Tuesday, March 31, 2009

அம்பையின் சிறுகதை தொகுப்பில் "அடவி ...மரங்கொத்தியின் நுணுக்கத்துடன் ஒரு பார்வை"


விலை - ரூபாய் 80
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
ஏற்கனவே போன பதிவில் சொன்ன சேதி தான் ,அம்பையின் காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பை வாசித்தேன் என்றேனில்லையா? அதில் ஏழெட்டு சிறுகதைகள் இருந்தன அவற்றுள் "அடவி " என்றொரு சிறுகதை .நான் மிக ரசித்துப் படித்தது .

வனத்தின் மீது ஆசை கொண்ட பெண் செந்திரு அவளது கணவன் திருமலை ,தொழில் அதிபரான கணவன் ...புத்திசாலி மனைவி ,ஆசைக்கு ஒன்று ..ஆஸ்திக்கு ஒன்று என இரண்டு அருமையான குழந்தைகள் ,பணப் பற்றாக்குறை அற்ற நிலை இப்படியாக பொருளாதார கவலைகள் அற்ற நல்ல வாழ்க்கை என்று தானே தோன்றும் நமக்கு இவர்களைப் பற்றி வாசிக்கையில் .

ஆனால் இக்கதையில் செந்திரு கணவனிடம் கோபித்துக் கொண்டு அல்லது கருத்து வேறுபாடு கொண்டு தனியே வனத்தை நோக்கிச்செல்கிறாள் ,வனத்திற்குப் போகிறாள் என்றதும் தனியே கால் நடையாய் என்றெல்லாம் அதீத கற்பனைகள் தேவை இல்லை .கணவனின் இளைய சகோதரன் காரில் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறான் செந்திருவை காட்டில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகையில்.

அங்கே செந்திரு தனது கடந்த காலத்தை வனத்துடனும் ...ராமனின் இல்லை ...இல்லை சீதையின் கதையுடனும் கலந்து மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு தனக்கான சுய தேடலில் மூழ்குகிறாள். கொஞ்சம் செந்திருவின் கதை ...நடுநடுவே சீதையே நேரடியாகச் சொல்வதைப் போல அவளது வாழ்வியல் நிகழ்வுகள் இடையில் அந்தக் காட்டில் இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் சவிதா பாயி,துர்கா பாயி,சந்திரா பாயி போன்ற சாமானியப் பெண்களுடனான அர்த்தமுள்ள அரட்டை ,இப்படி சுமூகமாக சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறார் அம்பை.

சும்மா வீம்புக்கு அம்பையின் எழுத்துக்களில் பெண்ணிய வாடை தூக்கலாக இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது,அவர் முன் வைக்கும் கேள்விகள் எல்லாமே படு "நச் மற்றும் நறுக் "வகை . குறிப்பாக ராமாயணக் கதை ...ராமனை நாம் இங்கு வெகு சிறப்பாகத் தான் கொண்டாடுகிறோம் ,சீதையையும் தான்...லட்சுமணன் ...ஹனுமான் ...ஜாம்பவான் எல்லோரையுமே கொண்டாடுகிறோம் தான் ...ராமனின் அளவுக்கு என்றில்லா விட்டாலும் கூட சீதை இந்த உலகத்தின் அன்னையாகத் தான் ஹிந்துக்களால் போற்றப் படுகிறாள் .

இந்தச் சிறுகதை வாசித்ததும் சட்டென்று மனதில் உதித்த மற்றும் ஒரு எண்ணம் "வால்மீகி ராமாயணம் வேறு தளம் ...கம்ப ராமாயணம் வேறு தளம் " என்ற மகாப் பெரிய உண்மை . சீதையை ராவணன் கடத்திச் செல்வதாக கம்பர் சொல்லும் இடங்கள் மிக மிக நாகரீகம் ...பண்பான வர்ணனை என்று நாம் கருதும் அந்த ஓரிடத்தை மட்டும் கருத்தில் கொண்டு நான் இதைச் சொல்லவில்லை .கம்ப ராமாயணத்தில் காணக் கிடைக்காத பல முரண்பாடுகள் ஒருவேளை வால்மீகி ராமாயணத்தில் காணக் கிடைக்கலாம் .

செந்திருவுக்கு கணவன் தன்னை தொழிலில் பாகஸ்தியாக சேர்த்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் ...மன உளைச்சல் வாழ்வின் மீதான வெறுப்பாக மாறி வனத்தின் நிசப்தத்தின் நடுவில் தன்னை தான் அறிய நடக்க ஆரம்பிக்கிறாள் . அவளது நடை அவளோடு கூடவே நம்மையும் அழைத்துச் செல்கிறது ,அவளோடு நாமும் வானம் முழுக்க அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நடக்கிறோம் காலின் அசதியே தோன்றாமல் .

செந்திருவின் பால்ய வயது ,அவள் மும்பையில் பெரியம்மா வீட்டில் திருமலையைக் கண்டு காதல் கொள்வது ,இந்தக் காதலை கண்டு கொள்ளாமல் இருக்கும் தன் தந்தையிடம் ஒன்றிற்கு இரு முறை சாதாரணமாகவே போகும் போக்கில் இது திருமணத்தில் முடிய வேண்டிய பந்தம் என உணர்த்தும் திண்மை ,கணவனிடம் காட்டை விட்டு வரமாட்டேன் என நடத்தும் வாக்கு வாதங்கள் ,கூடவே தன் பிள்ளைகள் மற்றும் உறவுகளைப் பற்றிய நினைவுகள் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் செந்திரு ஒரு தன்னிச்சையான மனுஷியாகத் தான் தெரிகிறாள் .

அவள் தனக்கான முடிவுகளை எப்போதும் தானே எடுத்துக் கொள்கிறாள்,மற்றவர்களை பொருட்படுத்துவதில்லை ,அது தந்தையோ அல்லது கணவனோ ஆனாலும் சரி .அவளது முடிவுகளை அவளே எடுக்கிறாள்.திருமலை மீதான காதல் ஆகட்டும்...மன பேதம் கொண்டு வனத்திற்கு போதல் ஆகட்டும் செந்திரு வியப்பளிக்கக் கூடும் பலருக்கு ;
இந்த சிறுகதையில் செந்திரு தன் நினைவுகளாக பகிந்து கொள்ளும் சில விசயங்களும் வியப்பளிக்கவே செய்கின்றன, உதாரணமாக காட்டில் லட்சுமணன் மீது மோகம் கொண்ட சூர்ப்பனகை மூக்கறுத்து அவமானப் படுத்தப் பட்டது மட்டுமே நமக்கு கம்பராமாயணத்தில் படிக்கக் கிடைக்கிறது.

இந்திரகாமினி எனும் கந்தர்வப் பெண் லட்சுமணன் மீது மோகம் கொண்டு அவனை நெருங்குகையில் அவளை அவன் உதாசீனப் படுத்தவே ஆசை நிறைவேறா கோபத்தில் அவளொரு சூழ்ச்சி செய்தாளாம், லட்சுமனனி படுக்கையில் அன்றிரவு சில உடைந்த வளையல்கள் மலர்களைப் போட்டு வைத்து விட்டு மறைந்து விட்டாளாம். இதற்க்கு ராமன் என்ன செய்தான் தெரியுமா?

லட்சுமனனின் அறையை கூட்டிப் பெருக்கி சுத்தமாக்க அங்கே சென்ற சீதை இதைக் கண்டு வந்து ராமனிடம் புறம் சொல்ல , ராமன் விடிந்ததும் அந்த வளையல்கள் யாருடையவை எனக் கண்டு பிடிக்க அந்தக் காட்டில் வசித்த எல்லாப் பெண்களின் வளையல் அளவுகளையும் வாங்கி சோதித்துப் பார்த்தானாம்!?

புறம் சொல்லுதல் பெண்களின் பொதுத் தவறு என்று சொல்ல வருகிறாரோ அம்பை?! ஆனாலும் சீதை புறம் சொன்னால் என்ற வரிகள் எனக்குப் புதியவை.கூடவே அந்த வளையல்கள் காட்டுவாசிப் பெண்கள் எவருக்கும் பொருந்தாமல் சீதியின் வளையல்குடன் பொருந்துகிறது என கண்டுபிடிக்கப் பட்டதாக கூறும் போது ராமனின் சஞ்சல சந்தேக புத்தி விளக்கப் படுகிறது எனலாம்.

லட்சுமணன் ஒன்றும் உத்தமன் இல்லை எனும் ராமனின் வாக்கு நிச்சயம் கம்ப ராமாயணத்தில் காண முடியாதென்று தான் நினைக்கிறேன்,,ஒருவேளை வடமொழி ராமாயணத்தில் இருக்கக் கூடுமோ என்னவோ? ராமன் இங்கே
சஞ்சல ராமன் இல்லை ..அவன் கோதண்டராமனாக..ஜானகி ராமனாக ..."ஒருவனுக்கு ஒருத்தி எனும் "கோட்ப்பாட்டை நிலை நிறுத்த வந்த அற்புத அவதார கடவுள் என்றல்லவா துதிக்கப் படுகிறான்.ஏனிந்த முரண்பாடு?கம்பருக்கும்..வால்மீகிக்கும்?

செந்திரு எனும் பெண்ணின் மன ஓட்டத்தில் அவள் எண்ணிப் பார்ப்பதாக கதை அமைவதால் சும்மா கற்பனை என்று ஒதுக்கி விடக் கூடும் தான்! "வித்யா சுப்ரமண்யத்தின் ஒரு நாவலில் கூட அம்பையின் இந்த அடவி சிறுகதையை ஒத்த வரிகளை வாசித்த ஞாபகம் நெருடியதால் இதைப் பதியத் தோன்றியது.

எது ராமாயணம்?

புராணமே ஒரு கற்பனை என்றால் சேது பாலம் விசயத்தில் ஏன் இத்தனை ஆர்ப்பாட்ட எதிர்ப்புகள்?

ராமாயணம் உண்மை என்றால் எந்த ராமாயணம் உண்மை? வால்மீகியின் மூல நூலே உண்மை என்றால் கம்பர் கூறும் ராமாயணம் என்ன சொல்ல வருகிறது? இப்படிச் சில குழப்பங்களை மேலெழுகின்றன .

ஆக மொத்தத்தில் இது அம்பையின் எழுத்துக்கு கிடைத்த மகாப் பெரிய வெற்றியே.வாசிப்பவர்களை யோசிக்க வைத்தல்...பின் தெளிய வைத்தல் எனும் நிலையே நல்ல எழுத்துக்கு அழகாக இருக்கக் கூடும்.

ராமாயணம் பற்றி இன்னும் நிறைய தேடி வாசித்த பின் இந்தப் பதிவை தொடர்வதே சரி எனப் படுகிறது...ராமாயணம் தெரிந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை இங்கே பதியுங்கள்.

Monday, March 30, 2009

ஜவ்வு மிட்டாய்





அம்பையின் "காட்டில் ஒரு மான்" சிறுகதைத் தொகுப்பு வாசித்துக் கொண்டிருந்தேன் நேற்று மதியம்,அப்போது தான் சட்டென்று "ஜவ்வு மிட்டாய்" ஞாபகம் வந்தது.ஜவ்வு மிட்டாய்க்கும் நான் வாசித்த சிறுகதைக்கும் சம்பந்தம் ஏதுமில்லை சிறுகதை எனது சிறு வயது நினைவுகளைத் தட்டி எழுப்பியதில் ஜவ்வு மிட்டாய் கலர்...கலராய் மின்னி மறைந்தது எண்ணங்களின் ஓடையில் .

உலக்கை அளவுக்குப் பருமன் இல்லை ...அதற்காக வாக்கிங் ஸ்டிக் மாதிரி ரொம்ப ஒல்லியாகவும் இல்லாமல் ஒரு அளவான நீண்ட கழியில் மேற்பாகத்தில் வெண்ணிற தகர மூடியால் மூடப்பட்டு மிட்டாய் உள்ளே இருக்கும் அதை மிட்டாய்க் காரர் தனது இடது தோளில் சாற்றி வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வார். கூடவே கெரசின் ஊற்றப் பயன்படுத்தும் பெரிய சைஸ் புனல் போல ஒரு ஊதுகுழல் வேறு வைத்துக் கொண்டு அடிக்கொரு தரம் அதை ஊத்தி சத்தமெழுப்பி மிட்டாய் வாங்க ஊர்ப் பிள்ளைகளுக்கெல்லாம் அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பார்.

அவரது குழல் சத்தம் கேட்டதோ இல்லையோ என்னையொத்த என்னை விடப் பெரிய ..சிறிய பிள்ளைகள் எல்லோரும் அவரைச் சுற்றி குழுமி விடுவார்கள்.இந்த ஜவ்வு மிட்டாயின் ஸ்பெசலே அந்த மிட்டாய்க் காரர் செய்து தரும் டிசைன்களில் தானே இருக்கிறது .

கைக்கடிகாரம்,ரயில்,கார்,பஸ்,மூக்குக்கண்ணாடி,பாம்பு,மயில்,நெக்லஸ்,ப்ரேஸ்லெட்,இப்படி விதம் விதமான டிசைன்களில் சில அடிக்கும்v நிறங்களில் மிட்டாய் செய்து தருவார். நிறங்கள் பெரும்பாலும் சிறுவர்...சிறுமிகளை ஈர்க்கும் படியாகவே இருக்கும்.ரோஸ்...மஞ்சள்...வெளிர் நீலம்,சிவப்பு,பச்சை ,வெள்ளை இந்த நிறங்களில் தான் .பெரும்பாலும் மனதில் நிர்ப்பது ரோஸ் நிறம் தான்.

ஜவ்வு மிட்டாயின் இனிப்பு அதை சாப்பிட்டு முடித்த பின் வெகுநேரம் வரையிலும் கூட நாக்கின் அடியில் தித்திக்கும் பல நேரங்களில் ,இப்போதெல்லாம் கிராமங்களிலும் கூட ஜவ்வு மிட்டாய்க்காரர்களைக் காணோம்,அந்த மிட்டாய் சுகாதாரமானதா இல்லையா என்பதை எல்லாம் தாண்டி மிட்டாயின் நிறமும் அடர் இனிப்புச் சுவையும் மட்டும் இன்ன்னும் நீங்காமல் நினைவுகளோடு .


இப்படி இன்னும் பல நிறம் மாறா நிஜமான சந்தோசங்களை அள்ளித் தந்த பருவம் அது. சிறுமியாகவே இருக்கத்தான் முடியாது ஆனால் அந்த நேரத்து வாழ்வின் வர்ண ஜாலங்களை வருடங்கள் சில..பல கடந்த பின்னும் நினைத்துப் பார்ப்பதென்னவோ நல்ல அருங்கோடையில் கிராமத்து வீட்டின் வேப்பமர முன் தாழ்வாரத்தில் சிலீரென்று காற்று தாழ்ந்து பரவ சுகமாய் ஒரு சிறு தூரலில் நனைவதைப் போன்ற சிலீரென்ற அனுபவம் அது.

நீங்கள் சாப்பிட்டு ரசித்ததுண்டா கலர்...கலர்..ஜவ்வு மிட்டாய்களை ,அப்படியென்றால் எழுதுங்கள் உங்கள் இனிமையான சிறு பிராயத்து மலரும் நினைவுகளை பின்னூட்டங்களாக .

Friday, March 27, 2009

அனிதாவின் காதல்கள் ...சுஜாதா இருந்திருக்கலாம் இன்னும் கொஞ்ச நாள்!!!

நேற்று இரவு தான் இந்த புத்தகம் வாசித்தேன் .சுஜாதா இறந்து விட்டதை நினைத்து மிக துக்கமாக உணர்ந்தேன்.ஒரு சாதாரணக் கதை தான் அதை இத்தனை விறுவிறுப்புடன் மிகச் சாதாரண வார்த்தைகளைக் கொண்டு விரித்து விவரிக்க சுஜாதாவுக்கு இணை சுஜாதாவே தான்.ஏன் சுஜாதா இறந்து போனார்? அவரது இடம் என்னைப் பொறுத்தவரை இன்னும் இட்டு நிரப்ப முடியாத இடமாகத் தான் தென்படுகிறது.


எவ்வளவு சீரியஸ் விஷயம் என்றாலுமே எளிமையாக்கி "இதெல்லாம் ஒன்றுமே இல்லை" என்பதைப் போன்ற எண்ணத்தை உருவாக்கும் எழுத்துக்கள். யோசித்தால் மட்டுமே அவர் எழுதி இருக்கும் விசயத்தின் நிஜமும் யதார்த்தமும் புரியக் கூடும்.


சிவாஜி திரைப் படத்தில் "பழகலாம் வாங்க " என்று சாலமன் பாப்பையா சொல்வதை பலரும் பல விதமாக விமர்சித்திருக்கலாம்.ஆனால் விமர்சித்த எல்லோருக்குமே தெரியும் ...பழகுதல் என்பதும் யதார்த்தமே என்று.;தருமியின் ஒரு பதிவில் வாசித்த ஞாபகம்


"இங்கே நம் நாட்டில் நாம் ஏன் வேஷம் போட்டுக் கொண்டே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்" நாம் என்னவோ ரொம்பவும் உத்தமர்கள் என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்வதைப் போலவே தான் சதா எல்லா நேரங்களிலும் பிறர் முன்னிலையில் நம்மை நாம் வெளிப் படுத்திக் கொண்டு இருக்கிறோம் ...விரும்புகிறோம்.இதை தருமி சார் வேறு வார்த்தைகளை சொல்லி இருப்பார்.சரியாக நினைவில் இல்லை ,ஆனால் சாராம்சம் புரிந்தது .


சுஜாதாவின் எல்லாக் கதைகளும் மிக யதார்த்தமானவை .இப்படி நடக்கக் கூடுமோ என்ற "என் இனிய இயந்திரா" கூட நம் வாழ்வியலோடு ஒத்துப் போவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.


சரி இனி அனிதாவின் காதல்களைப் பார்ப்போம்;


அனிதா கனவுகள் நிறைந்த பெண் ,அவளுக்கென்று பிரத்யேகமான கற்பனைகள் உண்டு ..அனிதா ஐ.ஏ.எஸ் ;அனிதா தி பேமஸ் டான்சர் ,திறமையான நடிகை ,ஸ்போர்ட்ஸ் வுமன் இப்படி பலவகையில் சகல கலா வள்ளியாக தான் பிரகாசிக்க வேண்டும் என்ற கனவும் கற்பனையும் அவளுக்கு உண்டு ,இந்த சூழ்நிலையில் அவளது கனவுகள் எங்ஙனம் கலைக்கப் படுகின்றன ,அதிலிருந்து அவள் எங்ஙனம் மீள்கிறாள் என்பதே அனிதாவின் காதல்கள் நாவலின் சாராம்சம் .

அனிதா ஒரு மத்தியதர பிராமணக் குடும்பத்துப் பெண்,ஒரு சின்ன விபத்தின் போது தவறி விழுந்த பர்சை எடுத்து வைத்து பத்திரமாகத் திருப்பிக் கொடுத்ததின் காரணமாக அகில உலக அளவில் தொழில் சாம்ராஜ்யம் நடத்தும் கோடீஸ்வரன் வைரவனின் காதல் எதேஷ்ட்டமாய் அவளுக்குக் கிட்டுகிறது .இது அவளது முதல் காதல் .


அடுத்த காதல் வீட்டில் பார்த்து நிச்சயிக்கப் படும் மாப்பிள்ளை ரகு .அமெரிக்க மாப்பிள்ளை ..டாலர் கனவுகளாலும் உடன் படிக்கும் தோழி மதுமிதாவின் உற்சாகப் படுத்தும் கேலிகளாலும் அனிதா இவனை மணந்து கொள்ளச் சம்மதித்து நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிகிறது இவர்களுக்கு .


அடுத்த காதல் அனிதாவின் மாமா (அம்மாவுடன் பிறந்த கடைக்குட்டித் தம்பி )சீதாராமன் ,இவன் சிறு வயது முதற்க் கொண்டே அனிதாவை விரும்புகிறான், சாதாரண வங்கி கிளார்க்காக இருந்து கொண்டு தேர்வுகளை விடாமல் எழுதி உயர் பதிவை அடைவதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கும் சீதாராமன் அதற்கான உந்து சக்தி என குறிப்பிடுவது அனிதாவையே .இவனை அனிதா காதலிக்கவில்லையே தவிர இவன் மீது அவளுக்கு ஒரு வித நேசம் உண்டு என்பதை சுஜாதா தன் வரிகளில் வித்யாசப் படுத்தியிருப்பார். இது காதல் இல்லை இனம் புரியா நேசம் மட்டுமே அனிதாவைப் பொறுத்தவரை .ஆனால் சீதாராமன் அனிதாவை சின்சியராகவே காதலிக்கிறான் மனதிற்குள்.


அடுத்தும் ஒரு காதல் உண்டு அவன் விஸ்வம் ,சீதாராமனுடன் பணிபுரியும் ஒரு சிநேகிதியின் அண்ணன் அவன்,அவனும் ஒரு கட்டத்தில் அனிதாவை விரும்புவதாகக் கூறுகிறான்.


அப்படி இத்தனை பேர் விரும்ப அனிதாவிடம் என்ன தான் இருக்கிறது?! பெரிய அறிவாளியா அவள்?! அதிரூப சுந்தரியும் இல்லை ,பக்கவாட்டில் பார்த்தால் சுமாராக இருப்பாள் ,அவளது அழகு சாதாரண அழகு ,அவளை விடவும் பல மடங்கு கவர்ந்திழுக்கும் அழகுடனும் ,சுதந்திரமாகப் பழகும் மனோபாவத்துடனும் உடைய தன்னை புறக்கணித்து அனிதாவை வைரவன் விழுந்து விழுந்து (!!!) காதலிப்பதை நினைத்து பொறாமைப் படுகிறாள் மதுமிதா.


பொறாமை இருந்தாலும் கூட இந்த புத்திசாலி மதுமிதா அனிதா பணக்காரி ஆனபின் தோழி என்ற பெயரில் தனக்கு கிடைக்கக் கூடும் அனுகூலங்களை மனதில் கொண்டு அனிதாவை வெறுக்காமல் இணக்கமாகவே இருக்கிறாள் கதையின் முடிவு வரையுளும் கூட;காரணம் பணமும் அதனால் கிடைக்கும் வசதிகளையும் எண்ணித்தான்.


இது இப்படி இருக்க...கதையில் அனிதா மிகக் குழப்பமான பெண்ணாகவே அல்லது சஞ்சல மனதினளாகவே முடிவு வரையிலும் சித்தரிக்கப் பட்டு விட்டு கடைசி நொடியில் ஸ்திரமான முடிவு எடுப்பவலாகக் காட்டப் படுகிறாள்.அதுவும் கூட ஒரு வகையில் சரி என்றே படுகிறது,வாழ்வியல் ஞானம் வாழ்வின் முதற் கட்டத்திலேயே எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை ,வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்களின் மிச்சங்களாகவே தெளிவான திட சிந்தனை கை வரப்பெருகிறது,


அனிதாவுக்கும் அப்படித்தான்...அனிதா மட்டும் அல்ல மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்த எல்லா இளம்பெண்களுக்கும் இதுவே சாத்தியம்,அம்மா அப்பா சொல்வதையே செய்யத் துணியும் மனப் பான்மையே பெரும்பாலான பெண்களுக்கும் இலகுவாகிறது,விதி விலக்குகளும் இருக்கலாம்,இங்கே அனிதாவைப் பொறுத்தவரை அவள் வீட்டுக்கு அடங்கிய பெண் என்ற தோற்றத்தையே விரும்புபவளாகத் தெரிகிறது.


அனிதா மேலே படிக்க விரும்புகிறாள் ,கூடவே வீட்டில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்வதாகத் தெரிய வருகையில் முதல் குழப்பம் ஆரம்பிக்கிறது,படிப்பைத் தொடர்வதா அல்லது கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆவதா என்று.


அடுத்ததாக வைரவன் தன் காதலை பலமுறை தெளிவாக்கிய பின் ரகுவை விட அவன் மீது புத்தி செல்கிறது,கூடவே அவனது காதலின் மீது லேசான பயமும் கூட அவளுக்கு உண்டென்று கதை உருள்கிறது,காரணம் அவனது மித மிஞ்சிய பணமும் செல்வாக்கும் .


நிச்சயிக்கப் பட்ட மாப்பிள்ளை ரகுவை அயல்நாட்டில் இன்னும் உயர் பதவி எனும் ஆசை காட்டி ஒதுங்கி நிற்க வைத்து விட்டு பணத்தையும் சகாயங்களையும் வாரி இறைத்து ஒரு கட்டத்தில் அனிதாவின் பெற்றோரையும் உற்றோரையும் கூட தன் வசமாக்கி வைரவன் அனிதாவை மணக்கிறான்.


திருமணமான சில நாட்கள் இடைவெளியில் அனிதாவுக்கு வைரவனின் குடும்ப சூழல் பிடித்தம் இல்லாமல் போகிறது.அவனிடம் இருக்கும் அளவில்லாப் பணத்தின் சக்தியால் பிறந்த வீட்டில் அனிதாவுக்கு ஏகப்பட்ட மரியாதை செய்தாலும் கூட எல்லாம் அவன் பணத்திற்காகவே என்ற எண்ணம் அனிதாவிடம் படிந்து அவளுக்கு சுதந்திரமான வாழ்க்கையின் மீது ஏக்கம் வருகிறது,


இது இப்படி இருக்க, வைரவனின் தொழில் முறை எதிரிகளால் வீட்டில் ரெய்டு நடந்து பெரும்பாலான சொத்துகளுக்கு சரியான முறையான கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப் படவில்லை என அறிவித்து அவனைக் கைது செய்து தனி விசாரணை என்ற பெயர் அவன் சிறை செல்ல நேர்கிறது,


இந்த வைரவன் கதாபாத்திரம் கொஞ்சம் விசித்திரம் தான் இங்கே. தன் இறந்து போன தாயின் சாயல் உள்ள பெண் என்பதால் மட்டுமே அவன் அனிதாவின் மீது அபிரிமிதமான காதல் கொள்கிறான்.அனிதாவை விட அழகான ...அந்தஸ்தான பல பெண்கள் அவனை மணக்க விரும்பியும் அவன் இவளை மணக்கிறான். இது கொஞ்சம் விசித்திரம் தான்,தாயின் மீது அவனுக்கிருந்த இனம் அறியா பாசம் காரணமாக இருக்கலாம் .


எப்படி அதி தீவிரமாகக் காதலித்தானோ அதே வேகத்தில் தான் சிறையில் அடைபட்டதும் அனிதாவுக்கு விவாகரத்து தரவும் முன் வருகிறான் .தன் செக்ரட்டரி பெண்ணுடன் தாராளமாகப் பழகும் போதாகட்டும் ,சொந்த அக்கா மகளுடன் மற்றவர் பார்வைக்கு வித்யசமாகப் படுவதாகட்டும் வைரவன் மீது அனிதா பயம் கொள்வதில் நியாயமே.


அனிதாவின் குடும்பத்தினர் பணத்திற்கும் செல்வாக்கிற்கும் படிப் படியாக மயங்குவதாகக் காட்டி இருப்பது வெகு யதார்த்தமே. எந்த மனிதனாயினும் அதுவே நிதர்சனம் ,இதில் விதி விலக்குகள் உண்டு என வாதிடுவது விழலுக்கு இறைத்த நீர்!அமெரிக்க மாப்பிள்ளையை விட தொழிலதிபர் மாப்பிள்ளை பெட் என தீர்மானிக்கும் அவர்கள் அவனும் சிறை சென்றதும் மணமான மகளை விவாகரத்து செய்வித்து விட்டு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.


எந்த சூழ்நிலையில் எது பெஸ்ட்டோ அதை தேடுவதும் பெற முனைவதுமே மனித இயல்பு என்பதற்கேற்ப அனிதாவின் வீட்டினர் அடுத்த மாப்பிள்ளை தேடுகின்றனர், இத்தனை செய்பவர்களை ஒரு விஷயத்தை மட்டும் சிந்திக்கவேயில்லை அது அனிதாவின் படிப்பு, காரணம் நம் இந்திய மனப்பான்மை என்று சொன்னால் சாலப் பொருந்தக் கூடும்.


இங்கே பெற்றவர்கள் பெண்கள் படிப்பதைக் காட்டிலும் கை நிறைய சம்பாதிப்பதைக் காட்டிலும் நல்ல வாழ்க்கைத் துணை அமைத்துக் கொடுப்பதே மிக முக்கியம் என்று கருதுகிறார்கள் .அது சரியான நடைமுறையே என்றாலும் ,ஒரு அளவுக்கு மேல் யாரையும் சோதித்துப் பார்த்து தேர்வு செய்ய வாழ்க்கை என்ன அறிவியல் ஆய்வுக் களமா ? வாழும் போது தானே தெரிய வரும்

நிஜமான நிறை குறைகள்,அப்போது திடீரென்று பயந்து போய் வெறுத்து ஓடினால் அந்த ஓட்டத்திற்கு முடிவு ஏது ?


வெளிநாட்டுப் பொருட்களில் மோகம் கொண்ட தம்பி ,கிணற்றுத் தவளை வாழ்க்கையில் சோர்ந்து போன அக்கா ,பெருமைக்காகவேனும் தன் தங்கை ஒரு பெரும் பணக்காரனின் மனைவி என்று பெருமை பேச விரும்பும் இன்னொரு அக்கா,பெண்ணுக்கு கல்யாணமே வாழ்க்கையில் அதி முக்கியம் அதை தவிர வேறு எதுவும் இல்லை என நம்பும் அம்மா ...இவர்களோடு அனிதா எனும் பெண்ணின் கனவுகளும் கற்பனையும் கலந்த வாழ்க்கை . இதுவே அனிதாவின் காதல்கள் கதை.


எந்த நொடியில் அனிதா மனம் மாறுகிறாள் என்று சுஜாதா விவரிக்கும் இடம் கொஞ்சம் டிராமாடிக் ஆக இருந்தாலும் சேக்ஸ்பியர் சொன்னது போல "வாழ்க்கையே ஒரு நாடக மேடை" தானே? அதனால் அனிதா தனக்கும் சீதா ராமனுக்கும் வீட்டினர் ஏற்ப்பாடு செய்திருந்த மறுமணத்தை கடைசி நொடியில் வேண்டாம் என மறுத்து விட்டு சிறையில் இருக்கும் தன் கணவனைத் தேடி போகிறாள்.
சுபம்

Wednesday, March 25, 2009

இட்லி




இட்லி என்று பதிவுக்கு தலைப்பு வைத்தாகி விட்டது ,இட்லி பற்றி என்ன எழுதுவது...ஒன்றுமே இல்லையா என்ன? இட்லி வேக வைத்து சமைக்கப் படும் ஒரு வகை தென்னிந்திய உணவு ,இதில் எண்ணெய் சத்து துளியும் இல்லை ,கைக்குழந்தைகள் முதல் பிறர் கை பிடித்தோ கோல் ஊன்றியோ நடக்கும் கைகோல் குழந்தைகள் வரை யார் வேண்டுமானாலும் உன்பதற்க்கேற்ற எளிய இனிய உணவு ,

இது அரிசியை மற்றும் உளுந்தை ஊற வைத்து அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் அரைத்த மாவை புளிக்க வைத்து பின் அடுப்பை பற்ற வைத்து இட்லி குண்டான் எனும் ஸ்பெசல் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி கால் பாகம் தண்ணீர் ஊற்றி அடி கருக்காமல் இருக்க அரை மூடி எலுமிச்சம் பழமோ அல்லது துளியூண்டு புளி கிள்ளி எடுத்தோ பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கொதித்ததும் இட்லித் தட்டுக்கள் எனும் ஸ்பெசல் தட்டுக்களை தேடி எடுத்து...

(அட தேடி என்ற சொல் எதற்க்கென்றால் அது சென்ற முறை இட்லி அவித்த பின் எங்காவது மூலையில் மறந்து போய் போட்டு வைத்திருக்கக் கூடும் சில வீடுகளில் (என் வீட்டில் அப்படி செய்வது வழக்கமே இல்லை ...நிஜம் ...நம்புங்கள்!!!)சரி..சரி இட்லித் தட்டுக்களை ஒரு வழியாய் தேடி எடுத்தாயிற்று அல்லவா?! இனி பேச நேரம் இல்லை சரசரவென்று இரண்டு தட்டோ இல்லை ஒரே ஒரு பெரிய தட்டோ இட்லிப் பள்ளங்களில் அல்லது குழிகளில் அரைத்து வைத்த முக்கியமாக புளிக்க வைத்த இட்லி மாவை அங்கே ஊற்ற வேண்டும் .

ஏனோ ..தானோ என்றெல்லாம் ஊற்றி விடக் கூடாது இட்லி மாவை இட்லித் தட்டின் பள்ளங்களில் ..அதற்கென்று ஒரு ஸ்பெசல் முறை இருக்கிறதாம் என் பாட்டி சொல்லியிருக்கிறார்கள் ...........அது வந்து எப்படி என்றால் ...அதாவது ...அதாவது...அதாகப் பட்டது ...அது எப்படி என்றால்...!!!...அது வந்து ....

சரி ...சரி ....யாரும் பொறுமை இழக்க வேண்டாம் .

இதோடு இட்லி அவிப்பதை நிறுத்தி விட்டு ;

அடுத்த விஷயத்திற்குப் போய் விடலாம் ...அதுவே பதிவுக்கும் பதிவருக்கும் நலம் .

அதாகப் பட்டது இப்படியாகப் பட்ட பலவித சிரமங்களைப் பொருட்படுத்தாமல் நாம் (அம்மா ...அக்கா...அண்ணி...பாட்டி!!! இவர்களில் ஒருவர் தான் இந்த நாம் ...நாம் என்றால் நாம் இல்லை அந்த நாமில் என்ன தெளிவாகப் புரிகிறதா இல்லையா?!) தயாரிக்கும் இட்லிகளை உப்புச் சப்பில்லாத சில காம்பிநேசன்களில் சாப்பிட்டு வைக்கக் கூடவே கூடாது

(இந்நாள் வரையிலும் நாம் அப்படித் தானே செய்து கொண்டிருக்கிறோம் என்கிறீர்களா? இனி அப்படிப் பட்ட துரோகத்தை இட்லிக்கு நாம் கனவிலும் செய்யத் துணியக் கூடாது )

இட்லிக்கு எது சரி மேட்சிங் என்று ஒரு வரையறை செய்து விட முடியுமா நம்மால் ?அது உண்பவர்களைப் பொறுத்த விஷயம் ஆயிற்றே!?சரி புடவைக்கு எப்படி பொருத்தமாக மேட்சிங் பார்க்கிறோமோ அதே வகையில் இட்லிக்கு மேட்ச்சிங் பார்ப்போம் இப்போது நம்மால் இயன்றவரையிலும்,


இட்லி-சாம்பார் (இது கணவன் மனைவி உறவு போன்றதென்று வைத்துக் கொள்ளலாம் ...அருமையான மேட்சிங் )

இட்லி-மிளகாய்ப் பொடி பிளஸ் நல்லெண்ணெய்

இட்லி -தேங்காய் சட்னி

இட்லி -வெங்காயச் சட்னி

இட்லி-காரச் சட்னி

இட்லி-தக்காளிச் சட்னி

இட்லி-கொத்துமல்லி சட்னி

இட்லி -கோஷ்மல்லி

இட்லி - பாசிப் பருப்பு சட்னி

இட்லி- தயிர் பிளஸ் சர்க்கரை

இட்லி -நெய் பிளஸ் சர்க்கரை (அஸ்க்கா போட்டா நல்லாத்தான் இருக்கும் ப்ரிஸ்க்கா)

இட்லி- சிதம்பரம் கொத்சு (அபிஅப்பா தான் போடா சொன்னார் ...சித்தப்பா சொல்லைத் தட்டலாமோ!)

இட்லி - ஊறுகாய் (எங்கயாவது பஸ் நடுவழியில நின்னுட்ட ஊறுகாய் வச்சும் இட்லி சாப்பிடுவாங்களாம் எதோ கதைல படிச்சேன் )

இட்லி- மீந்து போன பருப்பு (எங்க பக்கத்து வீட்ல ஒரு அம்மா இப்படித் தான் இட்லிக் கொடுமை செய்றாங்க பல நேரம் ...இட்லி அழற சத்தம் என் காதில் விளராப்பல ஒரு பீல் )

இட்லி -மீன் குழம்பு (முள்ளும் மலரும் படத்துல ஒரு பாட்டு வருமே ...


"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு

நெய் மணக்கும் கத்தரிக்காய்

நேத்து வச்ச மீன் குழம்பு

என்னை இழுக்குதடி ...."நெல்லுச் சோறுக்கு மட்டும் இல்லை இட்லிக்கும் கூட இழுக்கும் தான்)


கட்டக் கடசியா என்னோட இட்லி மேட்சிங் பத்தியும் சொல்லனுமே !?(யாரும் கேட்கலைனாலும் கூடத் தான் சொல்லியே ஆகணும்)


இட்லிக்கு என்ன தான் எல்லாரும் சாம்பார் ..சட்னி...கொத்சு ...மிளகாய்ப் பொடி பிளஸ் ஜோதிகா (நல்லெண்ணெய்யாம் !!!) நான் சொல்லலை அபிஅப்பா சொன்னார் .இன்ன பிற வஸ்துக்களை எல்லாம் வளைச்சு மாட்டினாலும் கூட ;

நம்ம பேவரிட் கோழிக் குழம்பு தான் .

என்ன ஒரு ஜோரா இருக்கும் தெரியுமா ?!

என்ன நான் சொல்றது சரி தானே?!!!

வந்து சொல்லிட்டுப் போங்கப்பா உங்க இட்லி நினைவுகளை .

Tuesday, March 24, 2009

ஒளடதமானது மஞ்சம்


மஞ்சள் மாறா

சுகந்தம் கொஞ்சும்

அஞ்சுக மங்கை

தங்க முகம் தான்

கெஞ்சுமோ

இன்னும்

மிஞ்சுமோ ?!

வேங்கை போலொரு

வேந்தன் அவனென

அஞ்சுவதல்லா

பிஞ்சு மனம் போல்

ஆசை களிற்றை

அடக்கி மீண்டதும்

ஒளடதமானது மஞ்சம்

அஞ்சனம் திருமஞ்சனம்

பஞ்சனை காணும் மந்திரம்

வந்தனம்

சங்கத் தமிழோ

காவியமோ

மின்னற் பொழுதின்

ஓவியமோ

பேசாப் பொருளின்

தூரிகையோ

காந்தள் மலரே

கண் துயிலாய்

எஞ்சும் காலை பொழுதே வா

வெளிச்சக் கதிர்கள் விரியட்டும்

வெயில் நிறம் இங்கே பரவட்டும்

மஞ்சள் முகங்கள் மினுங்கட்டும்

தங்கக் கனவுகள் பலிக்கட்டும் ...

Sunday, March 22, 2009

தொடரும் பயணம் பிண்டத்திலிருந்து பேரண்டம் வரை




உறக்கங்களில்லாமல்

நீளும்

சொர்க்கத்தின் நீட்சியில்

மண்வாசம்

வரைபடமாய்

மலர் வாசம்

மனப்பாடமாய் ...

ஏதோ... ஏதோ

திகட்டிப் போன

ஏதோ ஒரு நொடியிலோ

அன்றி

பெருங்கனவு பிடித்திழுத்த

மறு நொடியிலோ

ஆசையின் நெடி தாக்க

தட்டுத் தடுமாறி

விழுந்த இடம்

அம்மாவின் கருவறை

மறுபடி பிண்டமானேன்

பேரண்டம் புரியா

பயணம் தொடர்கிறது ...

இன்னும்

ஒருமுறை!!!

Thursday, March 19, 2009

தாம்பத்யத் தராசு ?!




கணவன் ஒருபுறம்


மனைவி மறுபுறம்


மேல் கீழென


ஏறி ...இறங்கும்


தாம்பத்யத் தராசு


எப்போதும்


கிடை மட்டத்தில்


நிலை கொண்டால்


யாதொன்றும் பயனிலையே ?!


முட்களின் நகர்வில்


(எடைக்)கற்களின் கனத்தில்


அசையும் தட்டுக்கள்


ஏறலாம்


இறங்கலாம்


தராசின் சுழன்றாடும்


சங்கிலிக்குள் மட்டும் ...