Wednesday, August 19, 2009

கருப்பு வெள்ளை தாண்டாத கனவுகள்

வர்ணங்களைக் குழைத்துக் குழைத்து
நாட்காட்டியில் தேய்த்து தேய்த்து
பரத்தி விட்ட பின்னும் கூட
அந்த நாளொன்றும்
வண்ணமயமாகி விடவில்லை ...
அன்று மட்டுமல்ல
என்றென்றும்
கருப்பு வெள்ளை தாண்டி
கனவுகளும் நுழைவதில்லை ...
பகலுக்கு ஒரு நிறம்
இருளுக்கு ஒரு நிறம்
வெயிலுக்கு ஒரு நிறம்
குளிருக்கு ஒரு நிறம்
தங்கத்துக்கு மஞ்சளும்
வெள்ளிக்கு வெள்ளையுமாய்
முலாம் பூசுவதைப் போல
பூசிப் பூசிப் பழகிய குணம்
வண்ணங்களற்ற வெற்று வெளியை
உதாசீனம் செய்வதில்
சிறிதொரு சமாதானம்
பிறிதொரு சாந்தம் ...
சமாதானக் குடுவையில்
பொங்கிச் சிந்திய வண்ணக் குழம்புகளில்
தேங்கித் தேடிய பின்
சொந்தக் கருத்தொன்று
சொடேர் என்று தலையில் குட்டிவிட்டு
சொத்தென்று விழுந்து காணாமல் போனது
வர்ணக் கலவைகளில் ...
நிறப்பிரிகைக்கு முன்னிருந்த
நிர்மல வண்ணமே நித்தியமோ ?!

11 comments:

  1. //வர்ணங்களைக் குழைத்துக் குழைத்து
    நாட்காட்டியில் தேய்த்து தேய்த்து
    பரத்தி விட்ட பின்னும் கூட
    அந்த நாளொன்றும்
    வண்ணமயமாகி விடவில்லை//

    அசத்தல் ஆரம்பம் மிஸஸ் தேவ்... கனவில் வண்ணங்கள் வருவதில்லை என்று நான் படித்ததுண்டு... உண்மையா?

    //சமாதானக் குடுவையில்
    பொங்கிச் சிந்திய வண்ணக் குழம்புகளில்
    தேங்கித் தேடிய பின்
    சொந்தக் கருத்தொன்று
    சொடேர் என்று தலையில் குட்டிவிட்டு
    சொத்தென்று விழுந்து காணாமல் போனது//

    அடேயப்பா... நல்லா எழுதி இருக்கீங்க....

    //வர்ணக் கலவைகளில் ...
    நிறப்பிரிகைக்கு முன்னிருந்த
    நிர்மல வண்ணமே நித்தியமோ ?!//

    விடை தருவார் யாரோ?

    நல்லா இருக்கு மிஸஸ் தேவ்... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. முதல் வருகை உங்கள் தளத்துக்குள்!.....

    அருமையாக இருக்கிறது கவி வரிகள்.... வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  3. பூசிப் பூசிப் பழகிய குணம்]]

    நச்

    ReplyDelete
  4. உங்களின் சில கவிதைகள் படித்தேன், மிகவும் ரசிக்கும் படியாய் இருக்கிறது, உங்களின் கவிதைகளில் இருக்கும் புனைவு மிக அழகாக அமைந்திருக்கிறது, வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. //
    சமாதானக் குடுவையில்
    பொங்கிச் சிந்திய வண்ணக் குழம்புகளில்
    தேங்கித் தேடிய பின்
    சொந்தக் கருத்தொன்று
    சொடேர் என்று தலையில் குட்டிவிட்டு
    சொத்தென்று விழுந்து காணாமல் போனது
    வர்ணக் கலவைகளில் ...
    //

    கலக்கல்!

    கலவையான பின் எல்லா வர்ணங்களும் காணாமல் போகின்றன....எந்த வர்ணம் என் வர்ணம்??

    ReplyDelete
  6. நன்றி R.Gopi

    நன்றி சப்ராஸ் அபூ பக்கர்

    நன்றி நட்புடன் ஜமால்

    நன்றி யாத்ரா

    நன்றி அது சரி

    ReplyDelete
  7. அக்கா இதுக்கு எதிர்கவிஜதான் போடமுடியும். இல்லாங்காட்டி கலக்கல்னு போடனும்.

    ReplyDelete
  8. சத்தியமா ஒன்னியுமே புரியலங்கண்ணா..

    யாராச்சும் வெளக்கம் சொல்லுங்களேன்?

    ReplyDelete
  9. எதிர்கவிஜ போட்டாச்சு

    ReplyDelete
  10. kudukuduppai ethir kavuja mathiriye ithum nalla iruku :))

    ReplyDelete