக்கமாகவே மனதில் பதிகிறது.

பெண் சதை தாண்டி யோசிக்கப் பட்டிருக்கிறாள் இங்கு.

ஆனாலும் வெற்றி கொள்ளப்படவில்லை, அவளை வெல்ல முடியாத ஆணின் இயலாமை அவனைதன்னியல்பாய் சுழலுக்குள் தள்ளி சுளித்து மறையுமிடத்தில் முடிகிறது கதை.

கன்யாகுமாரி அவள் ஒரு போதும் எந்த ஆணாலும் வெற்றி கொள்ளப்படப் போவதும்இல்லை ,அவளது தடைகள் மறுப்புகள்...ஏதுமின்றியே படைப்பின் மாயாஜாலம் ஆடும்கண்ணாமூச்சு இது.
ஒரு ஆண் வெறுமே ஆணாக மட்டுமே இருக்கும் போது பெண் குறித்த அவனதுகண்ணோட்டம் படு இழிவானதாகவும் இருக்க முடிந்திருக்கிறது,அவனே தந்தை எனும்நிலையில் பெண்ணைக் குறித்து யோசிக்கையில் அவர்களைப் பாதுகாக்கும்கடமையினால் சதா பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழிநிலைக்கு துரத்தப் பட்டு விடுகிறான். தலை கீழ் மாற்றம் தான்,ஆனாலும் இதுசில கால இடைவெளிகளில் நிகழ்ந்து விடுகிறது என்பதே நிஜம் .இதற்கொருஉதாரணம் இந்த நாவலில் வரும் பெத்தேல்புரம் ஸ்டீபன் .

ரவியை ஒரு சாதாரண மனிதனாக மதிக்கத் தோன்றவில்லை,படு ஆபத்தான சூழ்நிலைப்பிராணியாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறான். எந்நேரமும் அதென்ன மனஉளைச்சலோ?! அறிவு ஜீவியாகவும் இருக்க வேண்டும் ,அழகாகவும் இருக்கவேண்டும் மனைவி என்ற எதிர்பார்ப்பு பொதுப் புத்தி என்று தவிர்த்துவிட்டாலும் கூட கதைப் படி என்ன தான் சாதனையாள இயக்குனராக இருந்தாலும்இத்தனை துஷ்ட சிந்தனை தேவை இல்லை என்றே எண்ண முடிகிறது.அடுத்தொரு இமாலயவெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தம் என்று அவனது சலனங்களைசமாளிக்கத் தேவை இல்லை. இந்த நாவல் முழுக்கவுமே அவன் தன்னைப் பெரியஇவனாகத் தான் நினைத்துக் கொண்டு உலவிக் கொண்டிருக்கிறான்.

//இது கன்யாகுமரி தானா ? கன்யாகுமரி தான் ஆனால் அவனுடன் சேர்ந்துஅந்நகரையே கை விட்டு விட்டு மற்ற அத்தனை பெரும் சென்றுவிட்டிருந்தார்கள்,வெளியேறிவிட வேண்டும் என்ற வேகம் எழுந்த போது தான்பாதைகளோ வண்டிகளோ இல்லாமல் அங்கு அகப் பட்டுக் கொண்டு விட்டதை அறிந்தான்//

இப்படி அவன் அகப்பட்டுக் கொண்டு திணறுவதாகக் கதை முடிகையில்எதிர்பார்த்தது போலவே சந்தோசம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

நாவலில் ஜெய மோகனின் சில வார்த்தைப் பிரயோகங்களும் அவற்றின்பயன்பாடுகளும் மிக்க ஆழமானவை. தன் கல்லூரிக் கால தோழியும்,காதலியுமானவிமலாவின் பாதங்களைப் பற்றி ரவி நினைத்துப் பார்க்கையில் இப்படி ஒருவாக்கியம் ;

//ஆழத்து வேர் போன்ற அசாதாரமான வெண்ணிறம் //

அவளைப் பற்றியகற்பனைகளில் எல்லாம் நர்கீஸ் போல அவளை எண்ணிக் கொள்வது. அப்படியானால்ஆரம்பத்தில் இருந்தே ரவி விமலாவின் தோற்றத்தில் நர்கீஸை தான்காதலித்திருக்கிறான். என்ன ஒரு ஏமாற்றுத் தனம் ! தன்னைத் தானேஏமாற்றிக் கொள்வதின் உச்சம் இது. ஆனால் எல்லோருக்கும் அப்படித் தான்வாய்க்கிறது. இது உலகநியதி.

நாவல் சொல்ல விரும்பியது பெண்ணின் களங்கமற்ற தன்மையாக இருக்குமென்றுநினைக்கிறன். ஒரு சிறுமியாக ,சகோதரியாக ,காதலியாக,மகளாக காலத்திற்கு தகபெண்கள் கொள்ளும் வேஷங்களில் எதோ ஒரு பொழுதில் அவளது நிஷ்களங்கம்தரிசிக்கப் படுகிறது,அந்த மகா தரிசனத்தை ஆண் அவன் எந்த உறவு முறைகொண்டவனாக இருந்த போதிலும் அவனால் அந்த நிஷ்களங்கத்தின் பரிசுத்தத்தின்முன் இயல்பாய் இருக்க முடிவதில்லை, அந்தப் பெண்ணை அவன் வெற்றி கொள்ளநினைக்கிறான். ,முடியாத பட்சத்தில் அவள் மீது அதீத வெறுப்பை அடைகிறான்.மீண்டும் அன்பைத் தேக்கி குழந்தையாகி அவளிடமே சரணாகதி ஆகிறான்,இந்தசக்கரத்தின் சுழற்சியில் சிக்கிக் கொண்டு வெளி வரத் தெரியாமல்பைத்தியமாகிறான் .

இந்து புராணங்களில் இதனால் தான் சிவனை "பித்தா பிறை சூடி " என்றெல்லாம்பாடி வைத்தார்களோ என்னவோ ?!

தேவியை மணந்து கொள்ள ஸ்தாணுமாலயன் வந்து கொண்டிருக்கிறார்!யுகம் யுகமாய் நீண்டு கொண்டிருக்கும் பயணம் அது...இன்னும் முடியக்காணோம்...தேவி ஸ்தானுமாலயனை எதிர் நோக்கி ஒற்றைக் கல் மூக்குத்தி மினுங்க கடற்கரை மொட்டைப் பாறையில் அர்த்த ராத்திரிகள் தோறும் தவமிருக்கிராளாம்.

ஸ்தாணுமாலயன் சிவன்,விஷ்ணு,பிரம்மா மூன்றும் கலந்த திரி சக்தி ரூபம்.ஆக்கல்,அழித்தல்,காத்தல் மூன்றையும் உள்ளடக்கிக் கொண்ட க்ரியா சக்தி அவன்என்கிறார் ஜெயமோகன் . எத்தனை திறமைகள் இருந்தும் பாவம் இன்னும் தேவியைஆட்கொள்ளக் காணோம்.


காமம் ...யாமம் நாவலின் ஓரிடத்தில் எஸ்ரா இப்படி எழுதி இருக்கிறார்,முசாபர் அலி அத்தர் யாமம் தயாரிக்கும் கலையை தனக்கடுத்த சந்ததிக்கும்கடத்தும் நோக்கத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெறுவதற்காக தன்னிலும் மிகஇளைய சுரையா என்ற பெண்ணை மூன்றாம் தாரமாக மணந்து அழைத்துவருமிடத்தில்...
அவளோடான கூடலில் சுரையா அந்த நிகழ்வை கணவனுடனான காமம் தனக்கு மூக்குசிந்தி போடுவதைப் போல தான் என்று நினைத்துக் கொள்வதாக ஒரு வரி.சுரையாவுக்கு வயிற்றுப் பாடே பிரதானமாக இருத்தலைப் போல இங்கு கன்யாகுமரியில் பிரவீனாவுக்கு தான் விருது வாங்கும் நடிகையாவதே பிரதானம்.அதற்காக ரவியைப் புறம் தள்ளி வேணு கோபாலனுடன் சென்று விடுகிறாள் அவள்.

காமம் பெண்களின் கன்னிமையை பாதிப்பதில்லை ,அவள் எதற்காகவோ நீண்டகாத்திருப்பில் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள். இதை மிகஅந்தரங்கமான ஓரிடத்தில் அவள் பாதுகாத்து வைத்திருக்க கூடும் ,அந்தஅந்தரங்கத்தை அறிந்து கொள்ள முடியாமல் சதா தோற்றுப் போகும் நிலையில் தான்ஆண் மிக்க குழப்பத்திற்கு ஆளாகிறான். பெண்ணின் மீதான அவனின் வெறுப்பும்விருப்பும் மாறி மாறி இங்கிருந்து தொடங்கி சதா இளைப்பாறுதல் இன்றிசுழன்றடிக்க ஆரம்பிக்கிறது.

இந்த நாவலை கி.ரா வின் கன்னிமை சிறுகதையின் பாதிப்பில் எழுதியதாகஜெயமோகன் கூறி இருக்கிறார் தன் முன்னுரையில். ஒப்பிட்டுப் பார்த்துஏற்றுக் கொள்ள முடிகிறது. கி.ரா வின் நாச்சியாருக்கும் ஜெயமோகனின்விமலாவுக்கும் ...ஏன் பிரவீனாவுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்யாசங்கள்இல்லை மனதளவில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்களின் அடிப்படையில்.


இந்த நாவலில் ஆட்சேபிக்கத் தகுந்த ஒரே ஒரு இடமென்றால் அது இது தான்.


// அழகில்லாத பெண்கள் ஆண்களை குரூரமானவர்களாக ,அற்பமானவர்களாக,நீதியுணர்வே இல்லாதவர்களாக ஆக்கும் விதத்திற்கு இணையான ஒன்றைக் கூறவேண்டுமெனில் மான் குட்டியை அடித்துக் கிழித்துத் தின்னும் சிங்கத்தின்இயற்கையான குரூரத்தை தான் //

கூடவே கன்யாகுமரியின் ஐதீகம் தேவி ஸ்தானுமலயனுக்காக கடற்கரையில்காத்திருப்பதாகச் சொல்லப் பட்டிருப்பது சரி தான்,ஆனால் ஸ்தாணுமாலயன் ஏன்அவளைக் காக்க வைத்தார்? இன்னும் வராமல் போனதற்கு காரணக் கதைகள்ஏதுமில்லையா? அது சொல்லப் படவில்லை இங்கே ,அதனால் ஒரு முற்றுப் பெறாததன்மை ...ஒரு வேளை எனக்கு மட்டும் தான் அந்த ஐதீகக் கதை முழுமையாகத்தெரியாம்லிருக்கிறதோ என்னவோ! கதை தெரிந்தவர்கள் யாரேனும் ஜெயமோகன் இந்தநாவலில் சொல்லாமல் விட்டதை வந்து முடித்து வையுங்கள்


நாவல் - கன்யாகுமாரி
ஆசிரியர் - ஜெயமோகன்
பதிப்பகம் - கவிதா பப்ளிகேசன் வெளியீடு
விலை - ரூ 90


Saturday, November 27, 2010

அயோத்தி தீர்ப்பு சர்ச்சைகளும் சாமான்யர்களின் சில சந்தேகங்களும் :



அயோத்தி தீர்ப்பு மூன்று தரப்பினருக்கும் சர்ச்சைக்குரிய 2 1 /2 ஏக்கர் நிலத்தைப் பங்கிட்டுக் கொடுத்துள்ளது ,இந்த தீர்ப்பு நேர்மையான தீர்ப்பில்லை என பலரும் விமர்சிக்கிறார்கள். பத்தரிகைகளில் வாசிக்கிறோம். எனக்கொரு சந்தேகம்

மொத்தமுள்ள நிலமும் பாபர் மசூதி இருந்த காரணத்தால் முஸ்லீம்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வந்திருந்தால் அப்போதும் அது நேர்மையான தீர்ப்பென்று யாரும் ஒத்துக் கொண்டிருக்கப் போவதில்லை.
அல்லது இது பாபர் மசூதிக்கும் முன்பே ராமர் கோயில் இருந்த இடம் ,முஸ்லீம்கள் ஆக்ரமித்த இந்துப் பகுதி இது எனக்கூறி இந்துக்களுக்கே மொத்தமுள்ள நிலத்தையும் சொந்தம் என தீர்ப்பு வழங்கி இருந்தால் அதையும் நேர்மையான தீர்ப்பென்று யாரும் ஒப்புக் கொண்டிருக்கப் போவதில்லை.


மூன்று தரப்பையும் சாந்தப் படுத்தலாம் என்று நிலத்தை மூன்றாகப் பிரித்து தீர்ப்பு வழங்கினால் அதுவும் நேர்மையான தீர்ப்பில்லை .
அந்த நிலம் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் புனித பூமி என்ற புனித பிம்பத்தை அலட்சியப் படுத்தி அரசாங்கமே அந்த நிலத்தை கையகப்படுத்திக் கொண்டு தன் பொறுப்பில் அரசு பொது சொத்தாக அறிவித்து தீர்ப்பளித்தால் என்ன நிகழும்?


"அயோத்தி மியூசியம் " என்று தகர போர்ட் மாட்டி அந்த நிலத்தை புராதன அடையாளங்களில் ஒன்றாய் அறிவித்து யாருக்கும் சொந்தமில்லை என்று ஆக்கி விட்டால் அப்போது இந்த தீர்ப்பைக் குறித்து என்ன பேசிக் கொள்வார்கள் எல்லோரும்!!!

சரி அப்படியானால் இந்த வழக்கில் மூன்று தரப்பினரையும் மனமொத்து ஏற்றுக் கொள்ள வைக்கும் படி நேர்மையான தீர்ப்பை எப்படி வழங்கலாம் என்று யாராவது இதுவரை பரிந்துரைத்திருக்கிரார்களா?அப்படி ஒரு பரிபூரணமான தீர்ப்பை யாராவது வைத்துக் கொண்டு அதை கொண்டு சேர்க்க ஆளின்றி தவிக்கிறார்களா?


இந்த வழக்கில் இன்னும் எந்த விதமான தீர்ப்பை எதிர்பார்க்கிறார்கள் ?
ராமாயணம் கற்பனை ஆனால் அயோத்தி கற்பனை அல்ல ...வரலாறும் கற்பனைக் கதை அல்ல, ராமன் கடவுள் அல்ல ,ஆனால் ராமன் என்ற இளவரசன் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அசோகரை ஒப்புக் கொண்டால் ராமனையும் கொஞ்சம் கன்சிடர் செய்தாக வேண்டும் . எழுதி வைக்கப் படாத வரலாறு பல கற்பனைகளைத் திறந்து விடுகிறது.


இந்து மதத்தின் வேதங்கள்,உபநிசத்துகள்,வெறும் கற்பனைகள் மட்டுமாக இருக்க முடியாது,யாகங்கள்,பலிகள்,வர்ணாசிரம முறைகள்,கடவுள் கொள்கைகள்,வழிபாட்டு முறைகள். இதையெல்லாம் புறம் தள்ளி தெளிவான கண்ணோட்டத்தில் வரலாற்றை விளக்கும் நூல்கள் இருக்கக் கூடும்.
வரலாற்று நூல்கள் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றே உறுதி செய்திருக்கின்றன. ராமனை கடவுளாக எண்ணி அல்ல. பூர்வ பழங்குடி தலைவனின் மகனாக ராமன் இருந்திருக்கலாம். ராமன் இருந்த பொது அதே காலத்தில் எழுதப் பட்டதல்ல ராமாயணம், மகாபாரதமும் நிகழ்ந்த அதே காலத்தல் எழுதப் பட்டதல்ல. மனிதன் நாகரிக வளர்ச்சி அடையும் தோறும் சிறிது சிறிதாக பல பிற் சேர்க்கைகளுடன் இந்த இரண்டு காவியங்களும் படைக்கப் பட்டிருக்கலாம்.

அசோகர் மரம் நட்டார்,குளம் வெட்டினார், கலிங்கப் போருக்குப் பின் புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு இந்தியாவில் சாந்தி நிலவ நிறைய கட்டளைகள் பிறப்பித்தார் என்று தான் நம் பள்ளிகால வரலாற்றுப் பாடம் சொல்கிறது. அசோகர் ஒரு கொடுங்கோல் மன்னராகவும் இருந்திருக்கிறார் என்றால் அதை உடனே மறுக்க ஒரு கூட்டம் இருக்கும்.

இப்படித்தான் நடந்த நிஜ சம்பவங்களில் எவை தமக்கு சாதகமாக இருக்க கூடுமோ அவற்றை மட்டுமே மிகைப்படுத்தி எழுதி இருக்கிறார்கள் அன்றைய வரலாற்று ஆசிரியர்கள். ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் புறம் தள்ளி விட்டு ராமன் கடவுள் என்ற எண்ணத்தையும் புறம் தள்ளி விட்டு வெறுமே பண்டைய இந்திய வரலாற்றை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டால் .


இந்தியாவில் பலம் பொருந்திய பேரரசு நிலையில் ஆட்சி செலுத்திய மௌரியர்களுக்கு முன்பு மகதர்களே சொல்லிக் கொள்ளும் படியான அரசாட்சியை வழங்கி இருக்கிறார்கள். மகதர்களுக்கு இணையான அன்றைய மற்றொரு அரசு கோசலம் .

மகதர்களும் கோசலர்களும் மட்டுமே அரசுகள் என்றிருந்த நிலையில் கோசலம் மகதத்தைக் காட்டிலும் செல்வாக்குடன் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன பண்டைய சரித்திரத்தில்.

நினைவல் கொள்ளுங்கள் ;

மௌரியர்களுக்கு முன்பே இந்தியாவில் மனித பெருக்கம் சில லட்சங்களில் மட்டுமே இருந்திருக்க வாய்ப்பிருந்த அந்த நாட்களில் வடக்கில் இருந்த இரண்டே ராஜ்யங்கள் மகதமும் கோசலமும் மட்டுமே. இதற்கான சான்று ;

//Stone age To Modern age ...( Population -A Look )

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பழைய கற்காலத்தில் சுமார் 250 மனிதர்கள் தான் இருந்தனர் ,அவர்களும் 10 சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்திருந்தனர் என புதை பொருள் ஆராய்ச்சியாளர் கிரஹாம் க்ளெர்க் கூறுகிறார்.

இங்கிலாந்து ,ஸ்காட்லாந்து ,அயர்லாந்து ஆகிய பகுதிகளில் இடைக்கற்காலத்தில் மனித சமூகத்தில் 4500 நபர்களும் ;

புதிய கற்காலத்தில் 20,000 நபர்களுமே வாழ்ந்திருக்க சாத்தியமிருப்பதாக மேற்படி தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.

வரலாற்றுக்கு முந்தைய கற்காலங்களில் வாழ்ந்த பூர்வகுடியினர் வேட்டைத்தொழில் செய்தே வாழ்ந்து வந்தனர்.அந்த மனிதர்களுக்கு உணவை சேகரிக்க மட்டுமே தெரிந்திருந்தது.

உணவு உற்பத்தி பற்றி அம்மக்கள் அறிய நேர்ந்த பல ஆயிரம் ஆண்டுகளின் பின் கி.மு 2000 ஆண்டுக் காலத்தில் புதிய கற்காலத்தில் இருந்த மனிதர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு எண்ணிக்கை கொண்ட மனிதர்கள் மட்டுமே வாழ்ந்திருக்க சாத்தியம் உண்டு.

இதற்கு சம காலத்தில் இந்தியாவிலும் இதைப் போல ஒரு மதிப்பீடு சாத்தியமில்லை ,இந்திய துணைக் கண்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் கற்காலத்தில் பத்து சதுர மைல்களுக்கு ஒருவருக்கு மேல் இருந்திருந்தால் அதுவே மிகவும் வியப்புள்ளது.

ஆதார நூல்கள் :

பண்டைய இந்தியா -D .D .KOSAMBI
மித் அண்ட் ரியாலிட்டி -D .D .KOSAMBI
பதினோராம் வகுப்பு -வரலாறு புத்தகம்
THE HISTORY OF ARYAN RULE IN INDIA - E .B .HAWELL //


மற்றவை எல்லாம் சிந்திச் சிதறிக் கிடந்த பழங்குடி வம்சங்கள் .பழங்குடி வம்சங்களில் இருந்து வந்தவையே இவ்விரு ராஜயங்களும்,

கோசலத்தின் தலைநகரமாக அயோத்தி இருந்திருக்கிறது ,அன்றைய காலத்தில் மன்னருக்கு வயது வந்த மகன்கள் இருப்பின் அதிகாரப் போட்டியில் இளவரசர்களே தந்தையை கொள்ளும் அபாயம் இருந்ததால் சில மன்னர்கள் வயது வந்த மகன்களை நாடு கடத்தும் தண்டனை வழங்கி நாட்டை விட்டு அனுப்பி இருக்கிறார்கள்.

இத்தகு பல உதாரணங்கள்;

மகதத்தின் இளவரசன் அஜாத சத்ரு இப்படி நாடு கடத்தப் பட்டவனே

கலிங்க இளவரசன் விஜயன் நாடுகடத்தப் பட்டு இலங்கைத் தீவில் வந்திறங்கிய கதை மகாயானத்தில் உண்டு .

இப்படித் தான் ராமன் நாடு கடத்தப் படும் தண்டனை அடைந்த இளவரசனாக தென்னிந்தியாவுக்கு வந்திருக்க கூடும் ,

சீதையைப் பற்றி சரித்திரத்தில் சான்றுகள் காணோம்.

ஆனால் ராமன் வடக்கில் (கோசலத்தில்)இருந்து தக்காணம் கடந்து கோதாவரி நதி தாண்டி தென்னிந்தியக் காடுகளை கடந்ததற்கு சான்றுகளாகக் காட்டப் படுபவை உத்திரா பத வணிகப் பாதைகள். ராமன் அயோத்தியில் இருந்து தென்னிந்தியாவுக்கு வந்த பாதையே பிற்பாடு மிகப் பயனுள்ள உத்திரா பத வர்த்தகப் பாதைகலாயின என வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப் படுத்துகின்றனர்.

ராமர் கோயிலைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை ஆனால் ராமர் பிறந்த இடம் அயோத்தியின் அந்த சர்ச்சைக்குரிய நிலமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பது ஏற்றுக் கொள்ளத் தக்க வாதமே.


மகதத்தில் பிம்பிசாரரை அறிவோம் ,கோசலத்தில் பசேனாதி என்றொரு மன்னர் இருந்து ஆண்டிருக்கிறார். மகத கோசல போர்களில் கோசலத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு மகதம் நிலைபெற்றது. மகதர்களுக்குப் பின்பு மௌரியர்கள் வந்தனர்.


பெரும்பாலான நமது வரலாற்றுப் பாடங்கள் மௌரியர்களில் இருந்து தான் விரிவாகத் தொடங்குகிறது. புறக்கணிக்கப் பட்ட அதற்கு முந்தைய காலங்களை தூசி தட்டி கொஞ்சம் சேர்க்கலாம். அப்படிச் சேர்த்தால் இந்துமத கடவுள் நம்பிக்கை எனும் அடிப்படையே ஆட்டம் காணும் வாய்ப்பிருக்க கூடும் என்பதால் அந்த முயற்சி எதையும் யாரும் செய்யவில்லையோ என்னவோ !

நாகபட்டினத்து புத்த விகாரத்தை இடித்து சூரையாடி அதை வைத்தே ஸ்ரீ ரங்கம் கோயில் கட்டப் பட்டது என்று வினவில் வாசித்தேன் , நாகபட்டினத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பல இடங்களில் செல்வாக்கோடு இருந்த பல கோயில்களும் பௌத்த ஸ்தூபங்கள்,மடாலயங்களும் இடித்து நிர்மூலப் படுத்தப் பட்டு அங்கிருந்து கிடைத்த அறிய பொருட்களைக் கொண்டே தாங்கள் சார்ந்திருக்கும் அல்லது ஆதரவளிக்கும் மதங்களின் கடவுளர்களுக்கு இந்திய மன்னர்கள் கோயில்கள் கட்டினர். சோழர்கள்,பல்லவர்கள்,விஜய நகர மன்னர்கள்,முகலாயர்கள், என்று விளக்கில்லை இந்தப் புராதன வழக்கத்திற்கு.

வரலாற்றில் ஜெயித்தவர் ...தோற்றவர் என்றே பேதம் பிரித்துப் பார்க்க முடிகிறது,ஆனால் இயல்பான குணநலன்கள் எந்த மன்னர்களுக்கும் சாம்ராஜ்யங்களுக்கும் மாற்றில்லை, ஜெயித்தவர்கள் சூறையாடினர் தோற்றவர்களின் செல்வங்களை,(இந்த செல்வங்கள் என்பதன் கீழ் பெண்கள்,அஃறிணை உயிர்கள்,பொருட்கள்,அரண்மனைகள்,கோயில்கள் எல்லாமே அடங்குகின்றன)

அவர்கள் அன்று இடித்தார்கள் நாங்கள் இன்று இடிக்கிறோம் இந்த நிலை எப்போதும் மாறுவதில்லை.

இதில் எங்கே நிற்கிறது மனித உரிமைகளும் மனித நீதிகளும்?!!!

Friday, November 19, 2010

யதுகுல கரிய வீரன் : ( Pages from History )

பண்டைய இந்தியா  ( part -2 )


For  part - 1  click this link ; 

http://karthigavasudev.blogspot.com/2010/11/view.html 



யதுகுல கரிய வீரன் : ( Pages from History )

குரு வம்சத்து இளவரசர்கள் பாண்டவர்கள் மற்றும் கௌவரவர்களைப் போல யது குல தலைவனாக இருந்த மானிடனே கிருஷ்ணன் (கரிய நிறத்தவன்) ,இந்த கிருஷ்ணன் மகாபாரதத்தில் தெய்வ அந்தஸ்தைப் பெற்றது எங்கனம் என்ற விவரிப்பு சரித்திரத்தில் எங்கும் காணோம். ஆனால் கிருஷ்ணன் கோரஸ் ஆங்கிரச எனும் முனிவரின் மானுட சீடனாக இருந்தான் என வரலாறு சான்று காட்டுகிறது

ஆரிய மன்னர் குடும்பத்து இளவரசர்கள் இந்த குருக்களில் எவராவது ஒருவரிடம் 12 ஆண்டுகள் குருகுல வாசம் செய்து கலைகளைக் கற்க வேண்டும் என்பது வேத கால நியதி. அங்கே குருகுலத்தில் அவர்களுக்கு கற்பிக்கப் பட்டவை வேதங்களோடு முக்கியமாகப் போர் தந்திரங்கள்,போரிடும் முறைகள் ,யானை,குதிரை முதலான விலங்குகளை கையாளும் ,பழக்கும் முறைகள் ,ஒவ்வொரு இளவரசனும் தான் சார்ந்த குலத்தின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் தினமும் தத்தமது முன்னோர்களின் புகழைப் பாடும் பாடல்கள் போன்றவையே.
யது குல கிருஷ்ணன் வாழ்ந்த காலமாகக் கருதப் படுவது வேத காலம் ,ஆனால் அதற்கும் முன்பே வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தாங்கர்கள் எனும் பழங்குடியினர் ,இவர்களது தொழிலும் மேய்ச்சல் தொழிலே ,ஆயர்களைப் போலவே தான் அப்படியெனில் யது குல ஆயர்களும் தாங்கார் குல மக்களும் ஒருவரே தானா என்ற ஐயம் வர நேர்கிறது, இருக்கும் பட்சத்தில் யது குல ஆயர்களைத் தான் இந்தியாவின் மிகப் பூர்வ பழங்குடிகளாகக் கருத முடியும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு பிரத்யேக ஆயுதம் உண்டென்பது தெரியும் தானே?!

கிருஷ்ணனின் ஆயுதம் என்ன? சக்ராயுதம்

பலராமனின் ஆயுதம் என்ன? ஏர் கலப்பை

கிருஷ்ணனின் சக்ராயுதம் வந்த கதை :

வேத காலத்திற்கு முன்பிருந்த காலத்தில் சக்கரப் படை எறிதல் என்பது போர்முறைகளில் ஒன்றாக இருந்தது ,தட்டையான கனத்த சக்கரம் போன்ற இந்த ஆயுதத்தை விட்டெறிந்தால் பகைவர்களின் தலையை அறுத்து வீழ்த்தும் அளவுக்கு அது கூர்மையானது ,இது வேத காலத்திற்கு உரியதல்ல,புத்தர் தொன்றுவதகு வெகு காலம் முன்பே ,இது வழக்கொழிந்து போய்விட்டது .

ஆனால் மீர்சாப்பூர் மாவட்டத்தில் காணப்ப்படும்குகைச்சித்திரம் ஒன்றில் ஒரு தேரோட்டி அது போன்றதோர் சக்ராயுதத்தால் பூர்விக குடிமக்களைத் தாக்கும் காட்சி உள்ளது.இது கிருஷ்ணனைப் பற்றி அறிவதற்கான மிகச் சிறந்த தொல்பொருள் சான்றென நம்பப்படுகிறது.


பலராமனின் ஏர் கலப்பை :


சேகரித்துக் கொண்டு காடுகளில் அலைந்து திரிந்து ஆநிரைகளை (கால்நடைகளை மேய்த்துக் கொண்டு) நாடோடிகளாக வாழ்ந்த பூர்வ குடிமக்கள் காடுகளைத் திருத்தி விவசாய நிலங்களாக மாற்றுகையில் ஏர்கலப்பை முக்கியத்துவம் பெறுகிறது,பூர்வ பழங்குடியினர் நாடோடி வாழ்வு முறையை விட்டு பழங்குடி விவசாய முறைகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த காலம் என இதைக் கணக்கில் எடுத்தால் பலராமனுக்கு ஏர்கலப்பை ஆயுதம் பொருந்தி வருகிறது தானே!

கிருஷ்ணன் மதுராவை ஒட்டிய கோகுலத்தை விட்டு தன் கூட்டத்தாரோடு பூலி பெயர்சிக்காக (இதற்கு தனியே விளக்கம் தர வேண்டும் )

பூலி பெயர்ச்சி :

கால்நடைகளை மேய்த்துக் கொண்டு காடுகளில் வேட்டையாடியும் இயற்கையாய் கிடைத்த பழங்களை உண்டும் வாழ்ந்த மனித கூட்டம் அல்லது குழுக்கள் மாரிக் காலத்தின் போது முன்னர் இருந்த இடங்களை விட்டு அதிகமாக ஈரம் தங்காத தரைப் பகுதிகளை நோக்கி இடம் பெயர்வதையே பூலி பெயர்ச்சி என்கிறார்கள்) இந்த பூலித் தடங்கள் பின்னாட்களில் மிகச் சிறந்த வர்த்தகப் பாதைகளாக மாறினவாம். மிகச் சிறந்த உதாரணங்கள் ;
தட்சிணா பாதம் (தெற்கு நோக்கிய காலடித் தடங்கள் அல்லது பாதைகள்) ராமனின் தெற்கு நோக்கிய பயண வழிகளைக் கூறலாம் .
உத்திரா பதம் (மேற்கு நோக்கிய காலடித் தடங்கள்)

வடக்கே மௌரிய சாம்ராஜ்யம் நிலை பெற்ற போது தெற்கில் அத்தகைய சாம்ராஜ்யங்கள் அமையாமல் போனதற்கு தெற்கை (தீப கற்பத்தை ) அடைய வடக்கில் இருந்து வருபவர்கள் கோதாவரி நதியை ஒட்டிய அடர் வனங்களையும் கர்னாடக குடகு மலைக் காடுகளையும் தாண்டி வர வேண்டிய சூழல் இருந்தது .காடுகளை அழிப்பது அத்தனை லேசுப் பட்ட காரியமில்லை அதனால் தெற்கில் நிலையான அரசுகள் தோன்ற சற்றே காலங்கள் நீண்டிருக்கலாம்.

கிருஷ்ணனைப் பற்றி பேசவாரம்பித்து விட்டு எங்கோ போய்விட்டேன்.
கிருஷ்ணன் கோகுலத்தை விட்டு இப்படி பூலி பெயர்ச்சியாக அடுத்து சென்ற இடத்தின் பெயர் பிருந்தா வனம் (விருந்தா வனம் ) விருந்தா தான் பிருந்தா என்றானது. பிருந்தா அல்லது விருந்தா என்பவள் ஒரு தெய்வீக கன்னி.அல்லது எதோ ஒரு தாய் தெய்வத்தின் மனித வாரிசு எனக் கொள்க . இந்தப் பெண்ணை கிருஷ்ணன் மணந்து கொண்டு பிருந்தாவனத்தை அடைகிறான். இந்த பிருந்தாவின் பிரதிநிதியாக தெய்வீக துளசி செடி குறிப்பிடப் படுகிறது. ஆண்டு தோறும் தவறாது கிருஷ்ணன் இந்த துளசி செடியை மணக்கும் சம்ரதாயம் இப்போதும் வழக்கத்தில் இருக்கிறதாம்.
இந்த கதைக்கான பூர்வ மூலம் பண்டைய மனிதர்கள் பின்பற்றிய பலி சடங்குகளில் இருந்து ஆரம்பமாகிறது. அதைப் பற்றி பிறகு பேசலாம்.



ஜாதி வந்த கதை : (Pages From History ...)

பூர்வ இந்தியப் பழங்குடி வம்சங்கள் :

மோர் ஓரான் சந்தால் வஜ்ஜா தாங்கர்கள் லிச்சாவிகள்
மேற்சொன்ன மோர் வம்சத்தில் மோர் என்ற சொல் மயிலைக் குறிக்கிறது. மேலும் இந்த மோர் பூர்வ பழங்குடியினர் தான் மகதத்தில் முதல் விஸ்தீரணமான நிலையான இந்தியப் பேரரசை அமைத்த மௌரியர்கள் .இவர்கள் மூர் வம்சத்தார் என்றும் அழைக்கப் பட்டார்கள். பூர்வ இந்தியப் பழங்குடி மன்னன் சந்திர குப்த மௌரியர் இந்தோ ஆரியப் பழங்குடி வம்சமான லிச்சாவி இளவரசி குமார தேவியை மணக்கிறார். இந்த சந்திரகுப்தரின் அவையில் இருந்த மதியூக பிராமண அமைச்சர் கௌடில்யர். இவர் எழுதியதே " அர்த்தசாஸ்திரம் ".

மகத ராஜ்யத்தைப் பற்றி பிறகு பேசலாம்.

" மூர் " பழங்குடி சார்ந்து மேலும் சில செய்திகள் ;
அதாவது இந்தப் பழங்குடிப் பெயர்கள் அனைத்துமே முதன் முதலில் மனிதன் வேட்டையாடி உணவைச் சேகரித்து காட்டுக்குள் அலைந்து திரிந்து வாழ்ந்த காலத்தே ஒரு குழு பிற குழுக்களிடம் இருந்து வேறுபடுத்த தங்களது வேட்டைப் பொருளை அல்லது பிராணியை வைத்து குலச் சின்னங்களை உருவாக்கிக் கொண்டார்கள் என்பது தான் வர்ணாசிரம முறைக்கு அடிப்படை.
அப்படியானால் மேற்கண்ட தகவல்களை வைத்துப் பார்த்தால் மோர் வம்சத்தை அல்லது குலத்தை சார்ந்த பழங்குடிகள் ஆதியில் மயில் வேட்டையில் பிரசித்தி பெற்றவர்களாக இருந்திருக்கலாம்.

மோர் வம்சத்தினர் ஆண்ட பகுதி மகதம் தற்கால பீகார் மாநிலம் ,இதன் தலைநகர் பாட்னா தான் அப்போதும் பிரதான தலைநகராக இருந்துள்ளது, இது தவிர தட்ச சீலம் மற்றும் உஜ்ஜயினி எனும் இரண்டு துணை தலைநகரங்களும் இருந்தன மௌரியர்களுக்கு .சந்திர குப்த மௌரியரின் மூன்றாம் தலைமுறையாக அசோகர் வருகிறார். இவரது தந்தை பிந்து சாரர்.
சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவுக்கு படை எடுத்து வந்த அலெக்சாண்டர் தாம் வென்ற இந்தியப் பகுதிகளின் பிரதிநிதியாக செல்யூகஸ் நிகேடரை நியமித்து விட்டு அவர் மாசிடோநியாவுக்குப் பயணித்து இடையில் பாபிலோனியாவில் நோய் வாய்ப்பட்டு மலேரியாவில் இறந்து போகிறார்.
அந்த செல்யூகஸ் நிகேடரின் மகளை பிந்து சாரர்(சந்திர குப்தரின் மகன்) மணந்து கொள்கிறார். இதனால் கிரேக்க மௌரிய உறவு பலபடுகிறது. ஆனால் சக்ரவர்த்தி அசோகரின் தாய் ஒரு கிரேக்கப் பெண்ணாய் இருக்க வாய்ப்பில்லை என சரித்திரம் குறிப்பிடுகிறது .
மகதர்கள் பெரிதாய் ஜாதிகளை மதிக்கிறவர்களாக இல்லை ,அவர்கள் தங்களது ராஜீய விஸ்தீரனத்திற்காக பழங்குடிகளிலும் திருமண உறவு வைத்துக் கொண்டார்கள் .குப்தர்களும் அப்படியே உதாரணம் பிந்துசாரரின் கிரேக்க மனைவி .பண்டைய கிரேக்கர்களைப் போல அல்லாது எல்லைப் புறத்து மாசிடோனியர்கள்(அலெக்சாண்டர் ) கூட பெரிதான ஜாதிப் பற்றுடையவர்கள் அல்லர்.

Wednesday, November 10, 2010

யாருக்கு தருவீர்கள் மனநல சிகிச்சை ?!



கோவை சிறுவர்கள் இரட்டைக் கொலை சம்பந்தமாகவும் குற்றம் சாட்டப் பட்ட மோகன் ராஜ் என்கவுண்டர் தொடர்பாகவும் பல்வேறு கருத்துகள் நிலவும் இந்த வேளையில் பலரது முக்கியமான ஆச்சரியம் என்னவேனில் நாடெங்கும் பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதும் குற்றம் வெளித் தெரியாமல் இருக்க கொலை செய்யப் படுவதும் தொடர்ந்து பத்திரிகைகள் தொலைகாட்சி ஊடகங்கள் வாயிலாக பரவலாக தினசரி நிகழ்வாக ஆகி விட்ட இன்றைய நிலையில் இந்த கொலைகளுக்கு இத்தனை முக்கியத்துவம் ஏன் என்பது பெருவாரியானவர்களின் சந்தேகமாக ஆகி விட்டிருக்கிறது. 

     

உலகில் எங்கெலாம்  குழந்தைகள்   மனிதத்தன்மையற்ற மிருகங்களால் துன்புறுத்தப் படுகிறார்களோ அங்கெலாம் உடனே மகாப் பெரிய கடவுள் பிரத்யட்சமாகி அவர்களை தண்டிப்பானே எனில் இந்தச் சந்தேகம் அவர்களுக்கு வந்திருக்காது.


கடவுள் கூட பாரபட்சம் பார்ப்பாரென்றே நினைக்க வழி இருக்கிறது பாருங்கள்


சொல்ல வந்த விஷயம் அதுவல்ல;

அந்த இரு குழந்தைகளும் கொலை செய்யப் பட்ட விதம் ,அவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆன பள்ளி வேன் டிரைவரால் ,உங்களுக்குத் தெரியாதா தமிழகத்தில் முக்கால்வாசிப் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தனியார் வேன்களையும் ஆட்டோக்களையும் நம்பி இருக்கின்றனர் என்பது. அப்படிப் பட்ட நிலையில் ஒரு கால்டாக்சி டிரைவரால் திட்டமிட்டு நடத்தப் பட்டதாக ஒப்புக் கொள்ளப் பட்ட இந்த கொடூரச் செயல் அதீத மிரட்சியுடன் தான் பலராலும் கவனிக்கபட்டுள்ளது என்பதில் என்ன பெரிய ஆச்சர்யம் இருக்கக் கூடும்?

அந்தக் குழந்தைகளின் பாட்டி அவர்கள் இருவரும் வேனில் ஏறும் போது உடனிருந்து கண்காணித்திருக்கிறார். மீண்டும் மோகன்ராஜ் வேலையில் இருந்து நின்று விட்டார் என்ற செய்தியும் மற்றொரு டிரைவரால் உடனே தெரிவிக்கப் பட்டிருக்கிறது. உடனுக்குடன் பள்ளியில் குழந்தைகள் இருக்கிறார்களா என்பதை அறிந்து கொண்டு உடனே சந்தேகித்து தேடத் துவங்கி இருந்தால் ஒரு வேளை அந்தக் குழந்தைகள் அட்லீஸ்ட் உயிர் சேதம் இல்லாமல் மீட்கப் பட்டிருக்கக் கூடும் என்ற பரிதவிப்பெல்லாம் இப்போது வருகிறது .


யாருடைய மெத்தனம் இந்த இரட்டைக் கொலைகளுக்கு காரணம்?

பள்ளிக்கு குழந்தைகளை வேனில் அனுப்பும் பெற்றோர்களுக்கு எல்லாம் இது மிக அதிர்ச்சிகரமான மட்டுமல்ல உள்ளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்திய செய்தி அந்த வகையில் கூட இந்த செய்தி வழக்கத்தை விட அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கலாம் .

மோகன் ராஜ் மட்டுமே குற்றவாளி என்பதை அவனது என்கவுன்டருக்குப் பின் முழுவதுமாக நம்ப இயலவில்லை. இந்த கொடூரச் செயலுக்கு நிஜ காரண கர்த்தாவாக அதிகார பலமிக்க அந்தக் குழந்தைகளின் தகப்பனாரின் தொழில் முறை எதிர்கள் அல்லது வேறு எதோ ஒரு காரணத்திற்காக எதிரிகள் ஆனவர்கள் (இந்த நாட்டில் ஒருவருக்கொருவர் எதிரிகள் ஆவதற்கு காரணங்களுக்கா பஞ்சம்! ) இப்படி வேறு எவரேனுமாக இருந்து மோகன்ராஜ் போன்றோரை எய்து விட்டிருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்க இடமிருக்கிறது. சாட்சியங்கள் அற்ற நிலையில் இன்னும் சந்தேகங்கள் வலுப்பெறவே செய்கின்றன. போலீஸ் அவனை கொன்றது சரி தான் அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இத்தனை அவசரம் ஏன் என்னுமிடத்தில் எதையோ அல்லது யாரையோ மறைக்க இப்படி என்கவுண்டர் செய்தார்களோ என்ற பலத்த சந்தேகம் தோன்றுவது தவிர்க்க முடியாதது.

நண்பர் சென்ஷியின் buzz செய்தி

//கடந்த ஏழாம்தேதி திருக்காட்டுப்பள்ளி அருகே கீர்த்திகா எனும் பத்து வயது சிறுமி பாலியல்  உங்களுக்கு தேவையில்லாமல் போகலாம். ஆனால் எட்டாம் தேதி இந்த செய்தியை படித்தவர்கள், கோவை சம்பவத்துக்கு நிகராக இந்த செய்திக்கும் கொந்தளித்தவர்கள், அதை அக்கறையோடு பின்தொடர்ந்தவர்களின் வசவுகளை நான் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன். இந்த பட்டியலில் வராதோர் கொஞ்சம் சிந்தியுங்கள், உங்கள் புறக்கணிப்பைப் பற்றியும் உங்கள் ஊடகங்களின் பாராமுகத்தைப் பற்றியும்.//

இது மட்டுமல்ல சென்ஷி இப்படி பட்டியலிட ஏராளமான செய்திகள் இருக்கின்றன. சொல்லப் போனால் அந்த செய்திகளை பின்தொடர்ந்தால் நாம் ஒரு நிமிடமேனும் நிம்மதியாய் இருக்க முடியாது. தினம் தினம் அத்தனை அநியாயங்கள் கண்ணில் படும் செய்திகள் அப்படி.

பெயர் ஊர் ஞாபகத்தில் இல்லை ,நான் வாசிக்க நேர்ந்த சில சில சம்பவங்களை இங்கே தருகிறேன் ,படித்துப் பாருங்கள் ;

கொடைக்கானலில் என்று நினைவு ஒரு பாதிரியார் அனாதைக் குழந்தைகளுக்கு என ஆசிரமம் நடத்தி அதற்கு அயல்நாட்டு கிறிஸ்தவ அமைப்புகளிடம் இருந்து நிதி வசூல் செய்து வந்திருக்கிறார் ,அந்தப் பாதிரியாரின் தினசரி நடவடிக்கை என்ன தெரியுமா? சொல்லித் தான் தீர வேண்டும் பருவம் அடைந்த அடையாத என்ற பாரபட்சமே இல்லாமல் பெண் குழந்தைகள் அத்தனை போரையும் தனது வரைமுறையற்ற காமத்திற்கு பலியாடுகள் ஆக்கி இருக்கிறான் . செய்தி எப்படியோ கசிந்து அந்தக் குழந்தைகள் காப்பற்றப் பட்டதாக நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. இப்போது அந்தக் குழந்தைகள் என்ன ஆனார்கள் ? அந்தப் போலி பாதிரியார் சிறையில் தள்ளப் பட்டானா சுட்டுக் கொள்ளப் பட்டானா என்பதெல்லாம் வெறுமே பரபர செய்திகளுக்காக பத்திரிக்கை வாசிக்கும் நேயர்களுக்கு அனாவசியம் .

மற்றொன்றும் கொடைக்கானல் செய்தி தான் அங்கே ஒரு பள்ளியின் தாளாளர் பள்ளி ஹாஸ்ட்டலில் தங்க படித்து வந்த பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக காவல் துறை விசாரணைக்குட்படுத்தப் பட்டார் என்பதும் சமீபத்திய பத்திரிக்கை செய்தி தான்.



இவர்களை விடுங்கள் அரசு டாஸ்மாக்கில் அள்ளும் லாபம் எவ்வளவோ எனக்குத் தெரியாது ,ஆனால் மனதை திடப் படுத்திக் கொள்ளுங்கள் எவனோ ஒரு மொடாக் குடி நிர்மூடத் தகப்பன் தன மனைவியிடம் கொண்ட சந்தேகம் அளவற்றுப் போய் தான் பெற்ற பெண் குழந்தையையே பாலியல் வன்முறை செய்திருக்கிறானாம். இவ்விடத்தில் பெண் குழந்தை அவனுக்குப் பிறந்ததா இல்லையா என்று ஆராய்தலை காட்டிலும் அதிர்வைத் தந்த விஷயம் அந்தக் குழந்தையின் மீது தொடர்ந்து நடத்தப் பட்ட இந்த கொடூரத்தை பெற்ற தாயே பல நாட்கள் மறைத்து வந்திருக்கிறாள் என்பது தான்.

யாருக்குப் பிறந்திருந்தாலும் குழந்தைகள் குழந்தைகளாக மட்டுமே நடத்தப் பட வேண்டும் என்பதில் யாருக்கேனும் இங்கே மாற்றுக் கருத்து உண்டா?!

குழந்தைகள் என்ன தான் செய்வார்கள்?! கணவன் மனைவிக்குள் சந்தேகம் மிஞ்சிப் போனால் இப்படிப் பட்ட வக்கிரங்களை கண்ணாரப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதை விட அரசு அல்லது தனியார் அநாதை ஆசிரமங்களில் அல்லது தொண்டு நிறுவனங்களில் சேர்த்து விட்டுப் போவதற்கென்ன ?

அங்கேயும் நம்பகத் தன்மை கேள்விக்குறி என்றால் !

இந்த ஒரு செய்தி மட்டுமல்ல இதே ரீதியில் பாதிக்கப் பட்ட இன்னும் சில பெண் குழந்தைகள் மற்றும் அவர்களது அம்மாக்கள் அப்பாக்களின் புகைப்படங்களோடு ஜூ.வி யோ குமுதம் ரிப்போர்ட்டரோ எதுவோ செய்தி வெளியிட்டிருந்தது. பெயரளவில் அப்பாக்களாகி விட்டால் போதுமா ,அந்த உறவைக் கொச்சைப் படுத்தும் இவர்களை என்ன செய்வது

முன்னெப்போதோ சில ஆண்டுகளுக்கு முன் ஜூ.வி யில் ஒரு தொடர்கதை (ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்டது ) வாசித்த நினைவு வருகிறது.

சிந்தியா என்ற பெண் தான் கதையின் மூலம் அவள் காவல் துறையில் உயர் பதவி வகித்த தன் தகப்பனால் இதே ரீதியில் பலாத்காரம் செய்யப் பட்டதால் மனசிதைவுக்கு ஆளாகி முடிவில் தானும் திட்டமிட்டு காவல் துறையில் இணைந்து தன் தந்தையையும் தந்தையின் தகாத நடவடிக்கைகள் தெரிந்தும் பேச்சற்று கோழையாய் இருந்த தாயையும் கொடூரமாக கொலை செய்கிறாள். இந்தக் கதை வாசித்த அந்நாளில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது .

இன்னொரு செய்தி இரண்டரை வயதுக் குழந்தையை மில் வேலைக்கென்று ஓசூரில் பஞ்சம் பிழைக்க பீகாரில் இருந்து தமிழகம் வந்த மூடன் ஒருவன் அதைத் தூக்கிக் கொண்டு போய் அநியாயம் செய்திருக்கிறான்.குழந்தையை கொல்லவும் செய்திருக்கிறான்.

இன்னும் பல செய்திகள் இப்படி , ஆக ஊடகங்களில் குழந்தைகளுக்கு எதிரான பலதரப் பட்ட அநீதிகளை தினமும் நம்மில் பலரும் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறோம் ;ஒவ்வொன்றாய் பட்டியிலிட்டால் ஒட்டு மொத்தமாய் வாசிப்பவர்களுக்கு பைத்தியம் பிடிக்கும் .

சிலர் சில செய்திகளை வாசிக்காமல் தவற விட்டிருக்கலாம் .செய்தி ஒன்று தான் நாட்டில் எத்தனை சட்டங்கள் போட்டாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை. பெற்றோர்கள் இன்னும் தங்களது ஜாக்கிரதை உணர்வை அதிகப் படுத்திக் கொண்டு சதா தங்களது குழந்தைகளின் மீதான கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது .

இங்கே பலரது கேள்வியும் ...சுடப்பட்டவனுக்கு பின்புலத்தில் அதிகார பலமோ ,பணபலமோ இருந்திருப்பின் இந்த என்கவுண்டர் நடந்திருக்காது என்பதாக இருப்பதால் ஒன்றை மறந்து விடக் கூடாது , நாம் அறிந்தவை அனைத்துமே ஊடகச் செய்திகள் மட்டுமே.

உண்மையில் நடந்தது என்ன என்பதைக் குறித்து முழுமையான நிஜங்கள் நமக்குத் தெரியாது.மோகன்ராஜ் தன் வாய்மொழியாக குற்றத்தை ஒத்துக் கொண்டான் என்பது நிஜம் எனில் (அந்தக் குழந்தைகளை எப்படியெல்லாம் கடத்தி எப்படியெல்லாம் சித்திரவதை செய்து எப்படி ஓடையில் மூழ்க விட்டுக் கொன்றோம் என மோகன் ராஜும் அவனது கூட்டாளியும் காவல் துறையினரிடம் விவரித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன,உண்மையில் கொலை செய்யாதவன் இப்படியெல்லாம் விவரிக்க வேண்டிய அவசியம் என்ன? !)அவனை சுட்டுக் கொன்றதில் மேலே பேசவோ விவாதிக்கவோ என்ன இருக்கிறது.

கன்னட பிரசாத் குறித்த பர பரப்பு செய்திகளின் போதென்று நினைக்கிறேன், எந்தப் பத்திரிகை என்று நினைவில்லை பழுத்த அரசியல் பெரும் புள்ளி ஒருவருக்கு பள்ளிச்சிறுமிகள் என்றால் அத்தனை விருப்பமாம்! மகாநதி திரைப்படக் கதை தான். படத்தை போல எந்த ஒரு அப்பாவும் இப்படிப் பட்ட பெரும் புள்ளிகளை கொன்று மாடியில் இருந்து வீசியதாக ஊடகச் செய்திகள் எதுவும் காணோம் .

இந்த நாட்டின் சாபக்கேடு இது. எளியவர்கள் என்ற நிலை இருக்கும் வரை வலியவர்கள் எனும் நிலையும் இருந்து கொண்டிருக்கும் தானே!

இதே கொலைகளை அதிகார பலமிக்க ஒருவன் செய்திருந்தால் அவனையும் என்கவுண்டர் செய்வார்களா என்று விவாதித்து தயவு செய்து செய்தியை திசை திருப்பாதிர்கள். யார் செய்திருந்தாலும் அவர்கள் கொல்லப் பட வேண்டியவர்கள் தான். ஆனால் எத்தனை பேர் அப்படிக் கொல்லப் பட்டார்கள் என்று பதில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் ...பூனைக்கு மணி கட்டுவது யார்? ! 

அதிஷாவின் தளத்தில் வாசித்தது ...

//சமூக குற்றங்களுக்கு மரணதண்டனைகள் எப்போதும் தீர்வாகாது. அதற்கான வேரை கண்டறிந்து அதை களைவதே சிறந்தது. உண்மையில் மோகன்ராஜிற்கு தேவை நல்ல மனநல மருத்துவர். அவனை இந்த குற்றத்திற்கு தூண்டியது எது என்பதை கண்டறிந்து இன்னொரு முறை இப்படி ஒரு வக்கிரம் நடக்காமலிருக்க வேரிலேயே பிரச்சனைகளை தீர்க்க முனையவேண்டும். ஆனால் மக்களுடைய மனதில் ஒரு இன்ஸ்டன்ட் மகிழ்ச்சியை அளிப்பதன் மூலம் எதை மறைக்க முயல்கிறது தமிழக அரசு. இங்கே ஒவ்வொரு நாளும் இதுமாதிரியான ஆட்கடத்தல்களும் கொலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதில் மாட்டிக்கொண்ட ஒருவனை கொன்றாகிவிட்டது. மற்றவர்கள்?//


இந்தக் கொலைகள் மற்றும் தொடர்ந்த என்கவுண்டர் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது.அது  மக்களின் மாறுபட்ட மனநிலைகள். மோகன்ராஜுக்கு அளிக்கப் பட்டிருக்க வேண்டியது என்கவுண்டர் அல்லது மன நல சிகிச்சை என்போருக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது ;
 
ஈழத்தை ஏன் மறந்தீர்கள் ?
 
அங்கே நிகழ்த்தப் பட்ட இன்னும் நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகளின் பொறுப்பாளர்களுக்கு  எல்லாம் மன நல சிகிச்சை தான் தரப்பட்டாக வேண்டுமா? முடியுமா அது? ஏன் வீரப்பனைத் தேடுகிறோம் என்று பழங்குடிப் பெண்களை பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார்களே தமிழக ,கர்னாடக காவல் துறையினர் அவர்களுக்கும்  மன நல சிகிச்சை தர முடியுமா? சதாம் உசேனை ஏன் தூக்கில் போட்டார்கள் ? அவருக்கு மன நல சிகிச்சை தந்திருக்கலாம் தானே? இன்னும் ஹிட்லர் ,இடி அமீன் இப்படி பட்டியலை நீட்டிக் கொண்டே போனால் நம் பெயரும் கூட கடைசியில் வரும் அபாயமிருக்கலாம்.யாருக்கு மனநல சிகிச்சை அளிப்பது? 
 
எந்த படம் என்று நினைவில்லை,
 
"  பதினோரு வயசுப் பொண்ணு ,கையில் ஒரு மிட்டாயை வச்சு அழுத்தி காரியத்தை முடிச்சிட்டேன் "  என்று சிரிப்பான் ஒரு சிறுமியைக் கொன்றவன் ;; கேள்வியே கேட்காமல் சுட்டுக் கொல்வார் அவனிட பேசிக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரி. இதே ட்ரீட்மென்ட் தான் இவ்விதமாக குற்றத்தில் ஈடுபடும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் என்ன சந்தேகம்? .
 
மக்களின் உணர்வு எதிர்பார்ப்பு இது தான்.
 
 
சிலர் இந்த என்கவுன்டரை மட்டுமே பெரிதாக்கி சமுதாயத்தின் மீதான தங்களது தார்மீகக் கோபங்களை வெளிக்காட்டுகின்றனர்.
 
சிலர் அதிஷா  சொன்னது போல இன்ஸ்டன்ட் மகிழ்ச்சி பரவாயில்லை என்று நிம்மதி  அடைந்து விடுகிறார்கள்.


பூனைக்கு மணி கட்டுவது யார்? விவாதங்களால் ஆகப் போவது என்ன?

இறந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

இறந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்.



Friday, July 23, 2010

சர்வ ஜாக்ரதையாய் இருக்க வேண்டியவர்கள் யார்?

எழுத நினைத்த விஷயங்கள் ஒரு வண்டி நிறைய குப்பையாய் குவிந்து கிடக்கிறது,கொதிக்கும் சாம்பாரில் அவ்வப்போது கொதிப்பில் மேலெழுந்து சாம்பாருக்குள் மறையும் கத்தரிக்காய் பத்தை போலவோ முருங்கைக் காய் துண்டு போலவோ "ஆமாம் என்னத்த பெருசா எழுதி...என்னத்த படிச்சு " இப்படி ஒரு அயர்ச்சி கலந்த அசட்டை வந்து வந்து போவதால் ஒவ்வொரு முறையும் நியூ -போஸ்ட் பக்கத்தை திறப்பதும் புறக்கணிப்பதுமான நாட்கள் தான் சமீப காலமாய்.

இப்போதும் பெரிதாய் ஒன்றும் எழுதிக் கிழிக்கப் போவதில்லை .

மனதை வெகுவாகக் பாதித்த சில நிகழ்வுகளை பதியத் தோன்றியதால் இந்தப் பதிவு ...

நிறைய கோபம், அதிர்ச்சி,பதட்டம், பயம் இன்னோரன்ன கலவையாய் மனம் .

மனுஷ்ய புத்ரனின் கவிதை வரிகளில் ஒன்று ;

"காதலில் என்ன நல்ல காதல்...கள்ளக் காதல்,காதல் காதலாய் மட்டுமே இருக்க முடியும் "என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய வரிகள் எனில்

"உறவு என்ற சொல்லுக்கு நல்ல உறவோ ...கள்ள உறவோ உரிமை என்பதான ஒரே விதமான அர்த்தமே தானே இருக்க முடியும்?!"

அப்படிப் பட்ட உறவின் மீதான நம்பிக்கையின்மை,அதனால் அடைந்த ஏமாற்றங்கள் ஒரு பெண்ணை இப்படி எல்லாம் செய்யத் தூண்டும் என்றால் இங்கே சர்வ ஜாக்ரதையாய் இருக்க வேண்டியவர்கள் யார்?!

தவறு செய்த ஆண்களா? (அப்பாக்களா !) ...பெண்களா? (அம்மாக்களா!)


அல்லது புதிதாய் மலர்ந்த பூக்களைப் போன்ற குழந்தைகளா?

சுற்றி வளைப்பானேன்!

மூன்றரை வயது பாலகனை இரக்கமே இல்லாமல் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு சடலத்தை சூட்கேசில் போட்டு மூடி நாகபட்டினத்து பஸ்ஸில் அனாமத்தாக அனாதையாகப் போட்டு விட்டுப் போனாலே ஒரு பேய் ! அவளுக்குப் பெயர் பூவரசியாம்?! பூக்கள் கோரக்கொலை செய்கின்றன !

பெற்றோர்களின் பாவம் பிள்ளைகளைப் பீடிக்கும் என்பது சரியாய் தான் போயிற்று.அந்த சிறுவனின் தந்தை இவளை ஏமாற்றிய பாவம் உலகம் அறியா பசும் மண்ணை படு கொடூரமாகப் பலி வாங்கிக் கொண்டது.துரோகம் அது எந்த சூழலிலும் தன் கோரப் பற்களை காட்ட மறப்பதில்லை,ஆண்களே ...இல்லை தகப்பன்களே தயவு செய்து உங்களது குழந்தைகளை முன்னிட்டு துரோகங்களின் பட்டியலை கொஞ்சம் குறுக்கிக் கொள்ளுங்கள்.இதையே பெண்களுக்கும் சொல்ல நினைப்பவர்கள் பெண்களே ...இல்லை அம்மாக்களே தயவு செய்து உங்களது குழந்தைகளை முன்னிட்டு துரோகங்களின் பட்டியலை கொஞ்சம் குறுக்கிக் கொள்ளுங்கள்...இப்படிச் சொல்லிக் கொள்ளலாம் ,இதற்கு உதாரணம் பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி,அனந்த லட்சுமி அவரது மகன் சிறுவன் சூரஜ்குமார் இரட்டைக் கொலைவழக்கு இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.யூகங்கள் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன.உண்மை எங்கோ இழுத்துப் போர்த்தி கொண்டு நல்ல உறக்கத்தில்!

ஆதித்யாவின் "ஆன்ட்டி ... ப்ளீஸ் என்னை கொல்லாதிங்க ! எனும் பிஞ்சுக் குரலின் கெஞ்சலில் மனம் நெகிழவில்லை பாருங்கள் இந்தப் பிசாசு .இதை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது தானே!இன்றைய இந்தியன் எக்ஸ்பிரசில் முதல் பக்க செய்தி ,அந்த பூவரசியையும் அவளது கொடும் பாதகச் செயலையும் அடையாளம் கண்டு கொண்ட மற்ற பெண் கைதிகள் புழல் சிறையில் காலை உணவு நேரத்தின் போது அவளை தாக்க முயன்றதால் இப்போது பூவரசி தனி செல்லில் அடைக்கப் பட்டிருக்கிராளாம். நிற்க

எந்த நேரம் எப்படிச் சாவோம் என்பதறியாமல் தமக்கே தமக்கென பிரத்யேக பட்டாம்பூச்சிக் கனவுகளுடன் வளர்கிறார்கள் குழந்தைகள்,அம்மாவின் பட்டுப் புடவை மெது மெதுப்பு தாங்கள் ரசிக்கும் வண்ணத்துப் பூச்சிகளின் சாவில் கிடைப்பதென அந்தக் குழந்தைகளுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை,ஒவ்வொன்றாய் அறிந்து கொள்ளும் அவகாசத்தில் பூவரசிகளின் கொலைக் கண் பார்வையை ஆராய பாவம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கவில்லை ,தும்பியின் வாலில் நூல் கட்டி அதன் சுதந்திரத்தை முடக்கி "தட்டான்...தட்டான் கல்லெடு ,தட்டான்...தட்டான் கல்லெடு " என பொழுது போக்கும் விசித்திர சமூகத்தின் பிரதிநிதிகள் தாங்கள் என அவர்கள் அறிந்து கொள்ள அவகாசம் தரவேண்டாமா?!

இப்போதைக்கு பாலியல் கல்வியைக் காட்டிலும் மிக முக்கியமாய் சிறுவர்,சிறுமிகளுக்கு கற்பிக்கப்பட வேண்டிய பாடம் சூழ இருக்கும் மனிதர்களை படிப்பது.

இந்த அதிர்வில் இருந்து மீண்டு வரும் முன் இன்றைய விகடனில் நாமக்கல் ஆட்சியர் சகாயம் அவர்களின் பேட்டி,நவீன் என்ற சிறுவனின் தாய் பக்கத்து வீட்டு மனிதரோடு ஓடிப் போகிறாள்,அந்த சிறுவனின் தந்தை அவனது தங்கை தம்பியைப் கவனித்துக் கொண்டு சமைத்துப் போடவென இவனது படிப்பை நிறுத்தி விடுகிறார்.அம்மா ஓடிப் போன அவமானம் ,தந்தையின் அலட்சியம்,தன் கல்வி அநியாயமாய் நிறுத்தப் பட்ட நிராசை எல்லாம் சேர்ந்து பத்து வயதுப் பையன் ஆறுதல் சொல்ல ஆளின்றி கண்ணீரோடு மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்க்கும் மனு கொடுக்க வருகிறான்.இதுவொன்றும் அதிர்ச்சி அல்ல...கலெக்டர் அந்தப் பையனுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இருக்கையில் இடியாய் ஒரு செய்தி அடுத்த சில நாட்களில் ,அந்த சிறுவனின் தந்தை தன் மனைவி ஓடிப் போனதால் அவமானம் தாங்காமல் நவீன் உட்பட தன் மூன்று குழந்தைகளுக்கும் உணவில் மருந்தை கலந்து கொடுத்து கொன்று விட்டு தூக்கிலும் தொங்க விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார்.

அம்மா அடுத்த வீட்டு மனிதனோடு ஓடிப் போனதற்கும் ,அப்பாவின் இயலாமைக்கும் இந்த சிறுவன் செய்த பாவம் என்ன?

சாக வேண்டும் என முடிவெடுப்பவன் தனியே செத்துத் தொலையலாம் ,வாழ நினைத்து தனக்கென நியாயமான ஆசைகளை வளர்த்துக் கொண்ட மூன்று இளம் குருத்துகளை கருக வைத்தது எப்படி நியாயம் ஆகும்?தகப்பனாகவே இருந்தாலும் !

நவீனின் ஆசை என்ன தெரியுமா?

"படித்துப் போலீஸ் ஆபிசர் ஆகவேண்டுமாம்! "
இப்படித் தான் அவன் கலெக்டரிடம் மனு கொடுக்கையில் கூறினானாம்.வாசிக்கையில் கண்கள் கலங்குகின்றன .

அதே பக்கத்தில் இன்னும் சில குழந்தைகளுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்தும் சொல்லப் பட்டிருந்தது.அபினா எனும் ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு ஊஞ்சல் என் சரியாக உச்சரிக்கத் தெரியாததால் அவளை எல்லா மாணவர்களின் முன்பாக அவளது ஆசிரியை ;

"நீ எல்லாம் ஏன் ஐந்தாம் வகுப்பில் உட்காருகிறாய்,போ மறுபடியும் ஒன்றாம் வகுப்புக்கு "

,என்று கடுமையாகத் திட்டி விடுகிறார்,இதற்கு அந்த சிறுமி மனம் நொந்து போய் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்டு இறந்து போனாளாம்,இங்கே குறிப்பிடத் தக்க ஒரு விஷயம் ,ஆசிரியை மீது தவறு தான். அதற்கு நடவடிக்கை எடுக்க வசதி இருக்கிறது.ஆனால் அந்த சிறுமி அபினாவின் மனநிலையை எண்ணிப் பாருங்கள் வெறுமே பள்ளியில் ஆசிரியை திட்டினால் அதற்கு தன்னைக் கொளுத்திக் கொண்டு இறந்து போக வேண்டும் என அவளுக்கு எப்படித் தோன்றியது? !

குழந்தைகளை மனதளவில் எதையும் எதிர் கொள்ள திராணியற்றவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் நமது வளர்ப்பு முறையில் அல்லவா இங்கே முதல் தவறு ஒளிந்திருக்கிறது. ஆசிரியை திட்டியதால் குழந்தை தற்கொலை செய்து கொண்டாள் என பத்திரிகைகளில் வரும் பெரும்பான்மையான செய்திகள் மிக்க மனவருத்தத்தை அளிக்கன்றன. எல்லா ஆசிரியர்களும் மோசமானவர்கள் அல்ல.

மேலும் அந்த ஆசிரியர்களுடன் மாணவர்களுக்கான பந்தம் வாழ்வின் சில காலமே.அப்போதும் தினமும் அந்த ஆசிரியர்கள் விரும்பத் தகாத வண்ணமே பேசிக் கொண்டு இருக்கப் போவதில்லை,எதோ ஒருநாள் திட்டலாம்,அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒட்டு மொத்த வாழ்வை முடித்துக் கொள்வது முட்டாள் தனம் தவிர வேறென்ன? குழந்தைகளே ...மாணவர்களே உங்கள் பக்கம் நியாயம் இருப்பின் தயங்காமல் மரியாதை குறைவின்றி ஆசிரிய ஆசிரியர்களிடம் எதிர்வாதம் செய்யுங்கள்.உங்களை அவர்களுக்குப் புரிய வைக்க முயலுங்கள். காரணமே இன்றி யாருக்கும் யார் மீதும் வெறுப்பு வர வாய்ப்பில்லை. பள்ளிகள் கல்வி கற்பதற்கு தான் .அந்த வேலையில் குறை வைக்காமால் இருந்தால் என்ன தான் முசுட்டு ஆசிரியை என்றாலும் சம்பந்தப் பட்ட மாணவியின் மீது அவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்யும்.அந்தப் பலனை கெட்டியாகப் பற்றிக் கொள்ள முயலுங்கள்.

பெற்றோர்களுக்குச் சொல்ல விரும்புவது. கண்மூடித் தனமாக ஆசிரியர்களை குறை சொல்வதை நிறுத்துங்கள். நாணயத்திற்கு இருபக்கங்கள்.இன்றைக்கு வகுப்பறையில் எல்லோர் முன்னிலும் திட்டி கருத்துக் கொட்டும் ஆசிரியை நாளையே உங்களிடம் உங்கள் மகன் அல்லது மகளை ஏதாவது ஒரு திறமைக்காக வானளாவப் புகழும் நிலை வரும். அதற்கு நம் குழந்தைகள் உயிரோடு இருக்க வேண்டும் .

அதற்கு முன் வெகு முக்கியமாய் பாலியல் ரீதியாக வரக் கூடிய அச்சுறுத்தல்கள் அல்லது உளவியல் ரீதியாக நேரக் கூடும் மனமுடைதல் குறித்து நம் குழந்தைகளின் ("இம்" மெனும் முன் தற்கொலை)பூஞ்சை மனதை வலுப்படுத்த உருப்படியாய் ஏதானும் முயற்சிக்கலாம்.இந்த உலகில் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது.அப்படித் தான் குழந்தைகள் நம்ப வேண்டும்,

கொலையோ,தற்கொலையோ அதற்கான தீர்வாக முடியாது.

உங்களைப் போலவே பாதிப்புக்கு உள்ளான மற்றவர்களுக்கு உங்களது முடிவுகள் பாடமாகி வளரும் சமூகம் பாழாக வேண்டாம்.

முதலில் பாடம் படிக்க வேண்டியது பெற்றோர்களே .

நம்மிலிருந்து நம் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.

முக்கியக் குறிப்பு :

கற்றுக் கொள்வதென முடிவெடுத்த பின் கற்கும் பாடம் நல்ல பாடமாக இருக்கட்டும் ,இன்னொரு சூட்கேஸ் சடலம் நகரத்தின் பஸ் ஸ்டாண்டுகளில் ஈ மொய்க்கக் தொலைக்காட்சிகளில் காணக் கிடைக்க வேண்டாம்.

"சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம்".

Saturday, June 19, 2010

பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்ற 14 வயதுச் சிறுமி - உடனடித்தேவை கல்வியா மனநல சிகிச்சையா?!

ராமநாதபுரம் புனித ஆந்த்ரேயா பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி பள்ளி டாய்லட்டில் குழந்தை பெற்றுக் கொண்டது நேற்றை விட இன்றைக்குப் பழைய செய்தி,பலரும் அதை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள் .சம்பந்தப் பட்ட மாணவி அந்தப் பள்ளியில் இருந்து நீக்கப் பட்டிருக்கிறாள்.பள்ளி அந்த மாணவியை நீக்கியது தவறு என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன.

குற்றம் நடந்தது என்ன? என்ற ரீதியில் இதை அணுகும் முன் ;

அந்த மாணவிக்கு ஏன் மனநலப் பரிசோதனை செய்வதைப் பற்றி பரிசீலிக்கக் கூடாது.

யாருக்கும் எந்த சந்தேகமும் எழும்பாத வகையில் கருவை வயிற்றில் சுமக்கத் தெரிந்திருக்கிறது,ஏன் இத்தனை குண்டாக இருக்கிறாய் என்று கேட்டவர்களிடம் எல்லாம் தவறான மாத்திரை உண்டதால் உடல் பருமனில் ஏற்பட்ட கோளாறு என்று சமாளிக்கத் தெரிந்திருக்கிறது ,அத்தனைக்கும் மேல் பெற்ற குழந்தையை கழிவறைப் பீங்கான் கோப்பையில் அமுக்கி கொல்லவும் முயற்சி செய்திருக்கிறாள்.உயிருக்குப் போராடிய நிலையில் தான் அந்த குழந்தை மீட்கப் பட்டிருக்கிறது .இதெல்லாம் அறியாமையில் அச்சத்தில்...இயலாமையில் செய்த தவறுகளாக கருதிக் கொள்ள இடமிருந்தாலும் பிரசவ வலியை யாருக்கும் தெரியாமல் எப்படி அவளால் பொறுத்துக் கொள்ள முடிந்தது.பெண்களுக்கு மறுஜென்மம் என்பார்களே பிள்ளைபேற்றை.மிகக் கடுமையான வலி அதை ஒரு சிறுமி பொறுத்துக் கொண்டு சத்தமே இன்றி குழந்தை பெற்றிருக்கிறாள் என்றால் அவள் சாதாரண மனநிலையில் இருப்பதாக எப்படி ஒத்துக் கொள்ள முடியும்.

ஆகவே பிறந்த குழந்தைக்கு தகப்பனைக் கண்டுபிடிக்கும் முன்பு;

அந்தச் சிறுமியை மீண்டும் அதே பள்ளியில் சேர்த்தே ஆக வேண்டும் என அமைப்பு ரீதியாகப் போராடும் முன்பு ;

அந்த சிறுமிக்கும் அவளது அம்மாவுக்கும் (ஒரு தாய்க்கு தன் மகள் வயிற்றில் கருவைச் சுமக்கும் விஷயம் பிரசவம் வரை தெரியாது என்பது நம்பத் தகுந்ததாக இல்லை) மனநலப் பரிசோதனை செய்து அவர்களிடம் இருந்து நடந்த விவரங்களைக் கண்டறிவது முதல் தேவை என்று தோன்றுகிறது.

மீட்கப் பட்ட குழந்தை அரசின் தொட்டில் குழந்தை காப்பகத்தில் பராமரிக்கப் பட்டு வருகிறது.அந்தக் குழந்தையின் எதிர்காலம் என்ன!

இவளே சிறுமி எனும் போது இனி இவளது எதிர்காலம் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு ஒரே பதில் செய்தியைப் படித்தவர்கள் அனைவரும் இன்னொமொரு செய்தி எனும் ரீதியில் அப்படியே கடந்து போவதாக மட்டுமே இருந்து விடுதல் சரியா!

ஒரு பெண்ணின் மனநிலையில் நான் இந்தக் கருத்தை கூறுகிறேன்.வாசிப்பவர்கள் விருப்பமிருப்பின் உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Friday, June 18, 2010

தண்டகாரண்யமும் ராவண நீதிகளும் :



ராவணன் பட விமர்சனம் படிக்க கிடைத்தது.அதை ராமாயணக் கதை என்கிறார்கள்.

சென்ற வார விகடனில் அருந்ததி ராயின் பேட்டி , தண்டகாரண்யம் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் அவரை இந்திய அரசு மாவோயிஸ்ட் என முத்திரை குத்தும் அபாயம் இருக்கிறதாம்!வாசித்தவுடன் மிக்க வருத்தமாக இருந்தது.

தண்டகாரண்யம் வனப் பகுதி ராமாயணத்தோடு தொடர்புடையது ,இந்த வனத்தில் வைத்து தான் மாயமானுக்கு மயங்கிய சீதையை ராவணன் லங்கைக்கு கடத்திக் கொண்டு போகிறான் என்பது ராமாயணக் கதை.இதிகாசம் உண்மையோ கற்பனையோ! ஆனால் 10 சதவீத உண்மையில் 90 சதவீத கற்பனை கலக்கப் பட்டிருக்க கூடுமே தவிர முற்றிலும் கற்பனை என்று சொல்ல வாய்ப்பில்லை .ஆரிய திராவிட ஆதிக்க சண்டையின் வரலாற்று தடயங்கள் தான் ராமாயணமும் மகாபாரதமும் என்பதாக நேரு தமது "டிஸ்கவரி ஆப் இந்தியாவில்" இந்திராவுக்கு கூறுகிறார்.

இப்போது அருந்ததி ராய்க்கு வருவோம்,

ஆந்திரா,ஒரிஸ்ஸா எல்லைப்பகுதியில் உள்ள மிகப் பரந்த வனப்பகுதி இந்த தண்டகாரண்யம்,இங்கிருக்கும் பழங்குடிகள் இந்தியா தனி நாடாக உருவாகும் முன்பே இங்கே வாழ்ந்தவர்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ள நிலையில் அந்த பூமி அவர்களுக்கு உரிமையானது ; அந்த மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக போராடுகிறார்கள்.அவர்களது போராட்டத்தை மாவோயிஸ்டுகள் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள்,ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்திட்ட சிங்கள அரசாங்கம் போலத் தான் இப்போது இந்திய அரசு தன் சொந்த நாட்டு பழங்குடி இன மக்களை அந்த வனங்களில் இருந்து அப்புறப் படுத்த "சலுவா ஜூடும்" என்ற பெயரில் கூலிப் படைகளை அமர்த்தி உள்ளதாம் .

அத்தனைக்கும் காரணம் பணம். அந்தப் பணத்தை கொள்ளை கொள்ளையாய் கொட்டித் தர தண்டகாரண்யம் காடுகளில் கொட்டிக் கிடக்கும் பாக்சைட் தாதுக்கள் ,அலுமினியத்தில் இருந்து பிரித்தெடுக்கப் படும் இந்த பாக்சைட் தாதுக்கள் விமான தயாரிப்பில் முக்கிய மூலப் பொருட்கள்.இந்த பாக்சைட் தாதுக்களை தண்டகாரண்யத்தில் இருந்து வெட்டி எடுக்க உலக பணக்கார நிறுவனங்கள் அனைத்தும் இந்திய அரசிடம் ஒப்பந்தம் போட்டிருக்கின்றதாம்.அப்படி ஒப்பந்தம் போட்டிருப்பதால் அந்த வனப் பகுதியில் காலம் காலமாய் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை இருந்த சுவடே தெரியாமல் அங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டும்,இல்லையேல் உரிமை பிரச்சினை கோரிக் கொண்டு காலத்துக்கும் அங்கே தமது தொழிற்சாலைகளை நிறுவப் போகும் அந்நிய மற்றும் உள்நாட்டு பணக்கார நிறுவனங்களுக்கு அந்த மக்கள் தொடர்ந்து பிரச்சினை தரும் அபாயம் இருக்கிறது என அரசு நினைக்கிறது.

அதிகார வர்கத்தின் ஆணவ ஆட்டத்தில் உலகெங்கும் இப்படி எளிய மக்கள் பலியாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள் இதைப் பற்றி மேலும் பேசத் தேவை இல்லை.பேசி ஒன்றும் ஆகப் போவதும் இல்லை. நான் சொல்ல வந்தது வேறு .

ராமாயணக் கதைக்கு வருவோம் இப்போது;

ராவணனை ஏன் நல்லவன் என்று ஒப்புக் கொள்ளக் கூடாது நாம் ?! அவனது ஆளுகையின் கீழ் வரும் தண்டகாரண்யம் வனத்தில் அன்னியனான ராமனின் நுழைவு அவனை அச்சம் கொள்ள வைத்திருக்கலாம்,அதன் அடிப்படையில் அவன் ராமனை அச்சுறுத்த சீதையை கவர்ந்து சென்றிருக்கலாம்.இதை வால்மீகி தன் அரசனை உத்தமனாகக் காட்ட வேண்டி சூர்பனகை மாயமான் எனும் பின் இணைப்புகளால் சுவாரஸ்யமான கதையாக்கி ராவணன் தான் கெட்டவன் என்பதாய் சித்தரித்திருக்கவும் கூடும். இப்படி ஒரு கோணமும் உண்டெனக் கொள்ளலாம்.

"ராவணன் " படம் மூலம் மணிரத்னம் அப்படி ஒரு கோணத்தில் சிந்திக்க வைத்திருப்பது நிஜம் .இந்தப் படம் மட்டுமல்ல " கோஷம்பியின் "பண்டைய இந்தியா" புத்தகம் இதற்கு மிகச் சிறப்பான வரலாற்று ஆதாரம்.

அப்படி ராவணன் தனது எல்லையில் அந்நிய ஊடுருவலை எதிர்த்தது அதற்காகப் போராடியது நியாயம் எனில் ராம ராவண யுத்தத்தில் எவர் பக்கம் நியாயம்? பெண்ணைக் கவர்ந்ததால் ராவணன் கெட்டவன் என்றால் இன்றைக்கு லட்சக் கணக்கில் எங்கெல்லாம் அரசின் நியாயமற்ற அதிகாரத்துக்கு எல்லைப்புற மக்கள் பணிய மறுக்கிறார்களோ அங்கெல்லாம் ராணுவமும் ,காவல்துறையும் விசாரணை என்ற பெயரில் பெண்களை மானபங்கம் செய்து வல்லுறவில் சிதைக்கிறதே இதெல்லாம் நியாயம் ஆகுமா?சீதை என்ற புனித பிம்பத்தை கவர்ந்து சென்றதால் மட்டுமே ராவணன் கெட்டவனாக்கப் பட்டான் என்றால் ;

வீரப்பவதத்தில் சத்யமங்கல வனப் பகுதிகளில் பழங்குடிப் பெண்களுக்கு நிகழ்த்தப் பட்ட சொல்லக் கூசும் பல கொடுமைகளைச் செய்தவர்களான கர்நாடக வனத்துறை போலீசாரும் தமிழக வனத்துறை போலீசாரும் நல்லவர்களா? வீரப்பன் கொள்ளப் பட்டதால் அவர்கள் செய்தது எல்லாமே நியாயம் என்றாகுமா? அந்தப் பழங்குடிப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கும் அநியாயங்களுக்கும் விசாரணை இல்லை.விசாரணை இல்லாததை விட அவர்களுக்கெல்லாம் அரசு செலவில் பதக்கம் என்ன,பட்டயங்கள் என்ன ,வீட்டு மனைகள் என்ன!?அப்படியானால் எது நியாயம்! அந்தப் பெண்கள் சீதைகளாய் பிறவாமல் போனது தான் அவர்களது குற்றமா? ஒரு பெண்ணுக்கு இழைக்கப் படும் அநீதி அவள் சீதை எனும் பட்சத்தில் தான் உலகின் கண்களில் நியாயப் படுத்தப் படுமா?

ஈழத்தில் நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்கு சற்றும் சளைத்தவை அல்ல சத்யமங்கல வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் ,இப்போது தண்டகாரண்யம் வனங்களில் தமது உணவுக்கும் உறைவிடத்துக்கும் போராடும் பழங்குடி இன மக்களுக்கும் நிகழ்த்தப் பட்டிருக்கும் கொடுமைகள்.இந்த மக்கள் தமது உரிமைக்காக போராடுவது எப்படி தீவிரவாதமாகும் ?! அதெப்படி அரசு விரோத செயலாகும்!

உலகின் பணக்கார நிறுவனங்கள் பாக்சைடுக்காக இந்திய அரசிடம் இருந்து தண்டகாரன்யத்தை விலை பேசி கூறு போட்டுக் கொள்ளப் போகின்றன.அந்நிய முதலீடுகள் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தலாம்,மக்களாட்சியில் பொருளாதாரம் யாருக்காக வலுப்படுத்தப் பட வேண்டும் மக்களுக்காகத் தானே ? அந்தப் பழங்குடி மக்களும் இந்தியர்கள் தானே,இந்தியாவுக்குள் தானே இருக்கிறார்கள் ?அதிகமாய் எதிர்ப்பு காட்டினால் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தப் படும் அபாயம் இருக்கையில் அவர்கள் எந்த வழியில் தான் தமது எதிர்ப்பை காண்பிக்க முடியும்? தனது செயல்களே சரியானவை மக்கள் அதை மீறினால் அடக்கி ஒடுக்கப் பட வேண்டியவர்கள் எனும் ரீதியில் நடத்தப் படும் ஆட்சி எப்படி மக்களாட்சியாகும்?

அப்படியானால் இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா ?

தொழிலதிபர்களுக்கும் ,அந்நிய நாட்டு அதிபர்களுக்கும் தான் இந்த அரசு செவி சாய்க்கும் என்றால் அப்படி ஒரு அரசு தன்னை சர்வாதிகார அரசு என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டால் என்ன?

உண்மையில் மக்களுக்காக என்ற பெயரில் இங்கே அரசியல் செல்வாக்குள்ள தொழிலதிபர்கள் தான் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு சிலர் தான் இந்தியாவை கட்டி ஆள்கிறார்கள் என்றால்,இங்கே இருப்பது மக்களாட்சி அல்ல.

மன்னராட்சியின் நவீன வடிவமே இது.

Wednesday, June 16, 2010

ஆட்டோக்களும் ஆட்டோ டிரைவர்களும் அவரவர் நியாயங்களும் .




நேற்று கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் செல்ல ஒரு ஆட்டோவை அழைத்திருந்தோம்.எங்கள் தெரு முனையில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் வழக்கமாக வரும் டிரைவர் இல்லாததால் வேறு டிரைவர் வந்தார்.இங்கிருந்து கோயம்பேடு போக 100 ரூபாய் கேட்டார்,அடப்பாவமே அப்படியென்றால் போக வர 200 ரூபாய் செலவழிப்பதா என்ற ஆதங்கத்தில் ;

"வழக்கமா ஆம்னி பஸ் ஸ்டாண்ட் போயிட்டு வர 120 ரூபாய் தான் வாங்குவாங்க நீங்க என்ன இவ்ளோ அதிகமா சொல்றிங்க ?நாங்க வேற ஆட்டோல போயிக்கறோம் என்று அங்கிருந்து நகரத் தொடங்கினோம்,"அதற்குள் வண்டியை கிளப்பிக் கொண்டு எங்களருகில் வந்த டிரைவர்.

"மேடம் நீங்க சொல்றது வாஸ்தவம் தான் நார்மலா இங்கருந்து கோயம்பேடு போக 60 ரூபாய் தான்,ஆனா இடைல ரெண்டு சிக்னல் இருக்கு அங்க மட்டுமில்லாம பஸ் ஸ்டாண்ட் முன்னாலயும் இப்பலாம் ரொம்ப ட்ராபிக் ஜாம் ஆகுது அது கிளியர் ஆகி பேசஞ்சர் பிக் அப் அண்ட் டிராப் பண்ணிட்டு வர குறைஞ்சது 1 மணி நேரமாயிடுது. அப்போலாம் பெட்ரோல் வேஸ்ட் ஆகுதே அதனால தான் 80 ல இருந்து 100௦௦ ரூபாய் வரை கேட்கறோம் நாங்க,வேறொன்னுமில்லை ,உட்காருங்க பிக் அப் அண்ட் ட்ராப்க்கு 160 ரூபாய் கொடுங்க வெயிட்டிங்னாலும் பரவாயில்லை என்று இறங்கி வந்தார்.

இன்னும் பேசி கூட ஒரு பத்து அல்லது இருபது ரூபாய் குறைத்திருக்கலாம் ஆனால் பஸ்சுக்கு லேட் ஆகி விடும் என்பதால் அந்த தொகைக்கே சரி என்று அந்த ஆட்டோவில் அமர்ந்தோம்,அந்த டிரைவர் அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே வந்தார்.

"முன்னாடி எல்லாம் ஆட்டோ வாங்கணும்னா சேட் கிட்ட தான் பெர்மிட் வாங்கணும் அதுக்கு ஒரு 70 ,000௦௦௦ ரூபாய் ஆகும் ,ஆட்டோ விலை 1 ,20 ,000 ரூபாய்,மொத்தமா வண்டி எடுக்க பெர்மிட்டோட சேர்த்து 2 ௦௦௦௦௦௦௦00000 ரூபாய்க்குள்ள ஆகும்,ஆனா பெர்மிட் சேட் கிட்ட வாங்கினா காலத்துக்கும் அந்த ஆட்டோ கடனை அடைக்கவே முடியாது, கடைசில சவாரியே இல்லனா கடனும் கட்ட முடியாம ஆட்டோவையும் சேட் கிட்ட கொடுத்துட்டு அம்போன்னு நிக்கணும்,

இப்போ அப்படி இல்லை சேட் கிட்ட இருந்த பெர்மிட் உரிமையை அரசாங்கம் ரத்து பண்ணிட்டு இப்போ ஓபன் பர்மிட் தராங்க ,வெறும் 250 ரூபாய் இருந்தா யார் வேணா பெர்மிட் வாங்கலாம்.ஆனா ஆட்டோ விலை கம்பெனிக்கு தகுந்து 2 ல இருந்து 2 ,50௦,000 வரை செலவாகும் ,அரசாங்கம் கேட்ட தொகைக்கு சேட்கள் ஒத்து வரலைன்னு அவங்க கிட்ட பெர்மிட் உரிமையை பிடுங்கிட்டாலும் விலை என்னவோ அதே தான்.

இதெல்லாத்தையும் விட சவாரி கிடைக்குதோ இல்லையோ அந்தந்த ரூட்ல டெய்லி ட்ராபிக் போலீஸ்க்கு ஆட்டோ டிரைவர்ஸ் ஒவ்வொருத்தரும் 100 ரூபாய் கொடுத்தே ஆகணும் ,இல்லனா 4 +1 ,3 +1 இந்த ரூல்ஸ் பாலோ பண்ணலை அதிகமான ஆட்களை ஏத்திட்டு போறாங்க அப்படி இப்படின்னு ஏதாவது ஒரு சாக்குல பைன் போடுவாங்க, சார்ஜென்ட் ஷீட்னு எல்லா ஆட்டோ டிரைவரும் ஒரு பேப்பரை கண்ணாடிக்கு முன்னாடி சுருட்டி வச்சிருப்பாங்க பார்த்திருக்கிங்களா. அந்த சீட் இருந்தா அவங்க பணம் கொடுத்துட்டாங்கன்னு அர்த்தம்,அவங்களை போலீஸ் செக் பண்ணாது பைன் போடாது.

இதுக்காகவே பல ஆட்டோ டிரைவர்ஸ் இங்கலாம் ட்ராபிக் போலீஸ்கிட்ட மாட்டிக்காம அவங்களே வாலண்டியரா டி.நகர் ட்ராபிக் போலீஸ் செக்கிங்ல போய் 50 ரூபாய் கட்டி சார்ஜென்ட் சீட் வாங்கி வண்டில சொருகிப்பாங்க,50 ரூபாய் குறையுது பாருங்க.மத்த ஏரியான்னா 100 ரூபாய் கண்டிப்பா கொடுத்தே ஆகணும்."
இப்படி எல்லாம் அந்த டிரைவர் தன்பாட்டில் சொல்லிக் கொண்டே வந்தார்.

"இங்க ஏன் யாரும் ஆட்டோல மீட்டர் போடவே மாட்டேங்கறிங்க ,அரசாங்கமோ ட்ராபிக் போலீசோ அதுக்கெல்லாம் உங்களை வார்ன் பண்ண மாட்டாங்களா? " தேவை இல்லாமல் நான் இப்படி ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன் .

மீட்டர்லாம் வச்சா எங்களால ஆட்டோ வாங்கின கடனை கட்ட முடியாது மேடம், ஆட்டோ வாங்கின கடனை விடுங்க டெய்லி பொழப்பையே ஓட்ட முடியாது .பெட்ரோல் விலை ஏறி போச்சு ,அதுல தினமும் போலீஸ்க்கு வேற துட்டு அழனும்.மீட்டர் போட்டா எப்படிங்க கட்டும்,வேலைக்கே ஆகாது." சில கஸ்டமர்ஸ் லேண்ட் மார்க் சொல்றதோட சரி அங்க எறக்கி விட்டா சும்மா ஒரு அடையாளத்துக்கு தான் இதை சொன்னோம் நாங்க போக வேண்டிய இடம் இன்னும் கொஞ்சம் உள்ள போகணும்னு கழுத்தறுப்பாங்க.அந்த இன்னும் கொஞ்சம் உள்ள கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் 2 கிலோ மீட்டர் தூரமா கூட இருக்கும்.அதுக்கெல்லாம் பெட்ரோல் செலவாகுமேங்க.

இதுல லேடிஸ்னா நாங்க ரொம்ப அழுத்தி கூட ஒரு பத்து இருபது கேட்க பயமா இருக்கும்.எதுனா வம்பு பிடிச்ச லேடிஸ் அஞ்சு ரூபா பத்து ரூபாய்க்கு ரொம்ப தகராறு பண்ணுவாங்க ,சுத்தி இருக்கற ஜனங்க தப்பு அந்த லேடிஸ் மேல இருந்தாலும் கூட அவங்களை ஒன்னும் சொல்ல மாட்டாங்க இந்த ஆட்டோக்காரன் ஏதாவது வம்பு பண்ணிருப்பான் தான் நினைப்பாங்க.

இப்படி இருக்கு எங்க பொழப்பு. என்று முடித்தார்.

இது இப்படி இருக்க ;

தம்பியின் அலுவலகம் ஈகாட்டுத்தாங்கல் ஒலிம்பியா டவர்ஸில் இருக்கிறது,லூகாஸில் இருந்து அங்கே ஆட்டோவில் செல்ல ஒருமுறை 150 ரூபாய்கள் ,இன்னொரு நாள் 200௦௦ ரூபாய் அதிசயமாய் ஒருநாள் 120 ரூபாய் என்று விதம் விதமான சார்ஜ்.இதில் ரன்னிங் ஆட்டோ ,ஸ்டாண்டுகளில் உள்ள ஆட்டோக்களுக்கென ஒரு வழாக்கம்.ஸ்டாண்ட் ஆட்டோக்கள் என்றால் அதிக தொகை,ஒரே இடத்திற்கு போக விதம் விதமான கட்டணங்களைப் பாருங்கள் .ரன்னிங் ஆட்டோ என்றால் ஒரு சார்ஜ்.சென்னைக்குள் புதிதாக நுழையும் நபர்கள் நிச்சயமாக ஆட்டோக்காரர்களிடம் ஏமாந்தே ஆக வேண்டும்,


இவை தவிர ஷேர் ஆட்டோக்கள் வேறு,

"ஷேர் ஆட்டோக்கள் பற்றி முக்கியமாக சொல்லியாக வேண்டிய குறிப்பு ஒன்று உள்ளது ;ஒரு முறை போரூரில் இருந்து வடபழனி வரை ஷேர் ஆட்டோ ஒன்றில் அம்மா நான் என் மகள் ஹரிணி மூவரும் பயணிக்க வேண்டியதாயிற்று,இரவு நேரம் பேருந்துகள் எல்லாம் அடைசலாய் புழுங்கிக் கொண்டு போனதால் ஹரிணியை வைத்துக் கொண்டு அதில் இடிபட்டுக் கொண்டு இங்கே வந்து சேர முடியாது என்பது ஒரு புறம் ,கூடவே அந்த நேரத்தில் போரூரில் இருந்து லூகாஸ் வரை லாங் டிரைவ் வருவதற்கு வேறு ஆட்டோக்கள் கிடைக்காத சூழலில் வேறு வழியின்றி ஷேர் ஆட்டோவில் பயணம்.

அந்த ஷேர் ஆட்டோவுக்கு இரண்டு டிரைவர்கலாம்.முன்புற சைடு மிர்ரர்கள் ஒன்று கூடக் காணோம் ,ஆரன் இல்லை,அட... ப்ரேக் கூட இல்லை ,சிக்னலில் வண்டி நிற்க வேண்டுமானால் முன்புற வாகனத்தை உரசினார்போல முட்டிக் கொண்டு தான் அந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தித் தொலைக்க வேண்டிய நிர்பந்தம்.இத்தனைக்கும் அந்த டிரைவர்கள் கலங்கினார் போல தெரியவில்லை ,அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து நாங்களாக தெரிந்து கொண்ட விஷயங்கள்.

தங்களது ஆட்டோவில் சைடு மிரர்கள் இல்லாததும் ஆரன் இல்லாததும் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.அது ஒரு பெருமைக்கு உரிய விஷயம் போல அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

" நாமலாம் எந்தக் காலத்துல சைடு மிரர்,ஆரன்லாம் வச்சினு ஆட்டோ ஒட்னோம் " அத்தெல்லாம் இல்லாது ஆட்டோ ஓடாத இன்னா !!! காலங்காலமா ஆட்டோ ஓட்டினு இருக்கம் இந்த மேக் அப்லாம் இல்லாங்காட்டி இன்னா இப்போ! "

சொல்லிக் கொண்டே இருவரில் ஒரு டிரைவர் வடபழனி நெருக்கத்தில் ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தி ஒன்லி 5 மின்ஸ் என்று கூறிக் கொண்டு அருகாமை கடையில் என்னவோ வாங்கிக் கொண்டு மறுபடி வண்டியை எடுத்து எப்படியோ ஒருவழியாக வடபழனி சிக்னலில் இறக்கி விட்டார்கள். அந்த டிரைவர் ஒன்லி 5 மினிட்சில் போய் வாங்கிக் கொண்டு வந்தது டாஸ்மாக் சரக்கு தான் என்றார் பக்கத்தில் இருந்த மனிதர். என்ன ஒரு அனுமானம் பாருங்கள்!

நானாக நினைத்துக் கொண்டது டிரைவர்கள் குடிப்பதற்கும் சேர்த்தே தான் பயணிகளின் தோற்றத்தைப் பொறுத்து (இவன் ஏமாளியா விவரமானவனா?!) ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப் படுமோ என்னவோ!!!

ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் கொஞ்சம் குறைவு என்று அதில் பயணிக்கிறோம் ,அதில் பல ஆட்டோக்கள் தட தட பயணங்கள் தான் ,உயிருக்கு உத்திரவாதமெல்லாம் கேட்கவே கூடாது.வண்டிக்கு ஆரன் இல்லை சரி ஆனால் பிரேக்கே இல்லாமல் இத்தாம் பெரிய நகரில் ஷேர் ஆட்டோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.இதை என்னவென்று சொல்ல!

இதே மாநகராட்சிப் பேருந்தில் என்றால் சாதாரணப் பேருந்தில் 5 ரூபாய் கட்டணம்.
டீலக்ஸ் பேருந்தில் 9 ரூபாய் கட்டணம்.
குளிர்சாதன வசதி கொண்ட பேருந்தில் இதை எல்லாம் விட கொஞ்சம் அதிகம் ஆனால் ஆட்டோவை விட குறைவு.

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன் என்கிறிர்களா?! ஒன்றுமே இல்லை .
அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு. ஏனென்றால் இங்கு எதுவுமே முறைப்படுத்தப் படவில்லை.உனக்கு ஒரு பங்கு ,எனக்கு ஒரு பங்கு என்று லஞ்சம் மலிந்து எல்லாமே மேம்போக்காய் இருப்பதால் யாரையுமே கட்டுப்படுத்த முடியாமல் போனது வாஸ்தவமாகி விட்டது.

100௦௦ ரூபாய் கொடுத்து சார்ஜன்ட் சீட் போட்டுக் கொண்ட டிரைவர் ஒரே ஆட்டோவில் 7 எட்டு பேரை ஏற்றிக் கொண்டு போக வழி இருக்கையில் ,ஷேர் ஆட்டோக்கள் ட்ராபிக் போலீஸ் கண்காணிக்கும் என்று தெரிந்தும் கூட தைரியமாய் ப்ரேக் இல்லாமல் பயணிகளை ஏற்றிக் கொண்டு போக வழி இருக்கையில், வேறு எதற்குத் தான் வழி இருக்காது. குடித்து விட்டு ஆட்டோ ஓட்டக் கூட வழி இருக்கையில் யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது தான்.

அநியாய ஆட்டோ கட்டணங்கள் என்று புலம்புவதைக் காட்டிலும் குறித்த நேரத்திற்கு முன்பே கிளம்பி மாநகராட்சிப் பேருந்தில் பயணிக்கலாம் ,இல்லாவிட்டால் சொந்தமாய் கார் அல்லது பைக் வாங்கிக் கொள்ளலாம். அப்படியும் கூட சமயத்தில் ஆட்டோக்களை தவிர்க்க வழியில்லை என்பதே நிஜம்.
நோட் :
புகைப்படம் தி ஹிண்டு பத்திரிகை தளத்தில் இருந்து எடுக்கப் பட்டது.கூகுளில் தேடும் போது கிடைத்தது.நன்றி .

Monday, June 7, 2010

எக்ஸ்கியூஸ்மீ ...உங்களுக்கு சொந்த வீடா? வாடகை வீடாங்க!?

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கென்று சட்ட உரிமைகள் எதுவும் இருக்கிறதா? எத்தனை அதிக வாடகை கொடுத்து ஒரு வீட்டில் குடி இருந்தாலும் யாருக்கோ பயந்து கொண்டு வாழ்வதைப் போலான ஒரு நிலைமையை ஏற்படுத்தும் வீட்டு உரிமையாளர்களின் சர்வாதிகாரப் போக்கை கட்டுப்படுத்த சட்ட உரிமைகள் தேவையா இல்லையா? 20௦ ௦ ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வாடகை கொடுத்து குடியிருக்கும் நபருக்கே அந்த வீடு சொந்தம் என்ற சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறதா!

நடுத்தர குடும்பஸ்தர்களுக்கு தமது ஒட்டு மொத்த வாழ்நாளுக்கும் சேர்த்து தமக்கென்று ஒரே ஒரு சொந்த வீடு என்பது வாழ்நாள் லட்சியம் ...கனவு என்று சொல்லலாம்,அப்படி கட்டிய வீட்டை விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு மீண்டும் வாடகை வீட்டுக்கு குடியேறும் நிலை வந்தால் அந்த வாழ்வின் அர்த்தம் என்ன?!

வீட்டு உரிமையாளர்கள் ,வாடகைக்கு குடி இருப்பவர்கள் என்பதை தாண்டி இடைத்தரகர்கள் என்றொரு பிரிவு வாடகை வீடு தேடுபவர்களின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறதே,இதை எல்லாம் முறைப்படுத்த சட்ட ரீதியாக எதுவும் செய்ய இயலாதா? அகஸ்மாத்தாக மனிதத் தன்மையும் கொஞ்சம் நேர்மையும் கலந்த வீட்டு உரிமையாளர்கள் அல்லது சட்ட நிபுணர்கள் இதற்கு பதில் அளிக்க முயற்சிக்கலாம்.

800 சதுர அடி வீட்டுக்கு ஏழாயிரம் ரூபாய் வாடகை அட்வான்ஸ் வீட்டு உரிமையாளர்களின் நோக்கம் போல அவர்களது மனநிலைக்குத் தக்க தீர்மானிக்கப் படும் போல,முகப்பேரில் உறவினர் ஒருவர் வீடு தேடிக் கொண்டிருந்தார் நகர சந்தடி அற்ற புற நகரப்பகுதி வீடு ஒன்றிற்கே 900 சதுர அடி வீட்டுக்கு 8000 ரூ வாடகை 80 ,000 ரூ அட்வான்ஸ் கேட்கப் பட்டது ,இந்த அட்வான்ஸ் தொகையை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கிறார்கள் என்று தெரியவில்லை,ரொம்பத் தெரிந்தவர்கள் என்றால் தொகை குறையுமாம்,அறிமுகமற்றவர்கள் என்றால் 10 மாத வாடகையை அட்வான்ஸ் தொகையாகத் தர வேண்டியதாய் இருக்கும்.வாடகைக்கு வீடு தேடும் பலரும் இந்த அட்வான்ஸ் தொகையையே பெர்சனல் லோனில் தான் வாங்க வேண்டிய நிலையிலிருப்பவர்கள்,ஆக மொத்தம் வீட்டு வாடகையோடு இந்த பெர்சனல் லோன் டியூவும் மாதாந்திர செலவில் சேர்ந்து கொள்ளும்,

இன்னொரு சகிக்க முடியாத கஷ்டம் ,இடைத் தரகர்கள் இல்லாமல் வீடு வாடகைக்குக் கிடைத்தால் சரி இல்லையேல் அவர்களுக்கு ஒரு மாத வாடகைத் தொகையை கமிஷனாகத் தர வேண்டும்.சரி இப்படி கமிஷன் அடிக்கிறார்களே அதில் ஒரு நேர்மை குறைந்த பட்ச நியாயம் இருக்குமா என்றால் அதுவும் இல்லை,வீட்டு உரிமையாளர் நிர்ணயித்திருக்கும் வாடகைத் தொகையைக் காட்டிலும் இந்த இடைத் தரகர்கள் 500௦௦ அல்லது 1000 ரூ அதிகமாக சொல்லித் தான் வீட்டையே கண்ணில் காட்டுவார்கள்,


எங்களது காம்ப்ளக்சில் 400 சதுர அடிகள் கொண்ட சிங்கிள் பெட் ரூம் பிளாட் ஒன்று சென்ற மாதம் காலி ஆனது ,முன்பு இருந்தவர்கள் அந்த வீட்டுக்கு கொடுத்து வந்த வாடகை 3 ,500 ரூ ,வீட்டுக்கு வெள்ளை அடித்து புதுபித்து இருக்கும் அதன் உரிமையாளர் இப்போது அந்த வீட்டுக்கு நிர்ணயித்த வாடகைத் தொகை 4000 ரூ ஆனால் உரிமையாளர் இந்தப் பணியை ஒப்டைத்திருக்கும் இடைத்தரகர் அந்த வீட்டுக்கு நிர்ணயித்திருக்கும் வாடகைத் தொகை 5000௦௦௦ ரூ

இது தவிர குடிநீருக்கு மாதம் 350 ரூபாய் ,கரண்ட் யூனிட் ஒன்றிற்கு வாடகைக்கு குடி இருப்பவர்கள் மாத்திரம் 4 .50 ரூ கொடுத்தாக வேண்டும்,இதில் வீட்டு உரிமையாளர்கள் வைத்தது தான் சட்டம் ,சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தது யூனிட்டிற்கு 3 ரூ கீழ் வாங்குவதே இல்லை.இதற்கெல்லாம் கேள்விமுறைகளே இல்லை.அப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதும் இல்லை.

இந்த இடைத் தரகர்களின் சாகசப் பேச்சு வலையில் சிக்காமல் ஒரு வீட்டுக்கு இத்தனை வாடகை தான் தகும் என நியாயமான வாடகைக்கு குடி போக மக்களுக்கு ஆலோசனை தரும் மையங்கள் எதுவும் தமிழகத்தில் இது வரை உருவானதுண்டா!?அரசு நிர்ணயித்துள்ள மின்சார கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 .50௦ ரூ,அதை பொருட்படுத்தாமல் அல்லது அரசை மதிக்காமல் தான் யூனிடிற்கு 3 .50௦ ரூ அல்லது 4 .50௦ ரூ கூடுதல் தொகை வசூலிக்கப் படுகிறது எனும் போது இது தண்டனைக்குரிய குற்றம் ஆகாதா?அரசாங்கத்தை அவமதிக்கும் செயல் ஆகாதா? இதற்கெல்லாம் என்ன வரைமுறைகள்!

இந்தத் தொல்லைகளில் அலைக்கழிக்கப் பட்டு நொந்து போய் கட்டக் கடைசியாய் சொந்த வீடு இல்லை பிளாட் வாங்குவது என்று முடிவெடுத்தால் சிரமம் குறைந்து விடப் போவதில்லை ,அதிகக் குடியிருப்புகள் கொண்ட ப்ளாட்களில் தான் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பிச் செல்வோம் அங்கே மாதாந்திர மெயிண்டனன்ஸ் தொகை கண்டிப்பாக 1000 க்கு குறையாது,லோனில் வீடு வாங்கியிருந்தால அந்தத் தொகையோடு செலவுக் கணக்கில் இந்த மெயிண்டனன்ஸ் தொகையையும் சேர்த்து தான் கணக்கிட வேண்டியதாய் இருக்கும்.

ஆக மொத்தம் சொந்த வீடு என்று ஆகி விட்டால் செலவு குறையும் என்று ஆசுவாசப் பட்டுக் கொள்ள முடியாது.முன்பு வாடகை வீட்டில் முறைவாசல் செய்பவர்களுக்கும் துவைக்க பெருக்க வருகிறவர்களுக்கும் கொடுக்கும் தொகை போக இப்போது atm ,ஜிம்,பார்க்,மெடிக்கல் சாப் வசதிகள் என்று பிளாட்டில் அழ வேண்டியதாய் இருக்கும்.இத்தனைக்கும் கூரை நமக்கில்லை கீழே தரை தளமும் நமக்கில்லை,பாண்டி விளையாட்டில் கோடு கிழிப்பதைப் போல துண்டு துண்டாய் கோடு கிழித்து வைத்திருப்பார்கள் கார் பார்கிங் என்று அதற்கும் லட்சக் கணக்கில் அழுது விட்டு மூச்சுக் காட்டாமல் இருக்க வேண்டும்.அப்போது தான் நீங்கள் ஒரு தேர்ந்த சொந்த பிளாட்வாசி .


இதைக்காட்டிலும் சிரமம் ஒன்றுள்ளது,வாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு இடையிலான நட்புறவு, நீ யாரோ நான் யாரோ என்பதெல்லாம் சாதாரணம், பழைய குடித்தனக் காரர்கள் புதிதாகக் குடி வருபவர்களை எதிரிகளைப் போல அல்லது நாங்கள் இங்கே பல வருடங்களாய் இருக்கிறோம் நீ முந்தா நாள் மழையில் நேற்று முளைத்த காளான் ரீதியில் எல்லாம் தெரிந்த ஏகாம்பர தொனியில் தான் கண்ணெடுத்துப் பார்க்கிறார்கள்,இவர்களுக்கிடையே நல்ல நட்பு நீடிக்க அல்லது முளைக்கத் தான் முடியுமா?

பழகும் முறை ரொம்பத் தான் பாழ்பட்டுக் கிடக்கிறது,எப்போதும் நம்மை யாராவது ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம் ,ஜாக்கிரதை உணர்வு நொடிக்கொரு முறை மண்டையில் அலாரம் அடிக்குமோ என்னவோ! யாரும் யாரோடும் சுமுகமாய் பழகுவதே இல்லை,வெளிப் பகட்டுப் பேச்சுக்கள் எத்தனை நிமிடங்களுக்கு!

ஒரே மாதிரியான ஒரே அளவான வீடுகள் வீட்டு உரிமையாளரின் தனிப்பட்ட விருப்பங்களின் அல்லது மனநிலைக்கு ஏற்ப வெவ்வேறு தொகைகளில் வாடகைக்கு விடப் படுகிறது. சுமார் 600௦௦ சதுர அடிகள் கொண்ட நான்கு பிளாட் என்று வைத்துக் கொள்வோம்,ஒரே அளவான பிளாட் என்றால் எல்லாமே ஒரே வாடகைக்குத் தானே விடப் பட வேண்டும்,அப்படி இல்லை,முதல் வீடு 4000 ரூ,அடுத்த வீடு 4,500 ரூ அதற்கடுத்த வீடு 5000 ரூ ,இதற்கான கரண்ட் சார்ஜ் மற்றும் மெட்ரோ வாட்டர் மாதாந்திர தொகையிலும் நோக்கம் போல பாரபட்சம்,குடியிருக்கும் வாடகை வீட்டுக்காரர்களிடையே ஒற்றுமையோ நட்போ இருந்தால் இந்தக் குட்டு வெளிப்பட்டு என்றைக்கோ நீர்த்துப் போயிருக்கலாம்,இப்போது உண்மை தெரிந்தும் கேட்டுக் கொள்ள முடியாத மனக்குமைச்சல் ,நம்பிக்கையின்மை தான் மிஞ்சக்கூடும்.

இதை எல்லாம் தாண்டி வந்தாச்சா? உட்கார்ந்து மூச்சு வாங்கிகிட கூடாது, மாச செலவுன்னா அது ஹவுசிங் லோன் கட்றதும் வீட்டு வாடகை,தண்ணி பில்,கரண்ட் பில் கற்றதோட முடிஞ்சுடுத்தா என்ன? இல்லையே, நைட் தூங்கிட்டு இருக்கீங்க,உங்க குழந்தைக்கு படுத்திருக்கற பொசிசன் மாறினதுல எதோ ஒரு செகண்ட்ல திடீர்னு கழுத்து சுழுக்கிடுது இதென்ன கிராமமா சுழுக்கு எடுத்து விடறவங்களைத் தேட...இல்லனா வீட்டுக்கு வீடு பாட்டிகள் இருக்காங்களா என்ன? தனிக் குடும்ப அவஸ்தைகளை கேளுங்க, வேற வழியே இல்லை குழந்தை வலியில போடற கூப்பாடு பெத்தவங்க நம்மள டாக்டர் கிட்ட ஓட வைக்கும் ,டாக்டர் சும்மா தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார், கன்சல்டிங் fee 300௦௦ ரூ க்கு குறையா வாங்கினா அவர் திறமையான டாக்டர் இல்லையாம்!ஹாஸ்பிடலும் சும்மா சொல்லக் கூடாது இன்டீரியர் டெகரேசன் கூடக் குறைய ஸ்டார் ஹோட்டல் ரேஞ்க்கு மெயிண்டன் பண்ணிருப்பாங்க.அதுக்கெல்லாம் சேர்த்து தான் கன்சல்டிங் fee வாங்கறாங்களோ என்னவோ!மாசம் ஒரு தடவை யாருக்காக டாக்டரை பார்க்கப் போனாலும் சர் பர்ஸ் ஊசி குத்தின பலூன் தான்.

என்னத்தை சொல்ல இதோட நிறுத்திக்கிறேன்,

முடிவு பெறாத அல்லது ஒரு ஒழுங்கான வடிவமற்ற இந்தக் கட்டுரை போலவே தான் நான் மேலே சொன்ன விசயங்களும் எப்போதுமே வரையரைப் படுத்தப் படுவதே இல்லை எனும் தார்மீக வருத்தத்தோடு இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன்.

Thursday, May 27, 2010

சாமரப் பெண்டிர் ...

கற்கண்டுக்கு நேற்றிரவில் சரியான தூக்கமில்லை ,மூன்றாம் சாமத்தில் உளைந்து உபாதை கொடுத்துக் கொண்டே இருந்த வலது தோள்பட்டை கொஞ்சம் கழற்றி வைத்தால் தேவலாம் போல பின்னிப் பின்னி வழியில் துவண்டு கொண்டிருந்தது.கிழக்குச் சூரியன் மேற்கில் ஏறி வரத் தொடங்கியதைக் கண்டதும் உபாதைகளைப் புறம் தள்ளி வலி விழுங்கி அரண்மனைக்குப் புறப்பட ஆயத்தமானாள்.மன்னருக்கு சாமரம் வீசும் பெண் மன்னருக்கு முன் அங்கிருக்க வேண்டாமோ!சாமரம் வீச ஒருத்தி போதுமோ? இடப் பக்கம் கற்கண்டு என்றால் வலப் பக்கம் சாமரம் வீச பொன்வண்டு வருவாள்.

கற்கண்டு பொன்வண்டின் வீட்டை அடைகையில் பொன்வண்டு தன் வீட்டு கல் கூரையின் திண்டில் சாய்ந்து காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்த தென்னம் பாளைகளை சுய இரக்கம் கவிந்து போன பார்வையால் ரசனையே அற்றுப் போனவளாய் பார்த்துக் கொண்டிருந்தாள். கற்கண்டும் பொன்வண்டும் புன்னகை மறந்தவர்களாய் அரண்மனைக்குப் பறந்தார்கள்.

மயிலிறகுகளை விசிறி போலப் பிணைத்துக் கட்டிய முறம் போன்ற மென் சாமரங்களை ஆளுக்கு ஒன்றாய் கைகளில் ஏந்திக் கொண்டு ராஜாவின் தர்பார் மண்டபத்துக்கு வந்து சிம்மாசனத்தின் இரு புறமும் தயாராய் நின்று கொண்டார்கள் ,கட்டியக்காரன் பராக் பராக் சொன்னதும் உள்ளே வந்த ராஜா இந்தப் பெண்களை ஏறிட்டும் பார்த்தாரில்லை .

அப்போது ஆரம்பித்த விசிறல் ராஜாசபை களைந்து அந்தப்புரம் போகும் வரை தொடர்ந்தது.இடையில் கை மாற்றிக் கொடுக்க ஒரு ஆளை போடக் கூடாதா இந்த பாழாய்ப் போன ராஜாக்கள்!!! தோள் பட்டையிலும் மணிக்கட்டு மூட்டிலும் வலி விண் விண்ணென்று தெறிக்க பொன்வண்டின் முகம் பொலிவிழந்து வாடிப் போனது, கற்கண்டு சாமரம் வீசும் பெண்கள் தான் உலகில் சபிக்கப் பட்டவர்கள் எனும் ரீதியில் துக்கப் பட்டு வேதனையில் ஆழ்ந்து போயினள்.பாவம் இந்தப் பெண்கள்! என்று நினைக்க ஆட்கள் எவரையும் காணோம் அத்தனை பெரிய அரண்மனையில் !

Wednesday, May 19, 2010

பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அலட்சியப் படுத்துவது தான் மத நம்பிக்கையா?

இந்து மத நம்பிக்கைகளுக்கும் அறிவியலுக்கும் இருக்கும் தொடர்பு அல்லது தொடர்பற்ற நிலை குறித்து சென்னை பிர்லா பிளானெட்டோரியத்தில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறதாம்.இந்த பயிற்சி முகாமை உடனடியாக நிறுத்தக் கூறி பி.ஜே.பி தமிழக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணனும் இந்து முன்னணி ராமகோபாலனும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

இந்த பயிற்சி முகாம் இந்து மதத்தின் பாரம்பர்ய நம்பிக்கைகள் மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்சி எனவும் இப்படி ஒரு பயிற்சி முகாமை நடத்துவதில் அரசியல் ரீதியான காரணங்கள் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர்கள் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

கீழே உள்ள அறிவிப்பைப் பாருங்கள் ;

சென்னை, மே 7_ சென்னை பிர்லா கோள-ரங்கத்தில் உள்ள அறி-வியல் தொழில்நுட்ப மய்யத்தில் பல்வேறு பயிற்சிகளும், தொழில்-நுட்ப நிகழ்ச்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மே 15ஆ-ம் தேதி நடைபெற உள்ள ஒரு நாள் பயிற்சியில் நவீன தொலைநோக்கிகளைக் கொண்டு, விண்வெ-ளியைக் கண்காணித்தல், 3டி அறிவியல் காட்சிகள், சூரிய ஒளிக்கதிர்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடத்-தப்பட உள்ளன. இதில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் பங்கேற்-கலாம். முதலில் வருபவர்-களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், 50 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்படுவர். மே 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை மூன்று நாள் கோடைகால முகாம் நடத்தப்படுகிறது. சூரிய ஒளிக்கதிர் முறை, சந்திரன் குறித்த ஆய்வு-கள், நட்சத்திரங்களின் பிறப்பு, அண்டைவெளி, தொலைநோக்கு கருவிகள் ஆகியவை குறித்த விவ-ரங்கள் கற்றுத் தரப்படும். இதில் 7, 8 மற்றும் 9ஆ-ம் வகுப்பு மாணவ, மாண-விகள் பங்கேற்கலாம்.மே 20ஆ-ம் தேதி முதல் 28ஆ-ம் தேதி வரை ஓவியம் மற்றும் களிமண் சிற்பங்-கள் செய்வது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் 8-ஆம் வகுப்பு முதல் 11ஆ-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி-களில் பங்கேற்க விரும்பு-பவர்கள் 044_24410025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு-கொண்டு, பதிவு செய்து-கொள்ள வேண்டும்.

பயிற்சி முகாம் பற்றிய இந்த அறிவிப்பில் எங்கேயாவது இந்து மதத்தின் நம்பிக்கைகள் குறித்தான அவதூறுகளைக் காண முடிகின்றதா? நட்சத்திரங்களை ,வான மண்டலத்தைப் பற்றிப் படிப்பதோ தெரிந்து கொள்வதோ எப்படி இந்து மத நம்பிக்கைகளில் சேற்றை வாரி இறைப்பதாக இருக்க முடியும்?! இந்து மதத்தைப் பற்றியோ அதன் கடவுள்களைப் பற்றியோ இந்த அறிவிப்பில் எதுவும் தவறாக இல்லை. பிறகெதற்கு இந்தப் பயிற்சி முகாமை உடனடியாக நிறுத்தச் சொல்லி இவர்கள் இருவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்?

தமிழக அரசியல் வாதிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் எங்கு?...எதற்கு ?... எப்படி? எதிர்ப்பு தெரிவிப்பது என்பதில் பயங்கரக் குழப்பம் நிலவி வருவது புரிந்திருக்க வேண்டுமே!!!

மாணவர்கள் அறிவியல் அறிவைப் பெறுவதால் அவர்கள் சார்ந்துள்ள இந்து மதத்தின் மீதான நம்பிக்கை குலையும் என எப்படி இவர்கள் இருவராக முடிவு செய்து கொண்டார்கள்.இப்படியே போனால் வானியல் என்றொரு பாடமே இருக்கக் கூடாது என்று கூட சொல்லக் கூடும் நாளடைவில்.வான மண்டலம்..நட்சத்திரம் ....அண்ட வெளியில் சிதறிப் பரவியுள்ள எண்ணற்ற கோள்களைப் பற்றிய விரிவான விளக்கங்கள் இவைகளை எல்லாம் பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாக இதைக் கருதுவதால் இவர்களுக்கு என்ன நஷ்டம்?

சூரியனை பாம்பு விழுங்குவது சூரிய கிரகணம் என்றும்,சந்திரனை பாம்பு விழுங்கினால் அது சந்திர கிரகணம் என்றும் இனி வரும் தலைமுறைகளும் நம்ப வேண்டுமா? சந்திரன் (நிலா) இந்த நட்சத்திரத்தின் மனைவி ரோஹிணி எனும் நட்சத்திரமாம் சந்திரன் ரோஹிணியோடு இருக்கும் காலங்கள் வளர்பிறை என்றும் ரோகினியை விடுத்து இன்னொரு மனைவி(பெயர் தெரியவில்லை) யோடு இருக்கும் காலங்கள் தேய்பிறை என்றும் தான் எப்போதும் நம்பிக் கொண்டிருக்க வேண்டுமா?

மத நம்பிக்கைகள் என்ற பெயரில் எதையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளும் மடத்தனம் இன்னும் எத்தனை காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள்,இதெல்லாம் மதத்தின் பெயரால் ஏமாற்று வேலைகள் ஆகாதா?

முதலில் திரைப்படங்களுக்கு இப்படித்தான் பெயர் வைக்க வேண்டும் ...இப்படி எல்லாம் பெயர் வைக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்,அப்புறம் இரவு எட்டு மணிக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட வேண்டும் என்று ஒரு கட்சி கண்டித்தது...இப்போது மாணவர்களுக்கு நடத்தப் படும் பயிற்சி வகுப்புகளில் கை வைத்திருக்கிறார்கள்.

யார் எதைப் படித்தால் இவர்களுக்கென்ன ? பள்ளி மாணவர்கள் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும் எதை கற்றுக் கொள்ளக் கூடாது என்பதை அவரவர் பெற்றோர்களும் அந்தந்த மாணவர்களும் அல்லவா முடிவு செய்து கொள்ள வேண்டும்.இவர்கள் யார் நடுவில் கருத்துச் சொல்ல!குட்டையைக் குழப்புவதில் மீன் கிடைக்குமா ?

கட்சிகளும் மதங்களும் அவரவர்களுக்குரிய இடங்களை விட்டு விட்டு சுய சார்புடைய சுயமாய் சிந்திக்க கற்றுத் தரப் படும் சில விசயங்களில் மூக்கை நுழைப்பானேன்.