Thursday, September 16, 2010

வேடிக்கை பிரியங்களும் சலூன் கடை சாய்ந்த நாற்காலிகளும் ...


மக்கள் வாழ்வும் ...மரியாதை நிமித்தங்களும் :

ஒன்றும் பிரமாதமில்லை ;
அம்மாவுக்கு உருப்போட கிடைத்த வார்த்தை
"அப்பாவை எதிர்த்து வாயாடாதே "
அத்தையின் ஜெபமோ
மாமாவின் எதிரில் சேரில் உட்காராதே !
இதென்ன பிரமாதம்?
கல்யாணமென்றால் காத தூரம் ஓடிய
அக்கா மசக்கைக்கு பின் அடிக்கடி சொல்கிறாள்
மாற்றுக் கருத்தே கிடையாதாம்
மாமா சொன்னால் சரியாய் இருக்குமாம்;
ம்ம்...
சரி தான் ;
நான் என்ன சொல்லப் போகிறேனோ ?
வருங்காலக் கனவுகளில்
நிகழ்காலம் கரைத்து
ஆணும் பெண்ணும் சமமென கொடி பிடித்த
முற்கால ஞாபகங்கள்
இத்துப் போன பழம் புடவையாய் ...
சில நூறு பொத்தல்கள்.


சலூன்கடை சாய்ந்த நாற்காலி...


பாம்புகள் சட்டை உறிப்பதை நிகர்த்ததா
பறவைகள் சிறகு உதிர்ப்பது ?
நகம் வெட்டிக் கொண்டோ
முடி திருத்திக் கொண்டோ ;
யோசிக்க
நல்லதொரு சந்தேகம் கிடைத்தது
குடும்பத் தலைவர்களுக்கு ;
பாத்ரூம் குழாய் லீக் ஆவதை சரி செய்வதோ !
மளிகை சாமான்கள் வாங்க ஸ்டோர்களுக்குப் போவதோ !
குழந்தையை பார்க்குக்கு அழைத்துப் போய் விளையாடுவதோ
பின்னதெல்லாம் வெறும் தொல்லைகள் தான் .
இருக்கவே இருக்கிறது
சலூன்கடை சாய்ந்த நாற்காலி
சிந்தனை சிற்பிகள் ஆகும்
போட்டிக்கு
இன்று எத்தனை பேர்!



வேடிக்கை் ப்ரியங்கள் ... 


அப்பாவைப் பொறுத்தவரை
தொலைக்காட்சிப் பெட்டியின் சேனல்கள் ஒவ்வொன்றாய்
தாவித் தாவிப் போவதும்
ஜான்சன் பட்ஸ் எடுத்து காதைக் குடைவதும்
பற்குச்சியால் கோழித் துணுக்குகள் அகற்ற
பல்லிடுக்குகளை நோண்டிக் கொள்வதுமாய்
காரியங்கள் யாவும் நிறைவேறிக் கொண்டிருந்தன;
அம்மாவைப் பொறுத்தவரை
புத்தக அலமாரியில்
ஒவ்வொரு புத்தகமாய் எடுப்பதும் வைப்பதுமாய்
குழாயில் தண்ணீர் வருகிறதா பார்ப்பவள் போல
குமிழைத் திருகுவதும் மூடுவதுமாய்
கர்ம சிரத்தையாய் காரியங்கள் யாவும்
நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.
விடுமுறை நாளின் காலை முதலே
வெடித்து விடக் கூடுமென்று நம்பிய
ஒரு சிறு சண்டையை திசை மாற்றி ஏமாற்றும் பொருட்டு ;
என் பங்குக்கு நான் கூட
சாயமேற்றிய நகங்களுக்கு
மறுபடி மறுபடி சாயமேற்றிக் கொண்டும்
பின்னிய கூந்தலை
பிரித்துப் பிரித்து பின்னிக் கொண்டும் ;
காரியங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்
எப்போது வெடிக்குமந்த சண்டை என வேடிக்கை பார்க்க ;


Note :

பஸ்ஸில் எழுதிய கவிதைகள்.சேமிப்பிற்காக இங்கே.



இச்சைகளும் இடாகினிப் பேய்களும் ...




இச்சையில் ஆடும் இடாகினிப் பேய்களுடன்
விடாது கதைக்கத் தொடங்கி
இன்றோடு நாட்கள் எட்டு
எட்டி விடும் தூரம் தான்
சுவாதீனமாய் சப்பணமிட்டு
அவள் ஆடிக் கொண்டிருந்தாள்;

சுளீர் சுளீரென 
அகல விசிறிச் சுழன்று தாழ்ந்து ஓயும்
நீளக் கூந்தல் குத்தூசிகளாய் விரிந்து பரவ
உறுத்து விழிக்கும் ஆங்கார கண்கள்
என்னைப் பிய்த்து தின்று விடும் கோரப் பசியில் ;
பேய்கள் அவளை ஆட்டுவிக்கின்றனவாம்
பேசிப் பேசி கலைகிறார்கள் ;
வேடிக்கை மனிதர்கள்;

பெருந்தீனியிட்டு பேய் வளர்க்கும் கலை அறியாதவர்கள்...


நோட்: படம் கூகுளில்  எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.உரிமைக்காரர்கள் ஆட்சேபித்தால் நீக்கப் படும்


 

 

Wednesday, September 8, 2010

பாட்டியும் பட்டுப்புடவைகளும்...

பாட்டியின் பட்டுப்புடவைகள் ... ((அனுபவ பகிர்வு)

வழமையாய் கோடம்பாக்கம் புடவைகளை பின் கொசுவமிட்டு உடுத்தும் பாட்டிக்கு இந்திரா காந்தி போல மொட மொடப்பாய் புடவை கட்டிக் கொள்ளும் ஆசை மிகுந்திருந்தது ,கைத்தறிப் புடவை என்று நினைத்து விடாதிர்கள் ! விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டெல்லிக்குப் போய் இந்திராவுடன் தாத்தா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பேரன்பும் பெருமிதமுமாய் கூடத்தில் மாட்டி வைத்திருக்கிறாள் ,


இந்திரா கட்டியிருப்பது பட்டுத் தானாம்!,இந்திரா கட்டி இருப்பது பட்டுத் தானென்று ஒரேயடியாய் சாதிப்பதில் இப்போதும் பாட்டி கெட்டிக்காரி தான்.குடும்பத்தின் மூத்தவள் என்பதால் யாருக்கு பட்டெடுத்தாலும் பாட்டிக்கு காட்டாமல் அலமாரிக்கு செல்லாது,பிறந்த குழந்தையை தடவுவது போல ரொம்பப் பாசத்துடன் பிரித்து பார்த்து அசங்காது மடித்து நீவுவாள்,புடவைக்கு வலிக்குமோ என்றிருக்கும் போலும்!இப்படியாக பாட்டிக்கு பட்டுக் கட்ட ரொம்ப ரொம்ப இஷ்டம் என்று நாங்களெல்லோரும் எப்போதும் அறிந்தே இருந்தும் கூட வாழ்வின் கடை நாட்களில் தான் பட்டென்ற ஒன்றை அவள் மேனி தொட்டுப் பார்க்க நேர்ந்தது ,


ராமர் நீலத்தில் அரக்கு ஜரிகை கரையிட்ட ஊசி வாண சரிகைப் புடவை ஒன்று ,அடர் பச்சையில் அழகான தங்க சரிகைக் கரையில் ஒன்று ,இரண்டுமே கடைசி மாமாக்களின் திருமணங்களின்போது பாட்டிக்கென்று எடுத்தார்கள்,முந்தினதை இரு முறை உடுத்தி இருப்பாள்,பின்னது ஒரே ஒரு முறை தான் ,இரண்டுக்குமே வெள்ளை ரவிக்கை தான்.


சிரிக்கையில் அவள் மூக்கு விரிகையில் ஒரு பக்கம் அன்ன பட்சி ,மறுபக்கம் தோகை விரித்தாடும் மயில் என்று ரெட்டை பேசரி ஜொலிக்கும் ,வாடிய வெற்றிலை போல் வரியோடித் துவண்ட உதடுகளின் பின் ஏழு கல் வெள்ளைத் தோட்டுக்கு போட்டியாய் பளீரிடும் பச்சரிசி பற்கள்.சின்ன வயதில் யாரோ சொன்னார்கள் என்று நெற்றிக்குப் பச்சை குத்திக் கொண்டிருந்தாள்,யாரும் கேட்டால் அறியாச் சிறுமி போல அந்தப் பச்சை செத்துப் போன பின் அவள் சொர்க்கம் போக வழித்துணைக்கு வருமென்பாள் !


வெள்ளி செவ்வாய்களில் தலைக்கு குளித்து முழுகிய பின் கொண்டைக்கு சிவப்புக் குற்றாலத் துண்டு சுற்றி அதீத மங்களகரத்துடன் மேல் வாசற் படியில் நின்று கொண்டு மாரிக்கு சோறிட வருவாள்,அந்த கணங்கள் புகையோடிய விடிகாலை மென் வெளிச்சம் போல ஆழ் மனதை அசைத்துப் பார்க்கும்.. .


பட்டசைத்த ...பட்டுக்கு அசைந்த பாட்டியின் உலகம் ஒரு நாளில் வெண்மை சூழ்ந்தது ,கருத்து நெடிந்து தளர்ந்த தாத்தா அவளைச் சூழ இருந்த நிறங்களை திருடிக் கொண்டு செத்துப் போன பின் அவளுக்கென்று வாய்த்தது ஒரே ஒரு நிறம் அது அந்தப் பாழும் வெள்ளை தான். கலர் புடவை உடுத்திக் கொள்ள யார் சொல்லியும் கேட்க மறுத்து விட்டாள்,தாத்தாவுக்கு பிடிக்காதாம்,வயதான கைம்பெண்கள் கலர் சேலை உடுத்திக் கொண்டு எதிரில் வந்தால் கேலி செய்வாராம். வேண்டவே வேண்டாம் என்று விட்டாள்.செத்தும் வாழ்ந்தார் தாத்தா!


நேற்று பாட்டியின் இரண்டு புடவைகளில் முன்னதை எனக்கும் பின்னதை தங்கைக்கும் என பாட்டியே பங்கு பிரித்துக் கொடுத்து விட்டாள்.உடுத்தும் போதெல்லாம் பாட்டியின் புடவை என்று சந்தோசிப்பதா? பாட்டி உடுத்த முடியாப் புடவை என துக்கிப்பதா ! இனம் புரியாக் குழப்பத்தில் புடவையை கையில் ஏந்திக் கொண்டு கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டேன் ,பாட்டியின் இளகிய உள்ளங்கை தசைகளின் வெது வெதுப்பும் மெது மெதுப்புமாய் கன்னம் தாண்டி சுட்டது புடவை .

Saturday, September 4, 2010

ஆனந்தாயி என்ற நாவல் குறித்த அறிமுகத்திற்கு:








இந்த சுட்டி  ஆனந்தாயி என்ற நாவல் குறித்த அறிமுகத்திற்கு .

சிவகாமி என்பரின் நாவல் ,இந்த எழுத்தாளர் குறித்து இந்த தளம் தவிர வேறெங்கும் தகவல்கள் இல்லை. 1980களின் மத்தியில் எழுதத் தொடங்கியவர்,இன்னும் பலரையும் பரவலாகச் சென்றடையக் காணோம்.ஆனால் கல்லூரி விடுமுறையில் அம்மாவின் பள்ளி நூலகத்தில் இந்த நாவலை வாசிக்கையில் எனக்கு மிகப் பிடித்திருந்தது இந்த நாவல். 
 

 இங்கே எழுத்தாளர் சிவகாமி  குறித்த சிறு அறிமுகம் வாசிக்க கிடைத்தது.

//1980களின் மத்தியில் எழுதத் தொடங்கியவர். தலித்தியம், பெண்ணியம் சார்ந்து செயல்பட்டவர். பழையன கழிதலும், ஆனந்தாயி அவருடைய நூல்கள். தமிழில் எழுத்து பற்றிய புனைவு எனப்படும் ப.க.ஆ.கு. இவருடையதாகும். குறுக்கு வெட்டு, சிவகாமி சிறுகதைகள் போன்ற படைப்புகளும் உண்டு. ஊடாக என்னும் குறும்படத்தை இயக்கியிருக்கிறார். முன்பு கோடாங்கி என்றும் இப்போது புதிய கோடாங்கி என்றும் வெளியாகும் பத்திரிகையின் பின்னணியாய் இருந்து இயங்கிவருபவர். கவிதைகளும் எழுதியுள்ளார். கருத்தம்மா, முனிமா போன்ற பெயர்களிலும் படைப்புகள் வெளியாகியுள்ளன. இவருடைய நாவல் அண்மையில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது//

http://www.newbooklands.com/new/product1.php?catid=15&&panum=2934 ( இங்கே இந்த நாவல்   விற்பனைக்கு கிடைக்கிறது )



http://udaru.blogdrive.com/archive/953.html  ( இந்த சுட்டியில் சிவகாமி அவர்களின்  பேட்டி  வாசிக்க கிடைக்கிறது  )



Friday, September 3, 2010

எஸ்ராவின் தளத்தில் காணக்கிடைத்த மற்றவள் குறும்படம் குறித்த ஒரு பகிர்வு :


http://www.youtube.com/watch?v=_Al94vZlxHs   


எஸ்ரா வின் தளத்தில் "மற்றவள்" என்ற இந்த குறும்படம் பார்க்கக் கிடைத்தது. பள்ளிக்குப் புறப்பட்டு விட்ட தனது எஜமானியின் குழந்தைகளின் யூனிபார்ம் தோற்றம் கண்டு சுய பட்சாதாபத்தில் உறையும்அந்தச் சிறுமியின் ஏக்கம் கலந்த முக பாவனைகள் மிகப் பொருத்தம்,அவளது எஜமானிக்கு அவள் மீது இரக்கமில்லை எல்லா எஜமானிகளைப் போலவே! 


குடும்பச் சுமைகளுக்காக குழந்தைகள் எடுபிடிகளாகவும் வேலைக்காரர்களாகவும் ஆக்கப் படுவதற்கு பதிலாக அங்கீகரிக்கப் பட்ட அனாதை ஆசிரமங்களில் சேர்த்து விடுவது தேவலாம் ,குறைந்த பட்சம் தடையற்ற கல்வி கிடைக்கும் உத்திரவாதம் உண்டு. கிறிஸ்தவ மிசினரிகள் பல இருக்கின்றன.மதம் மாற போதிக்கப் படுகிறார்கள் என்ற குற்றச் சாட்டு இருந்தாலும் இந்த நிலைக்கு அது தேவலை, சுயமரியாதை என்ற ஒன்று குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும் தானே!

மேலும் தொண்டு நிறுவனங்கள் ,அனாதை ஆசிரமங்கள் குறித்தும் தெளிவான நம்பகத் தன்மை உறுதி செய்யப் பட வேண்டும்,வாணலிக்குத் தப்பி அடுப்பில் குதித்த கதையாக குடும்பக் கஷ்டம் என்று ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்கப் படும் குழந்தைகள் நிர்வாகிகள் என்ற போர்வையில் நடமாடும் சில வக்கிர புத்திக்காரர்களின் விபரீத ஆசைகளுக்கு வடிகால்களாகி விடக் கூடாது .

நிராதவரான குழந்தைகள் நலன் பேண அமைப்புகள் பல இருந்தும் கூட சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் எப்போதும் குறைந்த சுவடே இல்லை .

முதல் காரணம் பெரியவர்களின் அசட்டை என்றே சொல்ல வேண்டும். குழந்தைகளின் மன நலனுக்கு எதிரான இத்தனை செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்த்தும் பத்திரிகைகளில் படித்தும் என்ன பலன்?மீண்டும் அந்த தவறுகளும் குற்றங்களும் குறைந்த பாடில்லை,ஒவ்வொரு தனி மனிதனும் இவ்விசயத்தில் குறைந்த பட்ச மனிதத் தன்மையுடன் பிற மனிதர்க்கு இரங்கும் சுபாவங்களை வளர்த்துக் கொண்டு விழிப்புணர்வோடு செயல்பட்டால் அன்றி குழந்தைகள் நலன் பற்றிப் பேசுவதில் அர்த்தமே இல்லை.

இதை நிகர்த்த மற்றொரு குறும்படம் " குட்டி "

அதற்கான youtube சுட்டி கிடைக்குமென்று தேடித் பார்த்தேன் ,கிடைக்கவில்லை. சன் தொலைக்காட்சியில் முன்பு ஏதோ ஒரு சனிக்கிழமை அந்தப் படம் திரையிட்டார்கள்.நல்ல படம் ,பார்க்க வாய்த்தவர்கள் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.



Monday, August 30, 2010

மிலிட்டரி நாயக்கர் ...



அந்த ஊரில் மிலிட்டரி நாயக்கர் வீடென்றால் அது சீமை ஓடு வேய்ந்த எட்டுக் கட்டு வீடு ;

அந்த வீட்டுக்கு ரெண்டு வாசத்திண்ணைகள் இருந்தன.

விடியற்கருக்கு...இன்னும் இருட்டு விலகாத சித்திரை மாசத்து கோடை ராத்திரி ,ராப்பூச்சி ரீங்காரம் இருட்டின் குறட்டை சத்தம் போல மெல்லக் கசிந்தபடி இருக்க இந்த வீட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளவென்றே ஜென்மமம் எடுத்தவளாய் ஊர் குப்பைக்காரன் செல்லாண்டியின் பெண்டாட்டி வெள்ளையம்மா அந்தண்டை வாசதிண்ணையில் குப்புறப் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் ,

இந்தண்டை வாசத்திண்ணையில் செல்லியும் அவள் மாமியாரும் வீட்டின் எல்லாக் குஞ்சு குளுவான்களோடு நல்ல சயனத்தில்;

வீட்டு ஆம்பளை மிலிட்டரி நாயக்கரை அவரது அம்மாவும் ,மனைவியும் வெளித்திண்ணையில் படுத்து தூங்க அனுமதிப்பதில்லை என்பதால் அவர் மட்டும் வீட்டுக்கு உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். நாயக்கரை திண்ணையில் படுக்க விடாததற்கு ஒரு ரசமான கதை இருந்தது அவர்களிடம் ;இந்த இருட்டில் அந்தக் கதை என்னத்திற்கு?!

இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும்.அப்படி இருக்கக் கொள்ள தான் திடீரென்று எதிர் வீட்டு முருங்கை மரத்திலிருந்து ஜிங்கென்று குதித்து இறங்கினாள் பெரிய கோதை ;அவள் இறங்கிய அறிகுறியோ என்னவோ கொல்லையில் கிணற்றுச் சகடம் "கட..கடவென்று "உருண்டு ஓய்ந்து நின்றது .

வீட்டு நாய் விக்கி சன்னமாய் குழந்தை அழுவது போல ஊளையிட்டு அடங்கியது ,என்ன இருந்தாலும் அவள் வளர்த்த நாய் ஆச்சுதே?


"செல்லி ..."

"செல்லி ..."

"ஏய் செல்லி ...வாயேன் எவ்ளோ நேரமா கூப்டுட்டு இருக்கேன் ...வா நல்லதண்ணிக் கெணறு வரைக்கும் ஒரு நட போயிட்டு வருவோம்."

வரும் போதெல்லாம் எப்படி வழக்கமோ அது போலவே அன்றும் வாசற்படியில் ஒரு காலும் தெருவில் ஒரு காலும் வைத்து நின்ற வாக்கில் தண்டை மெலிதாய் குலுங்க செந்தூரக்கமிட்ட முகத்தில் உறைந்து போன சிரிப்புடன் பெரிய கோதை சின்ன செல்லியை அழைக்க ஆரம்பித்தாள் .

செல்லி தூக்கம் கலையாதவளாய் ; கோதை தன்னைக் கையை பிடித்து இழுத்த பாவனையில் கையை உதறிக் கொண்டு ;

"இந்தா ...நான் வரல ...நீ போ ...எம்புள்ளைங்க அழும்.சின்னவன் நானில்லாம ஒத்தப் பருக்க திங்க மாட்டான்."

அவள் சொன்னால் விட்டு விடுவாளோ கோதை ;

"ஏய் கிறுக்கி ... போயிட்டு வெரசா ...வந்துரலாம்டி" இந்தா இருக்கு நல்ல தண்ணிக் கெணறு ,எந்திரி ...எந்திரி "

"ம்ம்ஹூம் ...நான் வல்ல ...நீ போ எம் புருஷனுக்கு சோறாக்கனும் ... கெழக்குத் தோடத்துல மொளகா நாத்து புடுங்கனும் ...அம்மோய் எம்புட்டு வேலயிருக்கு ! ... நான் வல்ல ...நீ போயேன் "

கோதையின் முகத்தில் உறைந்திருந்த சிரிப்பு சன்னமாய் சுணங்க...

"ம்ம்...தண்ணிக் கெணத்துக்கு தான் வல்லேங்கற ...வெறகு பெறக்க காட்டுக்காச்சும் வா போவோம் ..."

"வேணாம்...வேணாம் நான் வல்ல ...நான் எங்கயும் வல்ல "

"ஊர்கம்மாய் ரொம்பிக் கிடக்காம் ,அழுக்குத் துணி எடுத்தா ...போய் புள்ளைங்க துணியன்னாலும் துவைச்சிட்டு வரலாம் ...எந்திரி ..வா...வா "

" அழுக்குத் துணி எடுக்க வண்ணாத்தி வருவாளே ...கம்மாய்க்கு ஏன் கூப்டற நான் வல்ல..."

செல்லி மறுக்க மறுக்க கோதைக்கு ஆங்காரம் கூடிக் கொண்டே போனது போலும் ;

உக்கிரமாய் விழிகளை உருட்டியவள் கொடிக் கயிற்றில் காய்ந்து கொண்டிருந்த செல்லியின் சிவப்பு சுங்கிடிச் சேலையை படக்கென்று உருவி எடுத்து அதை சுருக்கிட்டு அதே கொடியில் தொங்க விட்டாள்,

கட்டக் கடைசியாய் ஒரு முறை அழைப்பவள் போல ;

"அடியே ...இப்ப நீ வரப் போறியா ...இல்லியா?"

அப்போதும் தூக்கக் கலக்கத்துடன் தான் செல்லி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ;

"நானெதுக்கு உன்கூட வரணும் ?" நான் வல்ல நீ போ "

" எதுக்கு வரணுமா? வரணும்டி ...நான் கூப்ட்டா நீ வரணும்.எம் புருஷன் கூப்டோடன மட்டும் வந்துட்டியில்ல ....நாலு புள்ளைங்க கூட பெத்துகிட்டியில்ல. எந்திரிச்சு வா வெள்ளன கெணத்துக்குப் போவோம்

" ஆங் ...உம்புருஷனா ... செல்லிக்குப் பொட்டில் அடித்ததைப் போல உணர்வு

"உம்புருஷனா ...உம்புருஷனா ...அம்மாடியோவ்

அ...த்...தே...அத்...தே ... யாரு வந்துருக்கா இதாரு....? ...எந்திரிங்கத்தே...எந்திரிங்க ... ..."

அலறிக் கொண்டு விழித்த செல்லி உடம்பெலாம் உதறலெடுக்க பக்கத்தில் செத்துப் போனவளைப் போல உறங்கிக் கொண்டிருந்த தான் மாமியாளை உலுக்கோ உலுக்கென்று உலுக்க ;

கோரைப் பாயில் படுத்துக் கொண்டிருந்த அந்தம்மாளும் அதிரி புதிரியாய் சேலையை அள்ளிப் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு ;

இந்தா செல்லி ...எதுக்குத்தா ...இப்பிடி பயந்து கத்தற... மருமவளே என்னடி ஆச்சு ?

பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த தன் ஐந்து வயது கடைக்குட்டி மகனை மடியிலிட்டு இறுக்கிக் கொண்டும் மற்ற பிள்ளைகள் மூன்றையும் எங்கோ கண்ணுக்குத் தெரியாத பூதத்திடம் இருந்து காப்பவளைப் போன்ற பாவனையில் தான் வலது கையை நீளமாக அவர்கள் மேல் பரப்பி வைத்துக் கொண்டு மூச்சுக் கிடைக்காதவளைப் போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நடுங்கிப் போனவளாய் செல்லி அரண்டு போய் இருட்டில் கண்களை உருட்டிக் கொண்டிருந்தாள் ;
அதற்குள் சத்தம் கேட்டு தொழு வாசத்திண்ணையிலிருந்து அரக்கப் பரக்க ஓடி வந்தாள் வெள்ளையம்மா ;

"சின்ன மொதலாளிம்மா ...சும்மா இருங்க .சும்மா இருங்க ..ஒண்ணுமில்ல..ஒண்ணுமில்ல என்று செல்லியின் கைகளை இருக்கப் பிடித்துக் கொண்டு மிலிட்டரி நாயக்கரின் அம்மாவிடம் திரும்பி குசு குசுப்பாய் ...

சத்தம் போடாதிங்கம்மா ...எல்லாம் நம்ம பெரிய கோதையம்மா வேலையாத்தேன் இருக்கும்

போய் செல்லேரியம்மன் துன்னூறு எடுத்தாங்க ...பூசி விட்டா தொந்திரவு இருக்காது "



அவளா ...அவ செத்து மண் மூடிப் போயிட்டாளே...இப்ப எங்கருந்துடி வந்தா ? அச்சத்தால் வறண்டு போன நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள அந்தம்மாள் திரு திருவென விழித்துக் கொண்டு வெள்ளையம்மாளிடம் கேட்டாள் .

செத்தாலும் ...பொழச்சாலும் நாயக்கரு மொதல்ல கட்டினது கோதை அம்மாளைத் தானுங்கம்மா ,அந்தப் பாசம் விட்டுப் போகுமா !

நாண்டுகிட்டு செத்தவளுக்கு என்னடி புருஷன் பாசம்? விடிஞ்சதும் மொத்தக் காரியமா கோடாங்கிக்கு ஆள விட்டனுப்பு .

அதற்குப் பிறகு பல வருடங்கள் உருண்டு ஓடியே போயின .

செல்லி பாட்டியாகி ..கொள்ளுப் பட்டியான பின்னும் கூட இன்னும் நம்புகிறாள் அவ்வப்போது கோதை தன்னை கிணற்றில் தள்ளி சாகடிக்க அழைப்பதாக ;

உப்புப் பெறாத சுங்கிடிச் சேலைக்காக புருஷனோடு மனஸ்தாபப் பட்டுக் கொண்டு ஆறு மாத சிசுவை வயிற்றில் சுமந்திருந்த போதிலும் தூக்குப் போட்டுச் செத்துப் போன மூத்த சம்சாரம் கோதை ஆண்டாள் இன்னும் செல்லியை அழைத்துக் கொண்டே தான் இருக்கிறாளாம்.

செத்து செத்து விளையாடுவதற்காய் இருக்கக் கூடும் .

மிலிட்டரி நாயக்கர் திண்ணையில் தூங்குவதில்லை .அந்த மட்டும் புரிந்திருக்க வேண்டும் .

Saturday, August 28, 2010

பென்சில் மேனியா...

சும்மா சும்மா பென்சில் துருவிக்கிட்டே இருந்தா அதுக்குப் பேர் பென்சில்மேனியாவாம்,ஹரிணி சொன்னா ,அவளுக்கு இருக்காம்.இதுல இருந்து அவளை நான் காப்பாத்திட்டேன்னா நான் சொல்றதெல்லாம் அவ கேட்பாளாம். 
 
ரொம்ப ஈசின்னு நினைச்சு தான் சரின்னு சொன்னேன்.
 
நேத்து  காலைல சின்ன ஸ்கேல்  நீளத்துக்கு அழகா துருவி  கொடுத்து விட்ட   பென்சில் ஸ்கூல் விட்டு வந்தோடனே  பேக்ல செக் பண்ணா அவ கை சுண்டு விரலுக்கும் பாதி நீளம் தான் இருந்தது.i was shocked .
 
இன்னைக்கும் அதே தான் ...i was shocked ...
 
இது தப்பான வழக்கமாச்சேன்னு ...
 
ரொம்ப நேரம் இப்படிலாம் சும்மா சும்மா துருவினா பென்சில் God   கிட்ட போய் அழும்,என் முனை எல்லாம் ஷார்ப் பண்ணி ஷார்ப் பண்ணி புல்ஸ்டாப் வைக்கிறேன் புல்ஸ்டாப் வைக்கிறேன்னு நோட் புக்ல   அழுத்தி அழுத்தி அந்த ஹரிணி பாப்பா உடைச்சு உடைச்சு விடறா அப்புறம் திருப்பி பென்சில் ஷார்ப்பாவே இல்லை...ஷார்ப்பாவே இல்லைன்னு சொல்லிட்டு எனக்கு வலிக்க வலிக்க என் தலையை பிடிச்சு ஷார்பனர்க்குள்ள விட்டு  துருவிகிட்டே இருக்கா ...எனக்கு வலிக்குதே...ஐயோ God எனக்கு  வலிக்குதேன்னு  உன்னை பத்தி கோள் சொல்லும்னு சொல்லி வச்சேன்.
 
ம்ம்...நிஜமாவான்னு கொஞ்ச நேரம் எம்மூஞ்சியவே பார்த்துட்டு இருந்துட்டு ...
 
 God  நல்லவர் ஒன்னும் பண்ண மாட்டார் , அம்மா நீ பொய் தான சொல்றன்னா...
 
இல்ல நிஜம்மா தான் ,நீ மட்டும் பென்சில் சும்மா சும்மா துருவினேன்னு வை மிட்நைட் ல பென்சில் பூதங்களெல்லாம் கூட்டு சேர்ந்துட்டு உன்னை பயமுறுத்தப் போகுது பாருன்னேன் .
 
நீ வேணா ட்ரை பண்ணி பாரேன்னா
 
எதை ட்ரை பண்ண?
 
நான் எதுக்கு பென்சில் துருவினேன் ஷார்ப்பா இல்லைன்னு தான ? பென்சில் ஏன் ஷார்ப்பா இல்லை முனை உடைஞ்சதால தான?
 
ம்ம் ...
 
முனை ஏன் உடைஞ்சது ?
 
ஏன் ?
 
நான் புல்ஸ்டாப் வச்சதால தான ?
 
ம்ம்...
 
நீயும் புல்ஸ்டாப் வச்சுப் பாரும்மா?
 
எதுக்கு?
 
நீ வை நான் சொல்றேன்.
 
சரி என்று அவளுடைய ஹோம் வொர்க் நோட் எடுத்து fill ups மட்டும் எழுதிக் கொடுத்தேன் ,பத்து புல்ஸ்டாப் வைக்க வேண்டியிருந்தது .
 
அவளைப் போலவே நோட் புக்கில் அழுத்தி புல்ஸ்டாப் வைத்ததில் பத்து முறை முனை உடைந்தது.பென்சிலை பத்து முறை துருவினேன் .
 
சரி..சரி போதுமென்றாள்.
 
நோட் புக்கை மூடி வைத்தேன் . இப்ப புரிஞ்சதா ? இனிமே இப்டி சும்மா சும்மா பென்சில் துருவி துருவி போட்டு ஒருநாளைக்கு மூணு பென்சில் காலி ஆக்க மாட்டயில்ல  ?
 
ம்ம்...மம்மி இப்ப பென்சில் பூதங்களை வரச் சொல்லு ?
 
என்னது?
 
ஆமாம் நீயும் தான பென்சில் துருவி துருவி உடைச்ச ,உன்னையும் சேர்த்து தான பயமுறுத்தும் ,அப்படின்னா பரவாயில்லை .பூதங்களை ஒன் பை ஒன் வரச் சொல்லு ...be quick .
 
ங்கே !  (  நான் தான்) 
 
இப்பலாம் அடிக்கடி பென்சில் உடைக்கறது நானும் தான்!
 
இதற்குப் பெயரும் பல்பென்று சொல்லத் தகுமோ?!