Friday, March 6, 2009

எங்கள் சரஸ்வதிகள் ...

எங்கள் சரஸ்வதிகள் ...
மார்ச் -8 மகளிர் தினம் .
என்ன எழுதுவது ?
ஏதாவது எழுதி ஆக வேண்டுமே என்றதும் சட்டென்று நினைவில் நிழலாடியவர்கள் எனக்கு பால்வாடியில் இருந்து கல்லூரிக் காலம் வரை கல்வி கற்பித்த சரஸ்வதிகளே!
பால்வாடியில் இருந்து ஆரம்பிக்கிறேன் ...அது தான் சரியான முறை.
"நவநீதம் என்றொரு ஆசிரியை "...இன்னும் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறார்.மிஞ்சிப் போனால் 4 வயதிருக்கும் எனக்கு.இன்னும் மறக்கவில்லை அவர் முகம்.ஒடிசலாய் கமலா காமேஷ் போலிருக்கும் அந்த டீச்சரை அங்கு அப்போது படித்து வந்த எங்கள் எல்லோருக்குமே ரொம்ம்பவே பிடிக்கும்.
அம்மா
ஆடு
இலை

...இதெல்லாம் அவர் தான் அறிமுகப் படுத்தினார் .இப்போது என் மகளுக்கு தமிழ் கற்பிக்க உட்காரும் போதெல்லாம் தவறாமல் நவநீதம் டீச்சரும் ஞாபகத்தில் நிழலாடுகிறார்.
அடுத்து "ஒன்றாம் வகுப்பு ...இங்கே கனகவல்லி டீச்சர் "...டீச்சருக்கு அநேகம் பேரை பிடிக்காது ...டீச்சரையும் எல்லா மாணவர்களுக்கும் எல்லாம் பிடிக்காது .காரணம் கனகவல்லி டீச்சர் எப்போதுமே சரியாக வீட்டுப் பாடம் செய்யாதவர்களை வயிற்றைப் பிடித்துக் கொண்டு கிள்ளுவார். வலிக்கும்.அந்த வலி தான் அவர்களை எப்போதும் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்ள உதவுகிறது.
என்றாலும் இப்போதெல்லாம் டீச்சரை எங்கேனும் காண நேர்ந்தால் முன்பு போல கிள்ளுவாரோ என்று சற்று ஓரம் ஒதுங்கியே மரியாக்தை நிமித்தம் "நல்லா இருக்கீங்களா டீச்சர்?!" என்று கேட்டு விட்டால் போதும் டீச்சர் கண் கலங்கி விடுவார். அப்போது பிடிக்காத டீச்சர் இப்போது எல்லோருக்கும் பிடித்தவராகி விட்டார்.வயோதிகத்தில் அவரைப் பார்க்க நெஞ்சில் எதோ கலக்கம் நிழலாடவே செய்கிறது(பின்னே நமக்கும் வயதாவதை டீச்சரின் மரியாதை பன்மை உணர்த்துவதைஎப்படி விளக்க?)
இரண்டாம் வகுப்பில் பாஞ்சாலி டீச்சர் ...சுருள்...சுருளான கேசம்...குவைத் சேலை என்று அப்போது ஒரு சேலை ரகம் படு பிரபலம் ...டீச்சரின் தம்பியோ ,அண்ணனோ அப்போது குவைத்தில் இருந்தார்கள் போல?! டீச்சர் விதம் விதமாய் கலர்..கலராய் பூக்களும் கோடுகளும் விரவிய அந்தச் சேலைகளைப் படு பாந்தமாக உடுத்திக் கொண்டு வருவார்.அதோடு கண்டிப்பான டீச்சரும் கூட .அவரது சின்சியாரிட்டியைப் பார்த்து இப்போது கூட வியப்பு வரும்.ரொம்பவும் பெர்பெக்சன் அவர் அவரது பணியில்.திட்டுவதோ ...கில்லுவதோ அன்றி ஒரே உருட்டுப் பார்வையில் எங்கள் எல்லோரையுமே சமாளிக்கும் கலையை அவர் எங்கு கற்றிருப்பாரோ அப்போது ஆச்சரியப் பட்டிருக்கிறோம்.அவரிடம் பயின்ற ஓராண்டு முழுக்கவே நாங்கள் வீட்டுப் பாடத்தை தவற விட்டதே இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவரது திறமையை . இரண்டாம் வகுப்பில் இரண்டு செக்சன்கள் இருந்ததால் அவரது வகுப்பில் பயில நீ...நான் என்று போட்டி கூட உண்டு அப்போது.
மூன்றாம் வகுப்பில் ...அம்மாவின் பணி மாறுதல் காரணமாக வேறு ஒரு ஊரில் ஒரு கிருஸ்தவ நடுநிலைப் பள்ளியில் படித்தேன்.அங்கே எனக்கு மூன்றாம் வகுப்பு எடுத்தவர் எஸ்தர் ராணி டீச்சர் ...முக்கால் வருடம் மட்டுமே அங்கு படித்ததால் பள்ளியின் அட்மாஸ்பியர் பழகவே எனக்கு முக்கால் வருடத்தில் பாதி வருடம் ஓடி விட..மிஞ்சியத்தில் அந்த வருடம் எனக்கு ஞாபகம் இருப்பது ,எஸ்தர் டீச்சர் எப்போதும் தவறாது வலது கையில் அணியும் சிவப்பு நிற பிளாஸ்டிக் மோதிரம் தான்.அதன் முகப்பில்"அன்னை மேரியின் படம் இருக்கும்.,குழந்தை ஏசுவைக் காட்டிக் கொண்டு) இந்த மோதிரம் வாங்கி டீச்சர் போலவே வலது கையில் அணிந்து கொண்டு கரும் பலகையில் எழுதுவதாக நாங்கள் அப்போது பாவனை செய்ததெல்லாம் இன்றைக்கு இனிக்கும் நினைவுகள் .
நான்காம் வகுப்பில் ...கிருஷ்ண வேணி டீச்சர்
ஐந்தாம் வகுப்பில் ....சரோஜினி டீச்சர்
இவர்கள் இருவருமே ரொம்ப ஒற்றுமையான டீச்சர்கள் ...பாடம் எடுத்த நேரம் போக மீதி இடைவேளை நேரங்களில் எல்லாம் அவரவர் வாங்கிய புது சேலைகள் ...நகைகள்...பள்ளியில் மாற்ற டீச்சர்களைப் பற்றிய பொது விஷயங்கள்(!!!) இப்படி எதையேனும் பேசிக் கொண்டிருப்பார்கள் ...அவ்வப்போது ஆபிஸ் ரூமில் இருந்து ஜில்லென்று மண் பானைத் தண்ணீர் சொம்பில் நிரப்பி வர எங்கள் பக்கம் திரும்புவார்கள். "டீச்சர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து தர...எங்களுக்குள் நீ...நான் என்று ஓட்டப் பந்தயமே நடக்கும்!" அப்போது அதிலொரு சுவாரஷ்யம் இருக்கத்தான் செய்தது?! இப்போதும்" சோழர் காலம் இந்தியாவின் பொற்காலம்" என்று எங்கேனும் காதில் கேட்க நேர்ந்தால் எனக்கு சரோஜினி டீச்சர் ஞாபகம் வரும். "நான்கு திசைகள் பாடம் கேட்க நேரும் போது கிருஷ்ணவேணி டீச்சர் நிழலாடுவார் .அதென்னவோ அவர்களைப் பற்றி நினைத்துக் கொள்ள எத்தனையோ சம்பவங்கள் இருந்த போதிலும் இப்படிச் சில குறியீடுகள் தானாகவே அமைந்து விடுகின்றன அதன்பாட்டில் .
ஆறிலிருந்து எட்டுவகுப்பு வரையிலும் சார்களே கோலோச்சினர் ...நோ டீச்சர்ஸ் அந்த காலகட்டங்களில்.
மறுபடியும் ஒன்பதாம் வகுப்பில் "சந்திர பாய் டீச்சர் " என் கல்விக் காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியை என்றால் அது இவர் தான் .அதென்னவோ டீச்சருக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்...நான் எப்போதுமே முதல் மூண்டு ரேங்க் மட்டுமே வாங்குவேன் என்று நம்பிய அப்பாவி டீச்சர் அவர் !நான் அவரிடம் பயிலும் போது டீச்சர் நடுத்தர வர்க்கத்தில் இருந்தார்...அவருக்கு மூன்று மகன்கள் ...ஒரே ஒரு செல்ல மகள்...டீச்சர் பல சமயங்களில் தன் மகளை அழைக்கும் செல்லப் பெயரில் என்னையும் எதோ நினைவில் அழைத்து விட்டு பிறகு ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்ப்பார் ...எனகென்னவோ அப்போது அந்தச் சிரிப்பை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல இருக்கும்.
"பத்தாம் வகுப்பு ...அனுராதா டீச்சர் "...இவர் அடிப்படையில் கணித ஆசிரியை ...எனக்கோ கணக்கு பெரும் பிணக்கு ...அதனால் பத்தாம் வகுப்பில் காலாண்டுத் தேர்வுக்கு முந்தைய காலம் வரை டீச்சரின் வெறுக்கப் படும் மாணவிகள் லிஸ்டில் நான் இருந்திருக்கக் கூடும்...ஆனாள் எப்படியோ காலாண்டில் டியுசன் எல்லாம் வைத்துப் படித்து கணிதத்தில் 95 மார்க் எடுத்து கொஞ்சமாக டீச்சரின் அன்பைப் பெற்றாயிற்று ...ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்தது ...டீச்சரின் அபிமானம் அல்ல ...கணிதப் பாடம்!
"பதினோராம் வகுப்பு...கலாமணி டீச்சர்" இவர் என் உறவுக்காரர் ...ஆனாலும் டீச்சர் அதை எல்லாம் பள்ளியில் பார்ப்பதே இல்லை. இவரது தனிச் சிறப்பு "கரும் பலகையில் எழுத ஆரம்பித்து விட்டார் என்றால் அவரது வகுப்பு (இவர் வேதியியல் பாடம் எடுப்பார்) முடியும் வரை எங்கள் பக்கம் திரும்பவே மாட்டார். அப்படி என்ன விரதமோ?! என்ன தான் உறவென்றாலும் கேட்கத் துணிந்ததில்லை .நிறைய தேர்வு டிப்ஸ் தருவார் .அழகான தோற்றம் இருந்தாலும் பெரும்பாலும் கைத்தறி சேலைகள் அணிவதை விரும்புவார். நகைகள் அணிவதிலோ...நிறைய பூக்கள் சூடிக் கொள்வதிலோ கலாமணி டீச்சருக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை நாங்கள் அறிய ...புத்தகமும் கையுமாகவே இருப்பார்.சக டீச்சர்களிடமும் அளவான "நறுக்" பேச்சு தான்.இவர் ஓர் அபூர்வப் பிறவியென்று தோன்றும் எங்களுக்கு.
"பன்னிரெண்டாம் வகுப்பு ...பாண்டியம்மாள் டீச்சர் " இவரை இப்போதும் கூட எங்காவது சந்திக்க நேரும். மிக தோழமையான டீச்சர் .எனக்கு கணித பாடம் எடுத்தார் 12 ஆம் வகுப்பில் ...டீச்சர் எங்கள் வீட்டு மாடியில் குடியிருந்த காரணத்தால் எப்போது வேண்டுமானாலும் டவுட் கேட்கலாம் நான். சுணங்காமல் ...முகம் கோணாமல் எனக்கு கணித சூத்திரங்களைப் புரிய வைப்பார்.என் அம்மாவும் டீச்சரும் நல்ல தோழிகள் என்பதும் ஒரு காரணம். டீச்சரின் ஐந்து வயது (அப்போது...இப்போது அந்த சின்னப் பெண் பள்ளி இறுதி வகுப்பு )மகள் எந்நேரமும் எங்கள் வீட்டில் தான் இருப்பாள் .
அடுத்து கல்லூரிக் காலம் ...
இங்கு எத்தனையோ ஆசிரியைகள் ...
யாரை சொல்வது...யாரை மறக்க இயலும்?
எங்கள் துறை தலைவரான "ஸ்ரீ லதா மேடம்...ஆன்சிலரி கெமிஸ்ட்ரி பாடம் எடுத்த "ஜெய சித்ரா மேடம்...தமிழ் பாடம் கற்பித்த "அருளமுதம் மேடம் ...சங்கீதா மேடம் ...ஆங்கில இலக்கியம் கற்பித்த " அருள் தெரேசா மேடம்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ....!ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்பு மிக்கவர்கள். "ஸ்ரீ லதா மேடம் கண்டிப்பானவர்கள் என்றால் ...ஜெய சித்ரா மேடம் ரொம்ப பிரெண்ட்லி ...அருளமுதம் மேடம் ..."கல்சுரல்ஸ் " போவதென்றால் எங்களுக்கு அருளமுதம் மேடம் தான் வர வேண்டும் என்று ஒரே போட்டா போட்டியாக இருக்கும்."அருள் தெரேசா மேடம் ரொம்ப சாப்ட் ..இப்படி இவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம் .
மகளிர் தினம் என்ற ஒரு தினம் வந்தது நல்லதைப் போயிற்று இவர்களை எல்லாம் மீண்டுமொருமுறை நினைத்துப் பார்க்க...
தேங்க்ஸ் டு மகளிர் தினம் .

Monday, March 2, 2009

"யாமம்" ஓர் அர்த்த ஜாமப் பார்வையில் ...;

" யாமம்"ஓர் அர்த்தஜாமப் பார்வையில் ...?!

இந்தியாவில் மிளகு வாங்கி விற்றுக் கொண்டிருந்த டச்சுக் காரர்கள் அதன் விலையை கன்னா பின்னாவென்று உயர்த்தி பதுக்கி வைத்து விற்க முனையவே வந்தது ரோஷம் இங்லாந்துக்காரர்களுக்கு மள மளவென்று ராணி எலிசபெத்தை கொடுக்க வேண்டிய அன்பளிப்புகளைக் கொடுத்து சரிக் கட்டி நன்னம்பிக்கை முனை தாண்டி கடல் பயணம் மேற்கொண்டு வியாபாரம் செய்ய அனுமதி ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு ...புறப்பட்டே விட்டார்கள் பலபல பேராசைக் கனவுகளுடன் ...!

முதல் தடவை கப்பல் கடலில் மூழ்கியது ...

வியாபாரிகள் கடலில் சிதறி ஆளுக்கொரு திசையில் காணாமல் போனார்கள் ...

இரண்டாம் முறை வில்லியம் ஹாக்கின்ஸ் தலைமையில் புறப்பட்ட கப்பல் சூரத்தில் வெற்றிகரமாக நங்கூரமிட்டதாம் . எல்லாம் இந்த மிளகால் வந்த வினை?!வெள்ளையர்களின் பெரும்பான்மை உணவான இறைச்சியை வெறும் உப்பிட்டு மட்டும் உண்பதென்பது நினைக்கச் சகிக்காத விஷயம்.

காரம் அதிலும் மிளகின் காட்டமான காரம் அத்தனை மாயம் செய்கிறது சாப்பாட்டு விசயத்தில்.

அடுத்த படியாக வெள்ளையரின் இந்திய வருகையை ஆதரித்த பெருமை பேரரசர் ஜகாங்கீரை சேரும் ...டெல்லி பாதுஷா ...ஆலம்கீர் இன்னும் என்னென்னவோ பட்டங்கள் .அதில் ஒரு பட்டம் வெள்ளை ஆதரவாளர் .

ஜகாங்கீரின் ஆங்கிலேய மோகத்தைப் பற்றி அறிய விரும்புவோர் சிரமமம் பாராமல் மதன் எழுதிய"வந்தார்கள் வென்றார்களை " மற்றும் ஒருமுறை புரட்டிப் பார்க்கலாம் .

சற்றேறக்குறைய வரலாற்றை ஒட்டிய நிகழ்வுகளைக் கொண்ட புதினம் என்பதால் லாம்டனின் நில அளவைப் பணியில் இந்த நாவலின் ஹீரோ ஹீரோ என்று சொல்வதைக் காட்டிலும் "பத்ரகிரியை "வேறு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை?! ஏனெனில் கதை யில் அவனது பங்கு முக்கியமானதே.

பத்ரகிரி மட்டுமல்ல அவனைப் போலவே

அப்துல் கரீம் ("யாமம்" என்ற பெயரிடப் பட்ட அத்தர் வியாபாரி )
சதாசிவப் பண்டாரம் (இவரை விடவும் இவரை தன் போக்கில் அழைத்துச் செல்லும் "நீலகண்டம் "எனும் நாய் கூட ஹீரோ தான் இங்கு )

திருச் சிற்றம்பலம் (பத்ரகிரியின் தம்பி )

கிருஷ்ணப்ப கரையாளர் (மேல்மலையின் உரிமையாளர்...தேயிலை ஏற்றுமதிக்கு தனக்கே தெரியாமல் காரணமாகி விட்டவர் என்று நாவல் கூறுகிறது)

இவர்களைத் தவிர பத்ரகிரியின் மனைவி "விஷாலா...எனும் விஷாலாட்சி "

திருச் சிற்றம்பலத்தின் மனைவி "தையல் எனும் தையல் நாயகி "
அப்துல் கரீமின் மூன்று மனைவிகள்


முதல் மனைவி ரஹ்மானியா


இரண்டாம் மனைவி வகீதா


மூன்றாம் மனைவியான பதின் மூன்றே வயதான "சுரையா"


இவர்களில் வகீதாவின் அன்பைப் பெற்ற சந்தீபா எனும் ஏழைச் சிறுவன் .


கிருஷ்ணப்பக் கரையாளரின் காதலியாக வரும் நடுத்தர வயது ஆங்கிலோ இந்தியப் பெண் எலிசபெத் (சட்டைகாரி - இப்படித்தான் சொல்வார்களாம் ஆங்கிலோ இந்தியப் பெண்களை அந்நாளில்)


சதாசிவப் பண்டாரத்தின் அம்மா ...பண்டாரத்தின் நாயுடனான பிரயாணத்தில் இடர்படும் ஒரு பெண் ...இவளுடன் கூடி ஒரு குழந்தை பெரும் தருணத்தில் பண்டாரத்தை நாய் மறுபடியும் தன் போக்கில் இழுத்துக் கொண்டு செல்கிறது.


திருச் சிற்றம்பலம் மேற்படிப்புக்கு லண்டன் செல்லும் பொது கப்பலில் உடன் வரும் இந்திய நண்பனாய் "சற்குணம் "


திருச் சிற்றம்பலத்தின் லண்டன் பேராசிரியர் ...இவனை மகனைப் போல நடத்தும் பேராசிரியரின் மனைவி,


பத்ரகிரி...திருச் சிற்றம்பலம் இவர்களது பாசமற்ற தந்தை ...பாசம் நிறைந்த சித்தி நங்கை ...தையலின் வினோதமான தோற்றமும் செயல்பாடுகளும் கொண்ட"நெல்லிவலை" அத்தை ; அப்துல் கரீமின் கனவில் வந்து அவரது வாழ்வின் பாதையை சில நேரங்களில் தீர்மானித்துச் செல்லும் பக்கீர் அல் முசாபர் .


நில அளவைப் பொறியாளர் லாம்டன் .


நட்சத்திரங்களை கணக்கிடும் இன்னொரு அயல் நாட்டவன் .


அவனுக்கு உதவ பணியமர்த்தப் பட்ட ஏ .எஸ் .ஐயர் .


கிருஷ்ணப்ப கரையாளரின் எஸ்டேட்டில் திருட வந்து மாட்டிக் கொண்ட ஒரு திருடன் ...அவனது உதவியாள நண்பன் ,இப்படி நாவலில் பல கதா பாத்திரங்கள் மனதில் நிற்கவே செய்கின்றன.


கதை சுருக்கம்:-


நாவலை



  1. அத்தரும் அப்துல் கரீம் மற்றும் அவரது மூன்று மனைவிகளும்

  2. பத்ரகிரியும் விஷாலாவும் அவர்களது வாழ்வில் இடைப்படும் தையலும்

  3. திருசிற்றமபலத்தின் லண்டன் வாழ்க்கையும் சற்குணத்தின் நட்பும்

  4. சதாசிவப் பண்டாரத்தின் நீலகண்டத்துடனான (நாய்) நெடும் பயணம்

  5. க்ருஷ்ணப்பக் கரையாளர் மற்றும் எலிசபெத்தின் மேல்மலை வாழ்க்கை

இப்படி ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம் .


வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கையை வெவ்வேறு விதமாக நாவல் நகர்த்திக் கொண்டு சென்றாலும் கூட கதை நிகழும் கால கட்டம் கி.பி.1600 இன் பிற்பகுதி என்றவகையில் அனைவரையும் வெள்ளையர்களின் அதிகாரம் ஒன்றிணைக்கிறது.,அதோடு கூட அப்துல் கரீம் ரோஜாக்களில் இருந்து வடித்து எடுக்கும் ஒரு வித வாசனாதி தைலமான "யாமம்" என்ற பெயரிடப் பட்ட அத்தரும் இவர்களின் வாழ்வை ஒன்றிணைத்துச் செல்கிறது.


யாமம் :


யாமம் என்பது இரவின் ஒரு பொழுதை குறிக்கும். அத்தருக்கும் யாமத்துக்கும் வெகுவான சம்பந்தம் உண்டு என்பதாலோ என்னவோ ஆசிரியர் இந்நாவலுக்கு "யாமம்" என்ற பெயர் சூட்டியமை சாலப் பொருந்துகிறது.சங்க இலக்கியங்கள் காட்டும் சிறு்பெழுதுகளில் யாமமும் ஒன்று ;


வைகறை விடியலைக் குறிப்பதைப் போல யாமம் "இரவை" குறிக்கும். இரவுப் பொழுது தம்பதிகளுக்கு இனிமை கூட்டக் கூடிய ஒரு பொழுதல்லவா? அங்ஙனமே இவ்விடத்தில் நாவலில் வரும் எல்லா கதாபாத்திரங்களுமே "யாமத்தல்" ஈர்க்கப் பட்டு அதன் அலாதியான நறுமணத்தில் மிதந்து அதனின்றும் மீட்க அல்லது மீள முடியாதவர்களாகி விடுகின்றனர்.மதரா பட்டினத்தில் வாழும் சகலரையும் அவ்வமயம் இந்த "யாமம் " எனும் அத்தர் ஆட்டிப் படைக்கிறது. இந்நின்னவர்கள் மட்டும் தான் என்று இல்லை அப்துல் கரீமின் அத்தர் கடை இருக்கும் மீர் சாஹிப் மார்க்கெட்டில் எல்லோருமே அத்தர் வாங்கிச் செல்கிறார்கள்.இதனால் அப்துல் கரீமும் அவரது மனைவிகளும் செல்வச் செழிப்பான வாழ்வை அனுபவிக்கிறார்கள்.


அப்துல் கரீம் ஒரு கடல் வணிகர் ...அவரது வாழ்வை அவரது கனவுகளில் அடிக்கடி வரும் "அல் முசாபர் எனும் பக்கீர் " பல சமயங்களில் வழி நடத்திச் செல்கிறார் . இப்படியாக முதல் மனைவி ரஹ்மானியாவுக்குப் பின் வகீதாவை மணந்த அப்துல் கரீம் அதன் பிறகு ஒரு கடல் பயணத்தில் காணாமல் போய் வெகு சிரமப் பட்டு பல ஆண்டுகளின் பின் திரும்பி வருகிறார். அப்போது அவரது கனவில் தோன்றிய பக்கீரின் சொற்படி "வாசனையின் திறவுகோல் " எனும் பெயரில் ஆற்காட்டில் ஒரு ரோஜாத் தோட்டம் அமைக்கிறார்.அங்கு மலரும் ரோஜாக்களில் இருந்தே "அத்தர் " தாயாரிக்கப் பட்டு மதரா பட்டினத்தையே தன் வயமாககுகிறது.


இத்தனை மாயாஜாலங்கள் செய்யும் அத்தரை ஒரு ஆண்மகனே வடித்து எடுக்கத் தகுதியானவன் என்று அப்துல் கரீம் நம்பியதால் அவருக்கு ஆண்குழந்தையின் மீது வெகுவாக ஆசை மேலெழுகிறது.இப்படி பேரோடும்..புகழோடும் செல்வச் செழிப்பில் திளைத்த அப்துல்கரீம் ஆண்குழந்தை வேண்டி மூன்றாவதாக "சுரையா" வைத் திருமணம் செய்து கொள்கிறார்.


ஆனாலும் விதி வலியது கடைசி வரை அவருக்கு ஆண்குழந்தையே பிறக்காமல் முதல் மனைவி ரஹ்மானியாவிற்கு மட்டும் ஒரே ஒரு பெண் குழந்தை என்ற நிலையில் அப்துல் கரீமின் மனம் அத்தர் தயாரிப்பில் இருந்து "குதிரைப் பந்தயத்தில்" திரும்பி விடுகிறது.


குதிரையின் வாலில் கட்டிய பணம் பின்னாட்களில் என்ன ஆகக் கூடுமே அது தவறாது நடந்து அப்துல் கரீமின் செல்வம் எல்லாம் கரைந்து ஒருநாளில் கரீம் எவர் கண்ணுக்கும் அகப் படாதவராகி "அந்தர் தியானமாகிறார்".


கணவரால் கைவிடப் பட்ட அந்த மூன்று அபலைப் பெண்களும் என்ன செய்வார்கள்?! பாவம் செல்வச் செழிப்போடு இருந்த காலத்தில் ஒருவருக்கொருவர் பொறாமையில் வம்பு பேசி சண்டை சச்சரவு என்றிருந்த மூவரும் இப்போது ஒரு தாய் வயிற்றில் பிறந்த பெண் மக்களாகி ஒற்றுமையுடன் வயிற்றுப் பாட்டிற்க்காக குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மீன் விற்கும் நிலைமைக்கு அவர்களது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து விடுகிறது.


கடைசியில் அப்போது மதரா பட்டினத்தில் பரவிய காலராவிற்கு ரஹ்மானியாவும் ...உதவிக்கென இருந்த ஒரே ஆண் துணையான எடுபிடிச் சிறுவன் சந்தீபாவும் பலியான பின் மற்ற இருபெண்களும் தத்தமது பிறந்தகம் நோக்கிச் செல்வதோடு அவர்களது கதை முடிகிறது .


அடுத்து பத்ரகிரியும் விஷாலாவும் அவர்களது வாழ்வில் இடைப் படும் தையலும் :-


பத்ரகிரி லாம்டனின் நில அளவைப் பணியில் ஊதியம் பெரும் ஒரு இந்திய ஊழியன் ...அவனுக்கு விஷாலா என்று ஒரு சாந்த குணம் நிரம்பிய அழகிய மனைவி ...பெயர் சொல்ல ஒரு ஆண்குழந்தை என்று அமைதியான வாழ்வு அவனுடையது.கதைப் படி மயிலை பார்த்த சாரதி கோயிலின் பின் புறத்தில் பத்ரகிரியின் வீடு .


பத்ரகிரியைப் பற்றி பேசுகையில் நாம் அவனது இளம் பிராயத்தையும் கொஞ்சம் கவனமாகப் பார்த்தால் பின்னாட்களில் அவன் தனது வாழ்வை சிக்கலாக்கிக் கொண்டதற்கு இளம் பிராயத்தில் அவனது வாழவல் அவன் சந்தித்த பெரும் துயரமே கூட காரணமாக இருந்திருக்கக் கூடுமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.


சுயநலமே உருவான ஒரு தந்தை ...அவரால் ஒரே வீட்டில் வாழ்ந்தும் புறக்கணிக்கப் பட்ட நோயுற்ற தாய் ...கூடவே கைக்குழந்தையான தம்பி திருச்சிற்றம்பலம் ...இப்படியான சூழலில் ஒரு நாள் தாயின் இறப்பின் பின் தந்தையின் உறவினர்களாலும் தந்தையாலுமே வேண்டாம் என ஒதுக்கப் பட்டு சித்தி வீட்டில் சித்தியின் கவனிப்பில் வளரும் நிலைக்குத் தள்ளப் பட்ட சோகம் நிறைந்தது பத்ரகிரிய்ன் இளம் பருவம் .


பத்ரகிரி அவனது தம்பி திருச் சிற்றமபலத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவனாகக் கதையில் காட்டப் படுகிறான் .பின் எதற்காக தம்பி மனைவியுடன் காதல் கொள்கிறான் என்பது கொஞ்சம் நெருடுகிறது.அதிலும் விஷாலா போன்ற அன்ன அனுசரணையான மனைவி இருக்கையில் பத்ரகிரி ஏன் தன் வாழ்வை தானே இடியாப்பச் சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும் என்று படிக்கும் போது புத்தி கேள்வி கேட்க தவறுவதில்லை .


அதிலும் தானே விருப்பப் பட்டு மேற்ப்படிப்புக்காக தம்பியை லண்டனுக்கு அனுப்பி விட்டு இத்தகைய செயலை பத்ரகிரி செய்யக் கடவது அத்தனை நயமாகப் படவில்லை.இதில் இவனை மட்டும் குற்றம் சொல்லி விட இயலாது. திருச் சிற்றம்பலத்தின் மனைவியான தையல் விலகிச் செல்லும் மைத்துனனிடம் சதா மையலுடன் பழகி அவனது கவனத்தைக் கலைப்பது வருத்தத்தையே தருகிறது.


பத்ரகிரி ..விஷாலா...தையல் மூவரும் சர்க்கஸ் பார்க்கச் செல்கிறார்கள் ...பாதியில் அங்கே எதோ கலவரமாகி கூட்டம் சிதறி ஓடியதில் விஷாலா கூட்டத்தில் காணாமல் போகிறாள் குழந்தையுடன் . தையல் மட்டும் பத்ரகிரியின் கைகளைப் பிடித்துக் கொண்டு காணமல் போன மனைவியைத் தேடும் சிந்தனை கூட அவனுக்குள் எழும்பா வண்ணம் இன்னும் கொஞ்ச நேரம் கடற்கரையில் நடந்து விட்டு பிறகு போகலாம் என அவனது புத்தியை பேசி மயக்கி திரிந்து போகச் செய்து நெடுநேரம் சென்று வீடு திரும்புவதாக நாவலில் ஓரிடம் வருகிறது.அதற்குப் பிந்தைய வரிகளில் "பிள்ளையைத் தொட்டிலில் இட்டு ஆட்டிக் கொண்டே விஷாலா அழுகிறாள்"படிப்பவர்களுக்கும் அவளது நிலையை எண்ணி வேதனையே மிஞ்சக் கூடும்.


லண்டன் போவதற்கு முன்பு தனியாக இருக்க சிரமம் என்று தான் திருச்சிற்றம்பலத்தை வற்புறுத்தி அவனது படிப்பு முடிந்து அவன் திரும்பி வரும் வரை தான் அவனது அண்ணியுடன் இருப்பதாக மதரா பட்டினம் வருகிறாள் தையல் .பின்பு நடந்தது என்னவோ தையல் மற்றும் பத்ரகிரியின் தகாத உறவால் அவளுக்கு பிழை உண்டாக விஷாலா கோபித்துக் கொண்டு பிறந்தகம் சென்று விட , தையலுடன் ஓயாத மன உளைச்சலுடன் தனிக் குடித்தனம் செய்யும் பத்ரகிரிக்கு அதுவும் நிலைக்கவில்லை .


பிரசவத்தின் பின் தையலின் மனநிலை பாதிப்படைந்து அவள் தான் பெற்ற பிள்ளையையே கொல்லக் கூடிய அளவில் மனச் சிதறல் அடைகிறாள். வைத்தியத்திலும் தேறாத நிலையில் பத்ரைரியால் அவளுக்குப் பிறந்த ஆண் குழந்தையும் போதிய போஷாக்கு இன்றி மரித்துப் போக சித்தம் கலங்கிப் போன பத்ரகிரி தையலை அவளது தாய் வீடானா கடையத்தில் சேர்த்து விட்டு சொல்லில் அடங்கா ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் பெற்றுக் கொண்டு சிறு பிராயத்தில் தனது நங்கை சித்தி தன்னையும் தன் தம்பியையும் வளர்த்த அதே ஊருக்கு பித்துப் பிடித்தவன் போல திரும்புகிறான்.

இதுவே பத்ரகிரியின் சிதிலபட்ட வாழ்வின் கதை ...அவன் தன் வாழ்வை மட்டும் சீரழித்துக் கொண்டானில்லை...கூடவே தான் மிகவும் நேசம் கொண்ட தன் தம்பி தன் மனைவி இப்படி எல்லோரது வாழ்வையும் சிக்கலாக்கி விடை தெரியாது நசிந்தவனானான் .

அடுத்தது சதாசிவப் பண்டாரத்தின் கதை .இந்தக் கதையில் இவர் அறிமுகம் ஆகும் போதே நீலகண்டம் எனும் நாயுடன் நடந்து கொண்டே தான் அறிமுகமாகிறார்.பண்டாரம் திருவிடை மருதூரில் இருந்து மதராபட்டினம் நோக்கி நாயுடன் நடக்கத் தொடங்குகிறார். இடையில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்கின்றன .

தன் தாய் எவ்வளவோ மனம் கசிந்து வற்புறுத்தியும் கூட தனது சன்யாச வாழ்க்கையை விட மனமில்லாமல் பற்றிக் கொண்டிருந்த சதாசிவத்தை நீலகண்டம் பலவாறு சோதிக்கிறது.நாயின் வாலைப் பற்றிக் கொண்டே போகும் சதாசிவப் பண்டாரம் தனது "பற்றற்ற தன்மையை தனக்கே மறுபடி " உறுதி செய்து கொள்ளும் வண்ணம் பல அவமானங்களைச் சகித்துக் கொள்கிறார்.

குப்பை மேட்டில் படுத்து உறங்குகிறார். குப்பையில் இட்ட கழிந்து போன மிச்ச மீதிகளை உண்டு பசியாறுகிறார்.இறுதியில் கோயிலில் உட்கார்ந்த இடத்தில் சோறு கிடைக்கும் என்ற நிம்மதியான நிலையில் தான் நாய் அவரை அலைக்கழிக்கத் தொடங்குகிறது.நாயுடனான தனது நெடும் பயணத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை சந்திக்க நெருடுகிறது ...அவளுக்கும் பண்டாரத்துக்கும் சம்சார பந்தமும் ஏற்பட்டு அவள் பிள்ளை பெரும் சமயம் பண்டாரம் அவளை நிர்க்கதியாக தவிக்க விட்டு மீண்டும் நீலகண்டத்தை தொடர்ந்தே ஆகா வேண்டிய மனநிலைக்கு வருகிறார்.

இடையிடையே மனம் கூக்குரல் இடுகிறது. "உனக்குப் பிறந்தது ஆணா...பெண்ணா ? போய்த்தான் பாரேன் ஒருமுறை !!! என்று !? பற்றை அறுத்தவர் செய்யும் காரியம் இதுவல்ல என்று பண்டாரம் நாயைத் தொடர்கிறார் செவ்வனே .இறுதியில் நாயும் பண்டாரமும் பட்டினத்தடிகள் சமாதிக்கு வந்து சேருகிறார்கள் .

பண்டாரம் திடீரென்று நாயைப் போலவே நடந்து கொள்ளத் தொடங்குகிறார். அவரது அங்க சேஸ்டைகளைக் கண்டு அங்கிருந்த மக்கள் எல்லோரும் பண்டாரத்தை பைத்தியம் என்று நினைக்கிறார்கள் .

முடிவாக அந்த சமாதியில் இருந்த ஒரு அறையில் பண்டாரம் ஜோதி வடிவாகி மறைகிறது. நாயையும் காணோம். அந்த அறையில் இருந்து "அத்தர் மணம்" கசிந்து பெருகுகிறது .இதைக் கண்டு மக்கள் பொருள் விளங்கா ஆச்சர்யம் அடைகின்றனர்.எல்லா சாதுக்களையும் போல சதாசிவப் பண்டாரத்தின் வாழ்வும் ஒரு கதையாகி முடிந்தது.

அடுத்து திருச்சிற்றம்பலத்தின் லண்டன் வாழ்க்கை :-

திருச் சிற்றம்பலம் ஒரு "கணித விற்பன்னன் " கணிதத்தில் மேலும் ஆராய்ச்சிக் கல்வி பயிலவே அவன் லண்டன் செல்கிறான் .லண்டன் செல்ல கப்பல் பயணத்தில் சற்குணம் என்றொரு நண்பன் கிடைக்கிறான் சிற்றம்பலத்திற்கு ...சற்குணம் ஆடம்பரப் பிரியனாகவும்...சிற்றம்பலம் உயர் கணிதம் கற்க செல்லும் மாணவனாகவும் கப்பலில் அறிமுகமாகிக் கொள்கிறார்கள்.பின் அவர்களது நட்பு லண்டனிலும் தொடர்கிறது.

முதலில் வாழ்க்கை தரத்தில் தாழ்ந்தவனாகக் காட்டப் படும் சிற்றம்பலம் தனது கல்வியின் மேன்மையாலும் தனது கணித அறிவாலும் இந்தியா திரும்புகையில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவனாகிறான்.ஆனால் பெரிய தனவந்தரின் மகனான சற்குணம் முதில் விளையாட்டுப் பிள்ளை போல உள்ளசங்களில் ஆர்வம் மிக்கவனாக அறியப் பட்டாலும் அவனது மணம் எப்படியோ மாறிப் போக லண்டன் வாழ் கறுப்பினப் பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுகிறான் ஒரு கட்டத்தில்.

பெண்களை போகப் பொருட்கள் என்று மட்டுமே நினைத்து சுற்றித் திரிந்த அந்த வாலிபன் புரட்சிகரமாக மாறிப் போன மாயம் கண்டு சிற்றம்பலம் வியந்து அச்சம் கொள்கிறான் .சற்குணம் லண்டன் குளிருக்கு "நீயும் ஒரு பெண்ணின் துணை தேடிக் கொள்" என சிற்றம்பலத்திடம் கூறும் ஒவ்வொரு முறையும் சிற்றம்பலம் தன் மனைவியைத் தவிர தன் யாரையும் தொட விரும்பவில்லை என்று மறுக்கிறான்.நாவலில் இவனது மனப் பக்குவத்தைக் காணும் போது தையல் நாயகி இவனுக்கு ஏற்ற மனைவி இல்லையோ ! என்ற எண்ணம் வருவது இயற்க்கை.இப்பெர்ப் பட்ட கணவனுக்கு அவள் எப்படி அவனது அண்ணனுடன் இணைந்து துரோகம் இழைக்க முடிந்தது என்பது தான் வாழ்வின் மாய முடிச்சு போல!

தனது கல்வி முடிந்து வெற்றியுடன் அவன் இந்தியா ...மதரா பட்டினம் திரும்புகையில் தான் தன் மனைவியை விட்டுச் சென்ற இடத்தில் அவள் இல்லாத நிலை கண்டு அவன் மணம் நிச்சயம் உடைந்திருக்கும் .இவன் வாழ்வில் விதி தையலின் ரூபத்தில் விளையாட்டுக் காட்டி விலகிச் சென்றது.

அடுத்து கிருஷ்ணப்பக் கரையாளர் மற்றும் எலிசபெத்தின் மேல்மலை வாழ்க்கை :-

பரம்பரை சொத்துக்களை எல்லாம் உல்லாச வாழ்வில் குடித்தும் பெண்களுக்கு செலவழித்துமே கரைக்கிறார் என்று புகார் கூறி க்ருஷ்ணப்பக் கரையாலரின் பங்காளி அவரது சொத்துக்களை எல்லாம் தானும் வாரிசு தாரர் என்ற முறையில் தனதாக்கித் தருமாறு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மனுக் கொடுக்கிறார், இதனால் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது . இதற்குள் கிருஷ்ணப்பர் மனம் மாறுகிறார்,
இதில் இடைச் செருகலாய் எலிசபெத்தின் கதை அந்தக் காலத்தில் ஆங்கிலேயப் பெண் இந்திய ஆணுடன் கலந்தால் பிறக்கும் குழந்தைகளை மறுபடி லண்டன் செல்லும் போது உடன் அழைத்துச் செல்லும் அங்கீகாரம் இல்லை. அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகள் சட்டைக்காரிகள் என்ற பெயரில் இங்கே கிருஸ்த்தவ மிசன்களில் அனாதைகளாக வளர்க்கப் பட்டு "கம்பெனி உயர் அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலைக்கு " அனுப்பப் படுவார்கள் .

அப்படி அனுபப் பட்ட இளம்பெண்களில் ஒருத்தியே எலிசபெத். அவள் தனது இளம் பருவம் முதலே தனது அழகான தோற்றத்தின் காரணமாக பாலியல் தொந்திரவுக்கு உள்ளாகி முடிவில் அதையே தனது தொழிலாக தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு தனது இளமை எல்லாம் தேய்ந்து ஓய்ந்த பின் க்ருஷ்ணப்பருக்கு அறிமுகம் ஆகிறாள்.

உடல் தேவை என்பதை மீறி இங்கு இருவருக்குமே மனத் தெளிவும் ...நிம்மதியும் தேவை ஆகி விடவே ...ஒரு கட்டத்தில் கிருஷ்ணப்பர் எலிசபெத்தை மேல்மலைக்கு அழைத்துக் கொண்டு செல்கிறார். தனது பங்காளியிடமும் தனக்கு வேறு எந்த சொத்துக்களும் வேண்டாம் மேல்மலை மட்டும் போதும் அதனால் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என சமாதானம் ஆகிறார்.

மேல்மலை எளிசபெத்துக்குச் சொந்தமாகிறது. அங்கு அவள் மூலமாக ஒரு கால கட்டத்தில் தேயிலை பயிர் அறிமுகமாகிறது.இதன் மூலம் கிடைக்கும் பெரும் தொகையில் எலிசபெத் ஒருமுறை லண்டன் செல்ல ஆசைப் படுகிறாள் .கிருஷ்ணப்பரும் "திரும்பி வந்து விட வேண்டும் " என்ற நிபந்தனையின் கீழ் சம்மதிக்கிறார். இப்படி முடிகிறது இவர்களின் கதை.

மேலே சொல்லப் பட்ட இவரது வாழ்கை சம்பவங்களை வைத்து ஒப்பிடும் போது எலிசபெத்தின் வாழ்வே கொஞ்சம் சுகப் பட்டதாக சொல்லலாம் ...

ஆரம்பத்தில் அவள் கஷ்டப் பட்டாலும் கடை நாட்களில் சிறிதே வாழ்க்கையை ரசிக்கும் சூழல் அவளுக்கும் கிருஷ்ணப்பருக்கும் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.

ஆகா மொத்தத்தில் "யாமம்" அப்துல் கரீமின் அந்தர் தியானத்தோடு கரைந்து போக மற்றேல்லோருடைய வாழ்வும் அதனை ஒட்டியே நடை போட "எலிசபெத் " மட்டுமே ஆறுதல் தருகிறாள் இந்நாவலில் .மனித வாழ்வின் விசித்திரங்களைப் பற்றி மற்றுமொருமுறை அசை போட மிகச் சிறந்த வாசிப்பனுபவம் இந்நாவல் .

கூடவே அத்தரைப் பற்றி வரும் வர்ணனைகள் ...அதன் நறுமணம்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...?!

விருப்பம் இருப்பவர் "யாமம்" வாங்கி வாசித்துப் பாருங்கள்.







புள்

விடுபட முடியா ஆழம்
உள்ளே உள்ளே ...உள்ளே
இழுக்க...இழுக்க ...
இழுபடா லாவகத்துடன்
ஊசலாடும்
தூக்கனாங்குருவி கூடாய்
செயற் பொறியில் சிக்கா
செம்பஞ்சுத் துகள்களாய்
சிற்றாறுகள் குறுக்கிடும்
நீள்
வனப் பாதையில்
கால் போன போக்கில்
நடக்க விழைகையில்
நாள்...
கோள்...
நட்சத்திரம் ...
யாவும் பிறழ்ந்து போகட்டுமா ...
என
போக்குக் காட்டியும்...
காட்டாதொரு
பின்னிலவில்
இருள் நீங்கா பெருவெளியில்
புல் தரையின்
மெது மெதுப்பை
உணர்ந்து அழும்
பாதங்களுக்கே கேட்கக் கூடும்
புள்ளினங்களின் ஆர்ப்பரிப்பு.

Friday, February 27, 2009

மழை என்னை நனைத்தது...நான் மழையில் நனைந்தேன்...!!!


மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய்
பட்டுத் தெறித்தது
எப்போது
வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரந்தெரியா வீடு
கண் மறைத்த
வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!
மலைகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட
மேகத்தின் அடிவாரத்தில்
தட்டாம் பூச்சிகளின்
வட்ட ரீங்காரம் கண்டு
கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு
அவை சுற்றிப் பறக்கும்
மட்டற்ற ஆனந்தம் தொற்றிக்கொண்டு
எல்லாம் மறந்து
நின்று கொண்டிருக்கும் போது தான்
மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய்
பட்டுத் தெறித்தது
எப்போது
வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரத் தெரியா வீடு
கண் மறைத்த வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!
மலைகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட
மேகத்தின் அடிவாரத்தில்
தட்டாம் பூச்சிகளின்
வட்ட ரீங்காரம் கண்டு
கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு
அவை சுற்றிப் பறக்கும்
மட்டற்ற ஆனந்தம் தொற்றிக்கொண்டு
எல்லாம் மறந்து
நின்று கொண்டிருக்கும் போது தான்
மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய் பட்டுத் தெறித்தது
எந்நேரம் வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரத் தெரியா வீடு
கண் மறைத்த வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!

Wednesday, February 25, 2009

நீங்க இந்தக் குழந்தைக்கு ப்ளான் பண்ணீங்களா இல்ல தற்செயலா?!


  • செவிக்கு இனிய நல்ல சங்கீதத்தைப் போல...

  • நல்ல ருசியான சாப்பாட்டைப் போல ...

  • முதலில் இருந்து முடிவு வரை சுவாரஸ்யம் சற்றும் குறையா சிறுகதையைப் போல...

  • அழகான அர்த்தமுள்ள கவிதையைப் போல...

  • அன்பான கணவன் மனைவியின் இனிமையான தாம்பத்தியத்தைப் போல...

  • அனுசரணையான பெற்றோர்களின் அனுபவம் வாய்ந்த வழிகாட்டலைப் போல ...

  • அழகான ...புத்திசாலிக் குழந்தைகள் அமையப் பெறுவதும் ஆஷிர்வதிக்கப் பட்ட ஒரு கொடுப்பினையே!

குழந்தை வளர்ப்பு என்பது ஏனோ தானோவென்று இன்றைய சூழலில் அமைந்து விட முடியாது.முதலில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கே இப்போதெல்லாம் திட்டமிட்டே ஆகவேண்டிய சூழலில் இன்றைய இளம் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்பதே நிஜம்.

மகப் பேரு மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வியே ...

"நீங்க இந்தக் குழந்தைக்காக ப்ளான் பண்ணினிங்களா ...இல்ல தற்செயலா ?"

மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கேள்வி சங்கோஜத்தைத் தரலாம்...ஆனால் சற்று யோசித்தால் அதிலுள்ள அர்த்தம் பிடிபடும் .வாழ்க்கையில் எல்லாவற்றையுமே திட்டமிட்டு நிகழ்த்துதல் என்பது அனைவருக்கும் சாத்தியமில்லாமல் போகலாம் .ஆனால் ஒரு சில காரியங்களை மட்டுமேனும் நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் இன்றைக்கு நிலவுகிறது.


  1. பொருளாதார நசிவுத் தன்மை...

  2. விலைவாசி உயர்வு ...

  3. கூட்டுக் குடும்பங்கள் நலிந்து தனிக் குடித்தனங்கள் மலிந்து விட்ட நிலை,

  4. ஒரு வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகள் என்ற நிலை மாறி இப்போதெல்லாம் பெரும்பாலும் ஒரே ஒரு குழந்தை என மாறி விட்ட சூழல் .

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு ஆராய்ந்தால் இன்றைய குழந்தைகளை சமூகத்தில் புத்திசாலிகளாக வெளிக் கொணர்வதில் பெற்றோர்களின் பங்கு மிக மிக அவசியமாகி விட்டது .கல்வி என்பது அறிவை மட்டுமே பட்டை தீட்டக் கூடும்.தனக்கான நன்மை தீமைகளை ஆராய்ந்து அறியக் கற்றுத் தருவது பெற்றவர்களின் தலையாய கடமை .


சென்ற வாரத்தில் ஒருநாள் டி.வி செய்திகளில் ..."நொய்டாவில் விவரமறியா சிறுமிகளிடம் பாலியல் கொடூரங்களை நிகழ்த்தியவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது." என்ற வரிகள் காதுகளில் விழுந்தது.வளர் இளம்பருவத்தில் குழந்தைகளைப் பெற்ற எல்லாப் பெற்றவர்களையும் மிகுந்த பயத்தில் ஆழச் செய்த ஒரு சம்பவம் (கொடூரம் என்பதே சாலப் பொருந்தும்!)அல்லவா அது?!குழந்தை வளர்ப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று சிலர் யோசிக்கலாம்.நிச்சயம் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.


சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஆய்வுச் செய்திகள் ஒன்றில் இன்னும் இருபது வருடங்களில் உலகின் பெரும்பான்மையான மக்கள் ஒரு கொடிய நோயால் பாதிக்கப் பட்டு அழிவைத் தேடிக் கொள்ளப் போகிறார்கள் .அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முயலா விட்டால் ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கும் அபாயமே " என்று கூறப் பட்டிருந்தது.அந்த நோய் ...



  • AIDS அல்ல(ACQUIRED IMMUNO DIFICIANCY ச்ய்ன்றோம்)

  • கேன்சர் அல்ல...

  • காச நோய் அல்ல

வேறென்னவாக இருக்கும் என்கிறீர்களா? சுருங்கச் சொன்னால் ;

மனச்சிதைவு நோயாம்.

அதென்ன மனச் சிதைவு நோய் ?எதனால் இந்த நோய் வரக் கூடும்?குழந்தை வளர்ப்பிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?நிறைய சம்பந்தம் இருக்கிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள் .மனச் சிதைவுக்கான ஆரம்ப விதையே குழந்தைப் பருவம் முதற்க் கொண்டு நடக்கும் சம்பவங்களின் தாக்கங்களே என்கிறார்கள் .ஏதோ பெற்றோம் ...வளர்த்தோம் என்றெல்லாம் இப்போது இருந்து விட முடியாது என்பதையும் தாண்டி பல விஷயங்கள் குழந்தை வளர்ப்பில் .

பெரிதாய் எதையேனும் சொல்லப் போவானேன்.

சென்ற வாரம் நிகழ்ந்த ஒரு சின்ன சம்பவம் ...எப்போதுமே "சுட்டி டி.வி யில் பாப்பு செட்ரிக் பார்ப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாகவே இருக்கும் ."எட்டு வயதுப் பையன் உடன் படிக்கும் எட்டு வயது மாணவியை நேசிப்பதைப் போல அந்த தொடரில் காட்டப் படுவது எனக்கு அத்தனை விருப்பமில்லை.

ஆனால் பாப்பு சென்ற வருட விடுமுறையில் பாட்டி வீட்டிற்குப் போனதிலிருந்து அங்கிருந்த மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து அந்த தொடரைப் பார்க்க ஆரம்பித்து விட்டிருந்ததால் இப்போதும் ஆர்வத்துடன் கண்டினியு செய்து கொண்டிருந்தாள்.வேண்டாம் வேறு ஏதானும் சேனல் பார் என்று மாற்றினால் அவளுக்கு கோபம் வந்தது.அதையே வை என்று அதிகாரமாக சொன்னாள்.

சில நாட்கள் பார்க் ...நண்பர்கள் வீடு என்று விளையாடப் போய்விட்டால் மறந்து விடுவாள்.ஆனால் மீண்டும் வீட்டில் இருக்கும் பொது அத்தொடரைப் பார்ப்பது நிற்கவே இல்லை.எனக்கோ சுத்தமாக விருப்பமே இல்லை .ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக சொன்னாள் பின்விளைவுகள் வேறு விதமாக இருக்குமோ என்று சங்கடமாக இருந்தது.

இது இப்படியே சில மாதங்கள் தொடர்ந்தது.நானும் ஒவ்வொரு முறையும் அவள் செட்ரிக் பார்க்கும் பொது மட்டும் அப்படி யோசித்து விட்டு பிறகு மறந்து போனவளானேன்.ரொம்பவும் வேண்டாம் ...பார்க்கவே கூடாது என்று வலியுறுத்திச் சொல்லவும் தயக்கம்.எதை நாம் வேண்டாம் என்கிறோமோ அதை தானே குழந்தைகள் பிடிவாதமாக வேண்டும் என்பார்கள்.(இது எழுதப் படாத விதி ஆயிற்றே!)

இப்படியோ போய்க் கொண்டிருந்த இந்த விஷயம் கடைசியில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அந்த தொடரில் வரும்"குட்டிப் பையன்(ஹீரோ) செட்ரிக் தன் உடன் படிக்கும் மாணவி ஜேனை நினைத்து" நான் உன்னை ரொம்பவும் நேசிக்கிறேன் ஜேன்" என்று சொல்வதாக ஒரு வசனம் வரவே ...

பாப்பு என்னிடம் "புருவங்களை ஆச்சர்யம் போல உயர்த்தி "மம்மி லவ் பண்றானாம் ...பாரேன் என்றாள். நான் திடுக்கிட்டு சட்டென்று ...கண்ணம்மா அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா என்றேன் புத்தி சொல்வதைப் போல...

பாப்பு என்னை ஒரு பார்வை பார்த்தாள்.

(அந்தப் பார்வை நான் என்னவோ அவளது குழந்தை போலவும்...அவளென்னவோ எனது அம்மா போலவும் எனக்கு உணர்த்தியது )

பிறகு பாப்பு தொடர்ந்து சொன்னாள்.

என்னம்மா நீ?

இது சும்மா டி.வி.ப்ரோக்ராம்னு எனக்கு தெரியாதா?

its only for seerial

என் கிட்ட யாராச்சும் boys அண்ட் girls இப்படி சொன்ன

" no friend dont say லைக் திஸ் ? its bad ...it is a prograam .not real ...go and sit ur place னு சொல்வேன் .என்றாள்.

கொஞ்ச நேரம் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை .

பாப்புவும் ..நானும் சேர்ந்து சிரித்துக் கொண்டோம் .

என்னை விட பாப்பு தெளிவாகவே வளர்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன் நான். குழந்தை வளர்ப்பில் அன்றொரு பாடம் கற்ற நிறைவு வந்தது.

குழந்தைகளிடம் எந்த ஒரு விசயத்திலும் ஆக்ரோசமாக எதிர்ப்புக் காட்டாமல் மென்மையாகச் சொல்லியோ அல்லது நமது கவலையை சுருக்கமாகப் புரிய வைத்தாலோ பல பிரச்சினைகள் தீரும்.

Monday, February 23, 2009

அழகான நாட்களில் இன்றொரு நாள்/


குளு குளு வென இருந்தது பாப்புவின் பள்ளிக்குள் நுழைந்ததும் ; பள்ளியில் எல்லா வகுப்பறையும் எ.சி என்று நினைத்து விட வேண்டாம்.திங்களும் அதுவுமாய் கண் பார்த்த இடமெல்லாம் வெள்ளுடை குட்டித் தேவதைகள்.
கண்ணுக்கு குளிர்ச்சியாய்...மனதிற்குள்

சிலு சிலுவென்று பனியடித்தது. ரகம் ரகமாய் பூச்சரங்களைப் போல வளைய வரும் உற்சாகம் குறையாத வண்ணத்துப் பூச்சிகள்.

"ஆப்பிள் பெண்ணே நீ தானோ ...

ஐஸ் கிரீம் கனவே நீ தானோ "

என்று பாட்டுப் பாடாத குறை தான்!

குழந்தைகள் அவர்கள் ஆண் குழந்தைகளோ...பெண் குழந்தைகளோ பாரபட்சமே இன்றி எல்லாக் குழந்தைகளும் கொள்ளை அழகு .விதம் விதமான குண்டு...குண்டு கண்களோடு ...பன் போன்ற மெத்து...மெத்தென்ற கன்னங்களோடு ,தளிர் பிஞ்சு உடலசைத்து நிற்பதுவும்...நடப்பதுவும்...பேசுவதும் கூட அத்தனை அழகு .ஓடும் போது கூட ரொம்பவும் அழகு தான் .

சிலரது குட்டித் தலைகளில் செடிகள் முளைக்க வைத்து அதில் வண்ண வண்ண பாண்டுகள் சுற்றியிருந்தனர்.செடிகளைச் வளைத்து பூக்களைச் சுற்ற இப்போதெல்லாம் அனுமதி இல்லையாம்.

எடுத்து வாயில் போட்டு மென்று விடக் கூடாது என்றோ என்னவோ?! இந்த அழகான சுட்டி ராட்சசிகள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்று நம்புவதற்கில்லை!!!

பளீர் வெண்மையில் காலையில் அணிவித்த வெள்ளை ஷூக்கள் எல்லாம் மதிய நேரத்தில் நல்ல சந்தன அழுக்காய் மாறி கண்ணை உறுத்தாமல் சிரித்துக் குசலம் விசாரித்தன.

கை நகம்...கால் நகங்களில் இருந்த அச்சு ...பிச்சு அழுக்குகளில் எல்லாம் கவனம் களைய விடாதீர்கள் என்று குறும்பாய் எச்சரித்துக் கொண்டு எல்லா முகங்களிலும் மல்லிகைப் பூஞ்சிரிப்பு பரவி விரவி நம்மையும் நிரவித் தழுவியது.

சிரிப்பு கூட ஒரு தொற்று வியாதி தான்.காலையில் வாரத்தில் முதல் நாளே கொஞ்சம் டல் அடித்துக் இருந்த நிலையில் இன்றைக்கு கடைசி மிட் டெர்ம் டெஸ்ட் முடிந்து சனி ஞாயிறு விடுமுறைக்குப் பின் "ஓபன் டே" என பாப்புவின் பள்ளிக்குப் போய் வந்ததில் மூளை சுறுசுறுப்பாகி என் உலகம் என் வரையில் சந்தோசமாகி விட்டது.

அதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நம் குழந்தையின் சந்தோசங்களைக் கூட நாம் அடையாளம் காண வேண்டுமென்றால் அதை நாம் அவர்கள் பயிலும் பள்ளியில் சென்று காண்பதே நலம் .

காண்பதே நலம் .

காண்பதே நலம் .(சும்மா ஒரு எக்கோ தான் !!!)

Thursday, February 19, 2009

ஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் (10) பத்துக் கேள்விகள்(!!!)

ஒரு சுட்டிக் குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள்...
  1. டெய்லி எதுக்கு மூணு வேலையும் சாப்பாடு ஊட்டி விடறேன்...சாப்பாடு ஊட்டி விடறேன்னு என்னைத் தொல்லை பண்ற? பசிச்சா நான் சாப்பிட மாட்டேனா?
  2. ஐஸ் கிரீம் சாப்பிட்ட சளி பிடிக்கும் வேணாம்...வேணாம்னு சொல்றயே ? சளி பிடிக்காம குழந்தைக்கு ஐஸ் கிரீம் எப்படி ஊட்டலாம்னு நீ ஏன் ஒரு வாட்டி கூட யோசிக்க மாட்டேன்ற உன் குழந்தைக்காக?
  3. பூதம் வருது ...பூச்சாண்டி வருது...கோணிக்காரன் வரான்னு சொல்லி எனக்கு விவரம் தெரியுமுன்னா இருந்து பயமுறுத்தறியே இன்னைக்கு வரை ஒருநாளும் அவங்களைக் காணோமே!!!எப்போ தான் பூதமும்...பூச்சாண்டியும்...கோணிக்காரனும் வருவாங்க?
  4. ஏன் எப்போ பார்த்தாலும் சன் டி.வி ...கே.டி.வி...கலைஞர் டி.வி ..விஜய் டி.வி நு பார்த்து கேட்டுப் போற ...ஏன் என்கூட சேர்ந்து சுட்டி டி.வி பார்த்து அறிவை வளர்க்க ட்ரை பண்ணக் கூடாது?
  5. உனக்கு எவ்வளவோ சொந்தக்காரங்க ..பிரெண்ட்ஸ்னு இருக்கலாம் ...இருந்துட்டுப் போகட்டும் ...ஏன் அவங்க வரும்போதெல்லாம் "பா...பா..ப்ளாக்ஷிப் சொல்லு, "ஜானி...ஜானி எஸ் பாப்பா" சொல்லுன்னு உன் பாப்பாவான என் உயிரை எடுக்கற?
  6. உனக்குத் தூக்கம் வரும் போதெல்லாம் லீவு நாள்ல கூட என்னையும் தூங்கு...தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே இது எப்படி நியாயமாகும்?
  7. அது ஏன் நைட் தூங்கி மார்னிங் எழுந்துக்கச் சொல்லி தினம் என்னை படுத்தற? மார்னிங் தூங்கி நைட் எழுந்தா சாமி வந்து கண்ணைக் குத்துமா என்ன?
  8. எனக்கு எதெல்லாம் சாப்பிடப் பிடிக்கலையோ அதெல்லாம் உலகத்துலேயே ரொம்ப சத்துள்ள உணவுனும் ...எதெல்லாம் சாப்பிட ரொம்ப பிடிக்குமோ அதெல்லாம் சாப்பிடவே கூடாத உணவுண்ணும் அடம் பிடிக்கிறயே அது ஏன்?
  9. தண்ணில விளையாடாத....மண்ணுல விளையாடாத...காத்தடிக்குது ஓடாத தூசு விழும் கண்ல,மழைல விளையாடாத...இதெல்லாம் இல்லாத ஒரு இடம் எங்க இருக்கு ?அதை ஏன் இன்னும் கண்டுபிடிக்கலை நீ ?
  10. ஒரு பங்சனுக்கு கிளம்பினா அந்த டிரஸ் போடு...இந்த டிரஸ் போடுன்னு ட்ரில் வாங்கற ...ஒரு நாளாச்சும் எனக்குப் பிடிச்ச டிரஸ் போட்டுட்டு போக விடறியா நீ? ஏன்மா ...ஏன்...சொல்லும்மா ...ஏன்...ஏன்...ஏன் ???