நேற்று இரவு தான் இந்த புத்தகம் வாசித்தேன் .சுஜாதா இறந்து விட்டதை நினைத்து மிக துக்கமாக உணர்ந்தேன்.ஒரு சாதாரணக் கதை தான் அதை இத்தனை விறுவிறுப்புடன் மிகச் சாதாரண வார்த்தைகளைக் கொண்டு விரித்து விவரிக்க சுஜாதாவுக்கு இணை சுஜாதாவே தான்.ஏன் சுஜாதா இறந்து போனார்? அவரது இடம் என்னைப் பொறுத்தவரை இன்னும் இட்டு நிரப்ப முடியாத இடமாகத் தான் தென்படுகிறது.
எவ்வளவு சீரியஸ் விஷயம் என்றாலுமே எளிமையாக்கி "இதெல்லாம் ஒன்றுமே இல்லை" என்பதைப் போன்ற எண்ணத்தை உருவாக்கும் எழுத்துக்கள். யோசித்தால் மட்டுமே அவர் எழுதி இருக்கும் விசயத்தின் நிஜமும் யதார்த்தமும் புரியக் கூடும்.
சிவாஜி திரைப் படத்தில் "பழகலாம் வாங்க " என்று சாலமன் பாப்பையா சொல்வதை பலரும் பல விதமாக விமர்சித்திருக்கலாம்.ஆனால் விமர்சித்த எல்லோருக்குமே தெரியும் ...பழகுதல் என்பதும் யதார்த்தமே என்று.;தருமியின் ஒரு பதிவில் வாசித்த ஞாபகம்
"இங்கே நம் நாட்டில் நாம் ஏன் வேஷம் போட்டுக் கொண்டே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்" நாம் என்னவோ ரொம்பவும் உத்தமர்கள் என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்வதைப் போலவே தான் சதா எல்லா நேரங்களிலும் பிறர் முன்னிலையில் நம்மை நாம் வெளிப் படுத்திக் கொண்டு இருக்கிறோம் ...விரும்புகிறோம்.இதை தருமி சார் வேறு வார்த்தைகளை சொல்லி இருப்பார்.சரியாக நினைவில் இல்லை ,ஆனால் சாராம்சம் புரிந்தது .
சுஜாதாவின் எல்லாக் கதைகளும் மிக யதார்த்தமானவை .இப்படி நடக்கக் கூடுமோ என்ற "என் இனிய இயந்திரா" கூட நம் வாழ்வியலோடு ஒத்துப் போவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
சரி இனி அனிதாவின் காதல்களைப் பார்ப்போம்;
அனிதா கனவுகள் நிறைந்த பெண் ,அவளுக்கென்று பிரத்யேகமான கற்பனைகள் உண்டு ..அனிதா ஐ.ஏ.எஸ் ;அனிதா தி பேமஸ் டான்சர் ,திறமையான நடிகை ,ஸ்போர்ட்ஸ் வுமன் இப்படி பலவகையில் சகல கலா வள்ளியாக தான் பிரகாசிக்க வேண்டும் என்ற கனவும் கற்பனையும் அவளுக்கு உண்டு ,இந்த சூழ்நிலையில் அவளது கனவுகள் எங்ஙனம் கலைக்கப் படுகின்றன ,அதிலிருந்து அவள் எங்ஙனம் மீள்கிறாள் என்பதே அனிதாவின் காதல்கள் நாவலின் சாராம்சம் .
அனிதா ஒரு மத்தியதர பிராமணக் குடும்பத்துப் பெண்,ஒரு சின்ன விபத்தின் போது தவறி விழுந்த பர்சை எடுத்து வைத்து பத்திரமாகத் திருப்பிக் கொடுத்ததின் காரணமாக அகில உலக அளவில் தொழில் சாம்ராஜ்யம் நடத்தும் கோடீஸ்வரன் வைரவனின் காதல் எதேஷ்ட்டமாய் அவளுக்குக் கிட்டுகிறது .இது அவளது முதல் காதல் .
அடுத்த காதல் வீட்டில் பார்த்து நிச்சயிக்கப் படும் மாப்பிள்ளை ரகு .அமெரிக்க மாப்பிள்ளை ..டாலர் கனவுகளாலும் உடன் படிக்கும் தோழி மதுமிதாவின் உற்சாகப் படுத்தும் கேலிகளாலும் அனிதா இவனை மணந்து கொள்ளச் சம்மதித்து நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிகிறது இவர்களுக்கு .
அடுத்த காதல் அனிதாவின் மாமா (அம்மாவுடன் பிறந்த கடைக்குட்டித் தம்பி )சீதாராமன் ,இவன் சிறு வயது முதற்க் கொண்டே அனிதாவை விரும்புகிறான், சாதாரண வங்கி கிளார்க்காக இருந்து கொண்டு தேர்வுகளை விடாமல் எழுதி உயர் பதிவை அடைவதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கும் சீதாராமன் அதற்கான உந்து சக்தி என குறிப்பிடுவது அனிதாவையே .இவனை அனிதா காதலிக்கவில்லையே தவிர இவன் மீது அவளுக்கு ஒரு வித நேசம் உண்டு என்பதை சுஜாதா தன் வரிகளில் வித்யாசப் படுத்தியிருப்பார். இது காதல் இல்லை இனம் புரியா நேசம் மட்டுமே அனிதாவைப் பொறுத்தவரை .ஆனால் சீதாராமன் அனிதாவை சின்சியராகவே காதலிக்கிறான் மனதிற்குள்.
அடுத்தும் ஒரு காதல் உண்டு அவன் விஸ்வம் ,சீதாராமனுடன் பணிபுரியும் ஒரு சிநேகிதியின் அண்ணன் அவன்,அவனும் ஒரு கட்டத்தில் அனிதாவை விரும்புவதாகக் கூறுகிறான்.
அப்படி இத்தனை பேர் விரும்ப அனிதாவிடம் என்ன தான் இருக்கிறது?! பெரிய அறிவாளியா அவள்?! அதிரூப சுந்தரியும் இல்லை ,பக்கவாட்டில் பார்த்தால் சுமாராக இருப்பாள் ,அவளது அழகு சாதாரண அழகு ,அவளை விடவும் பல மடங்கு கவர்ந்திழுக்கும் அழகுடனும் ,சுதந்திரமாகப் பழகும் மனோபாவத்துடனும் உடைய தன்னை புறக்கணித்து அனிதாவை வைரவன் விழுந்து விழுந்து (!!!) காதலிப்பதை நினைத்து பொறாமைப் படுகிறாள் மதுமிதா.
பொறாமை இருந்தாலும் கூட இந்த புத்திசாலி மதுமிதா அனிதா பணக்காரி ஆனபின் தோழி என்ற பெயரில் தனக்கு கிடைக்கக் கூடும் அனுகூலங்களை மனதில் கொண்டு அனிதாவை வெறுக்காமல் இணக்கமாகவே இருக்கிறாள் கதையின் முடிவு வரையுளும் கூட;காரணம் பணமும் அதனால் கிடைக்கும் வசதிகளையும் எண்ணித்தான்.
இது இப்படி இருக்க...கதையில் அனிதா மிகக் குழப்பமான பெண்ணாகவே அல்லது சஞ்சல மனதினளாகவே முடிவு வரையிலும் சித்தரிக்கப் பட்டு விட்டு கடைசி நொடியில் ஸ்திரமான முடிவு எடுப்பவலாகக் காட்டப் படுகிறாள்.அதுவும் கூட ஒரு வகையில் சரி என்றே படுகிறது,வாழ்வியல் ஞானம் வாழ்வின் முதற் கட்டத்திலேயே எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை ,வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்களின் மிச்சங்களாகவே தெளிவான திட சிந்தனை கை வரப்பெருகிறது,
அனிதாவுக்கும் அப்படித்தான்...அனிதா மட்டும் அல்ல மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்த எல்லா இளம்பெண்களுக்கும் இதுவே சாத்தியம்,அம்மா அப்பா சொல்வதையே செய்யத் துணியும் மனப் பான்மையே பெரும்பாலான பெண்களுக்கும் இலகுவாகிறது,விதி விலக்குகளும் இருக்கலாம்,இங்கே அனிதாவைப் பொறுத்தவரை அவள் வீட்டுக்கு அடங்கிய பெண் என்ற தோற்றத்தையே விரும்புபவளாகத் தெரிகிறது.
அனிதா மேலே படிக்க விரும்புகிறாள் ,கூடவே வீட்டில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்வதாகத் தெரிய வருகையில் முதல் குழப்பம் ஆரம்பிக்கிறது,படிப்பைத் தொடர்வதா அல்லது கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆவதா என்று.
அடுத்ததாக வைரவன் தன் காதலை பலமுறை தெளிவாக்கிய பின் ரகுவை விட அவன் மீது புத்தி செல்கிறது,கூடவே அவனது காதலின் மீது லேசான பயமும் கூட அவளுக்கு உண்டென்று கதை உருள்கிறது,காரணம் அவனது மித மிஞ்சிய பணமும் செல்வாக்கும் .
நிச்சயிக்கப் பட்ட மாப்பிள்ளை ரகுவை அயல்நாட்டில் இன்னும் உயர் பதவி எனும் ஆசை காட்டி ஒதுங்கி நிற்க வைத்து விட்டு பணத்தையும் சகாயங்களையும் வாரி இறைத்து ஒரு கட்டத்தில் அனிதாவின் பெற்றோரையும் உற்றோரையும் கூட தன் வசமாக்கி வைரவன் அனிதாவை மணக்கிறான்.
திருமணமான சில நாட்கள் இடைவெளியில் அனிதாவுக்கு வைரவனின் குடும்ப சூழல் பிடித்தம் இல்லாமல் போகிறது.அவனிடம் இருக்கும் அளவில்லாப் பணத்தின் சக்தியால் பிறந்த வீட்டில் அனிதாவுக்கு ஏகப்பட்ட மரியாதை செய்தாலும் கூட எல்லாம் அவன் பணத்திற்காகவே என்ற எண்ணம் அனிதாவிடம் படிந்து அவளுக்கு சுதந்திரமான வாழ்க்கையின் மீது ஏக்கம் வருகிறது,
இது இப்படி இருக்க, வைரவனின் தொழில் முறை எதிரிகளால் வீட்டில் ரெய்டு நடந்து பெரும்பாலான சொத்துகளுக்கு சரியான முறையான கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப் படவில்லை என அறிவித்து அவனைக் கைது செய்து தனி விசாரணை என்ற பெயர் அவன் சிறை செல்ல நேர்கிறது,
இந்த வைரவன் கதாபாத்திரம் கொஞ்சம் விசித்திரம் தான் இங்கே. தன் இறந்து போன தாயின் சாயல் உள்ள பெண் என்பதால் மட்டுமே அவன் அனிதாவின் மீது அபிரிமிதமான காதல் கொள்கிறான்.அனிதாவை விட அழகான ...அந்தஸ்தான பல பெண்கள் அவனை மணக்க விரும்பியும் அவன் இவளை மணக்கிறான். இது கொஞ்சம் விசித்திரம் தான்,தாயின் மீது அவனுக்கிருந்த இனம் அறியா பாசம் காரணமாக இருக்கலாம் .
எப்படி அதி தீவிரமாகக் காதலித்தானோ அதே வேகத்தில் தான் சிறையில் அடைபட்டதும் அனிதாவுக்கு விவாகரத்து தரவும் முன் வருகிறான் .தன் செக்ரட்டரி பெண்ணுடன் தாராளமாகப் பழகும் போதாகட்டும் ,சொந்த அக்கா மகளுடன் மற்றவர் பார்வைக்கு வித்யசமாகப் படுவதாகட்டும் வைரவன் மீது அனிதா பயம் கொள்வதில் நியாயமே.
அனிதாவின் குடும்பத்தினர் பணத்திற்கும் செல்வாக்கிற்கும் படிப் படியாக மயங்குவதாகக் காட்டி இருப்பது வெகு யதார்த்தமே. எந்த மனிதனாயினும் அதுவே நிதர்சனம் ,இதில் விதி விலக்குகள் உண்டு என வாதிடுவது விழலுக்கு இறைத்த நீர்!அமெரிக்க மாப்பிள்ளையை விட தொழிலதிபர் மாப்பிள்ளை பெட் என தீர்மானிக்கும் அவர்கள் அவனும் சிறை சென்றதும் மணமான மகளை விவாகரத்து செய்வித்து விட்டு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.
எந்த சூழ்நிலையில் எது பெஸ்ட்டோ அதை தேடுவதும் பெற முனைவதுமே மனித இயல்பு என்பதற்கேற்ப அனிதாவின் வீட்டினர் அடுத்த மாப்பிள்ளை தேடுகின்றனர், இத்தனை செய்பவர்களை ஒரு விஷயத்தை மட்டும் சிந்திக்கவேயில்லை அது அனிதாவின் படிப்பு, காரணம் நம் இந்திய மனப்பான்மை என்று சொன்னால் சாலப் பொருந்தக் கூடும்.
இங்கே பெற்றவர்கள் பெண்கள் படிப்பதைக் காட்டிலும் கை நிறைய சம்பாதிப்பதைக் காட்டிலும் நல்ல வாழ்க்கைத் துணை அமைத்துக் கொடுப்பதே மிக முக்கியம் என்று கருதுகிறார்கள் .அது சரியான நடைமுறையே என்றாலும் ,ஒரு அளவுக்கு மேல் யாரையும் சோதித்துப் பார்த்து தேர்வு செய்ய வாழ்க்கை என்ன அறிவியல் ஆய்வுக் களமா ? வாழும் போது தானே தெரிய வரும்
நிஜமான நிறை குறைகள்,அப்போது திடீரென்று பயந்து போய் வெறுத்து ஓடினால் அந்த ஓட்டத்திற்கு முடிவு ஏது ?
வெளிநாட்டுப் பொருட்களில் மோகம் கொண்ட தம்பி ,கிணற்றுத் தவளை வாழ்க்கையில் சோர்ந்து போன அக்கா ,பெருமைக்காகவேனும் தன் தங்கை ஒரு பெரும் பணக்காரனின் மனைவி என்று பெருமை பேச விரும்பும் இன்னொரு அக்கா,பெண்ணுக்கு கல்யாணமே வாழ்க்கையில் அதி முக்கியம் அதை தவிர வேறு எதுவும் இல்லை என நம்பும் அம்மா ...இவர்களோடு அனிதா எனும் பெண்ணின் கனவுகளும் கற்பனையும் கலந்த வாழ்க்கை . இதுவே அனிதாவின் காதல்கள் கதை.
எந்த நொடியில் அனிதா மனம் மாறுகிறாள் என்று சுஜாதா விவரிக்கும் இடம் கொஞ்சம் டிராமாடிக் ஆக இருந்தாலும் சேக்ஸ்பியர் சொன்னது போல "வாழ்க்கையே ஒரு நாடக மேடை" தானே? அதனால் அனிதா தனக்கும் சீதா ராமனுக்கும் வீட்டினர் ஏற்ப்பாடு செய்திருந்த மறுமணத்தை கடைசி நொடியில் வேண்டாம் என மறுத்து விட்டு சிறையில் இருக்கும் தன் கணவனைத் தேடி போகிறாள்.
சுபம்
Friday, March 27, 2009
Wednesday, March 25, 2009
இட்லி

இட்லி என்று பதிவுக்கு தலைப்பு வைத்தாகி விட்டது ,இட்லி பற்றி என்ன எழுதுவது...ஒன்றுமே இல்லையா என்ன? இட்லி வேக வைத்து சமைக்கப் படும் ஒரு வகை தென்னிந்திய உணவு ,இதில் எண்ணெய் சத்து துளியும் இல்லை ,கைக்குழந்தைகள் முதல் பிறர் கை பிடித்தோ கோல் ஊன்றியோ நடக்கும் கைகோல் குழந்தைகள் வரை யார் வேண்டுமானாலும் உன்பதற்க்கேற்ற எளிய இனிய உணவு ,
இது அரிசியை மற்றும் உளுந்தை ஊற வைத்து அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் அரைத்த மாவை புளிக்க வைத்து பின் அடுப்பை பற்ற வைத்து இட்லி குண்டான் எனும் ஸ்பெசல் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி கால் பாகம் தண்ணீர் ஊற்றி அடி கருக்காமல் இருக்க அரை மூடி எலுமிச்சம் பழமோ அல்லது துளியூண்டு புளி கிள்ளி எடுத்தோ பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கொதித்ததும் இட்லித் தட்டுக்கள் எனும் ஸ்பெசல் தட்டுக்களை தேடி எடுத்து...
(அட தேடி என்ற சொல் எதற்க்கென்றால் அது சென்ற முறை இட்லி அவித்த பின் எங்காவது மூலையில் மறந்து போய் போட்டு வைத்திருக்கக் கூடும் சில வீடுகளில் (என் வீட்டில் அப்படி செய்வது வழக்கமே இல்லை ...நிஜம் ...நம்புங்கள்!!!)சரி..சரி இட்லித் தட்டுக்களை ஒரு வழியாய் தேடி எடுத்தாயிற்று அல்லவா?! இனி பேச நேரம் இல்லை சரசரவென்று இரண்டு தட்டோ இல்லை ஒரே ஒரு பெரிய தட்டோ இட்லிப் பள்ளங்களில் அல்லது குழிகளில் அரைத்து வைத்த முக்கியமாக புளிக்க வைத்த இட்லி மாவை அங்கே ஊற்ற வேண்டும் .
ஏனோ ..தானோ என்றெல்லாம் ஊற்றி விடக் கூடாது இட்லி மாவை இட்லித் தட்டின் பள்ளங்களில் ..அதற்கென்று ஒரு ஸ்பெசல் முறை இருக்கிறதாம் என் பாட்டி சொல்லியிருக்கிறார்கள் ...........அது வந்து எப்படி என்றால் ...அதாவது ...அதாவது...அதாகப் பட்டது ...அது எப்படி என்றால்...!!!...அது வந்து ....
சரி ...சரி ....யாரும் பொறுமை இழக்க வேண்டாம் .
இதோடு இட்லி அவிப்பதை நிறுத்தி விட்டு ;
அடுத்த விஷயத்திற்குப் போய் விடலாம் ...அதுவே பதிவுக்கும் பதிவருக்கும் நலம் .
அதாகப் பட்டது இப்படியாகப் பட்ட பலவித சிரமங்களைப் பொருட்படுத்தாமல் நாம் (அம்மா ...அக்கா...அண்ணி...பாட்டி!!! இவர்களில் ஒருவர் தான் இந்த நாம் ...நாம் என்றால் நாம் இல்லை அந்த நாமில் என்ன தெளிவாகப் புரிகிறதா இல்லையா?!) தயாரிக்கும் இட்லிகளை உப்புச் சப்பில்லாத சில காம்பிநேசன்களில் சாப்பிட்டு வைக்கக் கூடவே கூடாது
(இந்நாள் வரையிலும் நாம் அப்படித் தானே செய்து கொண்டிருக்கிறோம் என்கிறீர்களா? இனி அப்படிப் பட்ட துரோகத்தை இட்லிக்கு நாம் கனவிலும் செய்யத் துணியக் கூடாது )
இட்லிக்கு எது சரி மேட்சிங் என்று ஒரு வரையறை செய்து விட முடியுமா நம்மால் ?அது உண்பவர்களைப் பொறுத்த விஷயம் ஆயிற்றே!?சரி புடவைக்கு எப்படி பொருத்தமாக மேட்சிங் பார்க்கிறோமோ அதே வகையில் இட்லிக்கு மேட்ச்சிங் பார்ப்போம் இப்போது நம்மால் இயன்றவரையிலும்,
இட்லி-சாம்பார் (இது கணவன் மனைவி உறவு போன்றதென்று வைத்துக் கொள்ளலாம் ...அருமையான மேட்சிங் )
இட்லி-மிளகாய்ப் பொடி பிளஸ் நல்லெண்ணெய்
இட்லி -தேங்காய் சட்னி
இட்லி -வெங்காயச் சட்னி
இட்லி-காரச் சட்னி
இட்லி-தக்காளிச் சட்னி
இட்லி-கொத்துமல்லி சட்னி
இட்லி -கோஷ்மல்லி
இட்லி - பாசிப் பருப்பு சட்னி
இட்லி- தயிர் பிளஸ் சர்க்கரை
இட்லி -நெய் பிளஸ் சர்க்கரை (அஸ்க்கா போட்டா நல்லாத்தான் இருக்கும் ப்ரிஸ்க்கா)
இட்லி- சிதம்பரம் கொத்சு (அபிஅப்பா தான் போடா சொன்னார் ...சித்தப்பா சொல்லைத் தட்டலாமோ!)
இட்லி - ஊறுகாய் (எங்கயாவது பஸ் நடுவழியில நின்னுட்ட ஊறுகாய் வச்சும் இட்லி சாப்பிடுவாங்களாம் எதோ கதைல படிச்சேன் )
இட்லி- மீந்து போன பருப்பு (எங்க பக்கத்து வீட்ல ஒரு அம்மா இப்படித் தான் இட்லிக் கொடுமை செய்றாங்க பல நேரம் ...இட்லி அழற சத்தம் என் காதில் விளராப்பல ஒரு பீல் )
இட்லி -மீன் குழம்பு (முள்ளும் மலரும் படத்துல ஒரு பாட்டு வருமே ...
"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்தரிக்காய்
நேத்து வச்ச மீன் குழம்பு
என்னை இழுக்குதடி ...."நெல்லுச் சோறுக்கு மட்டும் இல்லை இட்லிக்கும் கூட இழுக்கும் தான்)
கட்டக் கடசியா என்னோட இட்லி மேட்சிங் பத்தியும் சொல்லனுமே !?(யாரும் கேட்கலைனாலும் கூடத் தான் சொல்லியே ஆகணும்)
இட்லிக்கு என்ன தான் எல்லாரும் சாம்பார் ..சட்னி...கொத்சு ...மிளகாய்ப் பொடி பிளஸ் ஜோதிகா (நல்லெண்ணெய்யாம் !!!) நான் சொல்லலை அபிஅப்பா சொன்னார் .இன்ன பிற வஸ்துக்களை எல்லாம் வளைச்சு மாட்டினாலும் கூட ;
நம்ம பேவரிட் கோழிக் குழம்பு தான் .
என்ன ஒரு ஜோரா இருக்கும் தெரியுமா ?!
என்ன நான் சொல்றது சரி தானே?!!!
வந்து சொல்லிட்டுப் போங்கப்பா உங்க இட்லி நினைவுகளை .
Tuesday, March 24, 2009
ஒளடதமானது மஞ்சம்

மஞ்சள் மாறா
சுகந்தம் கொஞ்சும்
அஞ்சுக மங்கை
தங்க முகம் தான்
கெஞ்சுமோ
இன்னும்
மிஞ்சுமோ ?!
வேங்கை போலொரு
வேந்தன் அவனென
அஞ்சுவதல்லா
பிஞ்சு மனம் போல்
ஆசை களிற்றை
அடக்கி மீண்டதும்
ஒளடதமானது மஞ்சம்
அஞ்சனம் திருமஞ்சனம்
பஞ்சனை காணும் மந்திரம்
வந்தனம்
சங்கத் தமிழோ
காவியமோ
மின்னற் பொழுதின்
ஓவியமோ
பேசாப் பொருளின்
தூரிகையோ
காந்தள் மலரே
கண் துயிலாய்
எஞ்சும் காலை பொழுதே வா
வெளிச்சக் கதிர்கள் விரியட்டும்
வெயில் நிறம் இங்கே பரவட்டும்
மஞ்சள் முகங்கள் மினுங்கட்டும்
தங்கக் கனவுகள் பலிக்கட்டும் ...
Sunday, March 22, 2009
தொடரும் பயணம் பிண்டத்திலிருந்து பேரண்டம் வரை

உறக்கங்களில்லாமல்
நீளும்
சொர்க்கத்தின் நீட்சியில்
மண்வாசம்
வரைபடமாய்
மலர் வாசம்
மனப்பாடமாய் ...
ஏதோ... ஏதோ
திகட்டிப் போன
ஏதோ ஒரு நொடியிலோ
அன்றி
பெருங்கனவு பிடித்திழுத்த
மறு நொடியிலோ
ஆசையின் நெடி தாக்க
தட்டுத் தடுமாறி
விழுந்த இடம்
அம்மாவின் கருவறை
மறுபடி பிண்டமானேன்
பேரண்டம் புரியா
பயணம் தொடர்கிறது ...
இன்னும்
ஒருமுறை!!!
Thursday, March 19, 2009
தாம்பத்யத் தராசு ?!
Tuesday, March 17, 2009
சந்திரிகாவின் நியாயங்கள் (பார்ட்- 2 )
சந்திரிகா அப்படி என்ன சொன்னாள் ?
சுறு சுறுப்பாக இருப்பவளைப் போல வெளிப் பார்வைக்குப் பட்டாலும் பாவம் அவள் கண்களை தூக்கம் தின்று கொண்டிருப்பதைப் போல எனக்கொரு பிரமை .
அவள் சொன்ன பதில் இது தான் .
தேவராஜ் மாமா வீட்டுக் கட்டில் மாதிரி ஊருல எங்கயும் இல்லை பாட்டி ,அங்க இருந்து தான் வரேன்;படுத்தா எந்திரிக்க மனசே வரலை ,வெளிநாட்டுல இருந்து கப்பல்ல இல்ல வர வச்சு வாங்கி இருக்காராம்.
பொண்ணு காலேஜுக்குப் போயிருச்சு இல்ல ...அதான். இல்லனா இந்நேரம் கூப்புட மாட்டார்.
100 ரூவா தந்தார் ,எவ்ளோ நாளைக்கு வெறும் 100 ரூவாயே வாங்கிட்டு இருப்பேன் ,கூட ஒரு அம்பது குடுங்க மாமானா ...அவரு ,
இதுவே அதிகம்டீனுட்டார்.
என்ன இப்பிடி சொல்றீங்கனு கேட்டாக்க ...
இந்த மாதிரி கட்டில்ல படுக்க நீ தான் எனக்கு காசு தரனும்.இந்த ஊருக்குள்ள இப்பிடியாப் பட்ட கட்டில் எங்கனாச்சும் பார்த்திருக்கியாங்கறார் !!!
கண்ணன் ஸ்கூல்ல எங்கயோ சுற்றுலா போறாங்களாம் ...பணம் கொடும்மான்னு ஒரே நச்சரிப்பு ஒரு வாரமா ; அதான் போயிட்டு வந்தேன் .
இதைச் சொல்லும் பொது அவள் முகத்தில் " தான் செய்த செயலைப் பற்றியஎந்த ஒரு வித்யாசமான உணர்வையும் நான் காண முடியவில்லை .
வெறும் ஒரு ஸ்கூல் டூர் !!!
அதற்கு எதை பண்டமாற்று செய்திருந்தால் என்பதைப் பற்றி அவளுக்கேதும் இரண்டாம் பட்சக் கருத்தோ ...குழப்பமோ இல்லவே இல்லை .
சுறு சுறுப்பாக இருப்பவளைப் போல வெளிப் பார்வைக்குப் பட்டாலும் பாவம் அவள் கண்களை தூக்கம் தின்று கொண்டிருப்பதைப் போல எனக்கொரு பிரமை .
அவள் சொன்ன பதில் இது தான் .
தேவராஜ் மாமா வீட்டுக் கட்டில் மாதிரி ஊருல எங்கயும் இல்லை பாட்டி ,அங்க இருந்து தான் வரேன்;படுத்தா எந்திரிக்க மனசே வரலை ,வெளிநாட்டுல இருந்து கப்பல்ல இல்ல வர வச்சு வாங்கி இருக்காராம்.
பொண்ணு காலேஜுக்குப் போயிருச்சு இல்ல ...அதான். இல்லனா இந்நேரம் கூப்புட மாட்டார்.
100 ரூவா தந்தார் ,எவ்ளோ நாளைக்கு வெறும் 100 ரூவாயே வாங்கிட்டு இருப்பேன் ,கூட ஒரு அம்பது குடுங்க மாமானா ...அவரு ,
இதுவே அதிகம்டீனுட்டார்.
என்ன இப்பிடி சொல்றீங்கனு கேட்டாக்க ...
இந்த மாதிரி கட்டில்ல படுக்க நீ தான் எனக்கு காசு தரனும்.இந்த ஊருக்குள்ள இப்பிடியாப் பட்ட கட்டில் எங்கனாச்சும் பார்த்திருக்கியாங்கறார் !!!
கண்ணன் ஸ்கூல்ல எங்கயோ சுற்றுலா போறாங்களாம் ...பணம் கொடும்மான்னு ஒரே நச்சரிப்பு ஒரு வாரமா ; அதான் போயிட்டு வந்தேன் .
இதைச் சொல்லும் பொது அவள் முகத்தில் " தான் செய்த செயலைப் பற்றியஎந்த ஒரு வித்யாசமான உணர்வையும் நான் காண முடியவில்லை .
வெறும் ஒரு ஸ்கூல் டூர் !!!
அதற்கு எதை பண்டமாற்று செய்திருந்தால் என்பதைப் பற்றி அவளுக்கேதும் இரண்டாம் பட்சக் கருத்தோ ...குழப்பமோ இல்லவே இல்லை .
சந்திரிகா தொடர்வாள் ...(இப்போ என்ன அவசரம் ? நாளைக்கு சொல்றேன் மீதிய)
Subscribe to:
Posts (Atom)

