Monday, April 13, 2009
வாழ்க்கையே லாஜிக் இல்லா மேஜிக் தானோ?!
Wednesday, April 8, 2009
பாப்பு...தொட்டில் பாட்டு...மற்றும் குத்துவிளக்கில் காய்ச்சிய பால் !!!
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாரடி
தையலே கேளடி ...உந்தன் பையனைப் போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை ....
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்தில் உதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாரடி ;
பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயினில் முத்தமிட்டான்டியசோதா ...
பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயினில் முத்தமிட்டான்டிபாலனல்லடி
உன் மகன் ஜாலமாகச் செய்வதெல்லாம் நாலு பேர்கள் கேட்க சொன்னால் நாணம் மிக ஆகுதடி ...
தாயே யசோதா...
காலிலே சிலம்பு கொஞ்சவே கைவளை குலுங்கிட
முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
வானவரெல்லாம் புகழ மானிடரெல்லாம் மகிழ
நீலவண்ணக் கண்ணனவன் நர்த்தனம் ஆடினான் .
தாயே யசோதா...
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்தில் உதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாரடி ;
தையலே கேளடி ...உந்தன் பையனைப் போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை ....
பாடலின் வரிகளை நான் சரியாக வரிசைப் படுத்தி இருக்கிறேனா என்ன என்று தெரியவில்லை,எனக்குத் தெரிந்த வரையில் எழுதியாகி விட்டது ..பலர் இந்தப் பாடலைக் கேட்டிருக்கக் கூடும் .அருமையான பாடல்.
இந்தப் பாடலை எஸ்.பி.பியின் தேன் குரலில் முதன் முதலில் கேட்கும் போதே பரம ஆனந்தமாக இருக்கும் ,பிடித்துப் போனதால் அடிக்கடி இதே பாடலை கேட்டதில் பாடல் மனதில் பதிய பாப்பு பிறந்ததும் அவளைத் தூங்க வைக்க தொட்டில் பாட்டாக இதையே பாடுவேன்.
வீட்டில் அப்பாவிலிருந்து ....தம்பி ...அப்போது அம்மா வீட்டில் இருந்ததால் வார இறுதி விடுமுறையில் எங்களைக் காண வரும் தேவ் ...என் அம்மா எல்லோருமே சிரிப்பார்கள்,ஏனென்றால் பாப்புவை தொட்டிலில் போட்டு எத்தனை தொட்டில் பாட்டுக்கள் (தாலாட்டு ) பாடினாலும் அவள் கண்களை மூடி தூங்குவதற்கான எந்த முகாந்திரமும் தெரியாது.
என் இரு பாட்டிகளும் பழைய தொட்டில் பாட்டுக்கள் நீள...நீளமாக நிறைய பாடுவார்கள் .கிட்டத் தட்ட அரைமணி முதல் ஒருமணி நேரம் வரை பெரிய பெரிய பாட்டுக்கள் எல்லாம் கூட அருமையாகப் பாடுவார்கள் ...பாப்பு அதை எல்லாம் கர்ம சிரத்தையாகக் கேட்டுக் கொண்டிருப்பாள் கால் கட்டை விரலை வாயிலிட்டுக் கொண்டோ அல்லது கை கட்டை விரலை சப்பிக் கொண்டோ ,
ஆனால் கண்களில் மட்டும் பல்ப் எரிவதைப் போல அந்தப் பாட்டுக்களைக் கேட்ட பின் தான் அதிக வெளிச்சம் தெரியும் .அவள் தூங்கப் போவதற்கான அறிகுறியே தெரியாது.;கடைசியில் அவளைத் தூங்க வைக்கப் பாடிப் பாடி களைத்துப் போய் பாட்டிகள் தாங்கள் பாடிய பாட்டுக்கு மயங்கி தாங்களே தூங்கி விடும் வழக்கமாகி விட !!!
இதேதடா துன்பம் என்று அதற்குப் பின் தான் இந்தப் பாடலை அந்தக் கண்ணனே காதில் விழவைத்தான் போல என்றெண்ணிக் கொண்டோம் , இப்போது பாட்டிகளுக்கு தாலாட்டுப் பாடும் தினப் படி ஹோம் வொர்க்கில் இருந்து சற்றே விடுதலை, இந்தப் பாடலை வேறு யார் பாடினாலும் பாப்பு தூங்க மாட்டாள் ...அவளுக்கு அவளது அம்மா தான் இந்தப் பாடலை பாட வேண்டும் !!!
கற்பனை செய்து பாருங்கள் தினமும் ஆறு மாதக் கைக்குழந்தை ஒன்று பகலெல்லாம் தூங்காமல் ...இரவுகளிலும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை விழித்துக் கொண்டு எந்நேரமும் விளையாடிக் கொண்டே இருந்தால் அந்த வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது ...கூடவே பெரியவர்கள் (ஐ மீன் தொட்டில் பாட்டுப் பாடி களைத்துப் போன பாட்டிகள் அன் கோ ?) எப்படித் தான் தூங்குவதாம் ?
வந்தது விடியல்!? பாப்பு இந்தப் பாடலைக் கேட்டதும் ஆழ்ந்து தூங்க ஆரம்பித்து விடுவாள் ...எல்லாம் ஒரு இரண்டு மணி நேரம் மட்டுமே...பிறகு மறுபடி ...ம்மா ... ங்கா...ஞ்சா...சத்தம் ஆரம்பிக்கும்...மறுபடி தொட்டில் பாட்டு தான் ...ஆக மொத்தம் எத்தனை பேர் பாடினாலும் கடைசியில் இந்தப் பாடல் பாடினால் மட்டுமே பாப்பு தூங்குவாள்.
இதில் ஒரு ட்ரிக் வேறு வைத்திருந்தாள் பாப்பு ...முதலிலேயே இந்தப் பாடலை பாடி விட்டால் பாப்பு உடனே தூங்கி விடுவாள் என்று முதலில் இந்தப் பாடலை பாடினோம் என்று வையுங்கள் ஒரு பிரயோஜனமும் இல்லை ,பாப்பு கிருஷ்ணா பரமாத்மா போல தொட்டில் நிறைக்க சிரித்துக் கொண்டே தான் இருப்பாள் யார் தொட்டிலை ஆட்டுகிறோமோ அவர்களது முகத்தைப் பார்த்துக் கொண்டு தெய்வீகச் சிரிப்பை சிந்திக் கொண்டு .
சும்மா இரண்டு பாடல்களை முதலில் பாடி முடித்து விட வேண்டும்...கடைசியில் மூன்றாவதாக இந்தக் கண்ணன் பாட்டு பாடினால் ஒரு இரண்டு மணி நேரத்திற்கு நாம் ஓய்வெடுத்துக் கொள்வதற்கு உத்தரவாதம் உண்டு ,பாப்பு இந்தப் பாடலில் தான் தூங்குவதென அப்போதே ஏதேனும் சத்யப் பிரமாணம் செய்து கொண்டிருப்பாளோ என்னவோ?
அதிலும் இந்தப் பாடலை அவளது அம்மாவின் இனிய குரலில் தான் (ஹா ...ஹா..ஹா...ஆறு மாதக் குழந்தைக்கு அம்மாவின் குரல் மட்டுமே இனிமையாக இருக்கக் கூடும் மற்றேல்லாருடைய குரலைக் காட்டிலும் !!!சரி தானே நான் சொல்வது?)கேட்கப் பிடிக்கும் .பாட்டு முடிவதற்குள் தூங்கி விடுவாள்.
இப்போது தெரிந்திருக்கக் கூடுமே ஏன் வீட்டில் அப்பா முதற்கொண்டு எல்லோரும் ஏன் சிரித்தார்கள் என்று ?!
கைக்குழைந்தைகளை தூங்கப் பண்ணுவது என்பதென்ன சாமான்ய காரியமா ? அந்தக் காலத்தில் எல்லாம் குறைந்த பட்சம் ஐந்து அல்லது ஆறு குழந்தைகள் தலா அது அம்மா ...அது அப்பாவிற்கு ! இப்போது இந்த ஒன்றை சமாளிக்கவே புதுசாகக் கற்க வேண்டி இருக்கிறது பல விசயங்களை.
என் அப்பாவின் அத்தைப் பாட்டி ஒருவர் அவருக்கு ஐந்து குழந்தைகள் எல்லாம் அடுத்தடுத்து பிறந்து விட்டதால் அந்த வீட்டில் நண்டும் சிண்டுமாக எப்போதும் பிள்ளைகளின் குரல் பசிகோ இல்லை தூக்கதிற்கோ அழுவது கேட்டுக் கொண்டே இருக்குமாம் . பாட்டிக்கு ஒத்தாசைக்கு ஆள் இருக்க மாட்டார்களாம் அப்போது அவர்களுக்கு நிலம் நீச்சு ஏகப்பட்டது உண்டு வீட்டு ஆட்களும் வயலுக்குப் போய்விடுவார்கள்.இவர் ஒருவரே கை குழைந்தை முதற்கொண்டு ஐந்து பிள்ளைகளையும் வீட்டில் சமாளிக்க வேண்டும் .
அந்தக் காலம் மட்டும் இல்லை இன்றும் கூட குழந்தைகள் வளர்ப்பில் அது நிலை என்னவென்றால் ...பசிக்கு அழும் குழந்தைகள் அவர்களுக்கென்று பால் கலந்து எடுத்து வருவதற்குள் குய்யோ முய்யோ என்று கத்தித் தீர்த்து விடுவார்கள்.கண்களில் ஜலம் கொட்டும் ,இது எல்லோருக்கும் கிடைத்திருக்கக் கூடிய அனுபவம் தான் .
எல்லா நேரமும் பல வேலைகளுக்கிடையில் சரியான நேரத்திற்கு பிள்ளை அழும் முன் அதன் பசியாற்றுவது என்பது சில சமயங்களில் இயலாது போகலாம்.வேறு வேலை ஏதும் செய்து கொண்டிருப்பின் மறந்தும் விடலாம்,அதற்குள் கத்தல்...கதறல் ஆரம்பித்து விடும்.
இந்தப் பாட்டி சொன்ன செய்தி என்னவென்றால் இப்போதைப் போல அப்போது கேஸ் ஸ்டவ் கிடையாதல்லவா ...ஐந்து பிள்ளைகளும் பசிக்கு அழுதால் விறகடுப்பில் பற்ற வைத்து பால் கலக்கும் வரை பொறுப்பார்களா என்ன? பெரிய குத்து விளக்கு இருக்குமாம் அவர்கள் வீட்டில் அதை ஏற்றி அதில் பாலை சூடு பண்ணி அப்போதைக்கப்போது குழந்தைகளுக்கு தருவாராம்.
இந்தச் செய்தி எனக்குப் புதிது ...ஆச்சர்யம் கூட !? பகிரத் தோன்றியது பதிந்து விட்டேன் . கருத்துக்களை எழுதுங்கள்.
இதற்குப் பெயரும் கவிதையென சொல்வேன்?!
விலுக் விலுக்கென துள்ளி
சள..சளவென வெந்து
தள தளவென வாசம் பரப்பி
தட்டில் விழுந்ததும்
களுக் களுக்கென
முழுங்கப் பட்டு
விசுக் விசுக்கென
மறையும்
அது என்ன?!
Tuesday, April 7, 2009
பானாக்கரம்...(ஜக்கம்மா பிரசாதம்)
நல்ல நீரில் ஊறவைத்த புளி, புளி நன்றாக ஊறியதும் நீரை வடிகட்டிப் பிரிக்க வேண்டும் ,அதனோடு சர்க்கரையோ ...வெல்லமோ சேர்த்தால் பானாக்கரம் ரெடி.
வெயிலுக்கு ஜில்லென்று இருக்கும் .இப்போது இப்படி யாரும் செய்து அருந்துவதாகாத் தெரியவில்லை.
நான் பிறந்த ஊரில் ...ஊருக்கு வெளியே ஜக்கம்மாவுக்கென்று ஒரு கோயில் உண்டு ...வருடத்திற்கு ஒருமுறை அவளுக்குத் திருவிழா வரும். ஜக்கம்மா துடியான தெய்வம் என்பார்கள் ...அவளுக்குத் துணை தெய்வம் கருப்பசாமி ...வெட்டரிவாள் ஏந்தி பக்கவாட்டில் அவரும் நிற்பார் ஜக்கம்மா சன்னதியில் .
கோயில் என்பது பெயரளவில் தான் ...அது ஒரு வெட்ட வெளி அங்கே ஒரு பீடத்தில் ஜக்கம்மா உக்கிரமாய் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். திருவிழா சமயங்களில் மேலே தென்னம் பந்தல் போட்டுக் கொள்வார்கள் ,மாற்ற நாட்களில் எல்லாம் ஜக்கம்மாவுக்கு சுற்றியுள்ள கொடிக்காய்புளி காய்ந்த முள்ளில் வேயப்பட்ட சுற்று வேலிப்படல் தான் சாஸ்வதம் .
உக்கிரத்தை தணிக்கவோ என்னவோ அவளது கோயில் பிரசாதமாக பானாக்கரமும் கூடவே வெல்லமிட்ட பச்சரிசியும் தான் தருவார்கள். பச்சரிசியுடன் பொடியாய் நறுக்கிய தேங்காய் துண்டுகளும் உண்டு. அது ஒரு வகை அலாதி சுவைதான் .
பானாக்கரம் பற்றி பகிர்ந்து கொள்ளத் தோன்றியது ...பதிவாக்கி விட்டேன் .
Monday, April 6, 2009
ஈசல் சாப்பிட்டு இருக்கிங்களா ?!
"தட்டான் தாழப் பறந்தால் மழை வரும்" என்பார்கள் ஊர்ப் பக்கத்தில் ,ஆனால் ஈசல் எப்போதும் மழை ஊற்றி முடித்த மறுநாள் காலையில் தான் வண்டல் மண் சேகரித்துக் கொட்டி வைக்கப் பட்டிருக்கும் திட்டுக்களின் மேலே கூரை போல கூட்டமாக மொய்த்துக் கொண்டிருக்கும் .
ஆர்வமிருக்கும் சில சிறுவர்...சிறுமிகள் கையேடு கொண்டு போயிருக்கும் பித்தளைத் தூக்குகளிலோ அல்லது எவர்சில்வர் தூக்குகளிலோ அந்த ஈசல்களைப் ஓடி ஓடி பிடித்து அடைத்து வைத்துக் கொள்வார்கள் .உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் ஈசல்களின் வாழ்நாள் காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே !
மழை பெய்த மறுநாள் காலையில் கண்களில் படும் ஈசல்கள் அன்றைய தினமே வெயில் ஏற ஏற ஆற்று மணல் ...அல்லது களத்து மணல் மேடு போன்ற இடங்களில் வெயிலில் சுருண்டு விழுந்து கொஞ்ச நேரத்தில் உயிரை விட்டு விடும். அந்த ஈசலகளையும் விட்டு வைக்க மாட்டார்கள் சிலர் .
அதென்ன டேஸ்ட்டோ ?! இப்போது யோசித்தால் ஒன்றும் புரியவில்லை! என் தாத்தாவின் வத்தல் களத்தில் சோடை வத்தல் பொறுக்கி நல்ல வத்தல்களை மூட்டை கட்டி கொடுத்து விட்டுப் போக பக்கத்து ஊரிலிருந்து வரும் தினக் கூலிகளில் சரசக்கா இந்த ஈசல்களை மகா ஆசையோடு பாலீதீன் பைகளில் சேகரித்து வைத்து நன்றாக வெயில் ஏறியதும் களத்து சுடுமணலில் காய வைப்பார் .
ஈசல்கள் மொரு மொறுவென்று காய்ந்ததும் அங்கேயே கற்களை வைத்து அடுப்பு மூட்டி பொரிகடலை ...காய்ந்த வத்தல் கொஞ்சம் உப்பு கூட அந்த ஈசல் என்று கலந்து போட்டு வறுத்து உண்பார். வேடிக்கை பார்க்கும் எனக்கும் தருவார். வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி வரும் எனக்கு .
இப்படி அல்லாது வெறுமே காய்ந்த ஈசல்களை உன்பவர்களையும் பார்த்திருக்கிறேன் அப்போது நான்!!! இப்போது நினைத்துப் பார்த்தால் வித்யாசமான மனிதர்கள் ...வித்யாசமான பழக்க வழக்கங்கள் என்று தோன்றினாலும் அந்த நாள் ஞாபகங்கள் என்றுமே இனிக்கவே செய்கின்றன. ஈசல்களைப் போலவே தான் அதற்குப் பின் நான் சரசக்காவையும் காண நேரவில்லை .
Sunday, April 5, 2009
மாத்திரைகளும்...மருந்தும் செய்யாத மாயாஜாலம்
பானு தினமும் என்னோடு வாக்கிங் வருவாள் மாலை 4.30 க்கு ஆரம்பிக்கும் நடை 5.30 க்கு முடியும் சாவதானமாக ஒரு 15 நிமிடங்கள் காற்றாட வாக்கிங் நடக்கும் இடத்தில் போட்டிருக்கும் கல் பெஞ்சில் உட்கார்ந்து கதை பேசி விட்டு 6 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விளக்கேற்றி விட்டு இரவு சமையல் வேலை தொடங்குவோம்.அவளது வீடு என் வீட்டு மாடி .
இன்று வாக்கிங் வரும் போது பானு சுரத்தே இல்லாமல் நடந்து கொண்டிருந்தாள் .என்னாச்சு பானு ?என்றேன் ;அம்மா ஊர்ல இருந்து ட்ரீட்மென்ட் காக இங்க வந்திருக்காங்க ரத்னா என்றாள்.எப்போ வந்தாங்க நான் பார்க்கலையே ...உங்க வீட்ல இருந்து ஒரு சத்தத்தையும் காணோமே! கெஸ்ட் வந்தா வீடே அமர்க்களப் படுமே உன் பையன் ஓடி வந்து என்கிட்டே சொல்லி இருப்பானே இந்நேரம் "என் பாட்டி தாத்தா வந்திருக்காங்க ஆண்டி னு. இன்னிக்கென்ன ஒன்னையும் காணோம்.
ஹம்.......பானு நீள மூச்செடுத்து பின் மீண்டும் அமைதியானாள்.
பானுவின் அமைதியின் பின் என்ன இருக்குமோ என்ற யோசனையுடன் அன்றைய வாக்கிங் முடிந்தது.அவளிடம் நான் ஏனோ ...ஏன் ..எதற்கு..எப்படி என்று தூண்டித் துருவ மனமின்றி கல் பெஞ்சில் உட்கார்ந்தோம் இருவரும்.பானுவின் கண்கள் லேசாகக் கலங்குவதைப் போல தோன்றியது .சரி சொல்லும் விஷயம் என்றாள் அவளே சொல்லக் கூடும் ...ஆறுதலுக்கு கேட்கிறேன் பேர்வழியென்று அவளது மனக் கஷ்டத்தை தூண்டியது போல் ஆகி விடக் கூடாதே என்று அவளை ஆராயாமல் மேலே பறந்து கொண்டிருந்த காகங்களிலும் கீழே ரயில்வே ட்ராக்கில் தேமே என நின்று கொண்டிருந்த எருமை மாடுகளிலும் பார்வையை ஓட்டினேன் ,
ஐந்து நிமிடங்கள் கழிந்தபின் ...பானுவே சொன்னாள் .
வீட்ல வேலை எல்லாம் முடிச்சதும் கொஞ்சம் மேல என் வீடு வரை வந்துட்டுப் போயேன் ரத்னா என்று , மெல்ல புன்னகையுடன் "என்ன பிரச்சினை என்றாலும் மனசை ரொம்ப போட்டு அலட்டிக்காதே பானு .நான் நைட் சமையல் முடிஞ்சதும் மாடிக்கு வரேன் உன் வீட்டுக்கு "என்று முடித்தேன் .
ஏற்கனவே பிசைந்து வாய்த்த கோதுமை மாவு ஃபிரிஜ்ஜில் இருந்ததை எடுத்து எனக்கு மூன்று சப்பாத்திகள் என் கணவருக்கு நன்கு சப்பாத்திகள் என் மகளுக்கு இரண்டு சப்பாத்திகள் ஹாட் பாக்கில் தொட்டுக் கொள்ள பச்சைப் பட்டாணி குருமா ,கூட ஒரு சிறு கிண்ணத்தில் கெட்டித் தயிரில் துருவிய கேரட் கொஞ்சம் போட்டு கலந்த ராய்த்தா என்று எடுத்து உணவு மேஜையில் வைத்தேன் தண்ணீர் பாட்டிலும் எடுத்து வைத்த பின் ஹால் சோபாவில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த மகளிடம் அம்மா பானு ஆண்டி வீடு வரைக்கும் போயிட்டு வரேன் ...அப்பா வந்தா ரெண்டு பேரும் சாப்பிடுங்க எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் ..என்று தகவல் சொல்லி விட்டு மாடிப் படிகளை கடந்தேன்.
பானு வீட்டில் நிலவிய அசாத்திய அமைதி கண்டு முதல் முறையாய் எனக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது ...பானுவின் அம்மா இதற்க்கு முன்பும் சில முறைகள் இங்கே வந்திருக்கிறார்...மகள் வீட்டுக்கு விருந்தாளியாய்...!?
மங்கள கரமான பெண்மணி ...முகத்தில் அன்பு ததும்பும்...பேச்சில் கனிவு பொங்கும்...என் அம்மாவைப் போல அவர் வேலை பார்க்கும் அம்மா இல்லை ...எப்போதும் வீடு ...வீடு..வீடு தான் அவரது உலகமாம் .
குழந்தைகள் படிப்பு...கல்யாணம் என்று ஆனதும் அவர்களது பிள்ளைகள் அவர்களது வருகை ...இப்படியே தான் அவரது வாழக்கை சுழன்றது இதை அவரது பேச்சின் மூலம் நான் கிரகித்தேன் .பானுவும் சொல்லி இருக்கிறாள் அவளது அம்மாவைப் பற்றி கொஞ்சம்...
அவளது வீட்டுக்குள் நுழைந்ததும் கண்கள் அவளது அம்மாவைத் தான் தேடின ... அம்மா அப்போது சமையல் உள்ளில் இருந்தார்கள் ...கையில் ஒரு பழந்துணி கொண்டு சமையலறை ஜன்னல்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். பானு ஹால் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் முகத்தில் வெளிச்சமில்லை .
நான் அவளருகில் சென்று அமர்ந்தவாறு...
எப்போ வந்தீங்கம்மா ? சத்தமே காணோம் ...நீங்க வந்தா உங்க பேரன் இந்த அபார்ட்மென்ட் முழுக்க விளம்பரம் பண்ணுவானே ! இந்த வாட்டி அருவமே இல்லையே...ஊர்ல எல்லாரும் சௌக்கியம் தானே?
பானுவின் அம்மாவுக்கு நான் பேசியது ..என் விசாரணை எல்லாமே மிகத் தெளிவாக கேட்கும் தூரம் தான்...ஆனாள் அவரென்னவோ திரும்பியும் பார்க்கவில்லை. அவர் என்னைப் பார்க்கவே இல்லை போல என்று அருகே செல்ல எழுந்த என்னை ,பானு மெல்லக் கை அசைத்து என்னை அமைதியாக உட்காரும் படி தன்னருகில் இருத்தினால்.
ஆச்சர்யமாக இருந்தது எனக்கு.
சமையல் அரை ஜன்னலைத் துடைத்துக் கொண்டிருந்த அம்மா இப்போது கேஸ்
ஸ்டவ்வை துடைத்துக் கொண்டிருந்தாள் ...,நானும் பானுவும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம் ...நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து பாத்திரங்கள்...தட்டுக்கள்...தம்ளர்கள் ...சமையல் மேடை ....குடம்...கிரைண்டர்....மிக்சி...பிரிஜ் ...அவன் ....எல்லாம் துடைத்து முடித்து விட்டு பிறகும் அந்த அம்மா கையில் இருந்த பழந்துணியை கீழே வைத்ததாகத் தெரியவில்லை.
என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை ...சரி நான் யாரோ பக்கத்து வீட்டுப் பெண் ...ஆனாள் பானு அவரது மகள் இல்லையா? அவளிடமும் ஒன்றும் பேசிய பாடில்லை .நாங்கள் இரண்டு பேர் அங்கே உட்கார்ந்து கொண்டு அவரை வேடிக்கை பார்க்கிறோம் என்ற சுவாதீனமே இல்லை அவருக்கு.அவர் பாட்டுக்கு துடைத்துக் கொண்டே இருந்தார் ஒவ்வொன்றாய் ...
துடைத்தல் எல்லாப் பொருட்களையுமே ஒன்று விடாமல் துடைத்தல் கையில் இருக்கும் பழந்துணி அழுக்கு நிறைய சேர்ந்து விட்டதென்று அவருக்குத் தோன்றினால் அதை பரபரவென்று சோப்புப் போட்டுத் துவைத்து பிழிந்து ஜன்னல் கம்பியில் உலரப் போட்டு விட்டு இன்னொரு பழந்துணி கிழித்து மறுபடி கிடைத்ததை துடைக்க ஆரம்பித்து விடுவார்.
கிட்டத் தட்ட ஒருமணி நேரம் இதே கதை தான்.நானும் பயந்து தான் போனேன் இதைப் பார்த்து ; பானுவிடம் எதுவும் ஆறுதல் சொல்ல வகையின்றி ...அம்மாவுக்கு என்ன பானு ? என்றேன்!
அவளோ அடக்க மாட்டாமல் அழுது விடுபவளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு "அதான் தெரியலை ரத்னா ...நேத்து நைட் வந்தாங்க ...அப்போ இருந்தே இதே கதை தான்...ரஞ்சன் பாட்டிய பார்த்ததும் எப்பவும் போல ஓடிப் போய் கட்டிக்கிட்டு கொஞ்சினான். அம்மாவுக்கு அது உணரலை போல...அவன விலக்கி விட்டுட்டு அப்போ போய் கிச்சன்ல இப்படி துடைக்க ஆரம்பிச்சவங்க தான் ...நைட் தூங்கவே இல்லை ...இதே தான்...மேலே பேச முடியாமல் அவளுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது.
எனக்கு எப்போதோ ஆனந்த விகடனில் மதன் கேள்வி பதிலில் படித்திருந்த "அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ் ஆர்டர் தான் நினைவில் நெருடியது . எங்க காட்டறீங்க ? அம்மாவை என்றேன் அண்ணா வீடு திருவான்மியூர்ல இருக்கு அங்க ஒரு டாக்டர்.
அம்மாவுக்கு வயது 65 இருக்கும் போல தெரிந்தது ...அவர்கள் டாக்டரிடம் கொண்டு பொய் அம்மாவை காண்பிப்பதில் எனக்கொன்றும் மாற்றுக் கருத்து இல்லை ...வெறும் மருந்து மாயங்களில் இந்த அம்மாள் பழையபடி மங்களம் துலங்க என்னை "வாம்மா ரத்னா " எப்படி இருக்கே ? என்று முகமெல்லாம் பளிச்சிட அழைத்து விட்டால்...எனக்கும் பரம சந்தோசம் தான் .
எனக்கென்னவோ சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட என் ஒன்று விட்ட பாட்டியின் ஞாபகம் தான் மனம் முழுக்க வியாபித்தது பானுவின் அம்மாவைப் பார்த்ததில் இருந்து .
பாட்டி பெரிய பணக்காரி ...அந்தக் காலத்தில் தங்கப் பல் கட்டிக் கொண்ட சீமாட்டி. விடுமுறையில் ஊருக்குப் போனால் வாயிலிருக்கும் தங்கப் பல் டாலடிக்க "எப்போ வந்தேடி குட்டிப் பொண்ணே?! என்று
அந்தப் பாட்டிக்கு இரண்டு பெண்கள் ...கணவர் நல்ல உழைப்பாளி தான்..ஆனாலும் கொஞ்சம் சோக்குப் பேர்வழி என்று என் பாட்டியும் தாத்தாவும் பேசுகையில் கேட்டிருக்கிறேன் .ஆனாலும் பணம் நிறைய இருந்ததால் நன்றாகத் தான் இருந்தார்கள் .
கடைசியில் ஒருநாள் இதே போல அந்தப் பாட்டியை அவளது மூத்த மகளான எனது ஒன்று விட்ட அத்தையின் வீட்டுக்கு ட்ரீட்மென்ட்க்கு கூட்டி வந்தார்கள் ஒருநாள் விடிகாலையில் ,
பாட்டி இயல்பான நடவடிக்கையில் தான் தோற்றம் தந்தாள் ...ஆனால் இருந்தார் போல் இருந்து தன்னை யாரோ செய்வினை வைத்து விட்டார்கள்...செத்துப் போன தன் மாமியார் வந்து மிரட்டுகிறாள் நேரில் ஆவியாய் ...ஒரு பூனை கிட்டே போனால் கூட "ஐயோ இது என் மாமியார் தான் என்னை அவளோடு க்கூட்டிப் போக வந்து விட்டால் ...என்று அலறுவார் ...அத்தையும் ...மாமாவும் என்னென்னவோ வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தார்கள் ...பாட்டிக்கு குணமான பாடில்லை.
உச்ச கட்டமாக தங்கப் பல் டாலடிக்க சிரித்து வரவேற்கும் பாட்டி பல்லெல்லாம் கொட்டி முடி எல்லாம் சடை பிடித்து திரி ...திரியாகத் தொங்க தன் உடைகளைத் தானே கிழித்துக் கொண்டு உளரும் நிலை வந்ததும் ஒருநாள் திடீரென்று செத்துப் போனார்கள்.
ஊருக்குள் பேசிக் கொண்டார்கள் ...அந்த பாட்டிக்கு தென்னை மர மாத்திரை கொடுத்து விட்டார்கள் வீட்டினரே என்று...கருணைக் கொலையா இது என்று மனம் அதிர்ந்தது சில விநாடிகள் .
பானுவின் அம்மாவைக் கண்டதும் எனக்கு ஏன் அந்தப் பாட்டி ஞாபகம் வந்ததோ?!
ஆனால் கண்களில் நீர் தளும்பி நீழே உதிரட்டுமா என்றது ..பானுவிடம் என்ன சொல்ல என்று புரியாமல் மாடிப் படிகளைக் கடந்து கீழே என் வீட்டுக்கு வந்தேன்.
வெறும் மாத்திரைகள்..........மருந்துகள்.....டாக்டர்கள்......வேறு....வேறு......வேறு ...டாக்டர்கள்.
வெறும் மாத்திரைகள் ...மருந்துகள் ....என்ன செய்யக் கூடுமோ ?!!!
இது ஒரு பயங்கர நோயா ? என்ற சந்தேகமே என்னை அரித்துக் கொண்டிருந்தது.
மறுநாள் என் மகளுக்கு கோடை விடுமுறை விட்டார்கள் , இரண்டு வருடங்களாய் வேலைப் பளு ...மகளின் படிப்பு ...இதர திறமைகளை வளர்த்துக் கொள்ளும் படிப்புகள் ...பாட்டுக் கிளாஸ்...டான்ஸ் கிளாஸ் ...கம்பியூட்டர் கிளாஸ் ...ஸ்கேட்டிங் கிளாஸ் எல்லாம் மூட்டை கட்டி வைத்தோம் குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு,
என் கணவர் அவரது அலுவலக வேலைகளை எல்லாம் முடியுமட்டும் விரைவாக்கினார்...முடித்தார் .பதினைந்து முழுநாட்கள் விடுமுறை கிடைத்தது அவருக்கு.
இதோ கிளம்பி விட்டோம் எங்கள் பெற்றோரைக் காண ...இனி விடுமுறைக் காலங்கள் அவர்களுக்கே .
அம்மா...அப்பா...மாமியார்...மாமனார்...எல்லோரோடும் மனம் விட்டுப் பேசலாம்...பேசிச் சிரிக்கலாம் அவர்களை சிரிக்க வைக்கலாம்.பேரன் பேத்திகளோடு விளையாடலாம் ..விளையாட வைக்கலாம் ...எங்கே போய் விடப் போகின்றன? டான்ஸ் கிளாசும் ...கம்பியூட்டர் கிளாசும் சும்மா ஒரு மாத இடைவெளியில்?!
எங்கள் ஊருக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்து சாய்ந்து உட்கார்ந்ததும் அதுவரை இருந்த திணறல் நீங்கி நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
வெறும் மாத்திரைகளும்...மருந்தும் செய்யாத மாயஜாலம் தான்.
Friday, April 3, 2009
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க...(நன்றி-பட்டாபி)
இதிலிருந்து எனக்கொரு சின்ன பொறி கிடைத்தது,அதைப் பகிந்து கொள்ளவே இந்தப் பதிவு ,
தினம் காலையில் அரிசி அளக்க எவர்சில்வர் உழக்கு வைத்திருக்கிறோம் இல்லையா ?அது முன்பெல்லாம் பித்தளையில் வரும் ...இப்போதெல்லாம் எவர்சில்வர் தான் பார்க்க பெரிய சைஸ் டம்ளர் போலவே இருக்கும் .
அகஸ்மாத்தாக சில நேரங்களில் (பல நேரங்களிலும் தான்... !!! :) ;அதையே டம்ளர் ஆகப் பாவித்து தண்ணீர் பிடித்தோ அல்லது மொண்டு குடித்திருப்போம் .
வீட்டில் பாட்டியோ ...அம்மாவோ...அத்தையோ இருந்து நாம் எவர்சில்வர் உழக்கு டம்ளர்ரில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து விட்டால் சட்டென்று சொல்வார்கள் ,
உழக்கில் தண்ணீர் பிடித்துக் குடிக்கவே கூடாது ...படுத்த படுக்கையாக இருப்பவர்கள் சாவை நெருங்கி விட்டால் அவர்களுக்குத் தான் படுக்கையில் படுத்த நிலையில் உழக்கில் தண்ணீர் விடுவார்கள் .நன்றாக இருப்பவர்களெல்லாம் உழக்கில் தண்ணீர் குடிக்கவே கூடாது என்று பயமுறுத்துவார்கள் .
நானும் வெகு நாட்கள் மற்ற டம்ளர்கள் சிங்கில் கழுவாமல் கிடக்கும் போது சோம்பலாக கை எவர்சில்வர் உழக்கு எடுக்கப் போகும் போதெல்லாம் பாட்டியும் அம்மாவும் சொன்னதை எண்ணி மெனக்கெட்டு (!!!) வேறு டம்ளர் கழுவி பிறகு தண்ணீர் பிடித்துக் குடிப்பேன் . ஒரு பயம் தான் என்றே வைத்துக் கொள்ளலாம்.
இப்போது யோசித்ததில் தினம் தினம் அரிசி அளக்க எவர்சில்வர் உழக்கு தான் பயன்படுத்துகிறோம் ,அரிசி மட்டும் அன்றி அந்த உழக்கு அளவு வைத்து தான் 1:2
அளவில் அரிசியும் நீரும் கலந்து குக்கர் வைக்கிறோம் .அதனால் உழக்கு கொஞ்சம் ஈரப் பதமாக இருக்கக் கூடும் ,ஆனாலும் அப்படியே உலர விட்டால் மறுநாள் காலைக்குள் ஈரம் உலர்ந்து விடும் .
இதை விடுத்து டம்ளர் மாதிரி இருக்கிறதென்று அடிக்கடி தண்ணீர் மொண்டு குடிக்க ஆரம்பித்தால் உழக்கில் ஈரம் நிலைத்து விடும் ஈரப் பதம் போக வழியில்லை .இதனால் என்ன ஆகும் ? அரிசி அளக்கும் போது மொத்த அரிசியிலும் அந்த ஈரம் பரவும் ...இதனால் அரிசியில் பூஞ்சை பிடித்து மூட்டை அரிசியும் கெட்டுப் போகக் கூடும் .
விஞ்ஞானப் பூர்வமான இந்த காரணத்தையும் விளக்கத்தையும் சொன்னால் நாம் உடனே சரி என்று ஏற்றுக் கொள்ளப் போகிறோமா என்ன ? அதே சமயம் பயம் தோன்றும் வகையில் எதையேனும் சொல்லி வைத்தால் கிடக்கிறது.அந்த பயத்திலாவது உழக்கில்ஈரம் உலர வழி கிடைத்ததே என்று தான் இப்படி சொன்னார்கள் போல !?
இது நான் நினைத்த காரணம் மட்டுமே ...இதற்க்கு வேறு காரணங்களும் கூட இருக்கலாம்.அப்படி ஏதேனும் இருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் .
