Showing posts with label நூலறிமுகம். Show all posts
Showing posts with label நூலறிமுகம். Show all posts

Tuesday, January 17, 2012

எம்.வி.வெங்கட் ராமின் 'வேள்வித் தீ ' யாராவது வாசித்திருக்கிறிர்களா?



புத்தகம்- வேள்வித் தீ
ஆசிரியர்-எம்.வி.வெங்கட் ராம்
வெளியீடு -காலச்சுவடு
விலை - ரூ 125 /-

கௌசலையின் மீது இனம் காண முடியாததோர் பரிவு தோன்றும் அதே வேளையில் அடப் பைத்தியமே! என்ற பரிதாபமும் தோன்றி நீடிக்கிறது. இவள் தற்கொலை செய்து கொள்வதிருக்கட்டும் அந்தக்குழந்தை என்ன செய்தது ?
உலக சந்தோசங்களை எல்லாம் தன் மழலையில் முடிந்து வைத்துக் கொள்ளத் தகுதி அற்ற குழந்தையா ராஜி?!

ஹேமா வைப்பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை ,அவளைப் பற்றிச் சொல்வதானால் இப்படியும் ஒரு பெண்ணா ?இவளை ஏன் கண்ணன் புறக்கநித்திருக்கக் கூடாது என்ற ஆதங்கமே மிஞ்சுகிறது .வயிற்றுப் பிள்ளைக்காரி கைக் குழந்தையோடு தன்னை மாய்த்துக் கொண்ட பின்னும் கூட இவளுக்கு கௌசலையின் கனவனோடு என்ன உறவு வேண்டிக்கிடக்கிறது?! ஆக மொத்தம் சுயநலமிக்கவலாகவே கருத முடிகிறது.

கௌசலையுடனான அவளது நட்பில் உண்மையில்லை.கண்ணனுக்காக அவள் கௌசலையிடம் நட்பாவது மூன்றாம் இடத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வேடிக்கைப் பேச்சுக்கும் இழிந்த கற்பனைகளுக்கும் இடம் தந்து சில மணி நேரப் பொழுது போக்குக்கு உதவலாம். ஆனால் கௌசலையின் இடத்தில் இருந்து கண்டால் அவளது கண் மூடித் தனமான ஆத்திரத்தின் நியாயங்கள் புரியும்.


எது எப்படியோ கண்ணன் கௌசலைக்கு இழைத்த துரோகத்தை வேறு பெயரிட்டு அழைக்க இயலாது.

கௌசலை இவனை அதிகமும் நம்பி விட்டாள் ,சொந்த வீடென ஆசுவாசப் பட்டது மழையில் இடிந்து விழுந்த பின் ,நம்பியிருந்த சொந்தத் தொழிலில் கடன் சுமை குரல் வலையை நெரித்துக் கொண்டு திணறச் செய்து ஏற ஏற ஆதரவாய் இருந்த தந்தை திடீரென காலமான நிகழ்வு அவளுக்கான அடுத்தடுத்த அதிர்சிகளின் உச்சகட்டம்,அப்போதும் அவள் சகித்துக் கொண்டு மேலெழவே முயல்கிறாள் தன் கணவன் எனும் நம்பிக்கை விளக்கின்கத கதப்பான உரிமை உணர்வின் நிழலில் பின் பாதுகாப்பாகவே உணர்கிறாள்.

தன் வாழ்வின் ஒளியென அவள் கண்ணனை நினையாதிருந்திருக்க வாய்ப்பில்லை .தன் கணவன் சாகசக் காரன், எத்தகைய தடங்கல்களையும் அவனோடு சேர்ந்து தன்னால் கடக்க முடியும் எனும் அந்தப் பெண்ணின் நம்பிக்கைக்கு கண்ணனும் உறுதி சேர்ப்பவனாகவே இருந்தான் ஹேமா வரும் வரை ! அவள் வந்தாளோ...வந்ததை கௌசலையும் கண்டாளோ அந்த நொடியில் ஆரம்பித்தது இவன் வாழ்வின் அனர்த்தம். கடன் சுமைகளை ,நண்பனின் வஞ்சனையை அவளால் தாங்கிக் முடிகிறது,தகப்பனின் இறப்பை தாண்டிச் செல்ல முடிகிறது ,ஆனால் அவளால் கணவனைப் பங்கு போட்டுக் கொள்ள மட்டும் முடியவில்லை .

கண்ணன்,கௌசலை,ஹேமா மூன்று கதா பாத்திரங்களில் இவளது தற்கொலைக்கு கண்ணனையும் ஹேமாவையும் காரனமாக்குகிறது கதை நிகழ்வுகள்.ஆனால் கௌசலையின் குண விசேஷத்தின் படி அவள் வாழ்க்கை ஹேமாவால் இடையூறு செய்யப் படாமல் இருந்திருக்க வாய்த்திருப்பின் கண்ணன் மிகச் சிறந்த உழைப்பாளியை நீடித்திருப்பான் ,அவர்களுக்கு இன்னுமொரு குழந்தை பிறந்திருக்கும்,இடிந்த வீட்டைக் கட்டிக் கொண்டோ புது வீடு வாங்கிக் கொண்டோ எப்படியேனும் அவர்கள் தங்கள் சுமைகளில் இருந்து தாங்களே மேடேறி இருப்பார்கள் .

ஹேமா இல்லா விட்டால் கௌசலை இருந்திருப்பாள் .கண்ணன் வாழ்ந்திருப்பான். ஹேமாவுடன் தொடருமென கதை முடிவில் விரியும் கண்ணனின் அடுத்த கட்ட வாழ்க்கையை கௌசலையுடன் ஆன அவனது பூரணமான வாழ்வோடு ஒப்பிட முடியாது.

எல்லோரையும் விட ஏற்றுக் கொள்ள முடியாத உறுத்தல் குழந்தை ராஜியின் மரணம் .

அவளை எதை நம்பி கண்ணனிடம் ஒப்படைத்து விட்டுப் போயிருக்க முடியும் கௌசளையால்.

ஆகவே கௌசலையோடு குழந்தையின் தற்கொலைக்கு நியாயம் கற்பிக்கப் பட்டதாகவே கருதிக் கொள்ளலாம்.

வாசித்த வரையில் ஹேமாவின் மீது வெறுப்பும் அசூயையும் வரத் தவறவில்லை.

கௌசலை சாவதற்கு முன்பு வரை அவள் பேரிலிருந்து வந்த ஒரு பெருமித உணர்வு அவள் இறந்த பின் பரிதாப உணர்வாக மாறி அடிப் பெண்ணே உனக்கேன் இந்த நிலை என்பதாக மாறிப் போகிறது.

கண்ணனைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

கதையில் கொஞ்சமே கொஞ்சம் வந்தாலும் மிகப் பிடித்துப் போன மற்றொரு பாத்திரம் கௌசலையின் தகப்பனார் 'பத்மநாப ஐயர்'

பாவம் அந்த மனிதர் சாகும் போது நினைத்திருக்க மாட்டார் தான் மிக நம்பிக்கையோடும் ஆசையோடும் வேண்டி விரும்பி தன் மகளை திருமணம் செய்து வைத்த மாப்பிள்ளை அவளை இப்படி தற்கொலை செய்து கொள்ளும் படிவிட்டு விட்டு நிர்தாட்சண்யமாய் பிறிதொரு பெண்ணை நாடிப் போவான் என்று.

தொழிலாளர் பிரச்சினைகள்,அரசு எந்திரத்தின் மந்த நிலை .முதலாளி தொழிலாளி தந்திர மயக்கப் பேச்சின் மாய மந்திரங்கள் எல்லாமும் கடந்து கதையில் எஞ்சி நிற்பது கண்ணன் கௌசலைக்கு இழைத்து விட்ட தவறு தான்.இது தவறா இல்லையா என்பது அவரவர் புரிதலைப் பொறுத்தது.

கௌசலையின் குழந்தை ராஜியின் மரணத்தைப் பொறுத்த வரை கண்ணன் மன்னிக்கப்படக் கூடியவன் அல்ல. ஹேமாவும் தான். ஏற்றுக் கொள்ள கடினமான மற்றொரு விஷயம்.இந்த மரணங்களுக்காக கண்ணன் 'இப்படி குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாலே!?' என்று கௌசலை மீது தான் வருத்தம் கொள்கிறானே தவிர தான் செய்ததை தவறு என்று கடைசி வரை அவன் எண்ணக் காணோம் .

//இது என் கருத்து மட்டுமே//
வாசிக்கும் எவருக்கும் அவரவர் புரிதலுக்கேற்ப சரி தவறுகள் மாறுபடலாம் .

குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்வில் நிகழும் சமூகம் ,தொழில் சார்ந்த புறச் சிக்கல்களோடு அவனது மனைவி மற்றும் அவளது சிநேகிதியான ஒரு பெண்ணால் அவனுக்கும் அவர்களுக்கும் நேரும் அகச் சிக்கல்களையும் ஓரளவுக்கு தெளிவாக உணர்த்திய நல்லதொரு பாடம் இந்த நாவல்.

Monday, January 16, 2012

அண்டை வீட்டார் -பி.கேசவதேவ்

அண்டை வீட்டார் ' -என்றொரு நாவல் .

பி.கேசவ தேவ் எழுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்ற மலையாள நாவல்
விலை ரூ -100

புத்தக் காட்சியில் வ.உ.சி.நூலகத்தில் வாங்கினேன் .

நேற்றிரவு இதை வாசித்ததிலிருந்து அந்த மக்களின் வாழ்விலிருந்து யோசனைகளை அகற்றிக் கொள்ளவே முடியவில்லை.இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய கதையாக இருக்கலாம்.ஆனால் அதில் காட்டப் பட்டிருக்கும் பெண்களின் நிலைகளைப் பொறுத்தவரை இன்றும் தொடரும் கதையாகத் தான் தோன்றுகிறது.

பவானி பச்சாழி வீட்டுக் காரணவன் பப்புக் குரூப்பால் கடிமணம் செய்து கொள்ளப் படுவதில் தொடங்கி .கமலாட்சியும் சரோஜினியும் குடிகாரர்கள் மட்டுமல்லாது கொடுமைக்காரர்க்களுமான ஊதாரிக் கணவர்களுடன் பயந்து பயந்து வாழ்ந்து விவாகரத்தாவதும் .

ஈழவனான வீட்டு மேல் வேலைக்காரன் குஞ்சனின் அதிகாரம் சகிக்காது தேவகி இவர்களைப் பற்றி அனாசாரமாக அவதூறு பரப்புவதும் .மங்கல சேரி தரவாட்டின் காரணவர் பத்மனாபப் பிள்ளை தங்கைகளுக்காக தன் மனைவியைத் தள்ளி வைத்து தாட்சாயிணியை மணப்பதும்

.அம்முக் குட்டி தன்னை விரும்பி மணந்து கொண்ட கணவனை பைத்தியக் காரனாக்கி விட்டு அய்யப்ப குரூப்பின் ஆறாம் மனவியாவதும் ஐயோ இந்த மருமக்கத் தாய முறை சம்பந்தத்தில் பெண்களுக்கேது பாதுகாப்பும் மரியாதையும் கொட்டிக் கிடக்கிறதாம்?!

அப்படியும் இந்தக் கதையில் சகட்டு மேனிக்கு வரும் கடா புடா பாத்திரங்களில் மிக்க மரியாதைப் பட்ட ஒருத்தியாக குஞ்சு லக்ஷ்மியைச் சொல்லலாம் .அவளுக்கடுத்து அதே துணிவும் கொடுமைகளுக்கு பதறி துடித்தெழும் பத்ரகாளித் தனமும் அவளது பேத்தி சுமதிக்கு வாய்த்தது .மிகுந்த சிந்தை தெளிவு உள்ள சுமதி பச்சாழி அச்சுதக் குரூப்பை மருதத் பாஸ்கரனை மணந்து சுகப் பட்டாலும் .இடை வழி போன விதி அவளை விதவையாக்கி அண்ணன் வீட்டில் அடைக் கலமாக்குகிறது.

இங்கேயும் இந்தப் பெண்களின் விதியைப் பாருங்கள்!நாயர் குடிப் பெண்கள் ஒரு குடும்பத்தின் காரனவரின் மனைவியாய் இருந்தால் கணவர் இறந்ததும் அவரது உடலைத் தகனம் செய்யும் முன்னே அந்த நாயர் மனைவியும் மனைவிக்குப் பிறந்த வாரிசுகளும் அக்கணமே அவ்விடம் விட்டு நீங்கியே ஆகா வேண்டுமாம் .இது அப்போதைய விதி. இதே சம்பவத்தை லலிதாம்பிகா அந்தர் ஜனத்தின் 'அக்னி சாட்சி' நாவலிலும் நாம் காணலாம்.

நாயர் குடியில் ஆண்கள் எத்தனை சம்பந்தங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமாம் .பெண்களும் செய்து கொள்ளத் தடை இருந்ததாகத் தெரியவில்லை. இல்லா விட்டால் தேவகி பத்ம நாபப் பிள்ளையோடு விவாக உறவு தீர்ந்து போன பின் வெளிநாடு போய் வந்த 'பரங்கிப் புண்' பிடித்த குட்டன் பணிக்கரின் மனைவியாகி பிறகு வைப்பாட்டியாகவும் ஆகும் நிலை வந்திருக்குமோ?!

இந்தக் கதையில் பரிதாபமிக்கவர்களாக சித்தரிக்கப் பட்டிருப்பவர்கள் பத்மநாபப் பிள்ளையும் அவரது அத்யந்த வேலைக்காரன் குஞ்சன் தன்டனும் தான் .பத்மநாபப் பிள்ளையின் ஒரே தவறு அவர் மனிதாபிமானம் கொண்டவராக இருந்தது ஒன்றே .

நாவலில் மிகக் கடுமையான ஆட்சேபத்தை அசூயையான பொறாமையை ஏற்படுத்துவது யாரெனக் கண்டால் அது குட்டன் பணிக்கர் கூட இல்லை ,அவன் கெட்டவனாயினும் அவனது கெடு குணம் வெளித்தன்மை கொண்டதாய் இருந்தது .ஆயினும் இந்தக் குஞ்சு வரீது இருக்கிறானே குஞ்சு வரீது அவனைமன்னிக்க ஏலவில்லை.என்ன ஒரு கயமைத் தனம் .

அவன் கடும் உழைப்பாளியாய் இருக்கட்டும் . சம்பாதிப்பதை எல்லாம் ஒரு காசு வீணாக்காமல் சேர்த்து வைத்துக் காப்பவனாகவும் இருக்கட்டும்,அவன் மனைவி சதா உழைத்துக் கொட்டும் சாமர்த்தியக்காரியாய் இருக்கட்டும் ஆனால் பத்ம நாபப் பிள்ளை கடனாளியாக இவனே அல்லவோ முதல் காரணம் ஆகிறான்.

அதற்காக இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடித்த கதையாக அவனது வருகை ஆமை புகுந்த ஆமீனா புகுந்த கதையாக மங்கல சேரி பத்ம நாபப் பிள்ளை குடும்பத்துக்கே பிரளயமாக வந்து தொலைந்திருக்க வேண்டாம். அவரிடத்தில் இனாமாகப் பெற்ற நிலத்தில் பயிர் செய்து அதை எடுத்து விற்று அந்தப் பணத்தை அவருக்கே வட்டிக்கு விட்டு புரோ நோட்டு எழுதி வாங்கி வைத்துக் கொண்டு எல்லாச் சொத்தையும் மீன் போல அரித்து அரித்து வாங்கிக் கொண்டு தனக்கொரு மாளிகை கட்டிக் கொண்டு அவனது இருப்பைக் காணும் போது சுமதிக்கு பொறாமையில் கண்ணோரம் கரிப்பதொன்றும் தகாத செயல் அல்ல தான்.

மகன் ராமச்சந்திரனின் மேற்படிப்புக்காக தாய் சுமதி குட்டன் பணிக்கரின் முறையற்ற கேடு கேட்ட சதிக்கு பழியாகி நோய் வந்து இறந்து போவது இந்த வாழ்கையின் இரக்கமற்ற எதேச்சதிகாரத் தன்மைக்கு ஒரு சோறு பதம். அதே தேவகி குட்டன் பணிக்கருக்கு பலியாவது மிக்க உசிதம் என்று தோன்றாவிட்டாலும் கூட அவளுக்கு அந்தக் கதி வந்ததே என்று ஒருவரும் வருத்தப் படாது இருப்பதும் இந்த சமூகத்தின் எதேச்சதிகாரத் தன்மைக்கு உதாரணமே!

ஒரே ஜாதியைச் சேர்ந்த இரு புராதனப் பெருமை கொண்ட குடும்பங்களுக்கிடையே நிகழும் வன்மங்கள் கடைசியில் குடும்பப் பெருமைகளைக் குலைத்து மண் மூடிப் போகச் செய்வதோடு அந்தக் குடும்பங்களின் ஸ்திரீ விளக்குச் சுடர்களையும் எந்த அர்த்தங்களும் பெருமைகளும் இன்றி அழிந்து போகச் செய்கிறது.

சுமதி தூக்கில் தொங்கும் போது ஆன்ஜிலி மரத்தை வெட்ட வேலைக்காரனோடு தலைமை தாங்கிச் செல்லும் குஞ்சு லக்ஷ்மியின் முகம் மனத்திரையில் வந்து போகிறது.

இந்தப் பெண்கள் பாவப்பட்டவர்கள் .ஆண்களும் தான் .அவர்களுக்கு உழைப்பின் ருசி காட்டப் படவில்லை. உழைப்பதற்கும் நேர் செய்வதற்கும் ஈழவனான ஒரு குஞ்சன் தண்டன் தேவைப் படுகிறான் இந்த வீட்டுக்கு.அவனல்லாத போதில் குடும்பம் சிதைகிறது எனில் இந்தக் குடும்பம் சிதவைடையத் தக்கது தான். தன்னைத் தானே சூதானம் செய்து கொள்ளத் தெரியாத குடும்பங்கள் இருந்தென்ன போயென்ன?!

இவர்களை விட சம்பாதனையிலும் சம்பாதிப்பதை சேர்த்து வைத்துக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டு குடும்பம் பாழ பட்ட பின் உறவுகளைப் புறம் தள்ளி தானுண்டு தான் வியாபாரம் உண்டு என கடமையே கண்ணாயினனாக மாறிப் போகும் ராஜசேகரன் பரவாயில்லை .

பத்ம நாபப் பிள்ளையிடம் குஞ்சன் தண்டனின் பிள்ளைகள் நடந்து கொள்ளும் முறைகள் அவரிடத்தும் இந்த சமூகத்தின் தூரப் பார்வை முன்னும் அநியாயம் போலிருந்தாலும் காலம் காலமாய் தம்பிரான்களாலும் தம்பிராட்டிகளாலும் ஆளப் பட்டு அழுத்தப் பட்ட அவர்களது சுய அடிமைத் தனத்தை சகித்துக் கொள்ள முடியாத அடுத்த தலைமுறையினரின் சுய மரியாதை சர்ப்பம் தீண்டிய கோபத்தின் முழு வீச்சும் கிளர்ந்து எழும் போது என்ன தான் மனிதாபிமானியானாலும் பத்மநாபப்பிள்ளை வெறும் மனிதராக மதிக்கத் தக்கவரே அல்லாது அவரொன்றும் எஜமானர் அல்ல எனும் உறுதியை குஞ்சனின் பிள்ளைகளில் வாசுவோ,திவாகரனோ,யசோதரையோ எவரும் கை விடவே இல்லை. இவர்கள் பால் மரியாதை ஏற்படுத்திய ரசம் மிக்கதோர் இடம் இது.

பாவப் பட்ட கல்யாணி குஞ்சனின் மனைவியாக வந்து போகிறாள். அவளில் குறையும் இல்லை நிறையும் இல்லை.

எது எப்படியோ மூன்று தலை முறைகளாக மங்கலசெறிக் குடும்பத்தின் வேலைக்காரனாய் இருந்து மூத்த எஜமானத் தம்பதிகளுக்கு வைசூரி வந்த காலத்திலும் சரி கூட அங்கிருந்து விலகாது குடி காத்து கடைசியில் தேவகி இட்டுக் கட்டிய ஊராரின் அவச் சொல் தாளாது பரதேசம் மேற்கொள்ளும் குஞ்சன் எப்படியோ தான் எஜமானனைத் தேடிக் கொண்டு வந்து அவரது அந்திமக் காலத்தை யானைக் கெத்து கழியாது காக்க துணை இருப்பதும் கூட்டிச் செல்வதும் மேற்குத் தொடர்ச்சி மலை கிடங்குகளில் சூரியன் ஆழ்ந்த பின்னான முன்னிரவுக்கான குறியீட்டைப் போல அத்தனை ஒரு அமைதியான நிறைவு.

"இனி மேல் என்ன குஞ்சா ?"

யானையைக் கொட்டிலில் அடைத்து விடக் கூடும் என்ற பயம் மேலெழ பிள்ளை கேட்பதும் அதற்கு குஞ்சன் என்னவோ பதில் சொல்வதும்

துவக்கப் பக்கங்களில் குஞ்சன் வாக்குகளான ..."பிரளயம் வந்திட்டுது எஜமான் "எனும் சொல்லும் கதை வாசித்து முடித்த பல மணி நேரங்கள் கழிந்த பின்னும் இன்னும் காதோடு ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

' பட்டால் தான் புத்தி ' -இந்த நாவல் மிகச் சிறந்த உதாரணம் .