
ஒரு சிறுகதையில் வாசித்தேன் ...
இப்படி இன்னும் பல நிறம் மாறா நிஜமான சந்தோசங்களை அள்ளித் தந்த பருவம் அது. சிறுமியாகவே இருக்கத்தான் முடியாது ஆனால் அந்த நேரத்து வாழ்வின் வர்ண ஜாலங்களை வருடங்கள் சில..பல கடந்த பின்னும் நினைத்துப் பார்ப்பதென்னவோ நல்ல அருங்கோடையில் கிராமத்து வீட்டின் வேப்பமர முன் தாழ்வாரத்தில் சிலீரென்று காற்று தாழ்ந்து பரவ சுகமாய் ஒரு சிறு தூரலில் நனைவதைப் போன்ற சிலீரென்ற அனுபவம் அது.
நீங்கள் சாப்பிட்டு ரசித்ததுண்டா கலர்...கலர்..ஜவ்வு மிட்டாய்களை ,அப்படியென்றால் எழுதுங்கள் உங்கள் இனிமையான சிறு பிராயத்து மலரும் நினைவுகளை பின்னூட்டங்களாக .
சந்திரிகா தொடர்வாள் ...(இப்போ என்ன அவசரம் ? நாளைக்கு சொல்றேன் மீதிய)
enna விஷயம் ...வாங்கின பணத்துக்கு வட்டியவும் காணோம்...அசலையும் காணோம். நாலஞ்சு மாசமா நீயும் ஆளே தட்டுப் படலை.
என்ன தாண்டீ நினைச்சுகிட்டு இருக்கா நீ ?
உங்க முதலாளி போனஸ் கீனஸ் ஒன்னும் தராமயா இருந்திருப்பாரு இன்னிக்கு வரைக்கும் ...!
பாட்டி இவ்வளவு அதட்டலாகக் கேட்டும் அவளென்னவோ மிரண்டதாகத் தெரியவில்லை .
பாப்பா இந்த மாதிரி சுடிதார்ல அரைக் கை வச்சி தச்சிக்கிறது தான் இப்போ புது ஃபேஷனாக்கும்?! என்று என் பதிலை எதிர் பார்ப்பவளாய் காட்டிக் கொண்டு "குடிக்க கொஞ்சம் தண்ணீ குடுங்க பாட்டி ...இன்னைக்கு நல்ல தண்ணிக் கிணத்துக்குப் போக தீரலை எனக்கு ...உப்புத் தண்ணி எம்புட்டுக் குடிச்சும் தாகம் தீரலை என்று தன் முந்தானையால் தன் முகத்துக்கு விசிறிக் கொண்டு பாட்டியைப் பார்த்துச் சொன்னாள் .
இங்கயே நல்ல தண்ணீ எடுக்கக் கிணத்துக்குப் போக ஆள் தேட வேண்டி இருக்கு .இருக்கிறது ரெண்டு குடம் இதுல உன்ன மாறி வரவ...போறவ எல்லாத்துக்கும் மோந்து மோந்து கொடுத்துட்டா இந்த வயசுல நான் அம்புட்டு தூரம் பானையத் தூக்கிட்டு அலையத் தான் வேணும்.
பாட்டி தணீர் கொண்டு வருவதைப் போல எந்த அறிகுறியும் இல்லாதிருக்க ...எனக்கென்னவோ "குடிக்கத் தானே கேட்டால் ...ஒரே ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்தால் குறைந்து விட மாட்டோமே என்ற நோக்கில் எடுத்து வந்து கொடுத்தேன்.
பாட்டி என்னை ஒன்றும் சொல்லவில்லை .
இந்தா பாரு சந்திரி ...நீ என்கிட்டே ரெண்டாயிரம் வாங்கி ஒன்னரை வருஷம் ஆச்சு...பையனுக்கு மஞ்சக் காமாலை ...போனஸ் போட்ட உடனே கொண்டாந்து கொடுத்துறேன்னு மூவாயிரம் வாங்கி அதுவும் இப்போ ஒரு வருஷம் முடிய போகுது .இன்னைய தேதிக்கு அஞ்சாயிரம் நிக்குது .வட்டியுமில்ல ...அசலுமில்ல, உன்னப் பார்த்துக் கேட்கலாம்னா நீ என்னடான்னா ஒழிஞ்சு விளாண்டுகிட்டு இருக்க ?!ஆளே கண்ணுல பட மாட்ட ...இன்னிக்கு என்ன அதிசயமா இங்கிட்டுக் காத்தடிச்சிருக்கு?
இப்போது தான் பாட்டி பேசுவது காதில் விழுந்தவலைப் போலவும்...அவளென்னவோ முந்தி வாங்கிய கடனை எல்லாம் ஒரே நாளில் கொடுக்கப் போகிறவளைப் போலவும் முகத்தை வைத்துக் கொண்டு சந்திரிகா ...பாட்டியிடம்...பாட்டி உங்க காசை எடுத்துக் கிட்டு நான் எங்க ஓடிரப் போறேன் ?இப்போ ஒரு அவசரம்...அர்ஜெண்டா ஒரு 1000 இப்பவே கொடுத்தீங்கன்னா மூனே நாள்ல உங்க மொத்தக் கடனையும் கொடுத்துருவேன்.இருந்தாக் குடுங்களேன் .பாட்டிக்கு வந்ததே ஆத்திரம் ...;என்னது விளாடரியா நீ ?ஒழுங்க முன்னாடி வாங்கின கடனைக் கட்டி முடி .உன் ஏமாத்து வேலைக்கெல்லாம் வேற ஆளைப் பார் ...நாங்க அம்புட்டுப் பெரிய பணக்காரங்க இல்ல ...உன் முதலாளி கிட்ட போய் கேளு ...எங்க பணத்தைக் கொடுத்துட்டு எங்கள ஆள விடு தாயி ...உனக்கு கோடிப் புண்ணியம்.
சந்திரிகா இந்த பதிலைத் தான் பாட்டியிடம் எதிர் பார்த்து வந்திருப்பவள் போல மெல்ல சோம்பல் முறித்துக் கொண்டு சுவற்றில் இருந்து தன் முதுகை நிமிர்த்தி கொட்டாவி விட்டாள் அந்தக் காலை நேரத்தில் .
அதென்னவோ பாட்டிக்கு அவள் கொட்டாவி விட்டது பிடிக்கவில்லை போல ;
என்னடீ இன்னேரமே இம்புட்டு வாயப் பிளக்கற ? ராத்திரியெல்லாம் தூங்காம வெட்டி முறிச்சியா என்னா?என்றார் அதட்டலாக ;
அதற்க்கு வெகு அசுவாரஸ்யமாக அவள் சொன்ன பதிலில் பாட்டி என்னை திடுக்கிட்டுப் பார்த்து விட்டு ;
நீ உள்ள போய் கத புஸ்தகம் படி கண்ணு ...நான் இவகிட்ட பேசிட்டு வரேன்
என்றார் படக்கென்று .
அவள் சொன்ன பதில் அப்படி ;
பாட்டி மனதிற்குள்ளாக சந்திரிகாவை திட்டிக் குமிப்பது அவளது முகபாவத்தில் என்னால் உணர முடிந்தது .ரெண்டும் கெட்டான் வயசுல ஒரு சின்னப் புள்ள கிட்டக்க நிக்கும் போது இந்த மூதேவி இப்படியா உளறித் தொலைப்பா ? கிராதகி .இப்படியெல்லாம் பாட்டி மனதிற்குள் அவளைத் திட்டி இருக்கலாம். நான் அவளிடம் கேட்கவில்லை
ஏன்...எதற்கு ...எப்படி என்றெல்லாம் ?!
சந்திரிகா அப்படி என்ன பதில சொன்னாள் ?
தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருங்கள் ...
தொடரும் ..................................................................................
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா கட்டை விரலில் பல் துலக்குபர்களை ?!
நான் பார்த்திருக்கிறேன் என் பால்ய வயதில் கிட்டத் தட்ட தினமும் ,கோபால் தாத்தா அப்படித்தான் பல் துலக்குவார். என் தாத்தா வீடு அந்தத் தெருவில் இருபுறமும் நீளமான திண்ணைகளுடன் சற்றே உயரமான வாசல் படிகளுடன் இருந்ததில் எதிர் வீட்டு பாத்ரூமில் கட்டை விரலில் பல் தேய்த்துக் கொண்டிருக்கும் கோபால் தாத்தாவுடன் இங்கிருந்தே சர்வ சகஜமாக உரையாடலாம் .பெரும்பாலும் என் தாத்தா அவருடன் அப்படித் தான் பேசிக் கொண்டிருப்பார் எல்லா காலை நேரங்களிலும்.
பெயருக்குத் தான் அது பாத் ரூமே தவிர யதார்த்தத்தில் அது ஒரு திறந்த மேற்கூரைகளுடன் அரைகுறையாகக் கட்டப் பட்ட ஒரு வெளிப்புற அறை .அங்கே தண்ணீர் தொட்டி,கழுநீர்ப் பானை ,அடிப்பாகம் உடைக்கப் பட்டு கவிழ்க்கப் பட்டிருக்கும் ஒன்றிரண்டு மண்பானைகள் (முளைப்பாரி போடும் காலங்களில் இதற்க்கு டிமாண்ட் ஜாஸ்தி. ஊரெல்லாம் இந்த உடைந்த மண் பானையின் மேற்புரத்திற்காக அலைவார்கள். சரி கோபால் தாத்தாவைப் பற்றி சொல்கிறேன்.
அப்போதெல்லாம் ஊரில் ரொம்ப நாட்கள் மழை வரத்து இல்லை என்றால் உடனே இளசுகளும் பெருஷுகளும் ஒன்றாகச் சேர்ந்து "மழைக் கஞ்சி" எடுப்பார்கள் . இதை தெலுங்கில் "வான கெஞ்சி" என்பது வழக்கம்.
"வானா லேது...வர்ஷா லேது
வான கெஞ்சி பொய்யண்டி;
புழுவா லேது புல்லா லேது
புல்லா கெஞ்சி பொய்யண்டி "
இதற்கான தமிழ் வடிவம் ...
"மேகம் இல்லை மழை இல்லை
மழைக் கஞ்சி ஊற்றுங்கள்
புழுக்கள் இல்லை புல்லும் இல்லை
புளித்த கஞ்சியாவது ஊற்றுங்கள் "என்பதாகும் .இந்த வரிகளை
கேலியும் கிண்டலுமாகப் பாடிக் கொண்டே கிராமம் முழுக்க வலம் வந்து ஜாதி வித்யாசம் பாராமல் எல்லா வீடுகளிலும் இருக்கும் பதார்த்தங்களை (கம்பு சோறு,கேழ்வரகுக் கூழ் ,அரிசி சோறு ,புளித்த தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பழைய சாதம் முதற்க் கொண்டு உப்புக் கருவாடு ...கத்தரிக்காய் புளிக் கூட்டு ,பச்சை வெங்காயம் ...பருப்பு ,பாசிப் பருப்பு துவையல்,கானத் துவையல் (குதிரை சாப்பிடுமே கொல்லு அது தான் கானப் பயிர் ...கொல்லுத் துவையல் சாப்பிட்டால் எடை குறையும் என்று எதிலோ படித்தேன்).இப்படி சகல வீடுகளிலும் போடப் படும் எல்லா உணவுகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரம் பண்ணிக் கொண்டு ஊரின் எல்லாத் தெருக்களையும் பாட்டுப் பாடிக் கொண்டே கொண்டாட்டமாக சுற்றி வருவார்கள்.
கடைசியில் இந்தக் கூட்டம் ஒரு வழியாக கம்மாய்கரையை அடைந்ததும் சேகரித்த உணவுகளை எல்லாம் கைகளால் அள்ளி அள்ளி எல்லாரும் உண்பார்கள் ,சில ஊர்களில் தேங்காய் சிரட்டை ,அரச இலைகளில் கூட பங்கிட்டு உண்பார்கள் .சாப்பிட்டு முடித்ததும் இயற்கை குளியலை கம்மாய் நீரில் நன்றாய் துழாவிக் குளித்து விட்டு சரியாகக் காய்ந்தும் காயாத ஈர உடைகள் மற்றும் ஈரத் தலைமுடிகள் சிலும்பிக் கொண்டு காற்றில் ஆட சாயங்கால வேளைகளில் வீடு திரும்புவார்கள் .
இதற்கும் கோபால் தாத்தாவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? மழைக் கஞ்சி எடுக்கும் போதெல்லாம் எங்கள் ஊரில் கோபால் தாத்தா தான் தலைமை தாங்குவார். (ஹா..ஹா...ஹா ...இந்த மழைக் கஞ்சி கூட்டத்தில் தலைமை தாங்குவது என்பது கூட்டத்தில் பேசுவதைப் போல அல்ல ...வீடு வீடாகப் போய் ;
"வான கெஞ்சி பொய்யண்டி "என்று கெத்து பாராமல் கேட்க வேண்டும் .அது தான் இந்த விழாவின் தலைவர் ஏற்க்க வேண்டிய அதிமுக்கியமான பொறுப்பு .கோபால் தாத்தா அந்தப் பொறுப்பை செவ்வனே செய்வார் மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை.வானம் பார்த்த பூமி அந்தக் கிராமாம் .நல்ல வெயில் காலங்களில் பொழுது போகவில்லை என்றால் இப்படி குழு குழுவென மழைக் கஞ்சி எடுத்து விடுவார்கள் அப்போதெல்லாம்.
வருண பகவான் உடனே மனமிரங்கி மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் என்ற நம்பிக்கை ...இது ஊர் ஐதீகம் அந்நாட்களில் .அகஸ்மாத்தாக மழை கொட்டியும் இருக்கிறது சில மழைக் கஞ்சி கொண்டாட்டங்கள் முடிந்ததும் .
இன்றைக்கு "மழைக் கஞ்சி" என்ற சொல்லே பலருக்கு மறந்திருக்கலாம்.
சும்மா ஒரு பகிர்வு . வாசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள்.
ஒற்றனை வாசிப்பவர்கள் கட்டாயம் இவர்களை மறக்க முடியாது.
யார் அவர்கள்?
ஜான் பீன்
இலாரியா
வபின்ஸ்கி
வென்டூரா
அபே குபேக்னா
பிராவோ
விக்டோரியா
கஜூகோ
ஜிம்
சூஸி
இன்னும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் ...ஆனாலும் கவனம் கலைப்பது இவர்களே ,மேலும் இந்நாவலில் "டகரஜான்" என்றொரு பெயர் வருகிறது...கஜூகோ தன் இந்திய எழுத்தாள நண்பரை இவ்விதம் அழைக்கிறாள் .அவ்வகையில் "டகரஜான்" என்பது நமது நாவல் ஆசிரியர் அசோகமித்திரன் தான் என்பது புலனாகின்றது.அசோகமித்திரன் எங்கனம் டகரஜான் ஆனார் என்பது கொஞ்சம் புரிந்தும்..புரியாமலும் இருக்கையில் அடுத்தடுத்த அத்தியாயங்கள் ஈர்க்கின்றன .ஆங்கில உச்சரிப்பில் இப்படியும் பெயர் திரிந்து போகலாம் என்பது புரிய சற்று நேரம் ஆகத் தான் செய்கிறது.
சரி இனி நாவலுக்குள் செல்வோம் .
நாவலின் முகப்பில் ஆசிரியர் கூறி இருப்பதைப் போல ...
இங்கே ஒரு நாயகன்...ஒரு களம்(ஐக்கிய அமேரிக்கா )
ஒரு கால கட்டம்-(1973- 1974) .......அமெரிக்காவின் அயோவா சிட்டி பலகலைக் கழகத்தில் நடைபெறும் "சர்வ தேச எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு கருத்தரங்கத்திற்கு இந்தியாவின் சார்பில் நமது நாயகன் அழைக்கப் படுகிறார், நாயகன் இங்கு எழுத்தாளர் அசேரகமித்ரனாகவே இருக்கக் கூடும் .
வெறும் ஒருநாள்...ஒரு வாரத்தில் முடியும் நிகழ்ச்சி அல்ல அது...சுமார் ஏழு மாதங்கள் சக அயல் தேசத்து எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் இவர்களைத் தவிரவும் அயோவா பல்கலை கழகத்தில் பயிலும் இதர மாணவ மாணவிகள் இவர்களுடனே உண்டு உறங்கி பயணித்து முடிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி அது.
அங்கே எழுத்தாளர் சந்திக்கும் பல்வேறு மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களையும் ...அவர்களுடைய திறமைகள் மற்றும் அடாவடித் தனங்கள்...சில நேரங்களில் முட்டாள் தனங்கள் ...இயலாமைகள்,மனித குணங்களின் பல மாறுபட்ட பல வடிவங்களை தமது அனுபவங்களின் வாயிலாக சிறு நகைச்சுவை இழையோட தொகுத்து அளித்துள்ளார்.
ஜான் பீன் என்பவன் இவர்களை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லப் பணிக்கப் பட்ட ஒரு அமெரிக்க விரிவுரையாளன் .முதல் aத்தியாயத்தில் அறிமுகம் ஆகி இடையிடையே சில இடங்களில் தென்பட்டு கடைசியில் டகரஜானை இந்தியாவுக்கு விமானம் ஏற்றி அனுப்பி வைக்கும் வரை நாம் ஜானை நாவலில் புறக்கணிக்க இயலாது. தன் பணியை செவ்வனே செய்யும் ஒரு மனிதனாக இவனை ஆசிரியர் அறிமுகப் படுத்தியுள்ளார்.அவ்வளவே!
அடுத்த நபர் வென்டூரா ...பிரேசிலைச் சேர்ந்த நீக்ரோ இனத்தவன் ஆன வென்டூரா கொஞ்சமே நாவலில் வந்தாலும் மிக அழுத்தமான குணாதிசயம் .சிவப்பு ஒயினை அளவுக்கு அதிகமாக அருந்தி விட்டு மிசிசிப்பி நதிப் பயணத்தின் போது கூடை கூடையாக டகரஜானின் மீது வாந்தி எடுக்கும் போதாகட்டும் ...இப்போதே வா என வற்ப்புறுத்தி அழைத்துச் சென்று "கே. மார்ட் எனும் பிரபலமான அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் "டைப் ரைட்ட்ர்" வாங்கும் போதாகட்டும் ...வாங்கிய சாதனத்தை உபயோகிக்கத் தெரியாமல் ரிப்பேர் செய்து விட்டு உடனே டகர ஜானை அடம்பிடித்து அழைத்துப் போய் வேறு " டைப் ரைட்ட்ர் "வாங்கிக் கொண்டு வந்ததாகட்டும் .வென்டூரா ஒரு வித்யாசமான நபர் இங்கு .
முதல் முதலாக அறிமுகப் படுத்திக் கொள்ளும் இடத்தில் ;
அசோகமித்திரன் "நான் இந்தியாவில் இருந்து வருகிறேன் என்கிறார்...வென்டூராவிடம்; அதற்க்கு வென்டூரா ..."பிரேசில் "என்கிறான். பதிலுக்கு அசோகமித்திரன் "ரொம்பப் பக்கம் தான் " என்று கூற ...வென்டூரா ...இல்லை வெகு தூரம் என்கிறான். அதற்கான காரணம் புரியாமல் யோசிக்கும் போது தான்...அவனுக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது என்ற உண்மை புலப் படுகிறது.வெறும் வார்த்தைகள் தான் ஆனாலும் எத்தனை அர்த்தமுள்ளதாக்கி விட்டான் அந்த பிரேசில் நாட்டு எழுத்தாளன் என்று ஆச்சர்யம் வரத்தான் செய்யும் வாசிப்பவர்களுக்கு. மொழி தெரியாதவர்கள் மிக அருகில் இருப்பினும் இடைவெளி ரொம்ப தூரமே தான்.உண்மை தானே!?
இங்கே இலாரியாவை நாம் மறந்து விட முடியாது.தகப்பனது அன்பு உரிய வகையில் கிடைக்காமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்த இலாரியா தன் தாயை தினம் அடித்து கொடுமைப் படுத்தும் தகப்பனை வெறுக்கிறாள். கூடவே தான் நம்பிக் காதலித்த தன் காதலனும் தன்னை நம்பிக்கை துரோகம் இழைக்கவே அவள் மிக நொந்து சுய இறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறாள். பல மொழிப் புலமை கொண்ட இளம்பெண்ணான இலாரியா ஒருகட்டத்தில் டகரஜான் அவளிடத்தில் காட்டும் சின்னப் பரிவுக்கே அவரைக் காதலிக்கத் தொடங்கி விடுகிறாள். இதை அறிந்து அவளைத் தவிர்க்க விரும்பும் டகரஜான் அவளுக்காக வருந்துகிறார். பாவம் இலாரியா என்று நினைப்பதைக் காட்டிலும் அவளுக்கு அவர் சுய இரக்கத்தில் இருந்து மீண்டு வந்தால் அவளுக்கு இருக்கும் திறமைக்கு அவள் மிகப் பெரிய புகழ் அடையக் கூடும் என்று உற்சாகப் படுத்திவிட்டு பின் அவளது கண்களில் படுவதை தவிர்த்து விடுகிறார். இங்கே இவரது தர்ம சங்கடம் சில சொற்களில் நமக்கு வெகு அருமையாக விளக்கப் பட்டிருக்கும்.
குறிப்பாக எத்தியோப்பிய நாவலாசிரியரான அபே குபெக்னாவைப் பற்றி அவர் விவரிக்கும் இடங்களில் "அங்கதச்சுவை " முழுமை பெற்ற வரிகளை நாம் கண்டு சிரிக்கலாம்.எழுத்தாளர்களிலும் முட்டாள்கள் உண்டு...முரடர்கள் உண்டு ...என்பதை அபே குபெக்னாவை வைத்து அறிந்து கொள்ளலாம்.
அபே தானாக வழிய வந்து தாகறஜாநிடம் சிநேதம் கொள்கிறான்.ஆனாள் அவனது நோக்கம் இவரது சிநேதம் மட்டுமே அல்ல. டகரஜானுடன் சகஜமாகப் பழகும் ஒரு ஜப்பானியப் பெண் கவிதாயினியான "கஜூகோ" வின் தொடர்பைப் பெறவே அபே இவரை வலியத் தேடி வருகிறான். ஆனால் கஜூகோ என்ன காரணத்திற்காகவோ அபேயை வெறுக்கிறாள். அபே உடன் வரின் உன் நட்பும் கூட எனக்கு வேண்டாம் என டகரஜான்(அசோகமித்திரன்) இடம் சண்டையிடும் அளவுக்கு அவளது வெறுப்பு மிதமிஞ்சி நிற்கிறது அபேயிடம் .இதனால் கோபம் கொண்ட அபே நமது இந்திய எழுத்தாளரை ஒரு முறை அடித்தே விடுகிறான். அத்தோடு சரி பிறகு அவன் இவரோடு சிநேதம் பாராட்டவே இல்லை.
அயோவா சிட்டி யில் "டகரஜானை அழைத்துக் கொண்டு அபே சூட் தைத்துக் கொள்ள செல்லும் இடமும் ...வாராந்திர மளிகைச் சாமான் வாங்க அனைத்து எழுத்தாளர்களுடனும் ஷாப்பிங் சென்று மூட்டை மூட்டையாக இறைச்சியும் ...இன்ன பிற பொருட்களோடு "எனக்கு ரொம்பப் பிடிக்கும் ...எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறிக் கொண்டே ஒரு குட்டி சாக்குப் பை நிறைய "மிளகாய்" வாங்கிக் குவித்து அதை எடுத்துக் கொண்டு தங்குமிடம் செல்வதும் மிக்க ரசமான இடங்கள் .மொத்தத்தில் எத்தியோப்பிய அரசரின் தம்பியின் நெருங்கிய நண்பன் என தன்னை கூறிக் கொண்ட அபே குபேக்னா ஒரு மிகச் சிறந்த முரட்டுக் கோமாளியாகவேவாசிப்பவர்களின் கருத்தில் நிறையக் கூடும்.
இவ்விதம் இந்நாவல் சொல்கிறது அபே குபேக்னா பற்றி. அபே குபேக்னா தனது எத்தியோப்பிய மொழியில் எழுதிய நாவலின் தமிழாக்கமே "ஒற்றன்" இந்நாவலை டெல்லி புத்தகத் திருவிழாவில் டகரஜான் எவ்வளவு தேடியும் அவருக்கு கடைசி வரையில் அந்த நாவல் கிடைத்த பாடில்லை .
அடுத்த நபர் பிராவோ ...போலந்து நாட்டு நாவல் ஆசிரியனான "பிராவோ " வெகு துல்லியமான திட்டமிடலுடன் கூடிய ஒரு நபராக தான் டகரஜானுக்கு அறிமுகம் ஆகிறான். ஒரு நாவலுக்கு யாரேனும் வரைபடம் தயாரிக்க இயலுமா? இதை வாசிக்கையில் எனக்கும் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஆனால் பிராவோவின் வரை படத்தை அவன் வாயிலாக விளக்கும் ஆசிரியர் பிராவோ மீது நமக்கும் ஒரு பிரமிப்பையே ஏற்படுத்துகிறார். தனது எழுத்தின் மீது தான் கொண்ட வெறியினால் "நாவல் முடியும் வரை பூட்டிய அறையைக் கூட திறவாமல் "ஏறத்தாழ ஒரு மாத காலம் யார் கண்ணிலும் படாமல் நாவலை தனது தாய் மொழியில் எழுதும் பிராவோ கடைசியில் மிக வருந்துகிறான். காரணம் ஒரு பெண். அது அவன் மனைவி அல்ல.
அந்த மட்டில் அவனது குட்டும் வெளிப் படுகிறது. எத்தனையோ அருமையாகத் திட்டமிடலாம். திட்டமிடுவதில் தான் வெகு சாமர்த்தியசாலி எனப் பிறரை நம்பவும் வைக்கலாம் சில காலத்திற்கு ...ஆனாலும் என்றேனும் உண்மை வெளிப் பட்டே தீரும். அப்படியே ஆகிறது, தனது நாவலை முடித்த பின்னும் அதில் பல குறைகள் கண்டு அதை அச்சுக்கு கொண்டு வர முடியாமல் குழப்பத்தில் ஆழ்கிறான் பிராவோ.திட்டமிடுதலில் இருந்த சாமர்த்தியம் அதை நிறைவேற்றுவதில் இல்லாமையால் பிராவோ தன் மனைவியின் வாயால் " இதுவரை நீ எழுதிய நாவல்களை இதுவே மிக மோசமானது" என்று கேலி செய்யப் படுகிறான்.
இப்படி முடிகிறது இவனுடன் ஆன நட்பு .
அடுத்து வபின்ஸ்கி ...அறைநண்பன் (ஒரே அறையைப் பகிர்ந்து கொள்கிறான்) அறை மாட்டும் அல்ல ஒரே குளிர்பதனப் பெட்டியையும். அவன் நிரப்பி வைத்த பூண்டின் மணம் கமழும் காப்பியை அருந்த இயலாமல் ...அருந்தாமல் இருக்கவும் முடியாமல் டகரஜான் பாடு படு திண்டாட்டம் .அந்த அறையில் தனி இருக்கையிலேயே வபின்ச்கியின் அம்மா இறந்து போக அவனது துயரம் கண்டு தானும் மணம் கலங்குகிறார் ஆசிரியர்.
விக்டோரியாவை பற்றி சொல்ல வேண்டுமெனில் அவள் ஒரு திறமை மிக்க பெண் என்பதை தாண்டி அவள் தனியாக நாவலோ ...கவிதையோ எழுதியவலைப் போல தெரியவரவில்லை இங்கு. சொல்லப் போனால் .மற்ற சக எழுத்தாளர்கள் அனைவரும் எழுதிய அல்லது வாசித்த சில கவிதைகளை ஒருங்கிணைத்து அவள் ஒரு மேடை நாடகம் நடத்திக் காட்டினாள்.அதில் நமது "ஞானக் கூத்தனின் "அம்மாவின் பொய்கள் என்ற கவிதையும் இடம் பெற்ற பொது அந்த நாடகத்தின் அர்த்தமே கனமுள்ளதாகி பலரையும் ரசித்துக் கை தட்ட வைக்கிறது. இதைக் கண்டு வியந்து போய்த்தான் டகரஜான் அவளிடம் பேசுகிறார். ஆக விக்டோரியாவும் இங்கே மறக்க முடியாத பெண்ணாகிறாள்.
இவளோடு கூட காணும் சக எழுத்தாளர்கள் அனைவரோடும் நட்பு வளர்க்கவே விரும்புபவலான ஜப்பானிய கவிதாயினி "கஜூகோ" இவள் தனக்குப் பிடித்த நண்பர்கள் அனைவரையுமே கட்டிக் கொண்டு முத்தமிடுவது இன்னும் அங்கதம். இவளுக்கு ஏனோ ஆப்பிரிக்கர்களை மிகப் பிடித்திருந்தும் "அபே குபெக்னாவை மட்டும் மிக வெறுக்கிறாள்?!" என்ன செய்திருக்கக் கூடும் அபே?! புரிந்தும் புரியாத புதிர் !!! ஒருவேளை அபே அவளுக்கு ஒரு முள்ளம் பன்றி போலக் கூட தோன்றி இருக்கக் கூடுமோ என்னவோ?!இப்படித் தான் விவரிக்கிறார் ஆசிரியர் இவளை.
பிறகு ஜிம் ...மற்றும் சூஸி...ஜிம் ஒரு அற்புதமான ஓவியன். சூஸி "உலோக கலைப் பொருட்கள் மற்றும் வார்ப்பட கலைப் பொருட்கள் தயாரிப்பதில் நிபுணி ...அவளது கற்பனையில் உதிக்கும் உருவங்களை எல்லாம் கலைப் பொருட்கள் ஆக்குவதில் அவள் திறம் மிக்கவள். இருவரும் ஒரே வீட்டில் ஒரே அறையில் கூட சேர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் தம்பதிகள் அல்ல!சூஸி யின் கணவன் மிகப் பெரும் பணக்காரன்.சூஸி க்கு விவாகரத்து தர மறுக்கும் அவளது கணவன் "புதிதாக அவளைச் சந்திக்க வரும் நபர்கள் அனைவரையுமே அவளது புதுக் காதலர்கள் என்றே எண்ணிக் கொள்வானாம்.! "ஜிம்மி சந்திக்க வரும் டகரஜானையும் அவன் சூச்யின் புது அன்னியக் காதலன் என்று எண்ணிக் கொண்டு துப்பாக்கியைத் தூக்கி கொண்டு சுட்டுக் கொள்ளத் தேடும் போது பயத்தோடு சிரிப்பும் வெடித்துக் கொண்டு தான் கிளம்புகிறது.
ஒரு எழுத்தாளர் அந்நிய மண்ணில் சர்வ தேச எழுத்தாளர்களை சந்தித்து ஏழு மாதங்கள் தங்கி அவர்களது கலாசாரத்தை கொஞ்சமேனும் அறிந்து கொண்டு நமது இந்தியக் கலாச்சாரத்தை இத்தன்னூண்டாவது அவர்களுக்கும் புரிய வைக்க முடிந்ததோ இல்லையோ ஏராளமான வாழ்வியல் அனுபவப் பாடங்களை அவர் கற்றுக் கொண்டார் என்ற நிஜம் இந்நாவல் மூலம் நமக்கு உறைக்கத்தான் செய்கிறது. இங்கு அசோகமித்திரன் அவர்கள் தனக்கு அங்கு நேர்ந்த சம்பவங்களை அல்லது தான் சந்திக்க நேர்ந்த விஷயங்கள் அனைத்தையும் மெல்லிய நகைச்சுவை இழையோட "புனை கதை "வடிவில் அளித்துள்ளமை அருமை.
அமெரிக்க குளிர்...அங்குள்ள பஸ்கள் இயங்கும் முறை ...அமெரிக்க குடும்பங்களின் விருந்தோம்பும் முறைகள் ...பனியில் உறைந்து உறைந்து விரைத்துப் போக முயலும் விரல்களை தணலில் காட்டி வெம்மை ஏற்றுவதைப் போலவே அங்கே குளிர் தாங்காது உழலும் போதும் கூட இங்கே இந்தியாவில் தனது குடும்பம் மற்றும் வீட்டைப் பற்றி எழும் நினைவுகளை அசை போடுவதிலும் அசோகமித்திரன் தனது தனித்துவத்தை பதிந்து செல்கிறார். மகன்...மனைவியுடன் தொலைபேசியில் உரையாட எழும் எண்ணம்...சென்னையின் மழைக் காலம் என்று அவர் தொட்டுச் செல்லும் இடங்கள் எல்லாமே வாசிக்க அருமையாகத் தான் இருந்தன எனக்கு.... மற்றவர்களுக்கு எப்படி என்று இந்த நாவலை வாசித்தவர்கள் யாராயினும் எனக்கு பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
நாவல் : ஒற்றன்
ஆசிரியர்: அசோகமித்திரன்
வெளியீடு : காலச் சுவடு பதிப்பகம்
விலை : ரூ .100
திருச் சிற்றம்பலத்தின் மனைவி "தையல் எனும் தையல் நாயகி "
அப்துல் கரீமின் மூன்று மனைவிகள்
முதல் மனைவி ரஹ்மானியா
இரண்டாம் மனைவி வகீதா
மூன்றாம் மனைவியான பதின் மூன்றே வயதான "சுரையா"
இவர்களில் வகீதாவின் அன்பைப் பெற்ற சந்தீபா எனும் ஏழைச் சிறுவன் .
கிருஷ்ணப்பக் கரையாளரின் காதலியாக வரும் நடுத்தர வயது ஆங்கிலோ இந்தியப் பெண் எலிசபெத் (சட்டைகாரி - இப்படித்தான் சொல்வார்களாம் ஆங்கிலோ இந்தியப் பெண்களை அந்நாளில்)
சதாசிவப் பண்டாரத்தின் அம்மா ...பண்டாரத்தின் நாயுடனான பிரயாணத்தில் இடர்படும் ஒரு பெண் ...இவளுடன் கூடி ஒரு குழந்தை பெரும் தருணத்தில் பண்டாரத்தை நாய் மறுபடியும் தன் போக்கில் இழுத்துக் கொண்டு செல்கிறது.
திருச் சிற்றம்பலம் மேற்படிப்புக்கு லண்டன் செல்லும் பொது கப்பலில் உடன் வரும் இந்திய நண்பனாய் "சற்குணம் "
திருச் சிற்றம்பலத்தின் லண்டன் பேராசிரியர் ...இவனை மகனைப் போல நடத்தும் பேராசிரியரின் மனைவி,
பத்ரகிரி...திருச் சிற்றம்பலம் இவர்களது பாசமற்ற தந்தை ...பாசம் நிறைந்த சித்தி நங்கை ...தையலின் வினோதமான தோற்றமும் செயல்பாடுகளும் கொண்ட"நெல்லிவலை" அத்தை ; அப்துல் கரீமின் கனவில் வந்து அவரது வாழ்வின் பாதையை சில நேரங்களில் தீர்மானித்துச் செல்லும் பக்கீர் அல் முசாபர் .
நில அளவைப் பொறியாளர் லாம்டன் .
நட்சத்திரங்களை கணக்கிடும் இன்னொரு அயல் நாட்டவன் .
அவனுக்கு உதவ பணியமர்த்தப் பட்ட ஏ .எஸ் .ஐயர் .
கிருஷ்ணப்ப கரையாளரின் எஸ்டேட்டில் திருட வந்து மாட்டிக் கொண்ட ஒரு திருடன் ...அவனது உதவியாள நண்பன் ,இப்படி நாவலில் பல கதா பாத்திரங்கள் மனதில் நிற்கவே செய்கின்றன.
கதை சுருக்கம்:-
நாவலை
இப்படி ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம் .
வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கையை வெவ்வேறு விதமாக நாவல் நகர்த்திக் கொண்டு சென்றாலும் கூட கதை நிகழும் கால கட்டம் கி.பி.1600 இன் பிற்பகுதி என்றவகையில் அனைவரையும் வெள்ளையர்களின் அதிகாரம் ஒன்றிணைக்கிறது.,அதோடு கூட அப்துல் கரீம் ரோஜாக்களில் இருந்து வடித்து எடுக்கும் ஒரு வித வாசனாதி தைலமான "யாமம்" என்ற பெயரிடப் பட்ட அத்தரும் இவர்களின் வாழ்வை ஒன்றிணைத்துச் செல்கிறது.
யாமம் :
யாமம் என்பது இரவின் ஒரு பொழுதை குறிக்கும். அத்தருக்கும் யாமத்துக்கும் வெகுவான சம்பந்தம் உண்டு என்பதாலோ என்னவோ ஆசிரியர் இந்நாவலுக்கு "யாமம்" என்ற பெயர் சூட்டியமை சாலப் பொருந்துகிறது.சங்க இலக்கியங்கள் காட்டும் சிறு்பெழுதுகளில் யாமமும் ஒன்று ;
வைகறை விடியலைக் குறிப்பதைப் போல யாமம் "இரவை" குறிக்கும். இரவுப் பொழுது தம்பதிகளுக்கு இனிமை கூட்டக் கூடிய ஒரு பொழுதல்லவா? அங்ஙனமே இவ்விடத்தில் நாவலில் வரும் எல்லா கதாபாத்திரங்களுமே "யாமத்தல்" ஈர்க்கப் பட்டு அதன் அலாதியான நறுமணத்தில் மிதந்து அதனின்றும் மீட்க அல்லது மீள முடியாதவர்களாகி விடுகின்றனர்.மதரா பட்டினத்தில் வாழும் சகலரையும் அவ்வமயம் இந்த "யாமம் " எனும் அத்தர் ஆட்டிப் படைக்கிறது. இந்நின்னவர்கள் மட்டும் தான் என்று இல்லை அப்துல் கரீமின் அத்தர் கடை இருக்கும் மீர் சாஹிப் மார்க்கெட்டில் எல்லோருமே அத்தர் வாங்கிச் செல்கிறார்கள்.இதனால் அப்துல் கரீமும் அவரது மனைவிகளும் செல்வச் செழிப்பான வாழ்வை அனுபவிக்கிறார்கள்.
அப்துல் கரீம் ஒரு கடல் வணிகர் ...அவரது வாழ்வை அவரது கனவுகளில் அடிக்கடி வரும் "அல் முசாபர் எனும் பக்கீர் " பல சமயங்களில் வழி நடத்திச் செல்கிறார் . இப்படியாக முதல் மனைவி ரஹ்மானியாவுக்குப் பின் வகீதாவை மணந்த அப்துல் கரீம் அதன் பிறகு ஒரு கடல் பயணத்தில் காணாமல் போய் வெகு சிரமப் பட்டு பல ஆண்டுகளின் பின் திரும்பி வருகிறார். அப்போது அவரது கனவில் தோன்றிய பக்கீரின் சொற்படி "வாசனையின் திறவுகோல் " எனும் பெயரில் ஆற்காட்டில் ஒரு ரோஜாத் தோட்டம் அமைக்கிறார்.அங்கு மலரும் ரோஜாக்களில் இருந்தே "அத்தர் " தாயாரிக்கப் பட்டு மதரா பட்டினத்தையே தன் வயமாககுகிறது.
இத்தனை மாயாஜாலங்கள் செய்யும் அத்தரை ஒரு ஆண்மகனே வடித்து எடுக்கத் தகுதியானவன் என்று அப்துல் கரீம் நம்பியதால் அவருக்கு ஆண்குழந்தையின் மீது வெகுவாக ஆசை மேலெழுகிறது.இப்படி பேரோடும்..புகழோடும் செல்வச் செழிப்பில் திளைத்த அப்துல்கரீம் ஆண்குழந்தை வேண்டி மூன்றாவதாக "சுரையா" வைத் திருமணம் செய்து கொள்கிறார்.
ஆனாலும் விதி வலியது கடைசி வரை அவருக்கு ஆண்குழந்தையே பிறக்காமல் முதல் மனைவி ரஹ்மானியாவிற்கு மட்டும் ஒரே ஒரு பெண் குழந்தை என்ற நிலையில் அப்துல் கரீமின் மனம் அத்தர் தயாரிப்பில் இருந்து "குதிரைப் பந்தயத்தில்" திரும்பி விடுகிறது.
குதிரையின் வாலில் கட்டிய பணம் பின்னாட்களில் என்ன ஆகக் கூடுமே அது தவறாது நடந்து அப்துல் கரீமின் செல்வம் எல்லாம் கரைந்து ஒருநாளில் கரீம் எவர் கண்ணுக்கும் அகப் படாதவராகி "அந்தர் தியானமாகிறார்".
கணவரால் கைவிடப் பட்ட அந்த மூன்று அபலைப் பெண்களும் என்ன செய்வார்கள்?! பாவம் செல்வச் செழிப்போடு இருந்த காலத்தில் ஒருவருக்கொருவர் பொறாமையில் வம்பு பேசி சண்டை சச்சரவு என்றிருந்த மூவரும் இப்போது ஒரு தாய் வயிற்றில் பிறந்த பெண் மக்களாகி ஒற்றுமையுடன் வயிற்றுப் பாட்டிற்க்காக குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மீன் விற்கும் நிலைமைக்கு அவர்களது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து விடுகிறது.
கடைசியில் அப்போது மதரா பட்டினத்தில் பரவிய காலராவிற்கு ரஹ்மானியாவும் ...உதவிக்கென இருந்த ஒரே ஆண் துணையான எடுபிடிச் சிறுவன் சந்தீபாவும் பலியான பின் மற்ற இருபெண்களும் தத்தமது பிறந்தகம் நோக்கிச் செல்வதோடு அவர்களது கதை முடிகிறது .
அடுத்து பத்ரகிரியும் விஷாலாவும் அவர்களது வாழ்வில் இடைப் படும் தையலும் :-
பத்ரகிரி லாம்டனின் நில அளவைப் பணியில் ஊதியம் பெரும் ஒரு இந்திய ஊழியன் ...அவனுக்கு விஷாலா என்று ஒரு சாந்த குணம் நிரம்பிய அழகிய மனைவி ...பெயர் சொல்ல ஒரு ஆண்குழந்தை என்று அமைதியான வாழ்வு அவனுடையது.கதைப் படி மயிலை பார்த்த சாரதி கோயிலின் பின் புறத்தில் பத்ரகிரியின் வீடு .
பத்ரகிரியைப் பற்றி பேசுகையில் நாம் அவனது இளம் பிராயத்தையும் கொஞ்சம் கவனமாகப் பார்த்தால் பின்னாட்களில் அவன் தனது வாழ்வை சிக்கலாக்கிக் கொண்டதற்கு இளம் பிராயத்தில் அவனது வாழவல் அவன் சந்தித்த பெரும் துயரமே கூட காரணமாக இருந்திருக்கக் கூடுமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
சுயநலமே உருவான ஒரு தந்தை ...அவரால் ஒரே வீட்டில் வாழ்ந்தும் புறக்கணிக்கப் பட்ட நோயுற்ற தாய் ...கூடவே கைக்குழந்தையான தம்பி திருச்சிற்றம்பலம் ...இப்படியான சூழலில் ஒரு நாள் தாயின் இறப்பின் பின் தந்தையின் உறவினர்களாலும் தந்தையாலுமே வேண்டாம் என ஒதுக்கப் பட்டு சித்தி வீட்டில் சித்தியின் கவனிப்பில் வளரும் நிலைக்குத் தள்ளப் பட்ட சோகம் நிறைந்தது பத்ரகிரிய்ன் இளம் பருவம் .
பத்ரகிரி அவனது தம்பி திருச் சிற்றமபலத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவனாகக் கதையில் காட்டப் படுகிறான் .பின் எதற்காக தம்பி மனைவியுடன் காதல் கொள்கிறான் என்பது கொஞ்சம் நெருடுகிறது.அதிலும் விஷாலா போன்ற அன்ன அனுசரணையான மனைவி இருக்கையில் பத்ரகிரி ஏன் தன் வாழ்வை தானே இடியாப்பச் சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும் என்று படிக்கும் போது புத்தி கேள்வி கேட்க தவறுவதில்லை .
அதிலும் தானே விருப்பப் பட்டு மேற்ப்படிப்புக்காக தம்பியை லண்டனுக்கு அனுப்பி விட்டு இத்தகைய செயலை பத்ரகிரி செய்யக் கடவது அத்தனை நயமாகப் படவில்லை.இதில் இவனை மட்டும் குற்றம் சொல்லி விட இயலாது. திருச் சிற்றம்பலத்தின் மனைவியான தையல் விலகிச் செல்லும் மைத்துனனிடம் சதா மையலுடன் பழகி அவனது கவனத்தைக் கலைப்பது வருத்தத்தையே தருகிறது.
பத்ரகிரி ..விஷாலா...தையல் மூவரும் சர்க்கஸ் பார்க்கச் செல்கிறார்கள் ...பாதியில் அங்கே எதோ கலவரமாகி கூட்டம் சிதறி ஓடியதில் விஷாலா கூட்டத்தில் காணாமல் போகிறாள் குழந்தையுடன் . தையல் மட்டும் பத்ரகிரியின் கைகளைப் பிடித்துக் கொண்டு காணமல் போன மனைவியைத் தேடும் சிந்தனை கூட அவனுக்குள் எழும்பா வண்ணம் இன்னும் கொஞ்ச நேரம் கடற்கரையில் நடந்து விட்டு பிறகு போகலாம் என அவனது புத்தியை பேசி மயக்கி திரிந்து போகச் செய்து நெடுநேரம் சென்று வீடு திரும்புவதாக நாவலில் ஓரிடம் வருகிறது.அதற்குப் பிந்தைய வரிகளில் "பிள்ளையைத் தொட்டிலில் இட்டு ஆட்டிக் கொண்டே விஷாலா அழுகிறாள்"படிப்பவர்களுக்கும் அவளது நிலையை எண்ணி வேதனையே மிஞ்சக் கூடும்.
லண்டன் போவதற்கு முன்பு தனியாக இருக்க சிரமம் என்று தான் திருச்சிற்றம்பலத்தை வற்புறுத்தி அவனது படிப்பு முடிந்து அவன் திரும்பி வரும் வரை தான் அவனது அண்ணியுடன் இருப்பதாக மதரா பட்டினம் வருகிறாள் தையல் .பின்பு நடந்தது என்னவோ தையல் மற்றும் பத்ரகிரியின் தகாத உறவால் அவளுக்கு பிழை உண்டாக விஷாலா கோபித்துக் கொண்டு பிறந்தகம் சென்று விட , தையலுடன் ஓயாத மன உளைச்சலுடன் தனிக் குடித்தனம் செய்யும் பத்ரகிரிக்கு அதுவும் நிலைக்கவில்லை .
பிரசவத்தின் பின் தையலின் மனநிலை பாதிப்படைந்து அவள் தான் பெற்ற பிள்ளையையே கொல்லக் கூடிய அளவில் மனச் சிதறல் அடைகிறாள். வைத்தியத்திலும் தேறாத நிலையில் பத்ரைரியால் அவளுக்குப் பிறந்த ஆண் குழந்தையும் போதிய போஷாக்கு இன்றி மரித்துப் போக சித்தம் கலங்கிப் போன பத்ரகிரி தையலை அவளது தாய் வீடானா கடையத்தில் சேர்த்து விட்டு சொல்லில் அடங்கா ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் பெற்றுக் கொண்டு சிறு பிராயத்தில் தனது நங்கை சித்தி தன்னையும் தன் தம்பியையும் வளர்த்த அதே ஊருக்கு பித்துப் பிடித்தவன் போல திரும்புகிறான்.
இதுவே பத்ரகிரியின் சிதிலபட்ட வாழ்வின் கதை ...அவன் தன் வாழ்வை மட்டும் சீரழித்துக் கொண்டானில்லை...கூடவே தான் மிகவும் நேசம் கொண்ட தன் தம்பி தன் மனைவி இப்படி எல்லோரது வாழ்வையும் சிக்கலாக்கி விடை தெரியாது நசிந்தவனானான் .
அடுத்தது சதாசிவப் பண்டாரத்தின் கதை .இந்தக் கதையில் இவர் அறிமுகம் ஆகும் போதே நீலகண்டம் எனும் நாயுடன் நடந்து கொண்டே தான் அறிமுகமாகிறார்.பண்டாரம் திருவிடை மருதூரில் இருந்து மதராபட்டினம் நோக்கி நாயுடன் நடக்கத் தொடங்குகிறார். இடையில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்கின்றன .
தன் தாய் எவ்வளவோ மனம் கசிந்து வற்புறுத்தியும் கூட தனது சன்யாச வாழ்க்கையை விட மனமில்லாமல் பற்றிக் கொண்டிருந்த சதாசிவத்தை நீலகண்டம் பலவாறு சோதிக்கிறது.நாயின் வாலைப் பற்றிக் கொண்டே போகும் சதாசிவப் பண்டாரம் தனது "பற்றற்ற தன்மையை தனக்கே மறுபடி " உறுதி செய்து கொள்ளும் வண்ணம் பல அவமானங்களைச் சகித்துக் கொள்கிறார்.
குப்பை மேட்டில் படுத்து உறங்குகிறார். குப்பையில் இட்ட கழிந்து போன மிச்ச மீதிகளை உண்டு பசியாறுகிறார்.இறுதியில் கோயிலில் உட்கார்ந்த இடத்தில் சோறு கிடைக்கும் என்ற நிம்மதியான நிலையில் தான் நாய் அவரை அலைக்கழிக்கத் தொடங்குகிறது.நாயுடனான தனது நெடும் பயணத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை சந்திக்க நெருடுகிறது ...அவளுக்கும் பண்டாரத்துக்கும் சம்சார பந்தமும் ஏற்பட்டு அவள் பிள்ளை பெரும் சமயம் பண்டாரம் அவளை நிர்க்கதியாக தவிக்க விட்டு மீண்டும் நீலகண்டத்தை தொடர்ந்தே ஆகா வேண்டிய மனநிலைக்கு வருகிறார்.
இடையிடையே மனம் கூக்குரல் இடுகிறது. "உனக்குப் பிறந்தது ஆணா...பெண்ணா ? போய்த்தான் பாரேன் ஒருமுறை !!! என்று !? பற்றை அறுத்தவர் செய்யும் காரியம் இதுவல்ல என்று பண்டாரம் நாயைத் தொடர்கிறார் செவ்வனே .இறுதியில் நாயும் பண்டாரமும் பட்டினத்தடிகள் சமாதிக்கு வந்து சேருகிறார்கள் .
பண்டாரம் திடீரென்று நாயைப் போலவே நடந்து கொள்ளத் தொடங்குகிறார். அவரது அங்க சேஸ்டைகளைக் கண்டு அங்கிருந்த மக்கள் எல்லோரும் பண்டாரத்தை பைத்தியம் என்று நினைக்கிறார்கள் .
முடிவாக அந்த சமாதியில் இருந்த ஒரு அறையில் பண்டாரம் ஜோதி வடிவாகி மறைகிறது. நாயையும் காணோம். அந்த அறையில் இருந்து "அத்தர் மணம்" கசிந்து பெருகுகிறது .இதைக் கண்டு மக்கள் பொருள் விளங்கா ஆச்சர்யம் அடைகின்றனர்.எல்லா சாதுக்களையும் போல சதாசிவப் பண்டாரத்தின் வாழ்வும் ஒரு கதையாகி முடிந்தது.
அடுத்து திருச்சிற்றம்பலத்தின் லண்டன் வாழ்க்கை :-
திருச் சிற்றம்பலம் ஒரு "கணித விற்பன்னன் " கணிதத்தில் மேலும் ஆராய்ச்சிக் கல்வி பயிலவே அவன் லண்டன் செல்கிறான் .லண்டன் செல்ல கப்பல் பயணத்தில் சற்குணம் என்றொரு நண்பன் கிடைக்கிறான் சிற்றம்பலத்திற்கு ...சற்குணம் ஆடம்பரப் பிரியனாகவும்...சிற்றம்பலம் உயர் கணிதம் கற்க செல்லும் மாணவனாகவும் கப்பலில் அறிமுகமாகிக் கொள்கிறார்கள்.பின் அவர்களது நட்பு லண்டனிலும் தொடர்கிறது.
முதலில் வாழ்க்கை தரத்தில் தாழ்ந்தவனாகக் காட்டப் படும் சிற்றம்பலம் தனது கல்வியின் மேன்மையாலும் தனது கணித அறிவாலும் இந்தியா திரும்புகையில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவனாகிறான்.ஆனால் பெரிய தனவந்தரின் மகனான சற்குணம் முதில் விளையாட்டுப் பிள்ளை போல உள்ளசங்களில் ஆர்வம் மிக்கவனாக அறியப் பட்டாலும் அவனது மணம் எப்படியோ மாறிப் போக லண்டன் வாழ் கறுப்பினப் பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுகிறான் ஒரு கட்டத்தில்.
பெண்களை போகப் பொருட்கள் என்று மட்டுமே நினைத்து சுற்றித் திரிந்த அந்த வாலிபன் புரட்சிகரமாக மாறிப் போன மாயம் கண்டு சிற்றம்பலம் வியந்து அச்சம் கொள்கிறான் .சற்குணம் லண்டன் குளிருக்கு "நீயும் ஒரு பெண்ணின் துணை தேடிக் கொள்" என சிற்றம்பலத்திடம் கூறும் ஒவ்வொரு முறையும் சிற்றம்பலம் தன் மனைவியைத் தவிர தன் யாரையும் தொட விரும்பவில்லை என்று மறுக்கிறான்.நாவலில் இவனது மனப் பக்குவத்தைக் காணும் போது தையல் நாயகி இவனுக்கு ஏற்ற மனைவி இல்லையோ ! என்ற எண்ணம் வருவது இயற்க்கை.இப்பெர்ப் பட்ட கணவனுக்கு அவள் எப்படி அவனது அண்ணனுடன் இணைந்து துரோகம் இழைக்க முடிந்தது என்பது தான் வாழ்வின் மாய முடிச்சு போல!
தனது கல்வி முடிந்து வெற்றியுடன் அவன் இந்தியா ...மதரா பட்டினம் திரும்புகையில் தான் தன் மனைவியை விட்டுச் சென்ற இடத்தில் அவள் இல்லாத நிலை கண்டு அவன் மணம் நிச்சயம் உடைந்திருக்கும் .இவன் வாழ்வில் விதி தையலின் ரூபத்தில் விளையாட்டுக் காட்டி விலகிச் சென்றது.
அடுத்து கிருஷ்ணப்பக் கரையாளர் மற்றும் எலிசபெத்தின் மேல்மலை வாழ்க்கை :-
பரம்பரை சொத்துக்களை எல்லாம் உல்லாச வாழ்வில் குடித்தும் பெண்களுக்கு செலவழித்துமே கரைக்கிறார் என்று புகார் கூறி க்ருஷ்ணப்பக் கரையாலரின் பங்காளி அவரது சொத்துக்களை எல்லாம் தானும் வாரிசு தாரர் என்ற முறையில் தனதாக்கித் தருமாறு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மனுக் கொடுக்கிறார், இதனால் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது . இதற்குள் கிருஷ்ணப்பர் மனம் மாறுகிறார்,
இதில் இடைச் செருகலாய் எலிசபெத்தின் கதை அந்தக் காலத்தில் ஆங்கிலேயப் பெண் இந்திய ஆணுடன் கலந்தால் பிறக்கும் குழந்தைகளை மறுபடி லண்டன் செல்லும் போது உடன் அழைத்துச் செல்லும் அங்கீகாரம் இல்லை. அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகள் சட்டைக்காரிகள் என்ற பெயரில் இங்கே கிருஸ்த்தவ மிசன்களில் அனாதைகளாக வளர்க்கப் பட்டு "கம்பெனி உயர் அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலைக்கு " அனுப்பப் படுவார்கள் .
அப்படி அனுபப் பட்ட இளம்பெண்களில் ஒருத்தியே எலிசபெத். அவள் தனது இளம் பருவம் முதலே தனது அழகான தோற்றத்தின் காரணமாக பாலியல் தொந்திரவுக்கு உள்ளாகி முடிவில் அதையே தனது தொழிலாக தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு தனது இளமை எல்லாம் தேய்ந்து ஓய்ந்த பின் க்ருஷ்ணப்பருக்கு அறிமுகம் ஆகிறாள்.
உடல் தேவை என்பதை மீறி இங்கு இருவருக்குமே மனத் தெளிவும் ...நிம்மதியும் தேவை ஆகி விடவே ...ஒரு கட்டத்தில் கிருஷ்ணப்பர் எலிசபெத்தை மேல்மலைக்கு அழைத்துக் கொண்டு செல்கிறார். தனது பங்காளியிடமும் தனக்கு வேறு எந்த சொத்துக்களும் வேண்டாம் மேல்மலை மட்டும் போதும் அதனால் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என சமாதானம் ஆகிறார்.
மேல்மலை எளிசபெத்துக்குச் சொந்தமாகிறது. அங்கு அவள் மூலமாக ஒரு கால கட்டத்தில் தேயிலை பயிர் அறிமுகமாகிறது.இதன் மூலம் கிடைக்கும் பெரும் தொகையில் எலிசபெத் ஒருமுறை லண்டன் செல்ல ஆசைப் படுகிறாள் .கிருஷ்ணப்பரும் "திரும்பி வந்து விட வேண்டும் " என்ற நிபந்தனையின் கீழ் சம்மதிக்கிறார். இப்படி முடிகிறது இவர்களின் கதை.
மேலே சொல்லப் பட்ட இவரது வாழ்கை சம்பவங்களை வைத்து ஒப்பிடும் போது எலிசபெத்தின் வாழ்வே கொஞ்சம் சுகப் பட்டதாக சொல்லலாம் ...
ஆரம்பத்தில் அவள் கஷ்டப் பட்டாலும் கடை நாட்களில் சிறிதே வாழ்க்கையை ரசிக்கும் சூழல் அவளுக்கும் கிருஷ்ணப்பருக்கும் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.
ஆகா மொத்தத்தில் "யாமம்" அப்துல் கரீமின் அந்தர் தியானத்தோடு கரைந்து போக மற்றேல்லோருடைய வாழ்வும் அதனை ஒட்டியே நடை போட "எலிசபெத் " மட்டுமே ஆறுதல் தருகிறாள் இந்நாவலில் .மனித வாழ்வின் விசித்திரங்களைப் பற்றி மற்றுமொருமுறை அசை போட மிகச் சிறந்த வாசிப்பனுபவம் இந்நாவல் .
கூடவே அத்தரைப் பற்றி வரும் வர்ணனைகள் ...அதன் நறுமணம்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...?!
விருப்பம் இருப்பவர் "யாமம்" வாங்கி வாசித்துப் பாருங்கள்.