Showing posts with label பகிர்வு.. Show all posts
Showing posts with label பகிர்வு.. Show all posts

Friday, January 7, 2011

கண்டமனூர் ஜமீனும் வேலப்பர் கோயிலும் (விசிட்)



நேற்று இரவு மக்கள் தொலைக்காட்சியில் பட்டுப் போன வருஷ நாட்டு ஜாமீன் அரண்மையை காட்டிக் கொண்டிருந்தார்கள். கண்டமனூர் ஜாமீன் தான் வருசநாட்டு ஜாமீன் என்று துலங்கியவர். ஜாமீன் ஆண்டி வேலப்பா நாயக்கர் தன ஆப்த நண்பன் பளியன் சித்தனை கொன்றதால் அவர் குடும்பத்தில் ஆண் வாரிசு பிறந்தால் தகப்பன் ஸ்தானம் அற்றுப் போகட்டும் என சாகும் போது சாபமிட்டு செத்துப் போகிறான் பளியன்.

பளியனின் சாபமோ ஜமீன்தாரின் தன பயமோ எப்படியோ அவருக்கு ஒரு மகன் அவரது மனைவியின் வயிற்றில் சூழ் கொண்ட போதே ஜமீந்தார் இறந்து போகிறார். இந்த ஜாமீன் வம்சத்து சாமித்துரை எனும் ஜாமீன்தார் என் அப்பாவின் தாத்தா காலத்தவர் என்று நினைக்கிறேன். எங்கள் ஊருக்கும் கண்டமனூருக்கும் நடுவில் வைகை ஆற்றுப் பாலம் உண்டு .இந்தப் பாலத்தை திறந்து வைக்க எம்.ஜி.ஆர் வந்திருந்தார் அப்போது. நிற்க .

இந்தப் பாலத்தின் அடியில் கடைசி ஜமீன்தாரின் கல்லறை ஒன்று உண்டு இப்போதும் கூட. சின்ன வயதில் நாங்கள் விளையாட்டாய் அங்கே நுழைந்து பார்த்திருக்கிறோம் ,அதென்னவோ கோயில் என்று நினைத்திருந்தோம் அப்போது.

எங்கள் ஊரின் வைகையாற்றின் கரையோரமாகவே நீள நடந்தால் அரண்மனைப் புத்தூருக்கும் வைகைக்கும் இடையே ஒரு இடிந்து போன மாளிகை எச்சங்களையும் மிச்சங்களையும் பார்க்கலாம் இப்போதும் .அது ஆண்டி வேலப்ப நாயக்கர் மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது பழக்கப் பட்டுப் போன அவரது தாசி ஜனகதிற்கென ஜமீன் கட்டிக் கொடுத்த மாளிகையாம் .ஜனகமும் ஜாமீனும் இந்த மாளிகையில் வாழ்ந்திருந்தார்கலாம்.இங்கே வைத்து தான் ஜனகம் சுட்டுக் கொல்லப் பட்டாளாம். சுட்டது ஜமீனின் முதல் மனைவி எரசக்க நாயக்கனூர் ஜமீனின் இளவரசியின் சகோதர முறை உறவினர் என்றும் சொல்வார்கள்,அதைக் குறித்து விரிவாகத் தெரியவில்லை.

ஜமீன் ஆண்டி வேலைப்ப நாயக்கர் காலத்தில் தான் மாவூத்து வேலப்பர் கோயில் புனரமைக்கப் பட்டதாம். இதற்கு மிகப் பெரும் காரணமாக இருந்தவன் பளியன்.அதெல்லாம் பளியன் சித்தன் ஆண்டி வேலப்ப நாயக்கரின் ஆப்த நண்பனாக இருந்த காலம்.அதற்கு பின் காலங்கள் மாறின சித்தன் எதிரியானான். கொலையும் செய்யப் பட்டான். என்பது ஜாமீன் கதை.


மாவூத்து வேலப்பர் கோயிலைப் பற்றிச் சொல்ல வேண்டும் இங்கே .கோயிலுக்கு அடியில் உள்ள மலைபாறையின் ஊடே பல குகைகள் குடையப் பட்டுள்ளன,இங்கு தான் பளியர்கள் வாழ்ந்து வந்தார்களாம்.

மேலும் நேற்று டி.வி நிகழ்ச்சியில் கூட சொன்னார்கள் இந்த மலைக் குகைகளில் கற்காலத்தில் கூட மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளனவாம். சுற்றிலும் அடர்ந்த மரங்கள் சூழ மெல்லிய சுனை நீர சப்தத்துடன் வேலப்பர்(முருகர்) கோயில் கொண்டுள்ளார் மலை மீது. கிழக்குச் சீமையிலே ,கும்மி பாட்டு போன்ற படங்களில் எல்லாம் இந்த வேலப்பர் கோயிலை காட்டுவார்கள். மிக அருமையான டூரிஸ்ட் ஸ்பாட். சுனையில் இருந்து கசியும் நீர் மலையிலிருந்து கீழாக வழிந்து ஓடையாக விரிந்து கீழே பரவுகின்றது. இந்த சிற்றாறு எங்கே போகிறதோ தெரியவில்லை.

விடுமுறை நாட்களில் சாப்பாடு கட்டிக் கொண்டு உறவினர்கள் அல்லது நண்பர்களை அழைத்துக் கொண்டு போய் கொண்டாடிக் கழிக்க உகந்த இடம் இந்த மலைக் கோயில்.ஆண்டிபட்டியில் இருந்து ஒரு மணி நேரப் பயணம் என்று நினைக்கிறேன்.

சுனைத் தண்ணீர் கிறிஸ்டல் கிளியர் தூய்மையில் தலை வழியே வழிந்தோட சுனை மடுவில் இறங்கி நின்று குளிப்பது சொர்கானுபவம்.தனியே நின்று குளிக்க இயலாது பாசி பிடித்துப் போன மடு காலை வாரி விடலாம். கூட்டமாக ஒருவரோடு ஒருவர் கைகளைப் பிணைத்துக் கொண்டு மடுவில் இறங்கி குளிக்கலாம்.

குளித்து மேலேறினால் பளீர் வெளியில் முகமும் உடலும் பிரகாசிக்கும் மலை வெயிலுக்கு தங்க நிறம் கொள்ளும் உடல்கள். பசி வயிற்றைக் கிள்ளும் .

ஹாட் பாகில் சூடான பதார்த்தங்கள் கொண்டு போய் விடுவது உத்தமம். குளித்து முடித்ததும் பசி அத்தியைப் பிடிக்க சாப்பாடு கொண்டா கொண்டா என உள்ளே போகும்.

மாலை மங்கும் முன்பு சாவதானமாக வீடு திரும்பலாம் .

மலையும்,மடுவும்,சுனைக் குளியலுமாக ,மறக்க முடியாத பயணமாக இருக்கும்.

சொல்ல மறந்தது ...

நேற்று மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அண்ணாமலை சீரியல் புகழ் சூதாடிச் சித்தன் கார்த்திகேயன் தான்.

அவரே ஒரு சித்தர் களையில் தான் இருந்தார் .மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி

Sunday, February 28, 2010

பா.ராஜாராமின் கருவேல நிழல் ...


என் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் கவிதை எழுதத் தெரியாது ,தெரிந்திருந்தால் ஒரு வேலை ராஜாராமின் கவிதைகளை ஒத்த கவிதைகளை அவர்களும் எழுதி முடித்திருப்பார்கள்,அத்தனை வாஞ்சையானவை இவரது கவிதைகள்.நேசமித்திரனின் அழகான முன்னுரை இக்கவிதை தொகுப்பிற்கு உன்னத அங்கீகாரம்.

"ஏதாவது ஒன்றை இழந்தே
மற்றொன்றைப் பெற முடியும் '
என்று கற்றுணர்த்திய அப்பாவிற்கு "

இவைகளை சமர்பித்ததின் மூலம் இன்னும் சிநேகம் மிகுந்த உணர்வுகள் மேலோங்குகின்றன. காரணம் கவிதைகள் பலவற்றில் பேசப்பட்ட பொருட்கள் ஒரு தந்தையின் தார்மீக வலிகள்.

விடுமுறைகளில் சொந்த பூமிக்கு வந்து மீண்டும் அந்நிய பூமிக்கான பயணத்திற்கு நிர்பந்திக்கப் பட்ட ஒரு மனிதன் தன் வீட்டு முற்றத்து தாழ்வாரத்தில் மத்தியான சாப்பாட்டின் பின் வேப்ப மரக் காற்றுக்கு கண்ணசருகையில் உறக்கமும் இன்றி விழிப்பும் இன்றி ஒரு மயக்க நிலையில் வாழ்வின் சம்பவங்களை மீட்டிப் பார்க்கையில் சந்தோசமும் அற்ற வெறுப்பும் அற்ற ஒரு நிராதரவான பரபரப்பில் மனம் ஊசலாடும்.அந்த மனநிலையை இவரது கவிதைகள் ஒவ்வொன்றிலும் உணர முடிகிறது.

வேரோடு பிடுங்கி நடப்பட்டதான உணர்வு தான்.ஆனாலும் வேர்தூவிகளோடு ஒட்டிக் கொள்ளும் ஈர மண்ணைப் போல சொந்த ஊரின் ஞாபகங்கள் எங்கு போனாலும் அலைகளாய் தாலாட்டி மனதின் அடி ஆழத்து மண்ணை ஈரமாகவே நீடிக்க வைக்கின்றன.

தொகுப்பில் முதல் வாசிப்பிலேயே எனக்குப் பிடித்த சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்.

சொல்லிட்டேன் ஆமா ...

"ஓட நடக்க
பேசிச் சிரிக்க
குழந்தைகளை
குளிப்பாட்ட
சோறூட்ட
உனக்குப் போலவே
எனக்கும் வாய்த்தது அப்பா
................................................
கீரை
வாங்கியாந்து
கிணற்றடியில் வைத்து
சிரித்துக் கொண்டே
செத்துப் போக...
உனக்கு போலவே
எனக்கும் வாய்க்கனும் அப்பா."


அப்பாவைப்பற்றியதான மகனின் நெகிழ்வு ,ஆளரவமற்ற ஊர் எல்லை மாமரத்தினடியில் வெயிலுக்கு
ஒதுங்கினால் விட்டு விட்டுக் கேட்கும் கிளிகளின் கீச்சொலிகள் போல நீங்காத நினைவுகளை எழுப்பும் கவிதை.

"ஆற்றங்கரையில் எடுத்த கல்
மினு மினுப்பற்ற வழுவழுப்பு
வீடு வரையில் சேர்க்க இயலாத
ஞாபகக் குறைவு
அங்கேயே கூட கிடந்திருக்கலாம்
ஆளோட பேரோட இருந்திருக்கும்..."

வேலைக்கென்று அயல்நாடுகளில் தஞ்சமடைந்து எனது மண்,எனது மக்கள் எனும் சுய அடையாளங்களை இழக்க நேரும் மனதின் வலி மிகுந்த தேம்பலாக இந்த வரிகளை எடுத்துக் கொள்ளலாமா?

விதித்தது எனும் தலைப்பில் :-

"எல்லா கொலுசொலிகளுக்கும்
உசும்பி விழிக்க
பாத்தியதைப் பட்ட
செவி ஒன்று
இருக்கு தானே."

ஞாபகப்பொதி எனும் தலைப்பில் :-

"குருவிக் கூடுகளையும்
கீச்சொலிகளையும்
மரம் இழைக்கிற போதெல்லாம்
உணர்கிறான்
மனசுள்ள தச்சன் ."

இந்த இரண்டு கவிதை வரிகளும் வாசிக்கையில் உள்ளுக்குள் பலத்த அர்த்தங்களை விரித்துக் கொண்டே செல்கின்றன ,ஒவ்வொருவருக்கும் ஒவொரு விதமாய் தோன்றலாம் அது வாசிப்பவரின் மனநிலை சார்ந்தது,எனக்கு மிகப் பிடித்த வரிகள் இவை.

இலையுதிர் காலம் எனும் தலைப்பில் :-

முதுகிற்குப் பின்புறம் மறைகிற
குழந்தைகளை முன்னிழுத்து
"சித்தப்பாடா " என்று
கண்ணீருடன் சிரிக்கிறார்கள் காதலிகள்

அவ்வளவையும் காரணமாக்கி
சாராயத்தில் குளிக்கிறோம்
சவுதியிலிருந்து திரும்பும் நாங்கள்."

பாவப்பட்ட காதலிகளும் அன்னியப்பட்ட காதலர்களும் இக்கவிதைக்கு நேர்மை செய்கிறார்கள்,வேறென்ன சொல்ல!"ஆட்டோகிராப் "படத்தின் மல்லிகாவை ஞாபகப்படுத்தும் காதலிகள் நிறைந்தது இவ்வுலகம்.

வலி எனும் தலைப்பில் ஒரு கவிதை :-

அம்மாவை நேற்று
வீதியில் பார்த்தேன்...
கருத்து சிறுத்து விட்டாள்
ஏன் இப்படிப் போனாள்
என்று கேட்க விருப்பம் எனக்கு

ஏன் இப்படிப் போனாள்
என்று தெரியும் எனக்கு
எனக்குத் தெரியும் என்று
அம்மாவிற்குத் தெரியும்
பிறகெதற்கு தூசிப் புயல்
.............................................

பேசாமல்
பெண் குழந்தையாய்
பிறந்திருக்கலாம் நானும்

அவளின் சொல்லை விட
அவரின் சொல்
கௌரவமாய் இருந்திருக்கும்
அம்மாவிற்கும் எனக்கும்.

மாமியார் மருமகள் போராட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுப் போன ஒரு மகனின் காயமிக்க ஊமை நினைவுகள்.என்ன நினைத்து என்ன? மனைவிகள் அம்மாக்களை விடவும் முக்கியப் பட்டவர்களாய் போய் விடுவது வாழ்வின் கண்ணாமூச்சு ஆட்டம்.இன்றைய மனைவிகள் நாளைய அம்மாக்கள்!

"தனலச்சுமி சின்னம்மை "

நான் தான்
"அப்பா உங்களை ரொம்ப
கேட்டுக் கொண்டே இருந்தார் சித்தி" என்றேன்
"ஆகட்டும்" என்றாள்
மென் சிரிப்பின் ஊடே
சரி தானே...
தனலச்சுமி சின்னம்மைக்கு மேலா
அப்பாவை எனக்கு தெரிந்து விடப் போகிறது?


புன்னகையோடு கடந்து விட்டாலும்,புன்னகைக்கும் போதெலாம் உதடுகளில் உறைந்து விடும் மென் சிரிப்பாய் உள்ளார்ந்த உறவுகளைப் பேசும் மென்மையான கவிதை.

காரணப்பெயர் :-

அப்பாவிடம் ஒரு நிலம் இருந்தது
"பெரியனஞ்சை "என்று பெயர்
பெரியனஞ்சைக்குப் பிறகே
அம்மாவை பிடிக்கும் அப்பாவிற்கு
.........................................................
கொண்டு செல்லும் காஞ்சி ஊறுகாயின்
மண்டி நீரையும் வயலில் உமிழ்வார்
ப்ரியம் பொங்க
.............................................................
காலத்தின் தேய்மானத்தில்
பெரியனஞ்சையை தோற்றார்
அப்பா ஒரு நாள்

பிறகு அப்பா சாராயம் குடித்தார்
வெங்காய கடை வைத்தார்
திரையரங்கில் வேலை பார்த்தார்
யார் அழைத்தாலும் போய் உழைத்தார்
அவ்வளவு இடிபாடுகளுக்கிடையேயும்
இயங்கிக் கொண்டே இருக்க
ஐந்து காரணங்கள்
இருந்தது அப்பாவுக்கு

எங்கள் ஊரில் நிலங்களுக்குப் பெயர்
இருந்தது போல்
காரணங்களுக்கும்
பெயர் இருந்தது

அது...
சுமதி
புனிதா
ராஜா
தேவி
இந்திரா .

எல்லாக் கவிதைகளிலும் ஊடாக ஒரு பச்சை நெருஞ்சி முள்ளை வைத்து எழுதி இருக்கிறார் பா.ரா.

அந்த முள் தைக்க வேண்டிய இதயங்களில் தாராளமாய் தைக்கிறது.

இந்தக் கவிதைகள் இயற்கையைப் பற்றிப் பேசவில்லை ,அரசியல் கிடையாது,காதல் இருக்கிறது ஆனால் இவை காதல் கவிதைகள் அல்ல,சோகம் இழையோடுகிறது சோகக் கவிதைகள் அல்ல ,கஷ்ட நஷ்டங்களைக் கலந்து கண்ட அனுபவமிக்க பக்குவப் பட்ட ஒரு குடும்பத் தலைவனின் தகப்பனின்,மகனின்,ஒரு கணவனின்,காதலனின்...தூரத்து துயரங்கள் படர்ந்த நிராதரவான உள் மனச்சமாதானங்களே இங்கே கவிதைகள் ஆக்கப் பட்டிருப்பதால் கவிதைகளை உணர்ந்து வாசிக்க இயல்கிறது.

1988 முதல் கவிதைகள் எழுதி வருகிறாராம்,கணையாழி,சுபமங்களா,தினமணி,ஆனந்த விகடன் ,கல்கி எனப் பிரபல பத்திரிகைகள் பலவற்றிலும் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கின்றனவாம்.
இங்கே வலைக்குப் பின் அகநாழிகை தொகுப்பில் தான் முதல் முறையாக இவரது கவிதைகளை வாசிக்க நேர்ந்தது.மிக நல்ல கவிதைகள்.

ஆசிரியர் :பா.ராஜாராம்
நூல் : கருவேலநிழல்
வெளியீடு :அகநாழிகை
விலை : ரூ ௪0

Thursday, January 7, 2010

2012 இல் உலகம் அழியப் போகிறதாமே!!!




இப்படித்தான் எண்பதாம் வருடத்திலும் ஒரு புரளி கிளம்பி அடங்கியதாம்,அன்றைக்கு ஸ்கைலாப் , இன்றைக்கு நிபுரு, இந்த நிபுரு என்ற விண் கோளம் 2012 டிசம்பரில் பூமியைத் தாக்கும் என்பது சில புனைகதை எழுத்தாளர்கள் சொல்கிறார்களாம்.

கிட்டத் தட்ட 400கோடி ஆண்டுகளாக பூமி இருந்து வரும் சூழ்நிலையில் இன்னும் கூட 300 கோடி ஆண்டுகளுக்கு பூமிக்கு எந்த வித சிக்கலும் வரப் போவதில்லை என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ள நிலையில் இப்படிப் பட்ட கட்டுக் கதைகள் பொதுமக்களிடையே பரவிக் கொண்டிருப்பதை வெறும் வதந்தி என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

பூமிக்கு வெளியில் இருந்து பெரிய விண்கல் ஏதாவது பூமியைத் தாக்கக் கூடுமா என்பதை முன்கூட்டியே அறிவதற்காக நாஸா விண்வெளி மையம் தொடர் ஆராய்ச்சி நடத்தி வருகிறதாம் ,அப்படி எந்தத் தாக்குதலும் நேரப் போவதில்லை என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவாம்.

அப்படியானால் 2012 க்குப் பிறகு மட்டுமல்ல அதற்குப் பிறகும் பூமி ஒன்றும் அழியப்போவதில்லை

கோடிக்கணக்கான கோள்கள் இருந்தாலும் கூட நாம் வாழும் பூமியில் தான் மனித இனம் வாழத் தகுந்த சூழல் நிலவுகிறது,மலைக்காடுகளை அழிப்பதனாலும் வாகனங்கள் மூலம் வெளியேறும் கார்பன் புகை அதிகமாவதாலும் பூமியின் வெப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் பனிமலைகள் உருகுகின்றன,கடல் நீர் மட்டம் உயர்கிறது .சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கின்றன.

இன்னொரு பக்கம் உலக நாடுகளுக்கு இடையே நிலவும் பனிப்போர்கள் உச்சமடைந்தால் மூன்றாம் உலகப் போர் வருவதற்கான சூழலும் நிலவுகிறது. நாட்டு அதிபர்களும் அதிகாரம் படைத்த அதிகாரிகளும் ஒரு பக்கம் கை குலுக்கிக் கொண்டு செய்தி ஊடகங்களுக்கு போஸ் கொடுத்து விட்டு மறுபக்கம் ஒருவருக்கொருவர் குழி வெட்டும் வேளையில் படு ஜரூராக இருக்கிறார்கள். இதற்குப் பெயர் தான் ராஜதந்திரமாம்!!!

ஒரு பக்கம் மக்கள் கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் இந்திய விருந்தினராக வரும் ஜப்பான் பிரதமர் தமக்கு அளிக்கப் படும் இந்திய விருந்தில் சிறப்பு விருந்தினராக தீபிகா படுகோனை டிக் செய்கிறார். (ரொம்பத்தான் தேவை!!!) ரேப் கேம் என்று புது புது சீரழிவு விளையாட்டுக்களை கண்டு பிடித்துத் தள்ளிக் கொண்டிருக்கும் நாடு தானே அது.தொழில் நுட்பம் வளர்ந்து உலகத்துக்கே எடுத்துக் காட்டாக விளங்கிக் கொண்டிருக்கும் ஜப்பானிலிருந்து தான் இப்படி அச்சுறுத்தும் விளையாட்டுக்களும் அறிமுகமாகின்றன.அதனால் அந்நாட்டின் அதிபரை சொல்வதற்கு என்ன இருக்கிறது?

எதையோ சொல்ல வந்து விஷயம் எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது பாருங்கள்! ம்...இதனாலெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் பூமிக்கு வெளியில் இருந்து ஏதாவது வந்து பூமியைத் தாக்கி விடுமோ என்ற அச்சம் நமக்குத் தேவை இல்லை , பூமிக்கு உள்ளேயே அதன் சுற்றுச் சூழலை மனிதர்களாகியா நாம் சிதைத்துக் கொண்டிருக்கும் வேலையை நிறுத்தினாலே போதும்,பூமி அதுபாட்டுக்கு நன்றாகவே இருக்கும்.

ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சல்லடையாகச் சலித்தாகி விட்டது பூமியை,காடுகளை அளித்து பிளாட் போட்டு விற்பது என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.எல்லோருக்குமே படித்து வைட் காலர் வேலையில் அமரும் ஆசை ,பிறகு விவசாயமே அற்றுப் போகையில் உண்பதற்கு என்ன செய்யலாம்?கிரெடிட் கார்டுகளையும் பிளாஸ்டிக் பைகளையும் தான் தின்ன வேண்டும்,இருக்கும் சூழலில் யாரவது விஞ்ஞானிகள் ப்ளாஸ்டிக்கை ஜீரணிக்க ஏதேனும் மருந்து கண்டுபிடித்தால் தான் கவலை தீரும்.

ஓசோனில் ஓட்டை,பிளாஸ்டிக் கழிவுகளால் மண்ணின் நீர் உறுஞ்சும் தன்மைக் குறைபடுதல் அதனால் மண் சத்து இழந்து போதல்,காடுகளை அழிப்பதால் மரங்களற்ற நிலையில் மண்ணின் பிடிமானமும் இறுக்கமும் வெகுவாகக் குறைந்து நிலச் சரிவுகள் ஏற்படுதல்(சமீபத்திய ஊட்டி பேரழிவுகள்) ,செயற்கை உரங்களால் ஸ்லோ பாய்சன் போல விசத்தை விலைக்கு வாங்கி உண்ணும் மனிதர்களாகிய நாம் நமது சுற்றுச் சூழலை கொஞ்சம் கவனித்தாலே போதும் பூமி அது பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருக்கும்.

சும்மா பொழுது போக்காக மரம் நடலாம்.(மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் SO மரம் வளர்ந்துரும் :))))

வீட்டுத் தோட்டம் போடலாம் செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களை நாமே தயாரித்து (கடைகளில் விலை கொடுத்து காய்கறி வாங்கி உண்பதை விட நாமே விளைவித்து உண்டால் அதில் கிடைக்கும் ஆனந்தம் சொல்லில் விளக்கி விட முடியாது).

புகை கக்கும் வாகனங்களை விட்டு விட்டு எல்லாரும் சைக்கிள் விடலாம். :))))

மாட்டு வண்டி கூட பெஸ்ட் தான். அதனால பூமியோட சுற்றுச் சூழலுக்கு எந்த அபாயமும் இல்லை.(கண்ணு படப் போகுதையா சின்னக் கவுண்டரே...ரேஞ்சுக்கு கற்பனை விரியுமே . :)))

எது எப்படியோ எப்படியாச்சும் உள்ளிருக்கும் எதிரிகளிடமிருந்து பூமியைக் காப்பாற்றப் பார்ப்போம் .வெளியில் இருந்து தாக்க வரும் எதிரிகளை அப்புறம் பார்க்கலாம். சரி தானுங்ளே!!!

Sunday, August 30, 2009

ரெட்டை வால் ரெங்குடு vs பாப்பு

சென்ற வார விகடனில் ஒரு கார்டூன்" ரெட்டை வால் ரெங்குடு " என்ற தலைப்பில் ;ரெங்குடுவுக்கு லீவ் முடிந்து ஸ்கூல் திறப்பதற்கு முதல் நாளாம் ,அவனது அப்பாவும் அம்மாவும் முகமெல்லாம் கொள்ளை மகிழ்ச்சி பூத்துக் கொண்டாட தட்டாமாலை சுற்றுகிறார்கள்.

(தட்டாமாலை என்பது "கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா "பூவரசம் பூ பூத்தாச்சு ...பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு " என்று பாடிக் கொண்டே "கிறு..கிறு..கிறு " என்று பாவாடை குடையாக விரிந்து பறக்க குதூகலாமாய் சுற்றிக் கொண்டே ஆடுவாரே அது தான்,)
சுற்றி முடித்ததும் காதுக்குள் கொய்ங் என்று ரீங்காரம் எழலாம்.அதிகப் படியான சந்தோஷ உணர்வை வெளிப்படுத்த இப்படி ஒரு அருமையான விளையாட்டை அல்லது கொண்டாட்டத்தை யார் கண்டுபிடித்தார்களோ தெரியாது...ஆனால் அவர்கள் புண்ணியவான்கள்!!!

இனி கார்டூன் விசயத்துக்கு வருகிறேன் ,

தன் அருமை பிள்ளைக்கு பள்ளி திறந்தால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விடுதலை கிடைத்தது போல இத்தனை சந்தோசமா ? இப்படியா சிறுபிள்ளைகளைப் போல தட்டாமாலை சுற்றிக் கொண்டு ஆடுவார்கள்?

அதற்க்கு ரெங்குடுவின் கமென்ட் " எனக்கு நாளைக்கு ஸ்கூல் திறக்கப் போறாங்கன்னு நீங்க இன்னைக்கு இவ்ளோ கொண்டாடறது அவ்ளோ ஒன்னும் நல்லா இல்லை!!!???
இந்த பதிவை நான் இப்போது இந்நேரம் நான் வெளியிடக் காரணம் சென்ற வாரம் முழுக்க லேசான காய்ச்சல் காரணமாக விடுமுறையில் ஓய்வெடுத்த (!!!??? )பாப்பு;

இருங்க ...

பாப்பு asked ரெஸ்ட்டா அப்படின்னா என்ன?!) நான் சொன்ன பதில் "நல்லா தூங்கி எழுந்தா அது தான் ரெஸ்ட் கண்ணம்மா.

பாப்பு replied "தூங்கறதா தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை தூக்கம்...தூக்கம் ...தூக்கம் தான்"

"நான் தூங்காமலேயே ரெஸ்ட் எடுத்துக்கறேன் , ம்மா நீ என்னை தூங்கச் சொல்லி disturb பண்ணாம இருந்தாலே போதும் " பிராமிஸ் பண்ணு .

அம்மே பகவதி துர்கே இந்த ஒரு வாரம் முழுக்க சோதனை தான்

வீட்டை பெருக்கித் தள்ள தள்ள சுத்தமாக்கின சுவடே தெரியாம மறுபடி இறைபடும் காகிதக் குப்பைகள் (பாப்பு சியாமா ஆன்ட்டி கிட்ட சின்ன சின்ன கிராப்ட் கத்துக்கராங்கலாமாம் !!!)

பாத்ரூமில் டேப் மூட மறந்து விட்டேனோ என்னவோ என்று ஓடிப் போய் பார்த்தாள் "ஒரு சாக்சுக்கு ஒரு சோப்பு போதும் இல்லையாம்மா ..பத்தலைன்னா சோப்பு எங்க இருக்குன்னு சொல்லிட்டு நீ போய் ரெஸ்ட் எடு இனிமே என் டிரஸ் நான் தான் வாஷ் பண்ணுவேன்.(சொல்லி விட்டு என்ன ஒரு சாத்வீகப் புன்னகை அந்த குட்டிப் பூ முகத்தில் !?)

திடீர்னு ஒரு மத்தியான நேரம் பறக்கும் குதிரை செய்யனும்னு ஆசை படு தீவிரமாக கொழுந்து விட்டு எரிய ...மறுபடி பாட்டியோட வாயில் புடவையால் நடு ஹாலில் தொட்டில் கட்டினோம்

குதிரை செய்ய தொட்டில் எதுக்கு??

பாப்பு said அதான குதிரையோட உடம்பு ..உனக்கு ஒன்னும் தெரியலை நீ கம்முனு இரு .குதிரை செஞ்சப்புறம் உன்னைக் கூப்பிடுவேன் ...சும்மா...சும்மா question கேட்டுகிட்டு தொல்லை பண்ணாதம்மா .

என் சுடிதார் துப்பட்டாக்கள் இரண்டு தொட்டிலின் இரு முனைகளில் கட்டப் பட்டன ,அவற்றை புடவைக் கடைகளில் விரித்து விடுவதைப் போல விசிறியாக விரித்து விட்டு அடுத்த முனைகள் இரு பக்கமும் எதிர் எதிர் சுவர்களில் இருந்த கம்பிகளில் குதிரையின் றெக்கைகள் போல தோன்றும் படி மாட்டப் பட்டன.

விளையாட வைத்திருந்த மேஜிக் மாஸ்க் குதிரையின் முகமானது . முனைகளில் குஞ்சலங்கள் நிறைந்த இன்னொரு துப்பட்டா குதிரைக்கு வாலானது .
பாப்பு முருகன் மயிலில் உட்காரும் பாவனையில் தொட்டிலில் இரு புறமும் கால்களைப் போட்டு அமர பறக்கும் குதிரை ரெடி .

இது என்னோட செல்லக் குதிரை நீ அப்பால்லாம் இதுல ride பண்ணக் கூடாது ...பாவம் அதுக்கு முதுகு வலிக்கும் ...குட்டிப் பாப்பா குதிரை ,இது பாப்பாவுக்கு மட்டும் தான்.(ரொம்பத்தான் ஜாக்கிரதை உணர்வு?!)

மம்மி எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரியே ட்ரெஸ் பண்ற நீ ...ஒரே போரிங் !!!
நான் உனக்கு disigner skirt பண்ணித் தரேன் .

அன்றைக்கு வந்த எக்ஸ்பிரஸ் நடுப்பக்கத்தை உருவி ஸிஸரால் மடமடவென்று skirt வடிவத்தில் கத்தரித்து முழுதும் கம் தடவி வெள்ளி நிற ஜிகினாத் தூளை அதில் குத்து மதிப்பாகக் கொட்டி தடவி விட மேலே அவளுக்குப் பிடித்த குந்தன் கற்களை ஒட்டி முடித்து அதைக் காய வைக்கும் பொறுமை எல்லாம் இல்லை .

எவ்ளோ அழகா இருக்கு பார், இப்படி veriety யா ட்ரெஸ் பண்ணிக்கணும் மம்மி. என்று ஒரு வெற்றிச் சிரிப்பு .

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...

என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் ...நான்?!

அதாகப்பட்டது என்னவெனில் ஒரு வாரம் லீவ் முடிந்து இன்றைக்கு தன் பாப்பு ஸ்கூல் போகிறாள்.

நாங்கள் ரெங்குடுவின் அப்பா அம்மாவைப் போல தட்டாமாலை எல்லாம் சுற்றவில்லை ...நம்புங்கள்.