Showing posts with label எனக்குப் பிடித்தவர்கள். Show all posts
Showing posts with label எனக்குப் பிடித்தவர்கள். Show all posts

Wednesday, April 15, 2009

எனக்குப் பிடித்தவர்கள் ...(நண்பர் ஜமால் எழுத அழைத்த தொடர் பதிவு)

எனக்குப் பிடித்தவர்கள் ...இந்தப் பதிவை நண்பர் ஜமால் எழுத அழைத்து நாட்கள் பல கடந்து விட்ட நிலையில் இன்று இதை எழுதுகிறேன் ,எனக்குப் பிடித்தவர்கள் என்று லிஸ்ட் போட ஆரம்பித்தேன் ...அந்தப் பட்டியல் அது பாட்டுக்கு நீண்டு கொண்டே போகிறது ,பிரபலமானவர்களை பற்றிச் சொல்வதை காட்டிலும் சிறு வயதில் இருந்து நான் கடந்து வந்து கொண்டிருக்கும் எனது வாழ்க்கை பயணத்தில் என்னால் மறக்க முடியாத சில சுவாரஸ்ய மனிதர்களைப் பற்றி "எனக்குப் பிடித்தவர்கள் லிஸ்ட்டில் சொன்னால் என்ன என்று தோன்றியதால் இந்தப் பதிவு வந்தது இப்போது .

சரி இனி பதிவுக்குச் செல்லலாம் ...

எனக்கு 80 வயது ஆனாலும் கூட இன்று போலவே இவர்களை அன்றும் எனக்குப் பிடித்தே இருக்கக் கூடும் என்று நினைக்கத் தக்க வகையில் என்னால் மறக்க இயலா நபர்கள் இவர்கள் ,யார் அவர்கள் ?

1.ஒன்னாப்பு வாத்தியார்
2.ரூபி சிஸ்டரின் அப்பா
3.ஆண்டாள் டீச்சர்
4.பூமா என்றொரு பிரியமான சிநேகிதி
5.வெயிலு வந்தாள் என்ற வித்யாசமான பெயரில் அறிமுகமான பக்கத்து வீட்டு அக்கா
6.கே.எல்.ஆர் தாத்தா

இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன் ...மேலே நான் குறிப்பிட்ட நபர்களுக்குள் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை என்னவெனில் எவருமே தற்போது உயிருடன் இல்லை,அதனால் தானோ என்னவோ அவர்களைப் பற்றி எழுதத் தோன்றியது எனக்கு .

1.ஒண்ணாப்பு வாத்தியார்

முதலில் ஒன்னாப்பு வாத்தியார் (இவரது பெயர் எனக்கு நினைவில் இல்லை ...ஆனால் ஒற்றை நாடி தேகத்துடன் நல்ல பளீர் வெள்ளையில் வேஷ்டி ,சட்டையில் எப்போதும் கதை சொல்லிக் கொண்டிருக்கும் இவரை எனக்கு மட்டுமல்ல அன்று என்னுடன் பயின்ற எல்லா மாணவர்களுக்குமே மிகப் பிடிக்கும் மிக சுவாரஸ்யமான மனிதர் ,திருமணமே செய்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் நெற்றி நிறைய பால் வெள்ளையில் திருநீறு பூசிக் கொண்டு இவர் கதை சொல்லும் அழகே தனி தான் .இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பொறுமை இருப்பவர்கள் எனது முந்தைய இந்த பதிவைப் படித்துக் கொள்ளுங்கள் .

http://mrsdoubt.blogspot.com/2008/11/blog-post_18.html


2.ரூபி சிஸ்டரின் அப்பா
இவரை தாத்தா என்று அழைத்தாலும் கூட ரூபி சிஸ்டரின் அப்பா என்று சொன்னால் தான் அந்தப் பகுதி மக்களுக்குப் தெரியும் ,ரூபி சிஸ்டர் மானாமதுரையில் ஒரு கிறிஸ்த்தவ மருத்துவமனையில் அப்போது பணிபுரிந்த நர்ஸ் ,கறுப்பாக இருந்தாலும் சிஸ்டருக்கு களையான முகம் ,என் அம்மாவின் சிநேகிதியாக அறிமுகமான ரூபி சிஸ்டரின் வீட்டுக்கு எப்போதாயினும் விடுமுறை நாட்களில் அம்மா அழைத்துப் போவார் ,அப்படித் தான் எனக்கு ரூபி சிஸ்டரின் அப்பாவைத் தெரியும் ,தாத்தா பாரம்பரியமான கிறிஸ்த்தவக் குடும்பத்தை சேர்ந்தவர் அப்போதே அழகிய ஆங்கிலத்தில் தினம் டயரி எழுதும் பழக்கம் அவருக்கு இருந்தது ,அவரது வீட்டுக்கு செல்லும் எல்லாக் குழந்தைகளிடமும் தனது டயரியை நீட்டி வாசித்துப் பார்க்கச் சொல்லுவார் பளபளப்பான வெல்வெட் அட்டையுடன் வழ வழப்பான பக்கங்களுடன் சற்றே சாய்வாக தாத்தாவின் கையெழுத்தில் நிரம்பி இருக்கும் அந்த டயரி இன்றும் என் கண்ணை விட்டு மறையவில்லை ,எனக்கு டயரி எழுதும் பழக்கத்தை தாத்தா தான் முதன் முதலில் அறிமுகப் படுத்தினார் ,அந்த அளவில் நடிகர் மீசை முருகேசை ஞாபகப் படுத்தும் தாத்தாவும் கூட மறக்க இயலாத நபர் .
3.ஆண்டாள் டீச்சர்
டீச்சரைப் பற்றி புதுதாக நான் என்ன சொல்லிவிடப்போகிறேன் ..விருப்பமிருப்பவர்கள் ஆண்டாள் டீச்சரைப் பற்றி நான் முன்பே எழுதிய இந்த பதிவைப் பார்ர்த்துக் கொள்ளுங்கள் தமிழ்மணத்தில் சூடான இடுகைகளில் வந்த பதிவு இது ,"ஆண்டாள் டீச்சரும் பாலசந்தர் ஹீரோயின்களும் " என்ற தலைப்பில் .அந்தப் பதிவுக்கான சுட்டி கீழே.
4.பூமா என்றொரு பிரியமான சிநேகிதி
பூமாவைப் பற்றி என்ன சொல்ல? பூமா ஏழாம் வகுப்பு முடிந்து எட்டாம் வகுப்புக்கு என்னோடு வரவில்லை ,வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஆணான அவளது தந்தை அப்போது எதிர்பாராமல் இறந்து விட்டார் ,எட்டாம் வகுப்பில் சொந்தத் தாய்மாமனுக்கே அவள் திருமணம் செய்து வைக்கப் பட்டாள்,பாவம் பூமா ...இப்போது நினைத்தாலும் எனக்கு கண்களில் நீர் திரையிடும், தனது சிறுமிப் பருவத்தில் அதற்குண்டான எந்த உரிமைகளையும் அனுபவிக்காத அல்லது அனுபவிக்க அனுமதிக்கப் படாத சிறுமி அவள் . வெகு இளமையிலேயே கணவன்..குழந்தை என்று குடும்பம் என்ற சிக்கல்களுக்குள் உழன்று காணாமல் போனவள் .ஒற்றைக் கல் மூக்குத்தி ...ரெட்டைப் பின்னல் ...அழகான வண்டுக் கண்கள் ...இப்போதும் பூமாவை நினைத்தால் மனம் ஆறவில்லை தான், அவள் சொர்க்கத்தில் இருக்கக் கூடுமோ என்னவோ இப்போது ?!

5.வெயிலு வந்தாள் என்ற வித்யாசமான பெயரில் அறிமுகமான பக்கத்து வீட்டு அக்கா
இவரது பெயர் இது தான் ...குல தெய்வப்பெயராம்,நாங்கள் அங்கு வசித்த போது இவருக்கு வயது நிச்சயமாய் இருபத்து ஐந்துக்கு மேல் இருக்கும் ,திருமணம் முடிந்து அன்பான கணவருடன் தனிக் குடித்தனம் வேறு, கணவர் பரமேஸ்வரன் மிக நல்ல மனிதர் ,என் பாட்டியுடன் மனா மதுரை மார்கட் போவது,வீட்டுக்கு கரண்ட் பில் கட்டுவது என்று சிறு சிறு இன்றியமையாத உதவிகள் செய்வார்,கணவன்..மனைவி இருவர் மீதும் என் பாட்டிக்கு வெகு பிரியம் ,வீட்டில் என்ன பலகாரம் செய்தாலும் அவர்களுக்கும் அன்போடு கூப்பிட்டுக் கொடுப்பார் .வெயிலு வந்தா அக்காவுக்கு குழந்தைகள் இல்லை அப்போது ,நாங்கள் அம்மாவின் பணி மாறுதலின் பின் இடமாற்றம் செய்தோம் .
பிறகு சற்றேறக் குறைய மூன்று ஆண்டுகளின் பின் கேள்விப் பட்ட செய்தி மிக அதிர்ச்சி அளித்த ஒன்று ,வெயிலு வந்தா ...பரமேஷ்வரன் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்த பின் பரமேச்வரனின் சிமென்ட் ஆலை வேலை பரி போனதாம் ஆட்கள் குறைப்பில். இடையில் குடும்ப வறுமை இன்னும் பல சொல்ல தெரிய காரணங்களால் வெயிலு வந்தாளின் நடத்தை மாற பரமேஷ்வரன் தன் அன்பான மனைவியை தானே அரிவாளால் வெட்டிக் கொன்றார் .இது அப்போது பத்திரிகைகளில் கூட வந்திருக்கக் கூடும் . பாளையம் கோட்டை சிறையில் இருந்த பரமேஷ்வரன் தனக்காக வாதாட சொல்லி வழக்கறிஞராக இருந்த என் தாய் மாமாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிய வந்த செய்தி இது .
இன்று பரமேஷ்வரனுக்கு மறு திருமணம் நடந்திருக்கக் கூடும் .அந்தப் பெண் குழந்தை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை ,வெயிலு வந்தா ...பெயரைப் போலவே வினோதமான வாழ்வும்..முடிவும் இவருக்கு .
6.கே.எல்.ஆர் தாத்தா
என் கல்லூரி விடுமுறை நாட்களில் தாத்தாவின் நூலகம் எனக்கு மிக மகிழ்வைத் தந்த ஒரு விஷயம் ,யாருக்கும் அத்துணை எளிதாக தன் நூலகச் சாவியைத் தராத தாத்தா நான் என் ஐ.ஏ.எஸ் கனவைக் கூறியதும் வெகுவாக மழிந்து போய் உற்சாகமாக அவரது சிறிய ஆனால் செறிவான புத்தகங்கள் நிறைந்த நூலகத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த எனக்கு அனுமதி தந்தார் .
அங்கே தான் எத்தனை அருமையான புத்தகங்களை சேர்த்து வைத்திருந்தார் தாத்தா !!?? இப்போது நினைத்துப் பார்த்தால் நான் அப்போது சரியாக அந்த நூலகத்தைப் பயன்படுத்தி இன்னும் நிறைய வாசித்திருக்கலாமோ என்ற எண்ணம் நெருடுகிறது ,தாத்தா அவர் காலத்தில் நடந்த பல சுவையான சம்பவங்களைப் பற்றியெல்லாம் கூட மணிக் கணக்காகப் பேசுவார் ,
தெரிந்து கொள்ளம்மா ...பிறர் வாழ்வின் அனுபவங்கள் உனக்குப் பாடங்களாக இருக்கும், நான் என்று இல்லை ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் அனுபவமும் இன்னொருவனுக்கு பாடம் தான் ...படிப்பினை தான் என்பார். கூடவே பெண்கள் சாதிக்க வேண்டுமானால் திருமணம் என்பது மிகச் சரியான நபரோடு அமைய வேண்டும் .
இரட்டை மாட்டு வண்டியில் இரண்டு மாடுகளும் ஒத்து நடந்தால் தான் பயணம் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் உரிய வகையில் போய்ச் சேரும் ,ஒரு மாடு சண்டி மாடானால் மொத்த வண்டியும் குடை சாயும் "வாழ்க்கை மாட்டு வண்டி தான் மாடுகள் கணவனும்..மனைவியும் ஒத்த மனம் அமைய வேண்டும் என்பார் .
"எங்கள் திருமண வரவேற்புக்கு தம்பதி சமேதராக வந்திருந்து ஆசிர்வதித்த அந்த தாத்தாவையும் பாட்டியையும் என்னால் மறக்க இயலாது தான் .இப்போது தத்தா இல்லை சென்ற மாதத்தில் ஒருநாள் இவ்வுலகை விட்டு பிரிந்தது அவரது இன்னுயிர் . என்னைப் பொறுத்தவரை மிக நல்ல ஆத்மா .தாத்தா கோவையின் சமையற்கலை மேதை அன்னபூர்ணா திரு தாமோதரசாமி நாயுடு அவர்களின் சம்பந்தி என்பது கூடுதல் தகவல் .அவரது ஆத்மா சாந்தி அடைய எப்போதும் நான் பிரார்த்திக்கிறேன்.
பதிவு நீண்ட பதிவாகிக் கொண்டே போவது போல ஒரு எண்ணம் அதனால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன் .