Wednesday, July 8, 2009

உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுதப் பட்ட சிறுகதை

சூடாமணியின் கணவர்(கள்) !?
நான் மதுசூதனன்,
இரவு தான் வைசாக் வந்தேன் ;

ஒரு தொழில் முறைச் சந்திப்புக்காக ....
படேல் வருவதாகச் சொல்லியிருந்தான் இன்று மாலை சரியாகஆறு முப்பதுக்கு ...ம்ம்...காத்திருக்கிறேன் மதியம் மூன்று மணியிலிருந்தே ?! அந்த இத்துப் போன படேல்லுக்காக அல்ல !
ஒவ்வொரு மாதமும் இப்படி ஒரு காத்திருப்பு அவசியமில்லை தான்...ஆனாலும் மனம் சொல்வதை உடல் பெரும்பாலும் கேட்பதே இல்லையே!!!
ஆர்ப்பாட்டமாகச் சிரிக்கும் பழக்கமுடைய ஆந்திர கோங்குராக்களை அவர்களின் நிறத்துக்காக மட்டுமல்ல சொல்லக் கூடாத இன்னும் பல அதிரடி சாகசங்களுக்காக அடிக்கடி ...அடிக்கடி ...அடிக்கடியும் நான் தரிசிப்பது உண்டு தான்.
சூடாமணிக்கும் தெரிந்திருக்கக் கூடும் !!!
ஒரு யூகம் தான்...
அவள் என்னிடம் இதுநாள் வரை கேட்டதே இல்லை...
சமீப காலங்களில் அவள் என்னிடம் இது விசயமாக குடைந்து...குடைந்து கேள்வி கேட்டு பெரிதாகச் சண்டை போட வேண்டும் என்ற அல்ப ஆசை என்னை பெரும் பிசாசைப் போலப் பிடித்து ஆட்டுகிறது.
அவளென்னவோ எதைப் பற்றியும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை ...நான் இதுவரை செய்ததும்...செய்வதும்...செய்து கொண்டிருப்பதும் எனக்கொன்றும் பெரிய மன ஆறுதலையோ இன்பத்தையோ...உல்லாசத்தையோ நிச்சயமாகத் தரவேயில்லை ...அதைத் தான் என்னால் நம்ப முடியவில்லை.
ஏன்???
இப்போது கூட சூடாவை செல்லில் அழைத்துப் பேசினேன். எப்போதும் போலத் தான் பேசினாள் ;

டிபன் சாப்டிங்களா ?கொண்டு போன திங்க்ஸ் எல்லாம் பத்திரம்...போன தடவை மாதிரி வாட்சை ஹோட்டல் பாத்ரூமுக்குள்ள வச்சிட்டு டிரெயின் ஏறிடாதிங்க .

நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன் ...இந்த முறை வாட்ச் இல்லை...சூடாவின் காசுமாலை !!!???

இது சூடாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.அவள் செல்லில் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவளருகில் வேறு யாரோ பேசிக் கொண்டே இருக்கும் அரவம் எனக்குக் மகா எரிச்சலைத் தந்தது.

யாராக இருக்கும் ?

அவளிடமே கேட்டேன் .

என் ஃப்ரெண்டு சித்ராவும் அவ ஹஸ்பண்டும் வந்திருக்காங்க ...நாங்க பேசிட்டு இருக்கும் போது தான் நீங்க கூப்பிட்டிங்க ...வச்சிடவா ?நானென்னவோ அவர்களுக்கு இடைஞ்சல் போல அவள் இப்படிக் கேட்டது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. கோபத்தை அடக்கிக் கொண்டு செல்லை அணைத்தேன்.

படேல் எங்கே போய் ஒழிந்தான் ?மணி ஏழு ...சூடாவின் மேல் பொங்கிய கோபத்தை இவனிடம் கொட்டலாம் என்று யோசிக்கும்போதே அறைக்கதவு தட்டப் பட்டது .

எஸ்...கம் இன் ...

படேல் இல்லைதிருப்பதி லட்டு போல திருப்தியாய் ஒரு சின்னப் பெண் .

கண்களில் நிறைய அப்பாவித் தனம் தெரிந்தது.மிரட்சி எல்லாம் இல்லை.ஒருவேளை இதெல்லாம் அவளுக்குப் பழகிப் போன ஒன்றோ என்னவோ ?!வா ...என்றேன். வந்து அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

அநேகமாய் பள்ளி மாணவியாய் இருக்கலாம் என எண்ணிக் கொண்டேன் ,அவளிடம் அதெல்லாம் கேட்கவில்லை நான் ...அதுவா முக்கியம் ?!

தான் அணிந்திருந்த சல்வாரின் மேல் துணியை எடுத்து கட்டிலில் வீசி விட்டு ... ஏமி சார் ...ஸ்டார்ட் சேஸ்த்தமா? என்று பழக்கி வைத்த மோகனப் புன்னகையும் வசீகரப் பார்வையுமாய் அந்தப் பெண் என்னை நெருங்கி வர...

இரு...இரு...என்ன அவசரம்? படேல் முன்னாடியே விவரம் சொல்லிக் கூட்டிட்டு வரலையா உன்னை என்று அவளை விலக்கி நிறுத்தினேன். அவள் என்னைப் புதிராகப் பார்த்துக் கொண்டே பக்கத்தில் இருந்த மோடாவில் அமர்ந்து கொண்டு கால்களை ஒயிலாகத் தூக்கி கட்டிலில் போட்டுக் கொண்டாள்.

எனக்கு சூடாவுடனான முதல் இரவு ஞாபகத்தில் மிதந்து நழுவியது. சொன்னால் நம்பமாட்டீர்கள்!!! எனக்கும் அது தான் முதல் இரவு?!

கல்யாணமான புதிதில் சூடாவைப் பிரிந்திருப்பது எனக்கு கடுங்கோபத்தைத் தரும் நிகழ்வாக இருந்தது. சதா சர்வ காலமும் போகும் இடங்களுக்கெல்லாம் அவளை கூடவே கூட்டிக் கொண்டு அலைவது என்பது நடைமுறைக்கு சாத்தியப் படவில்லை. என் வியாபார நிமித்தம் நான் மாதத்தில் குறைந்த பட்சம் ஒரு வாரமேனும் அவளைப் பிரிந்தே ஆக வேண்டிய துரதிர்ஷ்டம் அப்போது.

முதல் ஆறுமாதம் நான் இப்படிப் புறப்படும் போதெல்லாம் அவள் கண்ணைக் கசக்கினால் அணைத்துக் கொஞ்சி அவள் சிணுங்கலை ரசித்து...முத்தங்களால் அவள் கண்ணீரைத் துடைப்பது ஒரு ஜாலியான விளையாட்டைப் போல பரவசமாகத் தான் இருந்தது.

அதுவே தொடர் கதையான போது ? எனக்கு என் வியாபாரத்தின் மேல் கோபம் வந்தது...சிறிய அளவில் தொடங்கி படிப் படியாக வளர்த்து...வளர்ந்து இப்போது என்னை நகரில் ஒரு பிரபலஸ்த்தனாக ஆக்கி வைத்திருக்கும் என் சொந்த வியாபாரத்தை எப்படி என்னால் புறக்கணிக்க முடியும்?

சூடாவையும் புறக்கணிக்க முடியாது தான்!

தொடர்ந்த பயணங்களில் நேர்ந்த பிரிவுகளில் சூடாவின் எதிர்பார்ப்புகளுக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை என்று தான் நினைக்கிறேன். அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதே எனக்குப் புரியாமல் போனது தான் பெரும் துக்கமாகிப் போனது.

அவளது கவனம் என்னிலிருந்து துளித் துளியாகக் களைய நானே அனுமதித்தது போலத் தான் ஆகி விட்டது.

அவளுக்கு ஓவியத்தில் கொஞ்சம் ஈடுபாடு இருந்தது.அடிக்கடி எதையோ வரைந்தேன் என்று எடுத்துக் கொண்டு வந்து காட்டுவாள்.அந்த நேரம் எனக்கு ஏதோ வேலை இருக்கும்...இருந்து கொண்டே இருக்கும் வார இறுதிகளில் முழு ஓய்வு என எனக்குத் தூக்கம் பெரிதாகிப் போகும் . மேலோட்டமான எனது வெற்றுப் பாராட்டுக்கள் அவளுக்கு சோர்வையும் வெறுப்பையும் கொடுத்திருக்கக் கூடுமே என்னவோ?

அவளுக்கென சில நண்பர்களை சம்பாதித்துக் கொள்வதென அப்போது தான் அவள் தீர்மானித்திருக்கக் கூடும்.

சூடா...என் சூடாமணி .அவளைப் பிரிவதெல்லாம் என்னால் முடியவே முடியாத காரியம் . அதிலும் மணி...மணியாய் ரத்ன விக்கிரகம் போல அருமையான இரண்டு பெண் குழந்தைகள் எங்களுக்கு .சூடாவைப் போல ஒருத்தி ...என்னையே உரித்துக் கொண்டு இன்னொருத்தி. பிளஸ் டூவும் ... ஒன்பதாம் வகுப்புமாக அவர்கள் இருவரும் ஸ்கூட்டியில் பறக்கும் போது பெற்ற மனம் ரெக்கை கட்டிக் கொண்டு கூடவே பறக்கும் தானே? வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு "என் குடும்பம் குங்குமச் சிமிழ் "தான்.

போதுமான பேங்க் பாலன்ஸ் ...சூடாவின் நகைப் பெட்டி நிறைக்க...நிறைக்க வைரங்களும் உண்டு. பெண்கள் இருவருக்கும் போதுமான சேமிப்பு. சொந்தங்களின் மத்தியில் ஆரவாரமான வரவேற்ப்பு ,வாழவேண்டும் என்ற ஆசையை ஏற்ப்படுத்தும் அழகழகான இரண்டு பெண் குழந்தைகள் .குறையேதும் இல்லை தான் பார்ப்பவர் கண்களுக்கு .

பிறகென்னடா குறை உனக்கு என்கிறீர்கள் தானே? என் சூடா என் பக்கத்தில் தான் இருக்கிறாள் ...ஆனால் வெகு தூரமாகிப் போய்விட்ட பிரமை எனக்கு , பேசிக் கொண்டிருக்கும்போதே துண்டிக்கப் படும் எனது வார்த்தைகள்...நான் ஏதும் கோபப் பட்டுத் திட்டினாலும் புறக்கணிக்கப் படும் எனது கோபங்கள் .வலியப் போய் காதலாகப் பேசத் துவங்கினாலும் பத்தே நிமிடங்களில் தூங்கி விடும் அவளது அலட்சியம் .

எங்கே என் சூடா ?

சூடி ...சூடி என்று அவளை அழைத்துக் கொண்டு ஒரு ஓவிய நண்பன் வருவான்வீட்டுக்கு ..அவனென்னவோ இந்தியாவிலேயே பெரிய ஓவிய மேதையாம் ,சிரிக்கச் சிரிக்கப் பேசி தன் கையால் சமைத்துப் போட்டு சாப்பிட வைத்து பிரமாதமாகக் கொண்டாடுவாள் அவனை ;

சார் டைம் ௭.30 அய்போத்துந்தி ...நெக்ஸ்ட் கஸ்டமர் waiting ...மீறு ஒஸ்தாரா...லேதண்டி ?

ஆந்திர கோங்குரா சின்னக் குரலில் கடுப்படித்தாள். சும்மாவா பின்னே வெறும் ஒருமணி நேரத்துக்கு இருபதாயிரம் கொடுத்தல்லவா இவளை எனக்காக புக் செய்தான் படேல் .

சூடாவுக்கு நவீன மோஸ்தர் நகைகளைக் காட்டிலும் "காசுமாலை...கல் அட்டிகை...மாங்காய் ரத்ன மாலை ,கல் மாலை பவள வளையல் இப்படித் தான் எப்போதும் ஆர்வம் .முத்துக்களின் மீதும் அபரிமிதமான ஈடுபாடு அவளுக்கு .

அன்றைக்கு அப்படித்தான் நான் வெளியூர் எங்கும் போகவில்லை. சூடாவையும் ,என் மகள்களையும் அழைத்துக் கொண்டு "மாயாஜால்" போகலாம் என நான் நினைத்து முடிக்கும் முன்பே அவள் ஒரு அறிவிப்புடன் என் முன்னே வந்தால்.

சமையல்காரி இருக்கிறாள்.மதிய உணவைப் பற்றிக் கவலை இல்லை.சாப்பிட்டுக் கொள்ளுங்கள் மது. வெளியில் எங்கேனும் போய் சாப்பிடுவது என்றாலும் சரி தான் ஆட்சேபனை இல்லை ஆனால் அவளிடம் லஞ்ச் வேண்டாம் என்று முன்னதாக பதினோரு மணிக்கெல்லாம் சொல்லி விடுங்கள் ....இல்லாவிட்டால் வீணாகி விடும். நான் என் ஃப்ரெண்டு அவினாஷ் பொண்ணோட பரத நாட்டிய அரங்கேற்றத்துக்குப் போறேன் ...evening வர லேட் ஆனாலும் ஆகலாம். dont mind dear.

அனுமதி எல்லாம் கேட்பதில்லை வெறும் அறிவிப்பு தான்; எனக்குக் கசந்தது. இப்படித் தானே இருந்திருக்கக் கூடும் அவளுக்கும் அவள் என்னை எதிர்பார்த்து நான் அவளோடு வர இயலாமல் போன சமயங்களில் .இப்படித்தான் என்னை சமாதானப் படுத்திக் கொள்கிறேன் பல சமயங்களில்.

திருப்பதி லட்டு இப்போது ஏறக்குறைய என்னை ஒரு அரை லூசு என்று நினைத்து விட்டிருப்பாள் போல..அவளது அசட்டையான பார்வையின் ஸ்பரிசத்தில் உணர முடிந்தது என்னால்.

பின்னே ஒரு அழகான அம்சமான பதினெட்டு வயதுச் சிட்டு ...கையெட்டும் தூரத்தில் மேல் துணியைத் தூக்கிப் போட்டு விட்டு எனக்காக தயாராக காத்திருக்கையில் உங்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் என்னை அவள் பைத்தியம் என்று நினைப்பதில் தவறேதும் உண்டா என்ன?

மெல்ல அவளை நெருங்கினேன் ... நெருங்க..நெருங்க ...விபரீதமாக சூடாவையும் இப்படி யாரேனும் அவளது நண்பர்களில் சிலர் நெருங்கி இருக்கக் கூடுமோ என்று மனம் குரங்காகி முரண்டியது.

உன்னை யாரேனும் இப்படி நெருங்கி இருக்கிறார்களா சூடா ?

டெல்லியில் இருந்து ஒரு இலக்கிய நண்பன் வருவான்...சூடாவை ஜோதா என்று விளித்துக் கொண்டு ...யூ சோ ப்ரெட்டி அண்ட் போல்ட் என்று புகழ்வான் வார்த்தைக்கு....வார்த்தை .அவனைக் கண்டாலே எனக்கு வேப்பங்காய் தான்.

அவனோடும் இன்னும் சில ஆண் நண்பர்களோடும் இணைத்து வைத்து சூடாவை நான் கற்ப்பனை செய்திருக்கிறேன் பலமுறை. வெறும் கற்பனையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அதனால் தான் உன்னை யாரேனும் இப்படி நெருங்கி இருக்கிறார்களா? என்றஇந்தக் கேள்வியை அவளிடம் கேட்டு விடும் மன தைரியம் எனக்கில்லை .. .

நான் கேட்டு அவள் ஆம் என்று சொல்லி விட்டால் மிச்ச வாழ்வு நரகம் .

எங்களுக்கென்ன வயது ஆகிவிட்டது? நாற்பதின் இறுதி தான்...ஏன் சூடாவுக்குக் கட்டிலில் அத்தனை விருப்பமில்லை ...அதிலும் என்னோடு மட்டும்? சித்ராவின் கணவனை பாராட்டுகிறாள் அவளிடம் ...யூ லுக்கி சித்து ...என்று அவளிடம் இருக்கும் காதல் அவள் கணவனிடம் இன்னும் குறையவே இல்லையாம். அதற்க்காகவாம்!!!

ஏன் இவள் லக்கி இல்லையா?

சூடாமணி என்னை எடுத்ததற்க்கெல்லாம் சார்ந்து நின்ற அந்தக் காலம என் கண் முன் வந்து நின்று நகைத்தது. அப்போதெல்லாம் நான் அவளை வார்த்தைகளால் பெரிதாகக் காயப் படுத்தி இருக்கிறேன்...இப்போது தான் உணர்கிறேன் .

சின்னச் சின்ன விஷயங்களுக்காக கூட என்னை கேள்வி கேட்டுக் குடையும் என் பழைய சூடாவை எப்படியோ நான் சில வருட இடைவெளியில் தொலைத்ததே தெரியாமல் தொலைத்திருக்கிறேன்.

சேர்ந்து தான் வாழ்கிறோம்.

சுவாரஸ்யம் இன்றி சில வருடங்களாய்.

நான் பிற பெண்களை நாடிப் போவது அவளுக்குத் தெரிந்திருக்கக் கூடும் .ஆனால் ஏனென்று ஒரு வார்த்தை கேட்கவில்லை.

அவள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் தான் இப்போதெல்லாம் வெறுமனே பெண்களை புக் செய்து என்னுடன் ஒருமணி நேரம் சும்மா அறையில் உட்கார்ந்திருக்க வைத்து அனுப்புகிறேன்.

சூடாவும் அவளை என்னிடமிருந்து கவனம் களைய வைத்த அவளது நண்பர்களும் குற்றம் ஏதும் செய்யாத நல்லவர்களாகவே கூட இருக்கலாம். ஆனாலும் வக்கிரம் பிடித்த என் சிந்தனைக்கு நம்பிக்கை இல்லை சூடாவிடமும் அவளது நண்பர்களிடமும்.

ஆந்திரத்து ஜாங்கிரி ...விட்டால் எழுந்து ஓடிப் போய் விடுவாள் போல... அத்தனை குழப்பம் கலந்த பயத்துடன் என்னைப் பார்த்தக் கொண்டிருந்தாள் அவள்.

பிறகென்ன இத்தனை அழகி பக்கத்தில் இருந்தும் ஒன்றும் செய்யாமல் எதையோ யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை பாவம் அந்தச் சின்னப் பெண் " கதைகளில் வரும் சீரியல் கில்லர் " என்று யூகித்திருந்தாலும் மிகையில்லை. எதற்கு இப்படி யோசிக்கிறான் இந்த மடையன் ? கேள்வி அவளது ஒவ்வொரு அங்கத்திலும் வழிந்தது.

நான் நிதானமாக நடந்து போய் என் பெட்டியைத் திறந்து சூடாவின் காசுமாலையை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தேன். கூடவே சூடாவின் பட்டுப் புடவைகளில் ஒன்றைக் கொடுத்து...இதைக் கட்டிட்டு வா என்றேன். குழப்பம் கலந்த பயத்துடன் நான் சொன்னதைச் செய்தாள்.

அறையைப் பூட்டி சாவியை என் பாக்கெட்டில் போட்டிருந்ததால் அவள் வெளியில் ஓட முடியாது என்பது எனக்குத் தெரியும். அவளுக்கும் தான்.இத்தனை நேரத்தில் அவள் என்னை சைக்கோ கொலைகாரன் என்றே முடிவு கட்டியிருப்பாள் ...அவளது பயம் எனக்கு ஒரு த்ரில்லான இன்பம் அளித்தது.

அது எனக்குப் பிடிக்கும். மங்களகரமாக அலங்கரித்து தான் இந்தக் கொலைகாரன் பெண்களை வேட்டையாடிக் கொல்வான் போல அந்தச் சின்னப் பெண் இப்படித் தான் பயன்திருப்பால்.

இருக்கட்டும் ...இருக்கட்டும்...பயந்து இருக்கட்டுமே?!

அவள் புடவை கட்டிக் கொண்டு வந்ததும் காசுமாலையை நானே அவளது கழுத்தில் அணிவித்து அழகு பார்த்தேன். முன்பே வாங்கி பிரிஜ்ஜில் வைத்த மல்லிகைச் சரம் மணக்க ...மணக்க எடுத்து வந்து அவளது பின்னலில் சூட்டி முகர்ந்தவாறு மெல்ல எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

ஐ லவ் யூ சூடா!!!

கண்களில் என்னைக் கேளாமலே சர சரவென்று கண்ணீர் மடை திறந்து வழிந்தது. அவளைத் தான் நான் சூடா என்று அழைக்கிறேன் போல என்று அந்தப் பெண் பயத்தோடு புன்னகைக்க முயன்று தோற்றுப் போனால்.

எனக்கும் அவளைப் பார்க்க பாவமாகத் தான் இருந்தது. நான் அவளை எதுவும் செய்யவில்லை. அவளது காலடியில் உட்கார்ந்து மெதுவாக ஒவ்வொரு விரலாகச் சொடக்கு எடுத்து விட்டேன்.சூடாவுக்கு இப்படிச் செய்தாள் ரொம்பப் பிடிக்கும் என்பாள் .அந்த ஞாபகம் எனக்கு.

சூடா இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள்? நிச்சயமாகத் தனியாக இருக்க மாட்டாள்...எனக்குத் தெரியும். அவளுக்கு அவளது நண்பர்கள் இருக்கிறார்கள்!!!

நண்பர்களா ? கணவர்களா?! நினைக்கவே கூசுகிறது தான்... ஆனாலும் இப்படித் தான் நான் நினைக்கிறேன் அவளையும் ..அவளது தனிமையை அவளிடம் இருந்து பிடுங்கி எரிந்து விட்டு என் நினைப்பை அவளிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி வைத்த அந்த எதிரிகளை . மனைவியின் நண்பர்கள் கணவனுக்கு எதிரிகளா???

நீங்கள் என்னைக் கேட்கலாம்... வெளியில் இல்லை என்பேன்...உள்ளே ஆம்...ஆம்...ஆம் என்று உரக்கச் சொல்வேன் ...என்ன செய்வீர்கள்? என்ன செய்ய முடியும் உங்களால்?

சூடாமணியின் கணவர்களே ...என்ன செய்ய முடியும் உங்களால்?

அந்தப் பெண்ணின் கண்கள் கலங்கி மரண அவஸ்தையில் நெளிந்தாள் அவள் ...காலடியில் ஒரு கம்பீரமான (ஆம் பார்வைக்கு நான் அப்படித்தான்!) ஆண் அவளது பாதங்களைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் அவள் பாவம் என்ன செய்வாள்? தப்பித்தால் போதும் என்ற நிலை அவளுக்கு ...

சரியாக ஒரு மணி நேரம் கழிநததும் அவளிடம் இருந்த என் சூடாவின் பொருட்களை வாங்கிகே கொண்டு அவளுக்கு பேசிய பணத்தை விட அதிகமாகக் கை நிறைய நோட்டுக் கற்றைகளைத் திணித்து " போ " என்று கதவைத் திறந்து விட்டேன்.

சிட்டாகப் பறந்து என்னை விட்டு ஓடிப் போய் வெளியில் பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு என்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு விடுதலையான சந்தோசத்துடன் ...

"போரா பிச்சிவாடா..." என்று அந்த ஹோட்டல் வராண்டா அதிரச் சிரித்துக் கொண்டு உரக்கச் சொல்லி விட்டு திரும்பி பாராமல் ஓடி விட்டால்.

எனக்கும் அடக்க மாட்டாமல் சிரிக்கத் தான் தோன்றியது.

சிரித்தேன்...அறையைச் சாத்திக் கொண்டு சிரித்துக் கொண்டு தான் இருக்கிறேன் இன்னும் கூட

Wednesday, July 1, 2009

கொஞ்சிக் கொண்டு கோலமிட...

வீதிப் புழுதி
வீட்டுச் சுவர் போர்த்த
பிஞ்சுக் கை அதில்
கொஞ்சிக் கொண்டு கோலமிட
விரலிடுக்கில்
சலவைத் தண்ணீர்
பிசு பிசுத்துக் கச கசக்க
பிய்த்துக் கொண்டு ஓட முயலும்
கொடிக் கயிற்றோடு
சலியாமல் சலித்து
பெண்ணின் கை
மல்லுக்கட்டவெளிவாசல்
திண்ணையோரம்
சட சடக்கும்
பட படப்புடன்
வந்திடுமே ஆ....!!!

( விடுபட்டது ஒரே ஒரு எழுத்து தான் அதை நீங்களே சரியாக நிரப்புங்கள் பார்க்கலாம்?!)

Monday, June 15, 2009

வேடிக்கை ...?!

வேடிக்கை

அது ஒரு குட்டிப் பூரான் தான் ...பார்க்க துறு துறுவென்று வெகு ஜோராக இருந்தது ,பின்புற கொடுக்கை செங்குத்தாய் தூக்கி நுனியில் அழகாய் நெளிக்கோலம் போடும் லாவகத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் வளைத்து வைத்துக் கொண்டு என் வீட்டு காம்பவுண்டு சுவரின் மறுபக்கத்து மண் தரையில் இருந்து வீட்டுக்கு உள்ளே மதிலைக் கடந்து வர நெடு நேரமாய் பிரம்ம பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறது(ருந்தது)...

நல்ல மட்ட மத்தியானத்தில் பட்டர் பீன்ஸ் காரக் குழம்பும் ,முருங்கைகீரை பொரியலும் சாப்பிட்ட மயக்கத்தில் ஆர்ப்பாட்டமாய் என்னைக் கேளாமலே கண்ணை இழுத்த கடும் தூக்கத்தை எப்படியாவது விரட்டியே தீருவது என்ற விக்ரமாதித்ய முயற்ச்சியில் தான் நானும் அசுவாரஸ்யமாய் இலக்கே இல்லாமல் வெறுமே வீட்டின் பின்னே நீண்டு கிடந்த மலைத் தொடர்கள் ...அதற்குக் கீழே அடுக்கினார் போன்ற தென்னந் தோப்புகள் ...அதற்கும் கீழே நிறை வெயிலில் மஞ்சளாய் தகித்த மக்காச் சோளக் காடுகள்...அதற்கும் பிறகு அங்காங்கே புல் முளைத்துக் கிடந்த வெற்று மண் தரை இப்படி பார்த்துக் கொண்டே வந்தேன்...வந்தேனா ...!!!

அப்படியே வந்து அப்புறம் கடைசியில் தான் இந்தப் பூரானை இல்லை ... பூரான் குட்டியை பார்க்க ஆரம்பித்தேன். எவ்வளவு நேரமோ ? என்ன ஒரு அரைமணி நேரமோ ...முக்கால் மணி நேரமோ இருக்கலாம் போல,

பூரான் குட்டி சளைக்கக் காணோம் ...பார்த்த எனக்கும் சலிக்கக் காணோம்.அது மீண்டும் ...மீண்டும் மதிலில் ஏறுவதும் சடாரென்று சறுக்கி மறுபக்கத் தரையில் விழுவதும் மறுபடி ஏறுவதும் மறுபடி மறுபடி விழுவதுமாக இருந்தது.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் இன்றைக்கு எப்படியும் ஒரு முடிவு தெரியாமல் இந்த இடத்தை விட்டு நகரக் கூடாது என்ற ஆவல் தொற்றிக் கொள்ளவே தூக்கம் போய் தொலைந்த இடம் தெரியவில்லை .கண்களை நன்றாகக் கசக்கி விட்டுக் கொண்டு அந்தக் குட்டிப் பூரானையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றேன் ,

எப்படியோ முக்கால்வாசி மதில் ஏறி முடித்த பின்னும் கூட ஒரு முறை மண்ணில் சறுக்கி விழுந்தது பூரான்...எனக்கோ பாவமாகப் போய்விட்டது பூரானை நினைத்து ,

அது ஒரு சின்னஞ்சிறு ஜீவன் .......

அழகாய் சலிப்பே இன்றி இப்படி அரைமணி....முக்கால் மணி நேரமாய் வெறும் முயற்சி மட்டுமே இன்னும் செய்து கொண்டிருக்கிறது....இன்னும் மேலே வந்த பாடில்லை, அடிக்கடி நழுவி நழுவி மண்ணில் தான் விழுந்து கொண்டிருக்கிறது இன்னுமே...!!!

எப்போது அது மேலே வரும்?!

வேடிக்கை ....

தொடரும்...

Friday, April 24, 2009

சிட்டுக்குருவி (மீள் பதிவு)

கீற்று இணைய இதழில் வெளிவந்த எனது சிறுகதை இது.
இங்கே மீள்பதிவு செய்துள்ளேன் .படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களைச் சொன்னால் நல்லாத்தான் இருக்கும்.

திடீரென்று தான் இப்படி ஆகிவிட்டது ; கதை பேச மாமா இல்லை , கேலி செய்யஅத்தை இல்லை , கொஞ்சிக் கொண்டே உருட்டி உருட்டி உள்ளங்கையில் சாதம்வைக்க அம்மா இல்லை .சித்தி கூட எங்கேயோ தூரத்தில் இருந்து கொண்டுஎப்போதோ தொலை பேசுகிறாள் , சித்தப்பா வீடு தங்குவது அரிதாகிப் போய்நெடுநாளகிறது,

பாட்டிக்கு இந்த பட்டணம் பிடிக்காமல் ஊரோடு போய் விட்டாள்,தாத்தாவோ ரேஷன் கடை ,மளிகைக் கடை ,மார்கெட் என்று ஓய்ந்து பின்மாலையில்அவர் வயது மனிதர்களைத் தேடி கோயில் , பார்க் என்று போய் விடுகிறார் , என்னையாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை !!! .
வேப்பமரமும் , புளியமரமும் இல்லாத இந்த ஒன்டிக்குடித்தன நகரத்து நரக வீடுகொஞ்சம் கொஞ்சமாய் என்னை கொல்லபோவதை போல தினமும் கெட்ட கெட்டகனவுகளில் தூங்கவே முடியாத சோகத்தில் தான் இன்று இந்த பின் மத்தியானநேரத்தில் கால் காசு பெறாத இந்த "சிட்டுகுருவியுடன்" விருதாவாய் பேசிக்கொண்டுஇருக்கிறேன் .

சிட்டு குருவி "விசுக் விசுக்கென்று " பறந்து கொண்டிருந்தது முன் புற பொதுதாழ்வாரத்தில் , யாரோ காய வைத்த வடகத்தை கொத்தி கொத்தி குட்டி மண்டையை'விலுக் விலுக்கென்று' ஆட்டியவாறு சிறிது வாயிலும் சிறிது வாசல் படியிலுமாக சிந்திசிதறி விழுங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏதோ ஒரு நொடியில் அதன் பார்வையில்நான் பட்டிருக்க வேண்டும் ,அதுவாகத் தான் என்னிடம் பேச ஆரம்பித்தது ;

முதலில் பேச்சு எப்படி தொடங்கியதுஎன்று யோசித்தேன் நான் !. அதற்கு என் பெயரெல்லாம் தெரிய சாத்தியமே இல்லை ,ஒருமையில் தான் பேசிகொண்டிருந்தது . இனுக்கி இனுக்கியாய் பிய்த்த வடகத்தைஅலகில் சிக்க வைக்க முயன்று தோற்று போன வெறுப்போ என்னவோ ? சும்மா ஏன்என்னையே பார்கிராய் ? என்று காட்டமாய் கேட்டு விட்டு வெளிப்புற கேட் வரைபறந்து காட்டி விட்டு திரும்ப வந்து ஜன்னல் கம்பியில் அமர்ந்து கொண்டு " பதிலைசொல்லி தொலை என்பதை போல "என்னையே இலக்கு மாற்றி மாற்றிபார்த்துக்கொண்டே இருந்தது .

ஒரு சிட்டுக்குருவி பேசுமா ? என்பதையே நம்ப முடியாமலிருந்த நான் அதன்கேள்வியில் திடுக்கிட்டு போனேன் . பேசும் குருவியா இது ? என்ற உற்சாகத்தில்சந்தோசம் பீறிட்டுக் கொண்டு வர என்ன கேட்டாய் குருவி ? என்றேன் நான் ;குருவி இளக்காரமாய் சிரித்துக்கொண்டது , மறுபடி பேச முயலவேயில்லை ;பார்த்துக் கொண்டிருக்கும் போதே குருவி ஜன்னலில் இருந்து எம்பி பறக்கபோவதை போல போக்கு காட்டியது,பிறகு மறுபடி என்னை நீயும் வருகிறாயாஎன்னோடு ? என்பதை போல சும்மா பார்த்துக்கொண்டு உட்கார்ந்து விட்டது, அடுத்துஎன்ன செய்யப் போகிறாய் நீ ? என்று நானும் விடாமல் அதையே கவனிக்கதொடங்கினேன்.

குருவி கொஞ்ச நேரம் பார்த்த பின் "எனக்கு ஒரு தோசை தாயேன்"என்றது . இல்லை...கெஞ்சுதலாய் எல்லாம் இல்லை . சட்டமாய் கேட்டது ; நீ எனக்கு கொடுத்து தான்ஆகவேண்டும் என்று தொனியில் கேட்டதோடு "விருட்டென்று " சமையல்கட்டுக்குள்ளும் பறந்துபோய் விட்டது . என்ன திமிர் இந்த குஞ்சு குருவிக்கு என்றுசெல்ல கோபத்தோடு நானும் பின்தொடாந்தேன். வேறு என்ன செய்ய வீட்டில்அப்போது யாரும் இல்லை !

அம்மா குவைத்திற்கு வீட்டு நர்சாக காண்டிராக்டில் போய்மாதம் ஆறு ஆகிறது . ஊரிலிருந்தால் கடன்கொடுத்தவர்களின் தொல்லை கழுத்தைநெரிக்கும் என்று தான் சென்னைக்கு வந்து ஒரு மில் முதலாளிக்கு கார் டிரைவர்ஆகிவிட்டார் அப்பா
பாட்டி தான் ஊருக்குள் எதையோ சொல்லி சமாளித்து கொண்டுவீட்டோடு இருக்கிறாள் , ஊரை விட மனமில்லை என்பதெல்லாம் வெறும் நகாசுப்பேச்சு , அவளும் வந்து விட்டால் வீட்டை பண்ணை வீட்டு ராமசாமி அடிமாட்டுவிலைக்கு எடுத்துக் கொண்டு வாங்கிய கடனுக்கு நெடுநாளாய் கட்டாமலிருந்தவட்டிக்கு கழித்து விடுவாரோ என்ற அதீத பயம் தான் காரணம் !

குருவிசாவதானமாய் சமையல் உள்ளில் புகுந்து தோசை மூடி வைத்த தட்டத்தை அலகால்இடறித் தள்ளி விட்டு "சீனி போடு கொஞ்சம் என்றது" , என்னால் சிரிப்பை அடக்கவேமுடியவில்லை . சிரிக்கும் என்னை ஒரு தூசி போல பார்த்து விட்டு , அதுவே பறந்துபோய் நல்லெண்ணெய் இருந்த வால்கின்னத்தை தூக்க முடியாமல் தூக்க முயன்றுஎண்ணையை கொட்டி கவிழ்த்து கொண்டது தோசை இருந்த தட்டில்ஐயோ ! ஏய் குருவி என்னிடம் கேட்டால் நான் எடுத்து தந்திருக்க மாட்டேனா ? இப்படிஎண்ணெய் முழுசும் கொட்டி தீர்த்து விட்டாயே !

மறுபடி எண்ணெய் வாங்க காசுக்குநின்றால் அப்பா ஆயிரம் கேள்வி கேட்பாரே! உன்னால் எனக்கு நேரம் சரியில்லைஇன்று என்றேன் நான் எண்ணெய் இழந்துவிட்ட ஆற்றாமையில் ...
குருவிஅதையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை , அது பாட்டுக்கு ஒருதோசையை அறையும் குறையுமாய் சிந்தி சிதறி குதறிப் போட்டுவிட்டு ... அப்புறம்என்ன ? என்று தண்ணி தொட்டியின் விளிம்பில் போய் உட்கார்ந்தது .

தொட்டி தளும்பநீர் பிடித்து ஊற்றி வைத்திருந்தேன் நான் ; விழுந்து விடாதே .... பார்த்து உட்காரேன் ;நான் தான் பதறினேனே தவிர அது என்னவோ தேர்ந்த நீச்சல் வீராங்கனை போலவிளிம்பில் இதன் அசைவில் தளும்பி மேலெழுந்த சின்ன தண்ணீர் துள்ளலில்தலையை விட்டு ஆட்டிப் புரட்டி ஒரு மினி தலைகுளியல் செய்து கொண்டது , பார்க்கபார்க்க அதிசயமாய் இருந்தது ;

அதோடு முடியவில்லை கதை ,குளிர்ந்த தண்ணீர் பட்டதும் ஒட்டிக்கொண்டசிறகுகளை சடசடவென அடித்து தூசிபடலம் போல நீர்படலத்தை தெறிக்க விட்டுபுகை போக்கி ஓட்டை வழியே அடுப்படி மேல் விழுந்த வட்ட சூரிய ஒளியில் போய்நின்று கொண்டு இப்படியும் அப்படியும் திரும்பி வெப்பம் வாங்கி கதகதப்பாகிக்கொண்டது , வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு " அது
குருவியாய்தெரியவில்லை ஏதோ விருந்துக்கு வந்த அத்தை மகளை கூட நின்று பார்ப்பதைபோல ஒரு தோழமை உணர்வு சட்டென மேலெழுந்து அந்த அறை முழுதும் நிரம்பிவழிந்து கசிந்தது .

நான் இங்கே இப்படிக் குருவியோடு குருவியாய் லயித்து நிற்பது பால்காரஅண்ணாமலைக்கு தெரியுமா என்ன?
எப்போதும் நேரம் தப்பி பால் கொண்டு வந்துவசவுகளை அழுக்கு வெள்ளை வேஸ்டி நிறைய வாங்கி கட்டிக்கொண்டு போகும்அவர் அன்று சரியான நேரத்துக்கு பாலுக்கு மணியடித்தார். போய் வாங்கி வைத்துவிட்டு திரும்ப வரும் முன் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாத சென்னை நகரத்துவானிலை மிக மோசமாகி மழை தூரலிட்டது.

"ஐயோ அப்பாவின் யூனிபார்ம் சட்டை....!!!" காலையில் துவைத்து போட்டது ஞாபகம்வர வேக வேகமாய் மூச்சு வாங்க மொட்டை மாடிக்கு ஓடினேன் . நல்ல வேலைரொம்பவும் நனையத் தொடங்கும் முன் கொடியிலிருந்து பிடுங்கி கொண்டு வந்து விட்ட திருப்தியில் உட்புறகொடிகயிற்றில் காயப்போட்டு விட்டு குருவியை தேடிக்கொண்டு மீண்டும் உள்ளேபோனேன் . காணோம் ....!

குருவி அங்கே இல்லை ஏய் குருவி அதற்குள்ளே எங்கேபோய் விட்டாய் ? மழை வேறு பலமாய் வரும் போல தெரிகிறது... நனைந்து விட்டால்என்ன செய்வாய் குட்டி பறவையே ? நான் எனக்குள் பேசிக்கொண்டே குருவியைவீட்டுக்கு உள்ளே ... வெளியே என்று கொஞ்ச நேரம் தேடினேன் . காணோம் ...!

எங்கும்குருவி இல்லை .

ஐந்து மணிக்கு அப்பா வந்து விட்டார் . ஆறு மணிக்கு தாத்தாவந்தார் . குருவி மட்டும் வரவேயில்லை . நான் குருவியை நினைத்துக் கொண்டேஇருவருக்கும் காப்பி போட்டுக் கொடுத்தேன் , வாசல் தெளித்து கோலம் போட்டேன். இரவுக்கு மாவு பிசைந்து கோதுமை சப்பாத்தி போட்டு , தேங்காய் சட்னி வைத்துஇருவருக்கும் கொடுத்து விட்டு நானும் சாப்பிட்டு முடித்தேன் .

எங்கே போயிருக்கும்இந்த மழையில் குருவி !!! என்று யோசித்துக் கொண்டே சமைத்து சாப்பிட்டபாத்திரங்களை கழுவி கவிழ்த்தேன் . குருவியை காணவே காணோம் ...! இனிமேலாவரபோகிறது.... மணி ஒன்பது ஆகி விட்டது . அப்பா நைட் சிப்டுக்கு புறப்பட்டுவிட்டார் , தாத்தா வெளித்திண்ணையில் ரேஷன் கடை சேலை விரித்துப் படுத்துவிட்டார் .

மழை அது பாட்டுக்குப் பெய்து கொண்டிருந்தது . இரவு வானத்தை மழைமுகமூடிக் கொள்ளைக் காரன் போல கருப்பு துணி போர்த்தி கண்ணுக்குத் தெரியாமல்மறைத்து சாகசம் செய்து விட்ட திருப்தியில் ஆர்பாட்டமின்றி சிறு ஓசையுடன்இறங்கி பூமியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தது . கல்யாணமாகி வருடம் சில கடந்துநிதானமாகி விட்ட தம்பதியர் போல பூமிக்கும் மழைக்குமான சங்கமம் சிறு ரகசியசம்பாசனையுடன் விடியும் வரை தொடர்ந்...தது....!!!

குருவி எங்கே போயிருக்குமோ ?

மழைக்கு எங்கே ஒதுங்கியிருக்குமோ ?

அதன் கூடு எந்த மரத்தில் , எவ்வளவு தூரத்தில்இருக்குமோ ?

இந்நேரம் என்ன செய்து கொண்டிருக்குமோ குருவி?

குருவி...குருவி...குருவி !!!

ஏய் ! குருவி ... சிட்டுக் குருவி...... சிட்டுக்......குருவி ...

எங்கேபோய்விட்டாய் என் செல்லக் குருவி ?

குருவியை நினைத்துக் கொண்டே தூங்கினாலும் கனவில் என்னவோ குருவி எல்லாம்வரவில்லை ,ஒரு வேளை கனவே வரவில்லையோ என்னவோ ?!

காலை டிபன்தயாரிக்கும் அவசரத்திலும் அதென்னவோ அந்த காணமல் போன குருவியை மட்டும்மறக்கவே முடியவில்லை ....
இன்றைக்கு மறுபடி வருமோ ? என்ற எதிர்பார்போடு தான்சாதம் வைத்து , சாம்பார் வைத்து ...உருளைக் கிழங்கு வறுவல் செய்து , அப்பளம்பொரித்தேன்.குருவிக்கு இதெல்லாம் பிடிக்குமா ? என்ற யோசனையோடு தான்ஒவ்வொன்றையும் செய்து மூடி வைத்தேன் .

மழை நின்று போன விடிகாலையும்வழக்கம் போலத்தான் விடிந்திருந்தது , ஆனாலும் காற்றில் ஒரு ஈரவாடை பரவிமொட்டைமாடியில் துணி காயபோட்டு விட்டு , கட்டைசுவற்றில் கைவைத்து கீழேவிரையும் வாகனங்களைப் பார்த்தவாறு ஆழமாய் மூச்சை உள்ளே இழுத்துமெதுவாய் வெளியேபரவ விடும் போது ஈரத்தோடு ஈரமாய் ஒரு குளிரான சந்தோசம்தேகமெங்கும் சந்தனம் போல அப்பிக்கொள்ளத்தான் செய்கிறது ஒவ்வொருமுறையும் !

குருவிக்கு குளிறாதா ?

பார்த்தால் கேட்க வேண்டும் ...."

வருமா? வந்தால்கேட்க வேண்டும் !!!" என்று கேள்வியை ஓரமாய் மனதில் போட்டு வைத்தேன் .

நேற்றுபோல இல்லாமல் பால்கார அண்ணாமலை இன்று பழக்க தோசமாய் லேட்டாகத்தான்வந்தார் ... ஒன்றும் சொல்வதற்கின்றி பேசாமல் பாலை வாங்கி மூடி வைத்தேன் .அம்மாவிடமிருந்து தொலை பேசி அழைப்பு வந்தது; மாதம் ஒருமுறை அரைமணிநேரம் பேசுவாள் அம்மா , ஏதோ திருவிழா போல துள்ளிக்கொண்டு பேசுவதற்குஓடுவேன் நான் .

இன்று அப்படி இல்லை , வெகு நிதானமாய் போய் விட்டு திரும்பியஎன்னை தாத்தா அதிசயம் போல பார்த்துவிட்டு குனிந்து மறுபடி பேப்பர் படிக்கஆரம்பித்தார். அப்பா வந்தார் மறுபடி காபி போட்டேன் , இரவு சமைத்தேன் ,எல்லோரும் சாப்பிட்டோம். இரவு ஷிப்ட் வந்தது .அப்பா கிளம்பி போய் விட்டார் . தாத்தா திண்ணையில் யாரோ நண்பரோடு பேசிகொண்டிருந்தார் , அவர் அப்படியே தூங்கி விடுவார் , இனி உள்ளே வரமாட்டார் ,தண்ணீர் முதலிலேயே சொம்பில் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்வார் .

சின்னஞ்சிறிய வீடு தான் ....

ஆனாலும் தனிமை ...ருசியானதா??...

எப்போதும்தனிமை ....ருசியானதா ...?!

பெரிய பங்களா வீடெல்லாம் கழுத்து வரை கடனோடு ஊரில் இருக்கிறது .... கோயில்கோபுரத்தில் அரக்கி போன்ற தோற்றத்துடன் கத்தி பிடித்து நிற்கும் காவற்காரிபொம்மை போல பாட்டி அங்கே இந்நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு தான்இருப்பாள் என நினைக்கையில் நெஞ்சுக்குள் பிசைகிறது ,

தாத்தா .... பாவம் ?

அப்பா .... பாவம் தான் ?

அம்மா ...அவளும் கூட பாவம் தானே ? !

அப்படியானால் நான் ???!!!

அந்த குருவி... ?!

தூரத்தில் எங்கேயோ பாட்டு சத்தம் ...

"சிட்டுக்குருவி ....சிட்டுக்குருவி ...சேதிதெரியுமா ?
என்னை விட்டு பிரிந்து போன கணவன் வீடு திரும்பலை ...

"ஏய் குருவி...சிட்டுக் குருவி
உன் ஜோடியத்தான் கூட்டிகிட்டுநீ
இங்கே வந்து கூடு கட்டு ...

இன்றைக்கு சிட்டுக் குருவி ஸ்பெஷல் போல ரேடியோவில்
கடைசியில்...

எப்போதும் போல் ...

ஒற்றையாய் தெளிவான சிந்தனைகள் ஏதுமின்றி தூங்கத்தொடங்கினேன் நா....னு...ம் .

Tuesday, April 21, 2009

மனிதம் மின்னிதழில் எனது கவிதை (மாத்தி யோசி)


லெனின் பிறந்த தினமான இன்று வெளியான மனிதம் மின்னிதழில் எனது கவிதை .வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
பெயர் குழப்பம் வேண்டாம், மிஸஸ் .தேவ் இல் இருக்கும் தேவ் வாசுதேவன் தான்,எதுக்கு நீட்டி முழக்கனும் அன்பா பாசமா தேவ் :) ,இப்படித் தான் கார்த்திகா வாசுதேவன் மிஸஸ்.தேவ் ன்னு ஆனேன் .

திருத்தம்:-

கவிதையில் உள்மனதின் தாழ்ப்பாள் என்பது யூழ்ப்பாள் என்று தவறுதலாகத் அச்சிடப் பட்டு விட்டது போலும் ,வாசிப்பவர்கள் தாழ்ப்பாள் என்றே வாசியுங்கள்.

Monday, April 20, 2009

சுபாங்கனியின் ஜாமன்றி பாக்சும் ...அம்ருதாவும் ...

சுபாங்கனியின் ஜாமன்றி பாக்ஸ் தொலைந்து போனதால் தான் அம்ருதா அதை தேடிக் கண்டுபிடித்து எடுத்து வரும் பொருட்டு தன் மகளின் பள்ளிக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது .போன வாரம் தான் ரகுராமன் அந்த ஜாமன்றி பாக்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தார் சுபாங்கனிக்கு ...அதை மகளின் கையில் கொடுக்கும் போதே ஏகப் பட்ட அறிவுரைகளோடு எப்போதும் போல பல (பஞ்சப்) பாட்டுக்களுடனும் தான் கொடுத்திருந்தார்.

சுபாங்கனிக்கு சந்தோசம் பிடிபடவில்லை...தன் அப்பாவா இது? புது ஜாமன்றி பாக்ஸ் கேட்டு முக்கால் வருடம் தாண்டி வாங்கிக் கொடுப்பார் என்று அவள் தான் எதிர்பார்க்கவே இல்லையே!!!சும்மா கேட்டு வைப்போம் என்று தான் அவளும் ஒரு வார்த்தை போட்டு வைத்தால் அப்பாவின் செவியில் ...அவர் நிஜமாகவே வாங்கிக் கொடுத்ததும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போய் விட்டால் பாவம்?!

அந்த ஜாமன்றி பாக்ஸ் தான் இப்போது காணோம் ...விலை 125 ரூபாய்கள் ...

அப்பாவை நினைத்தால் அடிவயிற்றில் பயப் பந்து உருண்டது ...தொண்டை உலர்ந்து மூச்சுத் திணறி கண்களில் நீர் கரை கட்டி நின்றது எப்போதடா கரை மீறி உருளலாம் என; ரகுராமன் அத்தனைக்கு மோசம் என்று சொல்ல முடியாது தான் ...மனிதன் கஷ்டப் பட்டு முன்னேறிக் கொண்டிருப்பவன் ...(கவனிக்கவும்...முன்னேறிக் கொண்டிருப்பவன் தான் இன்னும் முன்னேறியவன் ஆகவில்லை ரகுராமன் ...

ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குப் பார்த்தே ஆக வேண்டிய சூழல் அவனுக்கு உண்டு ...அவனது மனைவியும் ...மகளும் ஆகிப் போன காரியத்தால் அந்த சூழல் சுபாங்கனிக்கும் ... அம்ருதாவுக்கும் கூட உண்டு தானே என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை.

தவறுதலாகவோ அல்லது கவனக் குறைவாகவோ எது நடப்பினும் அதற்க்கு காரணம் எவராக இருப்பினும் ரகுராமனின் மிக நீண்ட அறிவுரைகளை அந்த வீட்டினரின் காதுகள் கேட்டே தீர வேண்டும் ,அம்மாவோ மகளோ தவறு செய்திருப்பின் அறிவுரைகளாக ஆரம்பிக்கும் பேச்சு தவறுதல் ரகுராமானது என்று வரும்போது இடை விடாத புலம்பல்களாக மாறி விடும் .உங்களுக்கெல்லாம் அறிவுரை ஆயிரக் கணக்கில் சொல்லி விட்டு என்னைப் பார் இப்படி செய்து விட்டு வந்து நிற்கிறேன் என்று அதற்கும் புலம்பி...புலம்பி பேசிப் பேசி கொல்வான் ...

ஆக மொத்தத்தில் ரகுராமனின் புலம்பலில் இருந்து தப்பிக்கவும் ...வீட்டுச் சூழலில் 125 ரூபாய் ஜாமன்றி பாக்சை அநியாயமாய் தொலைத்து விட்டு வந்து நிற்க்கிராலே இந்த பாதகத்தி எனும் குமைச்சலிலும் அம்ருதா வேக..வேகமாய் பள்ளி காம்பவுண்டை நெருங்கினாள்.

சுபாங்கனியின் ஜாமன்றி பாக்ஸ் தொலைந்து போனதால் தான் அம்ருதா அதை தேடிக் கண்டுபிடித்து எடுத்து வரும் பொருட்டு தன் மகளின் பள்ளிக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது .

ஆரம்பிக்கும் பேச்சு தவறுதல் ரகுராமானது என்று வரும்போது இடை விடாத புலம்பல்களாக மாறி விடும் .உங்களுக்கெல்லாம் அறிவுரை ஆயிரக் கணக்கில் சொல்லி விட்டு என்னைப் பார் இப்படி செய்து விட்டு வந்து நிற்கிறேன் என்று அதற்கும் புலம்பி...புலம்பி பேசிப் பேசி கொல்வான் ...ஆக மொத்தத்தில் ரகுராமனின் புலம்பலில் இருந்து தப்பிக்கவும் ...வீட்டுச் சூழலில் 125 ரூபாய் ஜாமன்றி பாக்சை அநியாயமாய் தொலைத்து விட்டு வந்து நிற்க்கிராலே இந்த பாதகத்தி எனும் குமைச்சலிலும் அம்ருதா வேக..வேகமாய் பள்ளி காம்பவுண்டை நெருங்கினாள்.

வாட்ச்மேனைக் காணோம்...ஒரு ஐந்து நிமிடம் காத்திருந்து பார்த்தும் வாட்ச்மேன் வந்தபாடில்லை...பள்ளி பெரிய கேட் மூடப் பட்டு சின்ன கேட் தான் ஒருக்களித்து திறந்திருந்தது,அம்ருதா படித்த காலத்திலிருந்தே அந்தப் பள்ளியில் பெரிய கேட் திறந்திருந்தால் தான் அது பள்ளி நேரம் ,மற்றபடி பள்ளி நேரம் முடிந்த பின் மாலை மற்றும் அதிகாலை வேளைகளில் நிர்வாகிகள் அல்லது ஆசிரியர்கள்வர மட்டுமே சின்ன கேட் திறப்பு பயன்படுத்தப் படும்...

வேறு யாரும் அத்து மீறி அந்தப் பாதையில் நுழையக் கூடாது என்பது பள்ளி விதிகளில் ஒன்று . என சொல்லிக் கொண்டிருந்தேன் ?ஆம் அம்ருதாவும் இதே பள்ளியில் தான் படித்தாள் பிளஸ் டூ வரையிலும்,

சுற்றும் முற்றும் இருமுறை பார்த்து விட்டு சட்டென்று அந்த சிறு கேட் வழியே உள்ளே விறு ...விறுவென்று நுழைந்து விட்டாள்,அவள் மனம் முழுக்க ஜாமன்றி பாக்ஸ் சுபாங்கனியின் வகுப்பறையில் எங்காவது ஓரிடத்தில் கிடைத்து விட வேண்டும் என்ற வேண்டுதல் தான் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

ரகுராமனின் புலம்பல்களுக்கு இன்னும் அம்ருதாவின் அம்மா சொல்வதைப் போல் "மாப்பிள்ளையின் தொண தொணப்பிலிருந்தும் ...நச்சரிப்பிலிருந்தும் அம்ருதா தப்பிக்க வேண்டுமென்றால் அவளுக்கு ஜாமன்றி பாக்ஸ் கிடைத்தே ஆக வேண்டும் .

8 th standard "B" SECTION மாடியில் அல்லவா இருக்கிறது ?!

முறையாக வாட்ச்மேனிடம் அனுமதி வாங்கி வந்திருந்தாலும் பரவாயில்லை ...யாருக்கும் தெரியாமல் அல்லவா உள்ளே நுழைய வேண்டியதாகி விட்டது ?! அம்ருதாவுக்கு யாரேனும் தன்னை பார்த்து விட்டு தவறாகக் கருதி சத்தம் போட்டு மானத்தை வாங்கி விடக் கூடாதே என்ற பதை பதைப்பு வேறு கூடிக் கொண்டே போக அந்த பின் மாலை நேரத்து சிலு...சிலு காற்றிலும் வியர்த்துக் கொட்டியது .

பள்ளியின் கேட் தாண்டி உள்ளே வந்ததும் முதலில் கண்ணில் பட்டது தலைமை ஆசிரியரின் "பர்னாசாலை" போன்ற குடிசை தான் ..எத்தனை முறை மேப் எடுக்கவும் ..சாக் பீஸ் எடுக்கவும் ...மண்பானை நீர் எடுத்துப் போகவும் வந்திருக்கிறோம் ...

டீச்சர்களுக்கு மண் பானை நீர் சொம்பில் எடுத்துக் கொண்டு போய் கொடுக்க அம்ருதாவுக்கும் ...சுமதிக்கும் தான் எப்போதும் போட்டி ..யார் முதலில் ஓடிப் போய் தண்ணீர் கொண்டு வருகிறார்களோ அவர்களே ராஜம் டீச்சர் குடிமையியல் வகுப்பில் முதலில் பாடம் வாசிக்கத் தகுதி பெறுவார்கள் ...

இது அந்த டீச்சராகச் சொல்லவில்லை,பிள்ளைகளே அப்படி ஒரு முடிவு கட்டிக் கொண்டு தினம் ..தினம் இந்த போட்டி நடைபெறும் அப்போது....

சுமதியைக் காரைக்குடியில் கட்டிக் கொடுத்திருப்பதாக அம்மா சொன்ன ஞாபகம் மூளைக்குள் மின்னி மறைய நடையை எட்டிப் போட்டால் அம்ருதா ,

பத்தாம் வகுப்புக் கட்டிடத்திற்கு முன்னே சவுக்கு பாத்திகளுடன் உள்ளே ஒரு சின்ன பூங்கா போன்ற அமைப்பு உண்டு அந்தப் பள்ளியில் அதைக் காணோம் இப்போது ...அங்கே தான் அம்ருதா பரீட்சை சமயங்களில் உட்கார்ந்து படிப்பாள்...கடைசி பெல் அடித்த பின் மெயின் ஹால் பத்தாம் வகுப்புக் கட்டிடமே என்பதால் எழுந்து ஓடிப் போய் தன் பதிவு எண் பார்த்து அமர வசதி என்பதால் வேறு யாருக்கும் அந்த இடத்தை அம்ருதா விட்டுத் தந்ததே இல்லை ...

இந்தப் பக்கம் பத்தாம் வகுப்புக் கட்டிடம்...அந்தப் பக்கம் தலைமை ஆசிரியரின் பர்னாசாலை ...நடுவே பூங்கா ...அதில் வலது மூலையில் ஒரு பழைய வேப்ப மரம் அதன் தூரின் பிசினை நோண்டிக் கொண்டோ அல்லது பிளவு பட்ட பட்டைகளை உறித்துக் கொண்டோ ...தரையைக் குச்சியால் கிளறிக் கொண்டோ தான் அம்ருதா எப்போதும் பரீட்சைக்குப் படிப்பது வழக்கம் .

அதைத் தாண்டி உள்ளே நடந்தால் பிளே கிரவுண்டு ...அங்கே தான் மார்னிங் பிரேயர் நடக்கும் ..கொடிக் கம்பத்தைச் சுற்றிலும் ஒரு சின்ன ரோஜாத் தோட்டம் ..அதைத் தோட்டம் என்று சொல்ல முடியாது ..ஒரு சின்ன பாத்தியில் சில நூறு ரோஜாச் செடிகளை நட்டு அது அங்கே பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் ஆண்டு முழுதுமே...

பிளஸ் டூ வில் அம்ருதா தான் ஸ்கூல் பீபில் லீடர் ...அந்த ஆண்டு அரைப் பரீட்சை முடியும் வரை அவள் தான் "தாயின் மணிக் கொடி பாரீர் ..அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் " பாடல் முடிந்ததும் கொடி ஏற்றுவாள் .அந்த கொடிக் கம்பம் இருக்கிறது ..ரோஜாப் பாத்தியைத் தான் காணோம்...அதற்க்கு பதிலாக அந்த இடத்தில் பேஸ்கட் பால் ஆடுதளம் சிமென்ட் பூசப் பட்டு நீண்டு போய் பார்வையில் பட்டது .

ஐயோ ...ஜாமன்றி பாக்ஸ் கிடைக்குமா ?

கிடைச்சிட்டா தேவலை !!!

சுபாங்கனி கூட வரவில்லை ..அப்பா வரும் நேரம்...அம்மா..மகள் ரெண்டு பேருமே வீட்டில் இல்லாததைக் கண்டால் கோபம்பொத்துக் கொண்டு வரும் ரகுராமனுக்கு ;

அம்மா காய் வாங்க கடைக்குப் போயிருக்கிறாள் என்று சொல்லி சமாளிக்க அன்னையை பள்ளிக்கு அனுப்பி விட்டு மகள் வீட்டில் இருந்தால் வீட்டுப் பாடம் செய்து கொண்டு !?

எட்டாம் வகுப்புக்கு போக மாடிப் படி ஏற வேண்டும் ...நல்ல கருங்கல் கட்டிடம் ...படிகள் நல்ல வலுவான கற்கள் ...ஒரு முறை ஏழாம் வகுப்பு முழுப் பரீட்சை முடிந்து கடைசி பெல் அடித்ததும் மாடியில் இருந்து அடித்துப் பிடித்து ஓடி வரும் போது நான்கைந்து படிகள் தாண்டும் ஸ்ரீதரன் காலை இடறியதில் அம்ருதா தலை குப்புற விழுந்து வைத்ததில் ஏற்ப்பட்ட வடு இன்னும் கூட அவளது முன் நெற்றியில் உண்டு ,

ஸ்ரீதரன் திருநெல்வேலிக்காரப் பையன் ,அம்மாவைப் பெற்ற பாட்டி தாத்தா இந்த ஊர் என்பதால் ஐந்திலிருந்து எட்டு வரை செல்லமாய் பாட்டி வீட்டில் இருந்து படித்தான் ,எட்டாம் வகுப்பு லீவில் ஊருக்குப் போனவன் தான் பிறகு டி.சி வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கே அவனை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்,அவனது தாத்தா ..பாட்டி இருக்கும் வரை லீவுக்கு ரெண்டு வருடம் வரை வந்து கொண்டிருந்தான்,அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை,அவனால் ஏற்ப்பட்ட வடு மட்டும் அவனை ஞாபகப் படுத்திக் கொண்டு அம்ருதாவுடன் தங்கி விட்டது போலும்!?

முதல் மாடி ஏறி வந்தாயிற்று ...இந்த வராண்டாவின் கடைசி அரை தான் எட்டாம் வகுப்பு ..பி செக்சன் ...மொத்தம் ஆறு அறைகள் ...முதல் அரை ஏழாம் வகுப்பு எ செக்சன் ...

அங்கு கஸ்தூரி டீச்சர் தான் கிளாஸ் டீச்சர் ...அம்ருதாவுக்கு கஸ்தூரி டீச்சரை ரொம்பப் பிடிக்கும். டீச்சருக்கு நீளமான பின்னல் ...வெள்ளிக் கிழமைகளில் தலைக்கு ஊற்றிக் கொண்டு தளர்வாய்ப் பின்னி கூந்தலில் உச்சியில் துளி மல்லிகைப் பூ கிள்ளி வைத்துக் கொண்டு வருவார் ...

பிள்ளையார் கோயிலுக்குப் போய் வந்ததற்கு சாட்சியாய் நெற்றியில் சின்னக் கீற்றாக திருநீறு, மெலிதாக மஞ்சள் பூசிய அடையாளம் தெரியும் ,எப்போதும் டீச்சர் வட்டப் பொட்டு வைத்துக் கொண்டு அம்ருதா பார்த்ததில்லை நீட்டப் பொட்டு தான் இப்போதும் கூட!

டீச்சரின் தூரத்துச் சொந்தம் தான் ரகுராமன் என்பதால் அவள் டீச்சரை எப்போதாவது குடும்ப விஷேசங்களில் பார்ப்பது உண்டு இப்போதும்...

அதெல்லாம் போகட்டும் ...இப்போது ஜாமன்றி பாக்ஸ் ...ஐயோ...அது கிடைக்க வேண்டுமே ?!

அதற்குத் தானே பல வருடங்கள் கழித்து இப்போது இந்தப் பள்ளிக்குள் நுழைந்தோம் !!!

ஞாபகங்கள் மின்னி மின்னி மறைய எல்லாவற்றையும் உதறி விட்டு எட்டாம் வகுப்பு பி. செக்சனுக்குள் ஒரு வழியாய் அம்ருதா நுழைந்து விட்டாள்.வலது புறம் மூன்றாவது பெஞ்சில் நான்காவது இடம் தான் சுபாங்கனியின் இடம் !!!

அதே வலது புறம் இரண்டாவது பெஞ்சில் ஜன்னலோரம் முதல் இடம் அம்ருதாவின் இடமாக இருந்தது முன்னொரு நாளில் !?

அதே மர பெஞ்சுகள் ..டெஸ்க்குகள் ...வகுப்பறையின் சிமென்ட் தரை ...கரும் பலகை ...சாக் பீஸ் வைக்கும் சின்ன மரப் பெட்டி ,

"அங்கிங்கெனாத படி எங்கும் பிரகாசமாய் ஆனந்த ஜோதியாகி ..."

"ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்"

"இந்தியாவில் அதிகமாய் மழை பொழியும் இடம் சிரபுஞ்சி "

"உலகின் கூரை திபெத் ""ஏய் சண்முகப் பிரியா உன் இடத்தில பென்சில் துருவிப் போட்ரீ ஏன் டெய்லி என் இடத்துல போடற ? டீச்சர் கிட்ட சொல்லித் தாரேன் இன்னைக்கு பாரு நீ...

போய்ச் சொல்லிக்க போடீ (இது அந்த சண்முகப் பிரியா )

பாண்டிச் செல்வி எனக்கு இண்டர்வெல்ல மாங்க பத்தை வாங்கித் தா...நேத்து நான் கொய்யாப் பழம் வாங்கிக் கொடுத்தேன் இல்ல..இன்னைக்கு உன் முறைடீ ஞாபகம் இருக்கு இல்ல?!

கலவையாய் பல குரல்கள் காற்றில் பரவி செவியில் வந்து மோத...

அம்ருதா ஜாமன்றி பாக்சை மறந்து போக முடிவு செய்யாமலே தானாய் அது நினைவில் இருந்து நழுவி ஓடியது போலும்?!

அம்ருதா ஏன் மேத்ஸ்ல மார்க் கம்மி ? சயின்ஸ் ல மட்டும் 98 வாங்கியிருக்க ? என் பாடம் உனக்கு வேப்பங்காயா இருக்காக்கும்? மேத்ஸ் டீச்சர் அனுராதா தான் இது?!

விடுங்க டீச்சர் அடுத்ட பரீட்சைல பாருங்க அம்ருதா மேத்ஸ்ல 100/100 வாங்குவா பாருங்க..இது சயின்ஸ் வாத்தியார் முருகன் ...

கடைசியில் அம்ருதா எதில் 100/100 வாங்கினாள்?!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!(&) !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஸ்ட்ராபெர்ரி தெரியும் அதென்ன கிரேன்பெர்ரி !!! (மீள் பதிவு)



இதுவும் ஸ்ட்ராபெர்ரி போல ஒரு பழ வகை தான் , இங்கே இந்தியாவில் இது நிறையக் கிடைக்குமா என்ன என்பதெல்லாம் தெரியவில்லை ,ஆனால் "பெரும்பாலும் பெண்களுக்கு வரும் "சிஸ்டைடிஸ்" எனும் உபாதைக்கு இது ஒரு மிகச் சிறந்த நிவாரணி என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது .இதை ஜூஸ் செய்தும் குடிக்கலாம் ...மாத்திரை பட்டைகளாகவும் கிடைக்கும் .


சிஸ்டைடிஸ் பெண்களை மட்டும் பாதிப்பதில்லை ...ஆண்களும் பாதிக்கப் படலாம் , எல்லா வயதினரையும் தாக்கலாம் .பெரும்பாலும் பெண்கள் இருபது முதல் ஐம்பத்து வயது வரை இதனால் பாதிக்கப் படுகின்றனர் .ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் அளவற்ற எரிச்சல் ஏற்பட்டாலோ அல்லது அடிவயிற்றில் வலி இருந்தாலோ ...கலங்கலான நிறத்தில் சிறுநீர் வெளிப்பட்டாலோ ...சிறுநீருடன் ரத்தம் கலந்து வந்தாலோ , அல்லது இந்த அறிகுறிகளுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் அவஸ்தை ஏற்பட்டாலோ ஒருவர் ஆணோ அல்லது பெண்ணோ சிஸ்டைடிஸ் உபாதையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம் .


இந்நோய் பெரும்பாலும் இ . கோலி எனும் பாக்டீரியாவால் தான் பரப்பப்படுகிரதாம் . இது சிறுகுடல் பகுதியில் காணப்படும் . பெரும்பாலும் சுத்தமின்மை காரணமாகவும் , உடலில் ஏற்ப்படும் நீர் இழப்பின் காரணமாகவுமே இந்த பாக்டீரியா உடலில் கிட்னி கும் கூடப் பரவ வாய்ப்பு ஏற்படலாம் . சரி...சரி .இப்படியே நீட்டிக் கொண்டு இன்னும் பத்துப் பக்கங்கள் கூட எழுதலாம் தான் ...


கிரான்பெர்ரி என்ற பெயர் புதிதாக இருக்கிறதே என்று நெட்டில் தேடினால் இப்படி ஒரு பயனுள்ள விஷயம் சிக்கியது .இந்தப் பழங்களில் சிட்ரிக் அமிலம் அபிரிமிதமாக இருப்பதால் இது இந்த உபாதையைத் தீர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது அவ்வளவு தான் மேட்டர் !!!கிரேன் பெர்ரி கிடைத்தால் சரி தான் .