Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Monday, January 31, 2011

‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை' -என் பார்வையில்..' - கார்த்திகாவாசுதேவன்.






‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை' -என் பார்வையில்'


‘‘சன்டேன்னா ரெண்டு“ இந்த விளம்பரத்துக்கு சற்றும் சளைக்காத ஆர்வம் தரவல்ல "ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை " எனும் தலைப்பை தனது கவிதைத் தொகுப்பிற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார் நண்பர் கவிஞர் பொன்.வாசுதேவன். கவிதைகளின்பால் ஈர்ப்போ, கவிதைப் புத்தகம் வாசிக்கும் முனைப்போ இல்லாதிருப்போரையும் கூட அப்படி என்னதான் இருக்கிறது புத்தகத்துக்குள் என ரகசியமாய் எட்டிப் பார்க்கச் செய்யும் தலைப்பு.


தன்னைத்தானே பின் தொடரும் நிழலசைவாய் பின்புற அட்டை வாசகங்களுக்கொப்ப ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி..


"வாதையே உணராமல்தன்னுடலில் விசையூட்டிமெத்தென்றுமதில் சுவருக்கும் தரைக்குமிடையேபறந்தது போல் வந்தமரும் வித்தை கற்றுக்கொண்ட பூனைகளாய்"


சப்தங்கள் அடங்கியதும் சலனங்கள் மட்டுப்பட்டு உறங்கும் நதியைப் போல, அசைந்தும் அசையா அசைவில் தன்னகத்தே கேள்விகளைக் கேட்டும் கேளாமல் பதில் தெரிந்த மெத்தனத்தில் அலட்சியமாய் மிதந்து நழுவும் கவிதைகள்.


தொகுப்பின் ஈற்றுக் கவிதையாய் அவரே பகர்ந்தபடி,


குரல்களற்ற மனவெளியில்மீண்டும் மீண்டும் வாசித்துஉறுதிப்படுத்திக் கொள்ளத்தக்க விசேஷங்கள் அற்ற விசேசமான கவிதைகள்.


வாழ்வின் பிரத்யேக தருணங்கள் அத்தனையையும் கனவுகள், ப்ரியங்கள், ஆசைகள், நிராசைகள், வாதைகள் எனும் வகைப்பாட்டில் அடக்க முயன்று தனித்தொரு வெளியில் மிதந்து கொண்டே நகரும் கவிதைகள். மொத்தம் 87 கவிதைகளில், முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்தவற்றை மட்டும் இந்தக் கட்டுரையின் ஊடே தந்து செல்கிறேன்.


இருப்பு :


"உண்மை தான்வேறு வழியில்லை

என்று தான்விட்டு விடவும்வெட்டித் தள்ளவும்

வேண்டியிருக்கிறதுநகங்களை"


தமதிருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியாமல் வெட்டுப் பட்டும், கடித்து துப்பப்பட்டும் அப்புறப்படுத்தப்படும் நகங்களுக்கும், தானே உதிரும் கூந்தல் இழைகளுக்கும் கூட இருப்பென்ற ஒரு ஸ்தானம் சில காலம் உண்டுதான். நானுமிருக்கிறேன் என்பதைக் காட்டுவதான ஞாபகப்படுத்தலுக்கு ஒப்பாக கூராகவும், வளைந்தும் வளர்ந்து காட்டி வெட்டுப்படும் நகங்கள், உதிர்ந்து காட்டும் மயிர்கற்றைகள் போல மனிதர்களிலும் பலர் இருப்பைக் காட்டிக் கொள்ள ஏதாவதொன்றை செய்துதான் தீர வேண்டியிருக்கிறது.


பிரயாணம் எனும் தலைப்பில்,


"கவிழ்த்துக் கொட்டிய தவளை

மூட்டையெனரயிலை விட்டு

அவசரமாய்வெளியேறியும்

உள்நுழைந்த படியும்இருக்கின்றனர்

மனிதர்கள்"


மக்கள் நெரிசல் நேரக்காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரயில்களில் பயணிக்கும் பெரும்பேறு பெற்ற ஆத்மாக்களின் அள்ளித் தெளித்த அவசர அவஸ்தை நகர்வுகளை வீடியோவில் ஃபாஸ்ட் பார்வர்ட் செய்தால், அவிழ்த்து விட்ட தவளை மூட்டைகள் தான், இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே தொடராதா? என்றெல்லாம் பாட்டுக் கேட்டுக் கொண்டு பயணிக்கும் ஆசைகளை பழித்துச் சுளுக்கி நசுக்கிப் பிழியும் நகரத்து இடப்பெயர்ச்சிகள் நெரிசல் நேரத்து ரயில் பயணங்கள். அந்த நிமிடங்களை கற்பனை செய்ய இந்த வரிகள் வெகு பொருத்தம்.


மனமொளிர் தருணங்கள் எனும் தலைப்பில் ஒரு கவிதை.


"தளர்ந்து இறுகும்சிறகுகள்

அசைத்துக்கால் புதைய காற்றில்நடக்கிறது

ஒரு பறவைஎன்னை

நானேஅருந்தி ரசிக்கும் தருணம் அது
காற்று உதிர்த்தபறவைச் சிறகின் கதகதப்பைக்கைப்பற்றிகன்னம் வைத்து அகமகிழ்கிறேன்
தூரத்தில் சென்று கொண்டிருக்கிறதுபறவைஉதிர்ந்த சிறகு குறித்தகவலையேதுமற்று"


மொத்தமுள்ள அத்தனைக் கவிதைகளிலும் மிகப் பிடித்து போன கவிதை இது. நீளும் பாலைவனத்தில் துடுப்பாய் சிறகசைத்துத் தடுமாறிக் கால் பதித்து எதிர் காற்றில் தத்தி நடக்கும் சிறு பறவையின் காட்சி வெகு உற்சாகம் அளிக்க வல்லது, கிட்டத் தட்ட வாழ்வில் எதிர் நீச்சலிட சலிக்காத மனித எத்தனங்களும் பிரயத்தனங்களும் பறவையின் ஒற்றை அசைவில் உணர்ந்து கொள்ளப்படுதல் இதில் சாத்தியமே. வெகு அழகான அர்த்தம் தரும் கவிதை இது.


சொல்ல இருக்கிறது காதல் எனும் தலைப்பில் :


நூற்கண்டின் முனை எனப் பற்றிசூரியக்

கதிர்களைஇழுத்தோடும் ரயிலொன்றின்ஜன்னலோர

இருக்கையில்என்னோடு

பயணப் படுகிறதுஉன்

நினைவுகள்

இருட்டத் தொடங்கியதன்

அவதானிப்பில்வேகமாய் கூடடையும்பறவையின்

அவசரத்துடன்எனக்கு

நானேசொல்லிக் கொள்கிறேன்
எனக்கும் காதல்இருந்ததுஇருக்கிறதுஇருக்கும்இவ்வாறெல்லாம் "


இந்தக் கவிதையில் தொனிப்பது யதார்த்த குப்பையில் காதலித்து மறந்தவன் அல்லது மறக்கடிக்கப்பட்டவனின் மீள் நினைவுகள், வீட்டுக்குள் அல்லது கூட்டுக்குள் நுழையும் முன் அவசர அவசரமாய் தனக்கே தனக்கென மட்டுமாய் ஆழ் குளத்தில் உறங்கிக் கிடக்கும் பிரதிக்காதல் ஒவ்வொன்றையும் ஒருமுறையேனும் சன்னமான குற்ற உணர்வோடு மீளப் பார்த்து நானும்தான் காதலித்திருக்கிறேன், காதலிக்கிறேன், என்னுள்ளும் காதலுண்டே எனக் காட்டிக் கொள்ளும், சமரசம் செய்து கொள்ளும் முயற்சி.


‘இறைமையின் மொழி‘ எனும் தலைப்பில்:


“இதழ்களின் இறுக்கம் தளர்த்தியதடங்களேதுமின்றிவனப்பாய்பூத்துக் கொண்டிருக்கிறதுஒரு மலர்
உள் மூழ்கி லயித்துவான் நோக்கிப் பார்க்கையில்முகத்தில் தெறிக்கிறதோர்ஒற்றை மழைத்துளி"


என்ன ஒரு அழகான வார்த்தைப் பிரயோகம். இறைவன் என ஒருவன் இருந்தான் எனில், அவன் கருணையை இதழ்களின் இறுக்கம் தளர்த்திய தடங்களேதுமின்றி பூத்துக் கொண்டிருக்கும் இந்த மலரோடு ஒப்பிடலாம். அவன் கருணையில் வழிந்து கசியும் ஏகாந்தத்தை இந்த மலரின் வனப்போடு ஒப்பிடலாம். பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கும் உலர் மண்ணில் ஒற்றை மழைத்துளி பதங்கமாவதைப் போல விளம்பரப்படுத்திக் கொள்ள அவகாசமில்லாமலோ அல்லது அவசியமில்லாமலோ கொட்டிக் கிடக்கும் பிரபஞ்சப் பேரழகுகள் எல்லாவற்றையும் ரசிக்கத் தான் தெரிந்திருக்க வேண்டும்.


‘என்னிடம் வந்த இந்த நாள்‘ எனும் தலைப்பில் ஒரு கவிதை ;


“தாழப் பறந்தும் கையில்

சிக்காதவிருப்பப் பறவையாய்கொஞ்சமும்

இரக்கமில்லாதுகடந்து செல்கிறது இந்த நாள்
பிரிவுத் துயரின் நீர்த்தாரை வழியஇன்றிருந்த

நாளேதொடர வேண்டுமென இறைஞ்சுமென்னிடம்"


அனுமதிக்கப்பட்ட அளவுகளையும் கடந்து எல்லையில்லா உவகையையும், உல்லாசத்தையும் ஒருங்கே ஊட்டிய கணங்களைக் கொண்ட ப்ரியத்துக்குகந்த ஒருநாளின் அந்தி நேரம் மிகுந்த ஏக்கம் தரவல்லது, பிரியப் போகும் நண்பனுக்காய், விடை பெற்றுக் கொள்ளப் போகும் காதலிக்காய், கூடிப் பேசி சிரித்துக் கலையும் தோழமைகளின் பிரிய விரும்பாத கையசைப்பிற்காய் அந்த நாள் முடியாமல் நீளக் கூடாதோ! பிரியப்பட்ட ஜனங்களின் ப்ரியம் சுமந்த மனதின் ஏக்கம் வரிகளில் தெறிக்கும் பரல்கள் நீக்கப்பட்ட ஊமைச் சலங்கையின் தனித்த கீதங்கள்.



‘பிரியத்தில் விளைந்த கனி‘ எனும் கவிதை :


"பிரியத்தின் பொருட்டேஉனக்குள்

என் வாழ்வுபூரணமடைந்திருக்கிறது "


தாமாக வலிந்து செய்து கொண்ட சமாதானங்களின் பின்னே உறைந்து போன மனைவி எனும் முகமூடிகளுக்குள் சுயம் மறக்கடித்துக்கொண்டு சிரித்தால், சிரித்து அழுதால், அழுது கட்டுப்பாட்டில் இயங்கக் கற்றுக் கொண்ட மனைவிக்கு அவளை உணர்ந்தாலும் ஏதும் செய்யவியலாத அல்லது செய்ய விரும்பாத கணவனின் வெற்றுச் சமாளிப்பாகத்தான் வார்த்தைகளாக இந்த வரிகளை எடுத்துக் கொள்ளலாம், ப்ரியம் எனும் புழுவில் மாட்டிக்கொண்ட மீன்கள் தான் மனைவிகளும் கணவர்களும்.


வாதையின் கணங்கள் :


"நீர்களற்ற கிணற்றின்உள்சுவற்றில்

படர்ந்து கிளைத்திருக்கும்சிறு மரத்தில்

தனித்துக் கூடு கட்டிஆனந்தமாய்

அங்கு மின்குமாய்குறு குறுவென

சுற்றித் திரிகிறதுகுருவி


திசை தொலைத்தது போல்சுற்றித்

திரிகிறது வண்ணத்துப் பூச்சிபூத்துதிராமல்

தேன் சுமக்கின்ற மலர்அடையாளம் தனித்துக்

கண்டுமென்மையாய் அமர்ந்து

முன்காம்பு நீலச் செய்துஉறுஞ்சுகிறது

மலருக்கு வலிக்காமல்


வாதையின் கணங்களில்

எழும் வார்த்தைகள்விழிகளில்

திரண்டுஉருக்கொண்டு வழிகிறதுஎழுத்துத் திரவமாய் "


இந்தக் கவிதை வெறும் வார்த்தை எல்லைகளைக் கடந்து இதமான குறும்படத்தை பார்த்துக் களித்த திருத்தி அளிக்கவல்லது. கற்பனையில் ஓட்டிப் பார்த்தால் விரியும் நிழற் படங்களில் அத்தனை மென்மை. அவஸ்தை என்ற சொல்லுக்கினையான வாதை மிக்க கணங்களை இதை விட அருமையாக சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.


அடை எனும் தலைப்பில் ஒரு கவிதை :


அருகில் திரும்பிப் படுத்தணைத்துஉன் இறால் குஞ்சு விரல்களைக்கைகளுக்குள்

அணிந்துபதுங்கிப் பதுங்கிஅழைத்துச் செல்கிறேன்
புட்டம் உயர்த்தி கால்கள்

மடிந்துகுப்புறப் படுத்துநீதூங்கும்

திசையெலாம்பரவியபடி கசிகிறதென் அன்புவெளிதனிமை உமிழ்ந்தயோசனையின் எச்சமாய்இன்னும் வெகு தூரம்செல்ல வேண்டியிருக்கிறதுஉன்னைப் பாதுகாக்க "


வாசு எதைக் குறிப்பிட்டு இந்தக் கவிதையை எழுதினாரோ இதை வாசித்ததும் நான் உணர்ந்தது இதைத்தான். யாருமற்ற வீட்டில் தனித்திருக்கும் தாயும் அவளது பால்மணம் மாறாக் குழந்தையும். அடைகாக்கும் பொறுப்பு தந்தைக்கும் உண்டெனினும் அடைகாக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுக்க மனமுவந்து ஏற்றுக் கொண்டவளாகிறாள் அம்மா. பிறந்த குழந்தைக்கு அருகில் படுத்துக்கொண்டு மெல்ல அதன் கை தடவி கால் தடவி மாம் பிஞ்சு விரல் நீவி பூனைக் கதகதப்பாய் வலிக்குமோ வலிக்காதோ என்றேந்திக் கொண்டிருக்கையில் உள்ளூர எப்போதுமிருக்கும் இந்த அடை காக்கும் தவிப்பு. பிறந்து மண்ணில் விழுந்த கணம் தொட்டே பெற்றவள் முன்வந்து வாங்கிய தீட்சை போல் அன்பு வெளியெங்கும் கசியும் யோசனைகளில் நீள்வதென்னவோ யுகம் தோறும் பெற்றுக் கொண்டதை பாதுகாக்கும் பயணங்கள்தாம்..


‘தொடங்கி இருக்கிறோம்‘ எனும் கவிதை:


"எனக்குள் பூத்த ஆண்டாளைபறித்தெடுத்து சூடிக் கொண்டிருக்கிறேன்எதற்கெனத் தெரியாமல் "


எதற்கென்றே தெரியாமல் சில வரிகள் பிடித்துப்போகலாம் அப்படி ஒரு வரி இது..போலவே மறக்கயியலாத ஒரு வாழ்வனுபவத்தை இந்தத் தொகுப்பெங்கும் வரைந்திருக்கும் பொன்.வாசுதேவனுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.


ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை (கவிதைகள்) - பொன்.வாசுதேவன்

112 பக்கங்கள்

விலை : ரூ.70/-

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.


இணையத்தில் வாங்கிட ;






Monday, January 18, 2010

கி.ராவின் "அந்தமான் நாயக்கர்"




கி.ரா வின் அந்தமான் நாயக்கரை நான் வாங்கியது 2007 ஆம் வருட புத்தகக் கண்காட்சியில்.இரண்டு மூன்று முறை வாசித்து விட்டேன்.ஒவ்வொரு முறையுமே வாசிக்க அலுப்பில்லாத கதை இது.

' கோபல்ல கிராமம்' போலவே சமகால நிகழ்வை கதை வடிவில் கூறும் உத்தி வெள்ளந்தியான பேச்சு நடையில் வசீகரிக்கிறது.கி.ரா வைப் பொறுத்தவரை நாவல்களில் கதை மட்டுமல்ல கதையில் நடமாடும் மனிதர்களும் ஏதோ அறிந்த ரொம்பத் தெரிந்த உறவுகளைப் போன்ற உணர்வை ஏற்படுத்திச் செல்வார்கள். அது இந்த நாவலுக்கும் பொருந்துகிறது .

அந்தமான் நாயக்கரின் அடிநாதம் நம்பிக்கை மோசமும் துரோகத்தின் வலியுமே .

நம்பிக்கை மோசத்தின் வெவ்வேறு வடிவங்களை இங்கே கிளைக்கதைகளிலும் கூட நாம் காணலாம் .நாவலை வாசித்து விட்டு நாம் நமக்குப் பிறர் செய்த துரோகங்களையும் நாம் பிறருக்குச் செய்த துரோகங்களையும் ஒருமுறையேனும் நேர்மையுடன் சிந்தனையில் ஓட்டிப் பார்க்கத் தக்க ஆழ்ந்த படைப்பு இது.

இனி கதைக்குப் போகலாம் ;

கதாபாத்திரங்கள் :-
  1. அந்தமான் நாயக்கர்
  2. பல்ராம் நாயக்கர் (கதையில் அழகிரி அந்தமான் ஆனபிறகு வந்து பல கிளைக் கதைகள் சொல்பவர்)
  3. ஆண்டியப்பன் அந்தமானின் பக்கத்து வீட்டுக்காரர்)
  4. பட்டா மணியம் நாயக்கர்(ஊர்ப் பெரியதனக்காரர்)
  5. பொம்பளே வண்டி நாயக்கர் என்ற புலிவாரு பொன்னையா நாயக்கர்
  6. பொண்டுகன் செட்டியார் (பட்டப் பெயர் தான் இவர் ஒரு கிழங்கு வியாபாரி நிஜப் பெயர் நாவலில் இல்லை)
  7. சங்கரப்பன் (இளைய தலைமுறைக்கல்லூரி மாணவன்)
  8. வெங்கிடம்மா (இளம் அழகிரியின் மானசீகக் காதலி)
  9. சொக்கய்யர்

    பேரம்மா (இளம் அழகிரியின் அம்மா)

"ஒரு குற்றமும் அறியாத விவசாயி ஒருத்தனை சுதந்திர இந்தியாவின் போலீஸ் அடித்தே
கொன்று போடும் அவலம் தான் இக்கதை. "

வெள்ளை அரசை எதிர்த்து நடந்த கோடிப் போராட்டத்தின் போது ஒரு கரிசல் கிராமத்தில் விளையாட்டுப் போல ஒரு இளைஞன் மூவர்ணக் கொடியை மரத்தில் ஏறி கட்டி விடுகிறான்,
மணியாச்சி ஜங்ஷனில் வாஞ்சிநாதன் வெள்ளைக்கார கலெக்டரை சுட்டுக் கொன்றதற்குப் பிறகு சுற்று வட்டார ஊர்களில் எந்த சாதாரணக் குற்றங்கள் நடந்தாலும் கொடூரமாக நடந்து கொள்ள ஆரம்பித்தது வெள்ளை அரசு.

கை ராட்டை சின்னம் பதித்த மூவர்ணக் கொடியை ஊர்க்கரை மரத்தின் உச்சியில் கொண்டு போய் ராவோடு ராவாய் விளையாட்டுப் போல கட்டி வைத்து விட்டு வந்து விடுகிறார் இளம் அழகிரி ,அந்தக் காலத்தில் அது சட்ட விரோதம் ,ஊர்ப்பெரியதனம் மணியம் நாயக்கர் அழகிரி தான் இதைச் செய்தான் என்பதை அறிந்து அழகிரியையே மரத்தில் ஏறி ஏற்றிய கொடியை இறக்கச் சொல்கிறார். அதற்கு அழகிரி ,

"ஏதோ கட்டிட்டேம் ,ஏத்துன கொடிய எப்பிடி எங்கையாலையே எரக்குறது ,இனிமே இப்பிடிச் செய்ய மாட்டேம். "

என்று நல்ல தனமாகவே மரியாதையோடு பதில் சொல்கிறார்,மணியம் கெத்தான ஆள் "ம்ம் ...என்ற செருமலோடு அவர் அழகிரியைப் போகச் சொல்லவே ஊர்க்காரர்கள் மணியம் மன்னித்து விட்டார் என்றே நினைக்கிறார்கள். ஆனால் மணியம் செருமியதற்கு அர்த்தம் இளவட்டமான அழகிரி ஜெயிலுக்குப் போய் அந்தமான் நாயக்கர் எனும் கிழவனாக திரும்பி வருவதில் முடிகிறது.

"வெள்ளைக்காரன் என்ன மணியம் நாயக்கரோட பாட்டனா ?அப்படி என்ன விசுவாசம் அவருக்கு?!"

சொல்லிச் சொல்லி பேசிப் பேசி ஆதங்கமும் ஆற்றாமையுமாக ஓய்ந்து போகிறார்கள் கரிசல் காட்டு சம்சாரிகள்.

மணியம் நாயக்கரின் வெள்ளைப் பாசத்துக்கும் அர்த்தம் இல்லாமல் இல்லை ,அரையணா சம்பளம் என்றாலும் அவர் அதை நேரடியாக இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜிடம் இருந்து அல்லவா பெற்றுக் கொண்டு இருந்தார் அப்போது, இன்னும் சொல்லப் போனால் அவரது வீட்டுப் பட்டா சாலையில் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் ஒரு கையில் உலக உருண்டையோடும் மறுகையில் செங்கோலும் ஏந்திக் கொண்டு கோஹினூர் வைரம் பதித்த அழகிய கிரீடத்துடன் அளவான மீசையும் மிதமான தாடியுமாய் நீலக் கண்களோடு நிற்கும் பெரிய சைஸ் படம் சட்டமிடப்பட்டு வைக்கப் பட்டிருக்கும் அதைப் பார்த்தாலே பார்ப்போர் எவரும் உருகி விடுவார்கள்...மணியத்தை என்னவென்று சொல்ல!!!

சரி இனி அழகிரிக்கு வருவோம் அவர் தானே கதையின் நாயகர்.

வெள்ளைக் காரன் ஆண்ட காலத்திலேயே ஒரு ஜென்மம் அல்லது (ஆயூள்) 21 வருசம் நல்ல தனமாக இருந்தால் 18 வருசம் ...டங்கா முறித்து தப்பிக்கப் பார்த்ததால் ரெட்டை ஜென்மம் ஆக மொத்தம் 42 வருசம் தண்டனை அனுபவிக்கிறார் அழகிரி.

ஓட்டப் பிடாரம் சிதம்பரம் பிள்ளைக்கும் ரெட்டை ஜென்மம் தான் (வ.ஊ.சிதம்பரனார்) அவரென்ன கொலையா செஞ்சார் ?!அந்த தீர்ப்பை எதிர்த்து அன்றைக்கு தான் முதல் முதலாக "கடையடைப்பு" நடந்ததாம் திருநெல்வேலியிலே.கதையில் சொல்லப் படும் செய்தி இது.

"கசாகூளம்" இந்த வார்த்தை கி.ராவால் இரண்டு மூன்று இடங்களில் சொல்லப் படுகிறது இங்கே அர்த்தம் பிடிபடவில்லை.இப்படி கொடூரமான தண்டனை அளிப்பதற்கு காரணம் "இப்பிடிச் செஞ்சா தாம் சர்காரை எதுக்குறவங்களுக்கு ஒரு பயம் நாளைப் பின்ன இருக்கும்னுட்டு தாம்" என்பதே .

அழகிரி ஜெயிலுக்குப் போனது ஒரு கதை என்றால் அவர் ரெட்டை ஜென்மம் முடிந்து அந்தமான் நாயக்கராக திரும்பி வந்து விடுகிறார் . அங்கே மறுபடியும் பரபரப்பாக கதை ஆரம்பிக்கிறது.

திரும்பி வந்த அழகிரி நாயக்கரை வரவேற்க அவரது குடும்பத்தில் எவரும் மிச்சம் மீதியில்லை ,அவரது ஓட்டு வீடும் தூரத்து உறவுக்காரியான ஒரே ஒரு வயதான அத்தையும் மட்டுமே மீள்கிறார்கள்,வயிற்றுப் பாடு என்பது ஜெயிலுக்குப் போய் வந்தவனுக்கும் இருக்கும் தானே,

அழகிரி தரிசாய்ப் போன தன் நிலத்தை மறுபடி செம்மையாக்க முயல்கிறார்.அங்கிருந்து அந்தமான் நாயக்கராக தொடங்கும் அவரது பயணம் கதை முடிவில் எந்தக் கொடியால் ஜெயிலுக்குப் போனாரோ அந்தக் கொடி மண்ணில் வீழவும் அந்தமான் போலீசின் அராஜக வன்முறையால் விவசாயப் போராட்டத்தில் லத்தியடி பெற்று கண்களை ஒரேயடியாக மூடிக் கொள்வதில் முடிந்தே போகிறது முற்றிலுமாய் .

ரசமான பகுதிகள் :

பல்ராம் நாயக்கரோடு அந்தமான் தன் நிலத்தை சீர்திருத்த ஆரம்பிக்கிறார் என்று சொன்னேனில்லையா?....

கரிசல்காட்டு சம்சாரிக்கு முதல் எதிரி அருகு தான்,வெள்ளைக் காரனைப் போலத் தான் இந்த அருகும் சில இடங்களில் இடுப்பளவு ஆழம் கூட தோண்ட வேண்டியதிருக்கும் ,புஞ்சை முழுவதுமே புரட்டிப் போட்டது போலத் தான்,எத்தனை வேட்டையாடினாலும் பூமியில் எலிகள் இருந்து கொண்டே தானே இருக்கும்..அப்படித் தான் இந்த அருகும்,வெள்ளைக்காரனும்,

அருகெடுப்பது ஒரு நொரநாட்டியம் பிடித்த வேலை,கடப்பாரை தான் இருந்தது வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னால் ,அது இன்னும் சள்ளை பிடித்த வேலை ,வெள்ளைக்காரன் கொண்டு வந்த பல்க்கம்பி இருந்ததோ தப்பித்தார்கள் சம்சாரிகள்,

இப்படியாகப்பட்ட கஷ்டங்களோடு பல்ராம் நாயக்கரும் அந்தமான் நாயக்கரும் நிலத்தை குடைந்து கடைந்து சீர்திருத்துகையில் கஞ்சிக்கு என்று உணவு இடைவேளை ஒன்று வரக் கூடும் இல்லையா அந்நேரம் அவர்களது குடும்பம் ...இழப்புகள்...போன்ற பாடு பஞ்சங்களைப் பற்றியும் கொஞ்சம் பகிர்ந்து கொள்கிறார்கள்.அப்போது கி.ராவுக்கே உரிய பாணியில் கிளைக்கதைகள் சில சுவாரஸ்யமாகப் பிரிகின்றன .

அந்தக்கதைகள் மிகரசமானவை ,யோசிக்க வைக்கும் பகடிகளும் கூடத்தான்.
அந்த வரிசையில் இந்நாவலில் ;


விரலக்கா கதை
முட்டைக் கோழி கதை
பொம்பளே வண்டி நாயக்கர் கதை
எட்டு இட்லி பொண்டுகன் செட்டியார் கதை
பல்ராம் நாயக்கர் சொல்வதாக வரும் ரயில் வந்த கதை...விருந்தாடியைப் பிடித்து கட்டிப் போட்ட கதை
இப்படிச் சில கதைகள் . இதில் எல்லாக் கதைகளிலுமே கிணற்றுக்குள் மிதக்கும் சூரியனாய் மறைபொருளாய்ப் பளிச்சிடுவது நம்பிக்கை மோசங்களே.

நூல் : அந்தமான் நாயக்கர்
ஆசிரியர் :கி.ராஜநாராயணன்.
விலை : ரூ/100
பதிப்பகம் :அன்னம் வெளியீடு

Monday, December 14, 2009

சிவசங்கரியின் "தகப்பன்சாமி " குறுநாவல் ஒரு பார்வை

தகப்பன் சாமி படித்து முடித்ததும் இன்னது தான் என்றில்லாமல் ஒரு அனாமத்தான பயமும் கதை முடிவைக் கண்டு சின்னதாய் ஒரு சந்தோஷமும் பூத்து எண்ணங்களை கலவையான முரண்கள் ஆக்கிரமித்தன.

சதானந்தம் ஏன் இறக்க வேண்டும்?

மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நேசமும் ...பரிவுமான ஒரு கணவன் ,ஒரு தகப்பன் ஏன் சாலை விபத்தில் சடாரென்று இடைவழியில் சாக வேண்டும்?!

"பசித்து பாலருந்தும் ஒரு குழந்தையின் வாயிலிருந்து பால் பாட்டிலை எதிர் பாராமல் வெடுக்கென்று பறிப்பதைப் போல் ஆகாதா இந்த இழப்பு !!!"

"பிள்ளையை பள்ளியில் கொண்டு விட்டான் ,பக்கத்தில் உட்கார்ந்து பொறுமையுடன் பாடம் சொல்லிக் கொடுத்தான்,அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் பெண்ணை மடியில் வைத்துக் கொஞ்சினான் ,நாள் தப்பாமல் மனைவிக்குப் பூவும் குழந்தைகளுக்கு தின்பண்டமும் வாங்கிவந்தான் .

ஒருநாள் கொதிக்க கொதிக்க மங்களூர் போண்டா '

அடுத்தநாள் லாலா கடை அல்வா

இன்னும் ஒருநாள் அய்யர் ஓட்டல் தூள் பக்கவடாம்

ஆப்பிள் மலிவா வித்துக்கிட்டு இருந்தான் பசங்களுக்கு வாங்கினேன் '

ரஸ்தாளி இருந்துச்சு குழந்தைகளுக்கு கொடு

மிட்டாய் கடைல சூடா மிக்சர் போட்டுக்கிட்டு இருந்தான் ,சிவாக்கு தயிர் சாதத்துக்கு தொட்டுக்கிடப் பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன்,பாட்டில்ல கொட்டி வைச்சுகிட்டு தினம் கொஞ்சமா போடு..."

இப்படிப் பட்ட தகப்பனின் பாசத்தில் வளரும் சிவா தகப்பனை இழந்ததும் பெரியப்பா வீட்டில் அனுபவிப்பது ரணம்.வாழ்வின் சில முடிச்சுகளில் சிக்கிக் கொண்டு கனகமும் அவளது சின்னஞ்சிறு குழந்தைகளும் படும் பாடு சாந்தமூர்த்தி மற்றும் தெய்வ நாயகியின் மீது கடும் துவேஷத்தை நாவலைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்தக் கூடும் .

கொண்டவன் துணையற்ற ஒரு பெண்ணை "அடிமையாக்கி "தங்களுக்கொரு சம்பளமில்லாத வேலைக்காரி ஆக்கிக் கொள்ளவே பெரும்பாலும் உறவுகள் முயலும் என்பதற்கு கனகமும் அவளது பிள்ளைகளுமே உதாரணம்.இத்தனைக்கும் கனகம் பலகாரம் செய்வதிலும் தையல் கலையிலும் தேர்ந்தவள் ,அப்படி இருந்தும் மூத்தார் குடும்பம் படுத்தி வைக்கும் பாடுகளுக்கு அவள் வாய் மூடி கண்ணீருடன் கரைவது உள்ளதும் போய் விடக் கூடாதே எனும் உள்ளார்ந்த பயத்தினால் தான்.

பெண்கள் தைரியசாலிகளாக முடிவெடுக்க வேண்டுமெனில் அதற்கு அவர்களின் வளர்ப்பு முறையும் முக்கியமே. துள்ளத் துடிக்க இறந்து போன தம்பிக்காக வருந்தாத சாந்த மூர்த்தியா தனக்கொரு நன்மை செய்து விடப் போகிறார்? என கனகத்தால் உணர முடியாமல் போனது அவளது துரதிர்ஷ்டமே!

தாய் தகப்பனை இழந்து அண்ணனின் பரிவில் வளர்ந்து பிறகு அண்ணி வந்ததும் அந்தப் பரிவிற்கும் பங்கம் வர மனைவிக்கு தன் தங்கை வேலைக்காரி ஆவதிலிருந்து அவளை மீட்கவே "பார்வைக்கு அத்தனை லட்சணமாக இல்லாவிட்டாலும்" பரவாயில்லை மாதச் சம்பளம் வாங்கும் மணமகன் பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம் என்று தான் அழகும் பாந்தமுமான தன் தங்கையை மாதவன் சதனந்ததுக்கு திருமணம் செய்து வைக்கிறான். அதற்கும் இப்படி ஒரு பங்கம் வரக்கூடும் என அவன் கண்டானா?

எளியோருக்கு வலியோர் இரங்குதல் என்பதெல்லாம் சினிமாவில் காணலாம் என்பதைப் போல இங்கே கனகத்தை அநியாயமாக ஏமாற்றுகிறார்கள் தெய்வ நாயகியும் சாந்தமூர்த்தியும்.கணவனின் மரணத்திற்கு பின் அவனுக்கு கிடைத்த இன்சூரன்ஸ் இழப்பீட்டுப் பணம் முழுவதையும் சாந்த மூர்த்தி ஏதேதோ கணக்குகள் காட்டி கழித்துக் கொள்ளும் போது கனகத்தின் கேள்விகளற்ற பரிதவிப்பு அவள் மீதே"முதுகெலும்பில்லாத கோழைப் பெண்ணே "எனும் கோபமாகவே வெடிக்கக் கூடும் வாசகர்களுக்கு.


அதனால் தானோ என்னவோ அவள் பெற்ற மகனே அம்மாவையும் தங்கையையும் விட்டு விட்டு பெரியப்பா குடும்பத்தின் அடாவடியைப் பொறுக்க முடியாமல் அடிவாங்கிச் சாக வலுவின்றி வீட்டை விட்டு ஓடிப் போகிறான்.

பஸ்ஸில் காப்பி டீ விற்கும் சிறுவர்களில் ஒருவனாகிறான்.

சாந்தமூர்த்திக்கும் தெய்வ நாயகிக்கும் பத்தோடு பதினொன்றாய் கூட ஒரு காரணம் கிடைத்தது கனகத்தையும் சிவாவையும் ஊசியால் குத்துவதைப் போல வார்த்தைகளால் குத்திக் கிழிக்க,கனகத்தின் மௌனமான கதறலையும் ஆற்றாமையையும் சொல்லில் விளக்கி விட முடியாது தான்...

ஆனாலும் அவள் எங்கெங்கோ விசாரித்து யார் யாரிடமோ தகவல் சொல்லி கடைசியில் மகன் இருக்கும் இடம் தெரிந்து மூத்தாரை நம்பிப் பயனில்லை என இவளே நேரில் போய் அழைத்தும் அவன் திரும்பி வர மறுக்கிறான்.

தன் பிள்ளையை மூத்தார் மகன் வீணில் பலி சுமத்தி அடிவாங்க வைக்கும் போதும் சரி ...அவனை அந்த மனிதர் ஈவு இரக்கமே இன்றி பெல்ட்டால் விளாசும் போது பேச வகையின்றி கண்ணீரில் உருகும் போதும் சரி கனகத்தின் சிவாவுக்கு இருந்த நம்பிக்கை தகர்ந்து போகிறது.தன் அம்மாவை நம்பினால் இனியெப்போதும் அடிமை வாழ்க்கை தான் என அந்த பிஞ்சு மனம் நினைத்திருக்கக் கூடும் !

கனகத்தின் அழைப்பை மறுத்து அவன் சொல்லும் பதில் குழந்தை அப்பாவையோ ..அம்மாவையோ செல்லமாக பெல்ட்டால் அடித்து விளையாடுமே அப்படி ஒரு சாட்டையடி.சிவா தகப்பன்சாமி தான் இங்கே .

"தைரியமா நாம இருக்க முயற்சிக்கலாம்மா ,இந்த உலகத்துல நிமிர்ந்து வாழ நமக்கு உரிமை இருக்கு,யாருக்கும் காரணம் இல்லாம நாம அடங்கி வாழத் தேவை இல்லை,பெரியப்பா கிட்ட தயங்காம உண்மையைச் சொல்லுங்க மீறிக்கிட்டு குடும்பம் மானம்னு கத்தினார்னா சும்மா கேட்டுக்கிட்டு இருக்காதிங்க,நம்ம வாழ்க்கையை நாம தான் வாழனும் எனக்கொரு பெரியவர் இங்க வந்த புதுசுல சொல்லிக் கொடுத்தார் ,நீங்களும் அதை நினைவுல வச்சிக்கோங்க"

இரண்டும்கெட்டான் வயதில் அந்தப் பையனால் எடுக்க முடிந்த ஸ்திரமான திடமான முடிவை இத்தனை வயதில் கனகத்தால் எடுக்க முடியாமல் போனதை விளக்கத் தான் இந்த குறுநாவலுக்கு இப்படி ஒரு தலைப்பு என்றால் அது மிகையில்லை.

சிவசங்கரியின் இந்தக் குறுநாவல் முன்பு தூர்தர்சனில் "செவ்வாய் தோறும் இரவு ஒளிபரப்பப் படும்" ஒருமணி நேர நாடகங்களில் ஒன்றாக மாஸ்டர் கணேஷ் நடிப்பில் பார்த்த ஞாபகம் .மாஸ்டர்
கணேஷ் தான் சிவா.

இதுமட்டுமா பாலகுமாரனின் "தாயுமானவன்" கூட தொடராக வந்து கொண்டிருந்தது அப்போது .

இப்போது மெகா சீரியல்கள் பல வந்து குழப்பக் கும்மி அடித்தாலும் வெகு சொற்பமானவை தவிர நெஞ்சில் நிற்கவில்லை எதுவும். ஏன் கதைகளுக்கா பஞ்சம்? ஏதாவது ஒரு
வெற்றி பெற்ற நாவலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே!!! என்ன ஒரு கஷ்டம் எனில் கதையின் கருப்பொருளை சிதைத்து தோரணம் கட்டி விடுவார்கள் டி.ஆர்.பி ரேட்டிங் என்ற பெயரில் அப்படி நல்ல நாவல்கள் சிதைந்து திரிந்து போய் மக்கள் மனதில் பதிவதை விட நாவலாகவே வாசிப்பதே உசிதம்.

பாலிமர் டி.வி யில் ஆர்.கே.நாராயணின் "சுவாமி அண்ட் பிரெண்ட்ஸ் " மால்குடி டேஸ் ஆக தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.மதியத்திற்கு மேல் என்று ஞாபகம்,சுவாமியின் அப்பாவாக கிரீஸ் கர்னாட் நடிப்பில் சுவாமியாக நடிக்கும் சிறுவன் பெயர் தெரியவில்லை .பார்க்கலாம் ஆனால் புத்தகமே அபாரமானது நம் கற்பனைகள் சிறகடிக்க. காட்சி ஊடகம் திறக்க முடியாத பலப் பல கதவுகளை திறக்க வல்லது நாவல்கள் என்பதை "தில்லான மோகனாம்பாளையும்" மலைக்கள்ளனையும் " வாசித்தல் தெள்ளத் தெளிய ஒப்புக் கொள்வீர்கள்.

கொத்தமங்கலம் சுப்புவின் தில்லான மோகனாம்பாள் திரையில் ஒரு வகை விருந்து எனில் நாவலாக வாசித்தவர்களை கேளுங்கள் இதை விட அதன் சுவை அளப்பரியது ,அதே தான் நாமக்கல் கவிஞரின் "மலைக்கள்ளன் " நாவலுக்கும். அப்பப்பா அதை படமாக எம்.ஜி.ஆர்...பானுமதி நடிப்பில் காண்பதை விட நாவலாக வாசித்துப் பாருங்கள் .புரியும் எப்பேர்ப்பட்ட புனைவு!

வாசகர்களின் பக்தியை சோதிக்க ஒரு எளிதான கேள்வி

தகப்பன் சாமி யார்?

அ) சிவன் ஆ)திருமால் இ) விநாயகர் ஈ) முருகன்

சரியான விடை சொல்பவர்களுக்கு அந்தக் கடவுளின் பிரசாதம் அனுப்பி வைக்கப் படும் :))))

Tuesday, July 28, 2009

அழகர்சாமியின் குதிரையும் பாஸ்கர் சக்தியும்


அழகர்சாமியின் குதிரையும் பாஸ்கர் சக்தியும்
மிக மிக எளிமையாக போகிற போக்கில் யாரேனும் கதை சொல்ல இயலுமா ?பாஸ்கர் சக்தியால் இயலும்.இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான அழகர்சாமியின் குதிரையில் மொத்தம் ஒன்பது சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் வாசிக்கக் கிடைத்தன.

வெண்ணிலா கபடிக் குழு திரைப் படத்தில் பல இடங்களில் சரளமாக விரவியிருந்த சரவெடி ஹாஸ்ய நெடி ஜெயமோகனின் கருத்தை உண்மையாக்கியது

ஜெயமோகனின் வலைத்தளத்தை வாசிக்கும் போது ஒருமுறை அவர் பாஸ்கர் சக்தியின் வசன ஆற்றல் குறித்து சொல்லியிருந்த அவரது கருத்து இப்போது ஞாபகம் வருகிறது ,பாஸ்கரின் எழுத்துக்களில் சடக் சடக்கென்று கடந்து போகும் சமூகம் மற்றும் கதை மாந்தர்கள் குறித்த எள்ளல்களை அவர் தனக்கே உரிய பாணியில் நகைச் சுவை தோய்த்து காயப் போட்டிருக்கும் விதத்திற்கு தான் தேனி குசும்பு என்று பெயர் போலும் .

கனகதுர்கா

இது தான் முதல் சிறுகதை ...மும்பைக்கு வேலை நிமித்தமாகச் செல்லும் ஒரு இளைஞன் வேலை ஒழிந்த நேரத்தில் யதேச்சையாக அங்கே பக்கத்தில் இருக்கும் மனநல மருத்துவமனையில் நடக்கும் தமிழ் பட ஷூட்டிங் பார்க்கப் போகிறான்.வெகு தற்செயலாகத் தான் அங்கே ஒரு இளம்பெண் இவனிடம் ஒரு உதவி கேட்கிறாள் ...அவளது பெயர் தான் கனக துர்கா ...
அவளது பெற்றோரைக் கண்டு பிடித்து அவளை அந்த மனநலக் காப்பக மருத்துவமனையில் இருந்து மீட்க அவன் உதவ வேண்டும்,இதுவே அவளது கோரிக்கை.

கனக துர்காவை மீட்க அந்த இளைஞன் படும் அலைச்சல்களையும் மன உளைச்சல்களையும் பிரத்த்யேக மெனக்கிடல்கள் எதுவும் இன்றி கிண்டலும் அங்கதமும் குறையாமல் கதையை நகர்த்திப் போய் கடைசியில் அட இதற்காகவா இத்தனை அலைச்சல் எனத் தோன்றும் நொடியில் மறுபடி கதை முதலில் இருந்து ஆரம்பிப்பதைப் போலொரு தோற்றம் தரும் சிறுகதை.

அடுத்து வருவது உதயாவுக்கு திலகா சொன்ன கதை .

ஒரு அம்மா தனக்கு நேர்ந்த அல்லது தான் கடந்து வந்த மூன்று காதல்களை தன் மகளிடம் பகிர்ந்து கொள்வதைப் பற்றிய எளிமையான நடையுடன் நகரும் சிறுகதை ,இளமையின் மகரந்தப் படிகளில் நிற்கும் தன் மகளுக்கும் காதல் வந்திருக்கக் கூடும் என யூகிக்கும் திலகா தன் மகளான உதயாவுக்கு பெரிதான உபதேசங்களோ ...மிரட்டுதல்களோ இன்றி தன் வாழ்வில் தான் கடந்து வந்த தனது காதல் காலங்களை அழகாக திரும்பிப் பார்த்து அதை மகளிடமும் பகிர்ந்து கொள்வது வாசிக்க இனிமை. தனக்கு எது நல்லது ..எது கேட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை திலகாவைப் போல எத்தனை அம்மாக்கள் தங்கள் மகள்களிடம் ஒப்படைக்கக் கூடுமோ?! ஒருவேளை இந்தக் கதையை வாசித்தால் மாற்றம் வரலாம்...!!!

அடுத்தது "கண்ணாடியைக் கண்டடைதல் "

இங்குள்ள ஒன்பது கதைகளில் வாசிக்கும் போதும் அதற்குப் பிறகும் அதிகம் சிரிப்பு மூட்டும் கதை இதுவே என்பது எனது கருத்து .சதா ஒருவித வித்யாசமான மனோபாவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆனந்தன் என்றொரு கதாபாத்திரம். பெயருக்குத்தான் அது ஆனந்தன் ...ஏன் அது நீங்களாகக் கூட இருக்கலாம்...நானாகக் கூட இருக்கலாம் ...சிலர் வெளியில் சொல்லக் கூசிக் கொண்டு உள்மனதில் நினைக்கும் விந்தைக் கனவுகளை இங்கே அவன் தன் நண்பனிடம் பகிர்ந்து கொள்கிறான். இப்படியும் கூட தோன்றுமா எனும் வகையில் ஆனந்தனும் அவனது கற்பனைகளும் காமெடிக் கலக்கல்கள், அப்படிப் பட்ட ஆனந்தனையே கற்ப்பனையில் விஞ்சும் வண்ணம் அவனுக்கொரு மனைவி அமைந்ததும் ஆனந்தனின் புதுப் புது கற்பனைகள் கொஞ்சம் மட்டுப் படுகின்றன. படித்துக் கொண்டே...இல்லை...இல்லை படித்து முடித்த பின்னும் சிரிக்கலாம் இந்தக் கதையை நினைத்து.

மகன் மற்றும் மின்னு இரண்டு சிறுகதைகளும் ஆனந்த விகடனில் நான் ஏற்க்கனவே வாசித்தவை தான், இரண்டுமே அட அட..அடடா...ரகக் கதைகள்,பெரிய கற்பனைகளோ வர்ணனைகளோ இல்லை,ஒரு சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம் கூட நடக்கும் பயணியின் செயல்களை அல்லது நடவடிக்கைகளை பார்த்தும் பார்க்காமல் GAVANIPPOM தானே ...அப்படித் தான் பாஸ்கரின் கதைக் களங்கள் அமைகின்றன.வாழ்வில் நம் கவனித்தும் கவனிக்காமல் விட்டதுமான சம்பவங்களை தனக்கே உரிய நகைச்சுவை கலந்து படிக்கத் தருவது கிராமத்து தென்னந்தோப்பில் ஓசியாக குடிக்கக் கிடைத்த இளநீர் போல அத்துனை மனநிறைவு.அத்துனை இதம் .

குறுநாவல்களில்

எழுநாள் சூரியன் எழுநாள் சந்திரன் .... நிச்சயம் வாசிக்கும் அனைவரையும் கவரும் தன்மையில் அமைந்து விட்ட அருமையான படைப்பு ,

"ஞாயிற்றுக் கிழமை நகையைக் காணோம்

திங்கட்கிழமை திருடன் கிடைத்தான்

செவ்வாய்க் கிழமை ஜெயிலுக்குப் போனான்

புதன் கிழமை புத்தி வந்தது

வியாழக் கிழமை விடுதலை ஆனான்

வெள்ளிக் கிழமை வீட்டுக்கு வந்தான்

சனிகிழமை சாப்பிட்டுப் படுத்தான்."


பால்யத்தில் கிராமத்துப் பள்ளிகளில் பயிலும் வாய்ப்புக் கிடைத்த அனைவருக்கும் பரிச்சயமான பாடல் தான் இது, இந்தப் பாடலைப் போலவே திருடனின் வாழ்வு திருந்தி அமைந்து விடுவது இல்லை தான்...


ஒரு கிராமம் அங்கே ஒரு மிராசுதார் ,அவருக்கு ஒரு தம்பி முரட்டு மிராசுதாரும் ,பகுத்தறிவுத் தம்பியும் நல்ல எதிர் எதிர் துருவங்கள் , நகைகளிலும் அதிகாரங்களிலும் மோகம் கொண்ட அனேக பாமர மனைவிகள் போலவே ஒரு அண்ணி ...விவரம் அறிந்தும் அறியாத வயதில் அவர்களுக்கொரு மகன்,அவனைச் சுற்றியும் அவனது சித்தப்பாவைச் சுற்றியும் சுழலும் கதை .சித்தப்பாவின் ஜாதி மீறிய காதல் அதை வெறுக்கும் அப்பாவேலையாட்களுக்கு மிராசுதாரரின் மேலிருக்கும் சொல்லவொண்ணா பயம்.

மொத்தத்தில் மிராசுதார் வீட்டில் நகை காணாமல் போக அதைத் திருடிய திருடனான வீட்டு வேலையாள் அவரிடம் கொண்ட பயம் காரணமாக தப்பிஓட முயன்று முடிவில் பிடிபட்டு விடுவோமோ என்ற பதட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து அநியாயமாக மரணிக்கிறான்.


மறுபடி மேலே உள்ள பாடலை மறுபடி பாடிப் பாருங்கள்ஒரு சோகம் மனதில் தழும்பத் தான் செய்கிறது.ஞாபகங்களைக் கிளரும் கதை இது.

அழகர்சாமியின் குதிரை இது அடுத்த குறுநாவல்;

இதுவே இத்தொகுதியின் தலைப்பும் ஆனது .



இதைக் குறித்து தனியாகவே ஒரு பதிவிடலாம்.

தேனியைச் சுற்றி இருக்கும் ஒரு சிறு கிராமத்தில் அழகர்சாமியின் குதிரை வாகனம் காணாமல் போவதும் அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களுமே கதை. எல்லாமே காமெடிக் கூத்துக்கள் தான்.கிராமத்து வெள்ளந்தித் தனம் என்பார்களே ...அதே தான். மக்களும் ...மண்ணும் அதன் மணமும் .எல்லாக் கதைகளுமே அருமை
அருமைஅருமைஅருமை
அதைத் தவிர வேறொன்றுமில்லை .

நீங்களும் வாசித்துப் பார்க்கலாம்

நிச்சயம் சோர்வைத் தராத படைப்புகளில் ஒன்று இப்புத்தகம்.

Tuesday, March 31, 2009

அம்பையின் சிறுகதை தொகுப்பில் "அடவி ...மரங்கொத்தியின் நுணுக்கத்துடன் ஒரு பார்வை"


விலை - ரூபாய் 80
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
ஏற்கனவே போன பதிவில் சொன்ன சேதி தான் ,அம்பையின் காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பை வாசித்தேன் என்றேனில்லையா? அதில் ஏழெட்டு சிறுகதைகள் இருந்தன அவற்றுள் "அடவி " என்றொரு சிறுகதை .நான் மிக ரசித்துப் படித்தது .

வனத்தின் மீது ஆசை கொண்ட பெண் செந்திரு அவளது கணவன் திருமலை ,தொழில் அதிபரான கணவன் ...புத்திசாலி மனைவி ,ஆசைக்கு ஒன்று ..ஆஸ்திக்கு ஒன்று என இரண்டு அருமையான குழந்தைகள் ,பணப் பற்றாக்குறை அற்ற நிலை இப்படியாக பொருளாதார கவலைகள் அற்ற நல்ல வாழ்க்கை என்று தானே தோன்றும் நமக்கு இவர்களைப் பற்றி வாசிக்கையில் .

ஆனால் இக்கதையில் செந்திரு கணவனிடம் கோபித்துக் கொண்டு அல்லது கருத்து வேறுபாடு கொண்டு தனியே வனத்தை நோக்கிச்செல்கிறாள் ,வனத்திற்குப் போகிறாள் என்றதும் தனியே கால் நடையாய் என்றெல்லாம் அதீத கற்பனைகள் தேவை இல்லை .கணவனின் இளைய சகோதரன் காரில் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறான் செந்திருவை காட்டில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகையில்.

அங்கே செந்திரு தனது கடந்த காலத்தை வனத்துடனும் ...ராமனின் இல்லை ...இல்லை சீதையின் கதையுடனும் கலந்து மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு தனக்கான சுய தேடலில் மூழ்குகிறாள். கொஞ்சம் செந்திருவின் கதை ...நடுநடுவே சீதையே நேரடியாகச் சொல்வதைப் போல அவளது வாழ்வியல் நிகழ்வுகள் இடையில் அந்தக் காட்டில் இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் சவிதா பாயி,துர்கா பாயி,சந்திரா பாயி போன்ற சாமானியப் பெண்களுடனான அர்த்தமுள்ள அரட்டை ,இப்படி சுமூகமாக சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறார் அம்பை.

சும்மா வீம்புக்கு அம்பையின் எழுத்துக்களில் பெண்ணிய வாடை தூக்கலாக இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது,அவர் முன் வைக்கும் கேள்விகள் எல்லாமே படு "நச் மற்றும் நறுக் "வகை . குறிப்பாக ராமாயணக் கதை ...ராமனை நாம் இங்கு வெகு சிறப்பாகத் தான் கொண்டாடுகிறோம் ,சீதையையும் தான்...லட்சுமணன் ...ஹனுமான் ...ஜாம்பவான் எல்லோரையுமே கொண்டாடுகிறோம் தான் ...ராமனின் அளவுக்கு என்றில்லா விட்டாலும் கூட சீதை இந்த உலகத்தின் அன்னையாகத் தான் ஹிந்துக்களால் போற்றப் படுகிறாள் .

இந்தச் சிறுகதை வாசித்ததும் சட்டென்று மனதில் உதித்த மற்றும் ஒரு எண்ணம் "வால்மீகி ராமாயணம் வேறு தளம் ...கம்ப ராமாயணம் வேறு தளம் " என்ற மகாப் பெரிய உண்மை . சீதையை ராவணன் கடத்திச் செல்வதாக கம்பர் சொல்லும் இடங்கள் மிக மிக நாகரீகம் ...பண்பான வர்ணனை என்று நாம் கருதும் அந்த ஓரிடத்தை மட்டும் கருத்தில் கொண்டு நான் இதைச் சொல்லவில்லை .கம்ப ராமாயணத்தில் காணக் கிடைக்காத பல முரண்பாடுகள் ஒருவேளை வால்மீகி ராமாயணத்தில் காணக் கிடைக்கலாம் .

செந்திருவுக்கு கணவன் தன்னை தொழிலில் பாகஸ்தியாக சேர்த்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் ...மன உளைச்சல் வாழ்வின் மீதான வெறுப்பாக மாறி வனத்தின் நிசப்தத்தின் நடுவில் தன்னை தான் அறிய நடக்க ஆரம்பிக்கிறாள் . அவளது நடை அவளோடு கூடவே நம்மையும் அழைத்துச் செல்கிறது ,அவளோடு நாமும் வானம் முழுக்க அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நடக்கிறோம் காலின் அசதியே தோன்றாமல் .

செந்திருவின் பால்ய வயது ,அவள் மும்பையில் பெரியம்மா வீட்டில் திருமலையைக் கண்டு காதல் கொள்வது ,இந்தக் காதலை கண்டு கொள்ளாமல் இருக்கும் தன் தந்தையிடம் ஒன்றிற்கு இரு முறை சாதாரணமாகவே போகும் போக்கில் இது திருமணத்தில் முடிய வேண்டிய பந்தம் என உணர்த்தும் திண்மை ,கணவனிடம் காட்டை விட்டு வரமாட்டேன் என நடத்தும் வாக்கு வாதங்கள் ,கூடவே தன் பிள்ளைகள் மற்றும் உறவுகளைப் பற்றிய நினைவுகள் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் செந்திரு ஒரு தன்னிச்சையான மனுஷியாகத் தான் தெரிகிறாள் .

அவள் தனக்கான முடிவுகளை எப்போதும் தானே எடுத்துக் கொள்கிறாள்,மற்றவர்களை பொருட்படுத்துவதில்லை ,அது தந்தையோ அல்லது கணவனோ ஆனாலும் சரி .அவளது முடிவுகளை அவளே எடுக்கிறாள்.திருமலை மீதான காதல் ஆகட்டும்...மன பேதம் கொண்டு வனத்திற்கு போதல் ஆகட்டும் செந்திரு வியப்பளிக்கக் கூடும் பலருக்கு ;
இந்த சிறுகதையில் செந்திரு தன் நினைவுகளாக பகிந்து கொள்ளும் சில விசயங்களும் வியப்பளிக்கவே செய்கின்றன, உதாரணமாக காட்டில் லட்சுமணன் மீது மோகம் கொண்ட சூர்ப்பனகை மூக்கறுத்து அவமானப் படுத்தப் பட்டது மட்டுமே நமக்கு கம்பராமாயணத்தில் படிக்கக் கிடைக்கிறது.

இந்திரகாமினி எனும் கந்தர்வப் பெண் லட்சுமணன் மீது மோகம் கொண்டு அவனை நெருங்குகையில் அவளை அவன் உதாசீனப் படுத்தவே ஆசை நிறைவேறா கோபத்தில் அவளொரு சூழ்ச்சி செய்தாளாம், லட்சுமனனி படுக்கையில் அன்றிரவு சில உடைந்த வளையல்கள் மலர்களைப் போட்டு வைத்து விட்டு மறைந்து விட்டாளாம். இதற்க்கு ராமன் என்ன செய்தான் தெரியுமா?

லட்சுமனனின் அறையை கூட்டிப் பெருக்கி சுத்தமாக்க அங்கே சென்ற சீதை இதைக் கண்டு வந்து ராமனிடம் புறம் சொல்ல , ராமன் விடிந்ததும் அந்த வளையல்கள் யாருடையவை எனக் கண்டு பிடிக்க அந்தக் காட்டில் வசித்த எல்லாப் பெண்களின் வளையல் அளவுகளையும் வாங்கி சோதித்துப் பார்த்தானாம்!?

புறம் சொல்லுதல் பெண்களின் பொதுத் தவறு என்று சொல்ல வருகிறாரோ அம்பை?! ஆனாலும் சீதை புறம் சொன்னால் என்ற வரிகள் எனக்குப் புதியவை.கூடவே அந்த வளையல்கள் காட்டுவாசிப் பெண்கள் எவருக்கும் பொருந்தாமல் சீதியின் வளையல்குடன் பொருந்துகிறது என கண்டுபிடிக்கப் பட்டதாக கூறும் போது ராமனின் சஞ்சல சந்தேக புத்தி விளக்கப் படுகிறது எனலாம்.

லட்சுமணன் ஒன்றும் உத்தமன் இல்லை எனும் ராமனின் வாக்கு நிச்சயம் கம்ப ராமாயணத்தில் காண முடியாதென்று தான் நினைக்கிறேன்,,ஒருவேளை வடமொழி ராமாயணத்தில் இருக்கக் கூடுமோ என்னவோ? ராமன் இங்கே
சஞ்சல ராமன் இல்லை ..அவன் கோதண்டராமனாக..ஜானகி ராமனாக ..."ஒருவனுக்கு ஒருத்தி எனும் "கோட்ப்பாட்டை நிலை நிறுத்த வந்த அற்புத அவதார கடவுள் என்றல்லவா துதிக்கப் படுகிறான்.ஏனிந்த முரண்பாடு?கம்பருக்கும்..வால்மீகிக்கும்?

செந்திரு எனும் பெண்ணின் மன ஓட்டத்தில் அவள் எண்ணிப் பார்ப்பதாக கதை அமைவதால் சும்மா கற்பனை என்று ஒதுக்கி விடக் கூடும் தான்! "வித்யா சுப்ரமண்யத்தின் ஒரு நாவலில் கூட அம்பையின் இந்த அடவி சிறுகதையை ஒத்த வரிகளை வாசித்த ஞாபகம் நெருடியதால் இதைப் பதியத் தோன்றியது.

எது ராமாயணம்?

புராணமே ஒரு கற்பனை என்றால் சேது பாலம் விசயத்தில் ஏன் இத்தனை ஆர்ப்பாட்ட எதிர்ப்புகள்?

ராமாயணம் உண்மை என்றால் எந்த ராமாயணம் உண்மை? வால்மீகியின் மூல நூலே உண்மை என்றால் கம்பர் கூறும் ராமாயணம் என்ன சொல்ல வருகிறது? இப்படிச் சில குழப்பங்களை மேலெழுகின்றன .

ஆக மொத்தத்தில் இது அம்பையின் எழுத்துக்கு கிடைத்த மகாப் பெரிய வெற்றியே.வாசிப்பவர்களை யோசிக்க வைத்தல்...பின் தெளிய வைத்தல் எனும் நிலையே நல்ல எழுத்துக்கு அழகாக இருக்கக் கூடும்.

ராமாயணம் பற்றி இன்னும் நிறைய தேடி வாசித்த பின் இந்தப் பதிவை தொடர்வதே சரி எனப் படுகிறது...ராமாயணம் தெரிந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை இங்கே பதியுங்கள்.

Friday, March 27, 2009

அனிதாவின் காதல்கள் ...சுஜாதா இருந்திருக்கலாம் இன்னும் கொஞ்ச நாள்!!!

நேற்று இரவு தான் இந்த புத்தகம் வாசித்தேன் .சுஜாதா இறந்து விட்டதை நினைத்து மிக துக்கமாக உணர்ந்தேன்.ஒரு சாதாரணக் கதை தான் அதை இத்தனை விறுவிறுப்புடன் மிகச் சாதாரண வார்த்தைகளைக் கொண்டு விரித்து விவரிக்க சுஜாதாவுக்கு இணை சுஜாதாவே தான்.ஏன் சுஜாதா இறந்து போனார்? அவரது இடம் என்னைப் பொறுத்தவரை இன்னும் இட்டு நிரப்ப முடியாத இடமாகத் தான் தென்படுகிறது.


எவ்வளவு சீரியஸ் விஷயம் என்றாலுமே எளிமையாக்கி "இதெல்லாம் ஒன்றுமே இல்லை" என்பதைப் போன்ற எண்ணத்தை உருவாக்கும் எழுத்துக்கள். யோசித்தால் மட்டுமே அவர் எழுதி இருக்கும் விசயத்தின் நிஜமும் யதார்த்தமும் புரியக் கூடும்.


சிவாஜி திரைப் படத்தில் "பழகலாம் வாங்க " என்று சாலமன் பாப்பையா சொல்வதை பலரும் பல விதமாக விமர்சித்திருக்கலாம்.ஆனால் விமர்சித்த எல்லோருக்குமே தெரியும் ...பழகுதல் என்பதும் யதார்த்தமே என்று.;தருமியின் ஒரு பதிவில் வாசித்த ஞாபகம்


"இங்கே நம் நாட்டில் நாம் ஏன் வேஷம் போட்டுக் கொண்டே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்" நாம் என்னவோ ரொம்பவும் உத்தமர்கள் என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்வதைப் போலவே தான் சதா எல்லா நேரங்களிலும் பிறர் முன்னிலையில் நம்மை நாம் வெளிப் படுத்திக் கொண்டு இருக்கிறோம் ...விரும்புகிறோம்.இதை தருமி சார் வேறு வார்த்தைகளை சொல்லி இருப்பார்.சரியாக நினைவில் இல்லை ,ஆனால் சாராம்சம் புரிந்தது .


சுஜாதாவின் எல்லாக் கதைகளும் மிக யதார்த்தமானவை .இப்படி நடக்கக் கூடுமோ என்ற "என் இனிய இயந்திரா" கூட நம் வாழ்வியலோடு ஒத்துப் போவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.


சரி இனி அனிதாவின் காதல்களைப் பார்ப்போம்;


அனிதா கனவுகள் நிறைந்த பெண் ,அவளுக்கென்று பிரத்யேகமான கற்பனைகள் உண்டு ..அனிதா ஐ.ஏ.எஸ் ;அனிதா தி பேமஸ் டான்சர் ,திறமையான நடிகை ,ஸ்போர்ட்ஸ் வுமன் இப்படி பலவகையில் சகல கலா வள்ளியாக தான் பிரகாசிக்க வேண்டும் என்ற கனவும் கற்பனையும் அவளுக்கு உண்டு ,இந்த சூழ்நிலையில் அவளது கனவுகள் எங்ஙனம் கலைக்கப் படுகின்றன ,அதிலிருந்து அவள் எங்ஙனம் மீள்கிறாள் என்பதே அனிதாவின் காதல்கள் நாவலின் சாராம்சம் .

அனிதா ஒரு மத்தியதர பிராமணக் குடும்பத்துப் பெண்,ஒரு சின்ன விபத்தின் போது தவறி விழுந்த பர்சை எடுத்து வைத்து பத்திரமாகத் திருப்பிக் கொடுத்ததின் காரணமாக அகில உலக அளவில் தொழில் சாம்ராஜ்யம் நடத்தும் கோடீஸ்வரன் வைரவனின் காதல் எதேஷ்ட்டமாய் அவளுக்குக் கிட்டுகிறது .இது அவளது முதல் காதல் .


அடுத்த காதல் வீட்டில் பார்த்து நிச்சயிக்கப் படும் மாப்பிள்ளை ரகு .அமெரிக்க மாப்பிள்ளை ..டாலர் கனவுகளாலும் உடன் படிக்கும் தோழி மதுமிதாவின் உற்சாகப் படுத்தும் கேலிகளாலும் அனிதா இவனை மணந்து கொள்ளச் சம்மதித்து நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிகிறது இவர்களுக்கு .


அடுத்த காதல் அனிதாவின் மாமா (அம்மாவுடன் பிறந்த கடைக்குட்டித் தம்பி )சீதாராமன் ,இவன் சிறு வயது முதற்க் கொண்டே அனிதாவை விரும்புகிறான், சாதாரண வங்கி கிளார்க்காக இருந்து கொண்டு தேர்வுகளை விடாமல் எழுதி உயர் பதிவை அடைவதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கும் சீதாராமன் அதற்கான உந்து சக்தி என குறிப்பிடுவது அனிதாவையே .இவனை அனிதா காதலிக்கவில்லையே தவிர இவன் மீது அவளுக்கு ஒரு வித நேசம் உண்டு என்பதை சுஜாதா தன் வரிகளில் வித்யாசப் படுத்தியிருப்பார். இது காதல் இல்லை இனம் புரியா நேசம் மட்டுமே அனிதாவைப் பொறுத்தவரை .ஆனால் சீதாராமன் அனிதாவை சின்சியராகவே காதலிக்கிறான் மனதிற்குள்.


அடுத்தும் ஒரு காதல் உண்டு அவன் விஸ்வம் ,சீதாராமனுடன் பணிபுரியும் ஒரு சிநேகிதியின் அண்ணன் அவன்,அவனும் ஒரு கட்டத்தில் அனிதாவை விரும்புவதாகக் கூறுகிறான்.


அப்படி இத்தனை பேர் விரும்ப அனிதாவிடம் என்ன தான் இருக்கிறது?! பெரிய அறிவாளியா அவள்?! அதிரூப சுந்தரியும் இல்லை ,பக்கவாட்டில் பார்த்தால் சுமாராக இருப்பாள் ,அவளது அழகு சாதாரண அழகு ,அவளை விடவும் பல மடங்கு கவர்ந்திழுக்கும் அழகுடனும் ,சுதந்திரமாகப் பழகும் மனோபாவத்துடனும் உடைய தன்னை புறக்கணித்து அனிதாவை வைரவன் விழுந்து விழுந்து (!!!) காதலிப்பதை நினைத்து பொறாமைப் படுகிறாள் மதுமிதா.


பொறாமை இருந்தாலும் கூட இந்த புத்திசாலி மதுமிதா அனிதா பணக்காரி ஆனபின் தோழி என்ற பெயரில் தனக்கு கிடைக்கக் கூடும் அனுகூலங்களை மனதில் கொண்டு அனிதாவை வெறுக்காமல் இணக்கமாகவே இருக்கிறாள் கதையின் முடிவு வரையுளும் கூட;காரணம் பணமும் அதனால் கிடைக்கும் வசதிகளையும் எண்ணித்தான்.


இது இப்படி இருக்க...கதையில் அனிதா மிகக் குழப்பமான பெண்ணாகவே அல்லது சஞ்சல மனதினளாகவே முடிவு வரையிலும் சித்தரிக்கப் பட்டு விட்டு கடைசி நொடியில் ஸ்திரமான முடிவு எடுப்பவலாகக் காட்டப் படுகிறாள்.அதுவும் கூட ஒரு வகையில் சரி என்றே படுகிறது,வாழ்வியல் ஞானம் வாழ்வின் முதற் கட்டத்திலேயே எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை ,வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்களின் மிச்சங்களாகவே தெளிவான திட சிந்தனை கை வரப்பெருகிறது,


அனிதாவுக்கும் அப்படித்தான்...அனிதா மட்டும் அல்ல மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்த எல்லா இளம்பெண்களுக்கும் இதுவே சாத்தியம்,அம்மா அப்பா சொல்வதையே செய்யத் துணியும் மனப் பான்மையே பெரும்பாலான பெண்களுக்கும் இலகுவாகிறது,விதி விலக்குகளும் இருக்கலாம்,இங்கே அனிதாவைப் பொறுத்தவரை அவள் வீட்டுக்கு அடங்கிய பெண் என்ற தோற்றத்தையே விரும்புபவளாகத் தெரிகிறது.


அனிதா மேலே படிக்க விரும்புகிறாள் ,கூடவே வீட்டில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்வதாகத் தெரிய வருகையில் முதல் குழப்பம் ஆரம்பிக்கிறது,படிப்பைத் தொடர்வதா அல்லது கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆவதா என்று.


அடுத்ததாக வைரவன் தன் காதலை பலமுறை தெளிவாக்கிய பின் ரகுவை விட அவன் மீது புத்தி செல்கிறது,கூடவே அவனது காதலின் மீது லேசான பயமும் கூட அவளுக்கு உண்டென்று கதை உருள்கிறது,காரணம் அவனது மித மிஞ்சிய பணமும் செல்வாக்கும் .


நிச்சயிக்கப் பட்ட மாப்பிள்ளை ரகுவை அயல்நாட்டில் இன்னும் உயர் பதவி எனும் ஆசை காட்டி ஒதுங்கி நிற்க வைத்து விட்டு பணத்தையும் சகாயங்களையும் வாரி இறைத்து ஒரு கட்டத்தில் அனிதாவின் பெற்றோரையும் உற்றோரையும் கூட தன் வசமாக்கி வைரவன் அனிதாவை மணக்கிறான்.


திருமணமான சில நாட்கள் இடைவெளியில் அனிதாவுக்கு வைரவனின் குடும்ப சூழல் பிடித்தம் இல்லாமல் போகிறது.அவனிடம் இருக்கும் அளவில்லாப் பணத்தின் சக்தியால் பிறந்த வீட்டில் அனிதாவுக்கு ஏகப்பட்ட மரியாதை செய்தாலும் கூட எல்லாம் அவன் பணத்திற்காகவே என்ற எண்ணம் அனிதாவிடம் படிந்து அவளுக்கு சுதந்திரமான வாழ்க்கையின் மீது ஏக்கம் வருகிறது,


இது இப்படி இருக்க, வைரவனின் தொழில் முறை எதிரிகளால் வீட்டில் ரெய்டு நடந்து பெரும்பாலான சொத்துகளுக்கு சரியான முறையான கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப் படவில்லை என அறிவித்து அவனைக் கைது செய்து தனி விசாரணை என்ற பெயர் அவன் சிறை செல்ல நேர்கிறது,


இந்த வைரவன் கதாபாத்திரம் கொஞ்சம் விசித்திரம் தான் இங்கே. தன் இறந்து போன தாயின் சாயல் உள்ள பெண் என்பதால் மட்டுமே அவன் அனிதாவின் மீது அபிரிமிதமான காதல் கொள்கிறான்.அனிதாவை விட அழகான ...அந்தஸ்தான பல பெண்கள் அவனை மணக்க விரும்பியும் அவன் இவளை மணக்கிறான். இது கொஞ்சம் விசித்திரம் தான்,தாயின் மீது அவனுக்கிருந்த இனம் அறியா பாசம் காரணமாக இருக்கலாம் .


எப்படி அதி தீவிரமாகக் காதலித்தானோ அதே வேகத்தில் தான் சிறையில் அடைபட்டதும் அனிதாவுக்கு விவாகரத்து தரவும் முன் வருகிறான் .தன் செக்ரட்டரி பெண்ணுடன் தாராளமாகப் பழகும் போதாகட்டும் ,சொந்த அக்கா மகளுடன் மற்றவர் பார்வைக்கு வித்யசமாகப் படுவதாகட்டும் வைரவன் மீது அனிதா பயம் கொள்வதில் நியாயமே.


அனிதாவின் குடும்பத்தினர் பணத்திற்கும் செல்வாக்கிற்கும் படிப் படியாக மயங்குவதாகக் காட்டி இருப்பது வெகு யதார்த்தமே. எந்த மனிதனாயினும் அதுவே நிதர்சனம் ,இதில் விதி விலக்குகள் உண்டு என வாதிடுவது விழலுக்கு இறைத்த நீர்!அமெரிக்க மாப்பிள்ளையை விட தொழிலதிபர் மாப்பிள்ளை பெட் என தீர்மானிக்கும் அவர்கள் அவனும் சிறை சென்றதும் மணமான மகளை விவாகரத்து செய்வித்து விட்டு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.


எந்த சூழ்நிலையில் எது பெஸ்ட்டோ அதை தேடுவதும் பெற முனைவதுமே மனித இயல்பு என்பதற்கேற்ப அனிதாவின் வீட்டினர் அடுத்த மாப்பிள்ளை தேடுகின்றனர், இத்தனை செய்பவர்களை ஒரு விஷயத்தை மட்டும் சிந்திக்கவேயில்லை அது அனிதாவின் படிப்பு, காரணம் நம் இந்திய மனப்பான்மை என்று சொன்னால் சாலப் பொருந்தக் கூடும்.


இங்கே பெற்றவர்கள் பெண்கள் படிப்பதைக் காட்டிலும் கை நிறைய சம்பாதிப்பதைக் காட்டிலும் நல்ல வாழ்க்கைத் துணை அமைத்துக் கொடுப்பதே மிக முக்கியம் என்று கருதுகிறார்கள் .அது சரியான நடைமுறையே என்றாலும் ,ஒரு அளவுக்கு மேல் யாரையும் சோதித்துப் பார்த்து தேர்வு செய்ய வாழ்க்கை என்ன அறிவியல் ஆய்வுக் களமா ? வாழும் போது தானே தெரிய வரும்

நிஜமான நிறை குறைகள்,அப்போது திடீரென்று பயந்து போய் வெறுத்து ஓடினால் அந்த ஓட்டத்திற்கு முடிவு ஏது ?


வெளிநாட்டுப் பொருட்களில் மோகம் கொண்ட தம்பி ,கிணற்றுத் தவளை வாழ்க்கையில் சோர்ந்து போன அக்கா ,பெருமைக்காகவேனும் தன் தங்கை ஒரு பெரும் பணக்காரனின் மனைவி என்று பெருமை பேச விரும்பும் இன்னொரு அக்கா,பெண்ணுக்கு கல்யாணமே வாழ்க்கையில் அதி முக்கியம் அதை தவிர வேறு எதுவும் இல்லை என நம்பும் அம்மா ...இவர்களோடு அனிதா எனும் பெண்ணின் கனவுகளும் கற்பனையும் கலந்த வாழ்க்கை . இதுவே அனிதாவின் காதல்கள் கதை.


எந்த நொடியில் அனிதா மனம் மாறுகிறாள் என்று சுஜாதா விவரிக்கும் இடம் கொஞ்சம் டிராமாடிக் ஆக இருந்தாலும் சேக்ஸ்பியர் சொன்னது போல "வாழ்க்கையே ஒரு நாடக மேடை" தானே? அதனால் அனிதா தனக்கும் சீதா ராமனுக்கும் வீட்டினர் ஏற்ப்பாடு செய்திருந்த மறுமணத்தை கடைசி நொடியில் வேண்டாம் என மறுத்து விட்டு சிறையில் இருக்கும் தன் கணவனைத் தேடி போகிறாள்.
சுபம்

Sunday, January 18, 2009

யவனிகா...திரைப்படமானால்!(சுஜாதா கோச்சுக்க மாட்டார்!)

யவனிகாவை வாசித்து முடித்திருக்கிறேன் இன்று காலை.சுஜாதா ஏன் இவ்வளவு சீக்கிரம் இறக்க வேண்டும் என்று எல்லா சுஜாதா வாசகர்களைப் போலவே நானும் நினைத்தேன் கொஞ்ச நேரம்,பிறகு காலை சமையல் இருக்கவே இருக்கிறதே எல்லாவற்றையும் மறக்கடிக்க.

நிறைய பேர் யவனிகாவை வாசித்திருப்பீர்கள் என்று தெரியும்,நானும் என் பங்குக்கு இன்று தான் ...முடித்தேன்.சுஜாதாவை மட்டம் தட்டநினைப்பவர்கள் மற்றும் ஒரு கணேஷ்...வசந்த் கதை என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட முடியும் தான் .ஆனால் இதில் கற்றுக் கொள்ளவும் ...ஆச்சர்யப்படவும் விஷயம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு கேரக்டரும் தனித் தனி குணநலன்களுடன் படைக்கப் பட்டிருப்பதே சுஜாதா டச் தான்.யார் யார் எப்படி இருப்பார்களோ...அவர்களை அப்படி அப்படியே கதையில் உலவ விட சுஜாதாவால் மட்டுமே முடியும்! வரும் கேரக்டர்கள் எல்லோரும் கும்பலில் கலந்து கட்டி கும்மி அடிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்வது ரசிக்கும் படி இருக்கிறது.

வேண்டுமானால் ஒரு பரீட்சை வைத்துப் பார்க்கலாமா?
இப்போது நான் யவனிகா கேரக்டர்களின் பெயர்களை இங்கே வரிசைப் படுத்துகிறேன் ...உங்களுக்கு அவர்கள் கதையில் எந்த இடத்தில் என்னவாக வந்து போகிறார்கள் ?என்பது சட் சட்டென்று மனதில் வந்து நிற்கும் பாருங்கள்(நிற்கும் தானே!!!)

கணேஷ் &வசந்த்-இவர்களைத் தெரியாதவர்கள் சுஜாதாவையே தெரியாதவர்கள்.

கணேஷ் கேரக்டருக்கு எவ்ளோ யோசிச்சும் "வெற்றி விழா ...விக்ரம் ...படத்துல பார்த்த நம்ம உலக நாயகன் கமல் தவிர வேற யாரும் செட் ஆகலைங்களே!

வசந்த் கேரக்டருக்கு பேசாம விக்ரமை போட்றலாம்.(காசா...பணமா...எதோ எனக்குத் தோணினதை சொல்றேன்.)

கெளரி-இவள் இந்தக் கதையில் யார்?இப்படி பல கேரக்டர்கள் நம்மைக் கடந்து போயிருக்கும் நாம சரியா கவனிச்சிருக்க மாட்டோம்...;(இந்தப் பொண்ணு கேரக்டருக்கு அலை பாயுதேல மாதவன் பிரெண்டா வந்த மேத்தாவை போடலாம்!

தேஜோமயி -ஹை... இவளை நீங்கள் மறந்திருக்க முடியாதே!(சரி நம்ம நமீயைக் கற்பனை பண்ணிக்குங்க இப்போதைக்கு ...சுஜாதா வர்ணனைல நமீ தேஜூவை விட கொஞ்சம் ஜாஸ்தி பிரம்மாண்டமாவே இருந்தாலும் கூட தேஜூ தமிழ் நமீக்கு மட்டுமே பொருந்தும் இன்னைய தேதிக்கு!

ராஜா செல்லையா...ராஜா ராமையா-சகோதரர்கள்.(ராஜா ராமையாவுக்கு நம்ம கிரீஸ் கர்னாட் அருமையா செட் ஆவார்.செல்லையாவுக்கு கிட்டியப் போட்டுக்கலாம்.(எவ்வளவு நாள் தான் பாவம் அவரும் வில்லனாவே வந்து போயிட்டு இருப்பார்?! இதுல கேரக்டர் ரோல் பண்ணட்டுமே?!

நடேசன்-செல்லையாவின் பார்ட்னர்(தேவன் ஒரு மலையாள நடிகர் அவர் பொருந்தலாம் இந்த ரோலுக்கு!)

அம்ஜத்-தேஜுவின் பாய் பிரென்ட் (சல்மான் கானைத் தவிர இதுக்கு யாருமே பொருந்தலைங்க என் கற்பனைல!?

சம்பத்-தேஜுவின் பி.எஸ் (எல்லா மெகா சீரியல்லயும் வர ட்ரை பண்ணுவார் பாருங்க மோகன் ராம் அவரைப் போடலாம் சரியா இருக்கும்.)

கும்பகோணத்தில் இருந்து வந்து அநியாயமாகச் உயிரை விடும் ஸ்தபதி ஒருவர்.(இந்த கேரக்டருக்கு நிழல்கள் ரவி கொஞ்சம் சரியா பொருந்துவார்னு தோணுது!

யவனிகா சிலையை கணேஷிடம் ஒப்படைக்கும் பரமானந்த் (இந்தக் கேரக்டருக்கு பழைய காதல் தேசம் அப்பாசைப் போடலாம் பொருத்தமா இருக்கும்!

மயிலாப்பூர் ஆழ்வார் சன்னதியின் அர்ச்சகர் கேரக்டர் .(யவனிகாவை படமாக்கினா இந்த ரோலை ஹேமா பாஸ்கருக்குத் தரலாம்...மனுஷர் பிச்சு உதறிடுவார் பாத்திரத்தை! பிரிவோம் சந்திப்போம் ல சேரனுக்கு சித்தப்பாவா வருவார் அவர் தான்!)

வெடி குண்டுகளை செயலிழக்க வைக்க கணேஷின் நண்பனாக கடைசி பக்கங்களில் மட்டுமே அதிரடியாக வந்து போகும் ஸ்ரீ ,(கரன் அவர் கிடைக்கலனா ஸ்ரீமன் நடிச்சா சரியா வரும் இந்த ரோல்!)

தப்பு தப்பாக ஆங்கிலம் பேசியே கொல்லும் ஒரு அராபிக் கொள்ளை கூட்டக் காரன் .(கசன் கானைப் பத்தி என்ன நினைக்கறீங்க இந்த ரோலுக்கு!)

அவ்ளோ தாங்க நடிகர்...நடிகைகள் தேர்வு முடிஞ்சது. இனி கதைக்கு போகலாம்.

கதை என்று பார்த்தால்,யவனிகா ...சோழர் காலத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் வீர ராஜேந்திரர் காலத்தில் செய்வித்த ஒரு வெண்கலச் சிலை.

இதை நம்ம கிட்டி தொல்பொருள் சேகரிப்பாளர் கம் ஆர்வலரா இருந்து ஒரு மியுசியம் வச்சு பாதுகாத்துட்டு வரார்.
நம்ம மேத்தாக்கா அவர்கிட்ட வேலை பாக்கறாங்க அசிஸ்டன்ட்டா...திடீர்னு ஒருநாள் யவனிகா சிலை காணமா (திருடு) போய்ட்டதா மேத்தாக்க வந்து கமல் கிட்டயும் விக்ரம் கிட்டயும் புகார் பண்றாங்க.

இடைல நம்ம நமீதா சல்மான் கான் காதல் கலாட்டா வேற வரும்(ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்கக் கூடாது...நமீ இருந்தா தானே சூட்டிங் சீன் வைச்சு கொஞ்சம் கலகலப்பா ஆக்க முடியும் கதை ஓட்டத்தை !அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் நமீ சூட்டிங்கள தான் கதையோட முடிச்சு அவிழும்.அதனால் நமீ இந்த கதைக்கு ரொம்பத் தேவை.இவங்க கதை ஒரு பக்கம் ஓடிட்டு இருக்கட்டும்.
மெயின் கதைக்கு போவோம் வாங்க...

கமலும் ...விக்ரமும் யாவநிகாவைத் தேடறாங்க...தேடறாங்க...ஒரே குழப்பமா இருக்கு ! யார் தான் யவனிகாவை திருடினதுனு ? முதல்ல தேவன் மேல சந்தேகப் படறாங்க...அப்புறம் கிட்டி மேல...அப்புறம் மேத்தாக்கா மேல...கடசில திருடன் நம்ம கிரீஸ் கர்நாட்னு தெரிஞ்சிருது,

அவரே அவங்க தம்பி வச்சிருந்த விலை மதிப்பற்ற சிலையை திருடி வெளிநாட்டுக்கு விக்கிறதா சொல்லி போலி சிலையை வித்துட்டு அவங்களையும் ஏமாத்திடறார்(கிரீஸ் கர்னாட் இப்படி ஏமாத்தலைனா தான நமக்கெல்லாம் டவுட் வரும்!.

அந்த வெளிநாட்டு கொள்ளைக்கூட்ட காராங்க (அதாங்க கசன்கான் கோஷ்டி )இதனால் வெறி பிடிச்சி போயி நிஜ யவனிகா சிலையைத் தேடி இந்தியாவுக்கு வந்து கிரீஸ் கர்நாட்டுக்கு பீதி தராங்க.
ஒரு பக்கம் போலி சிலையை செஞ்சு தர உதவின ஸ்தபதி நிழல்கள் ரவி அதுக்கு உடந்தையா இருந்த தேவன்...இப்படி ஒரு நாலஞ்சு பேரை இந்தக் கூட்டம் சகட்டு மேனிக்கு கொலை செய்யுது.அதான் டுவிஸ்ட்டு !

அப்புறம் என்ன ஆகுது சில பல இடங்கள்ல (அட நம்ம சென்னைக்குள்ள தாங்க கதை நடக்குது) கலவரங்களும் குண்டு வெடிப்பும் நடந்த பின்ன யவனிகா சிலை பத்தின துப்பு விக்ரமுக்கு கிடைக்குது .கூடவே நம்ம கமலுக்கும் கிடைக்குதுங்கடா சாமியோவ்!
கமலும்...விக்ரமும் புத்திசாலித் தனமா பல செயல்கள் செஞ்சு அப்பால நிஜ (ஒரிஜினல்)யவனிகாவை கண்டு பிடிச்சிடறாங்க ஒரு கட்டத்துல .

இதுல காமெடி இன்னான்னா கடைசில அந்த சிலை ராமையா & செல்லையா கிட்டயும் போகலை...இந்திய அரசாங்கத்தின் தொல் பொருள் துறை வசமும் போகலை ...கட்டக் கடைசில மயிலாப்பூர் ஆழ்வார் கோயில்ல அவரோட பத்தினியா நிக்க வைக்கப் படுது.
சில பல உயிர்களைக் காவு வாங்கிட்டு அந்த சிலை பொது மக்கள் கண்ணில் தட்டுப் பட எவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்கு பாருங்க!சிலைக்கும் உயிர் உண்டோ?

கிரீஸ் கர்னாட் வந்து வெளிநாட்டுக் கொள்ளைக் காரங்க அவரோட கார்ல வச்ச குண்டால ...தப்பு தப்பு அதான் அந்த குண்டு வெடிப்பு விபத்துல இருந்து கரனும் கமல் அண்ட் விக்ரம் கோஸ்டி அவரைக் காப்பாத்திடுதே...ஆனாலும் உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும் " பழமொழிக்கேற்ப தன்னோட வாலட்டை (மணி பர்சு தாங்க athai ippadiyum solluvaangalaam!)கார்ல் இருந்து எடுக்க மறுபடி காருக்குள்ள பாயுற கிரீஸ் பீஸ் பீசா வெடிச்சு சாகிறார்.(படத்துலங்க!)

மேத்தாக்க இடைல கணேஷை லவ் பண்ணறதா பீல் ஆகிட்டு பின்னாடி ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி அமேரிக்கா போயிடறாங்க.

நம்ம வசந்த் சல்மான் கான் கிட்ட இருந்து நமீயை காப்பாத்த நமீயோட தற்காலிக பாய் பிரெண்டா நடிக்கறார்.அப்புறம் kazhandukkaraar..சல்மான்கான் மான் vettaila ஜெயிலுக்குப் போனதும் நமீ இந்தியன் கிரிகெட் டீம்ல ஒருத்தனை லவ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க.

அதாங்க கமல் கல்யாணம் பண்ணிக்காம ...காதல்லயும் மாட்டிகாம eppavum போல ஒழுங்கான பிரம்மச்சாரியா காலத்தை வக்கீலாவே கடத்திட்டு இருக்கார்.

இதாங்க யவனிகா கதை விமர்சனம்.

நிஜமா தான் சொல்றேன்...யவனிகா படிக்க நினைப்பவர்கள் தயவு செய்து இதை படிக்காதீங்க.ஏதேதோ எழுத நினைச்சு கடைசில இன்னைக்கு இப்படி போய் முடிச்சிட்டேன் பதிவை.

திட்ரவங்க திட்டலாம் ....பாராட்டுறவங்க பாராட்டலாம்!!!!!அப்படி யாராச்சும் வருவாங்க பாருங்களேன்!